முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்திடம் கோலி கற்றுக் கொள்ள வேண்டியது


Image result for india england test series


நான்காவது டெஸ்டில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்தியா 3-1 என்கிற நிலையில் தொடரை இழந்துள்ளது. ஆனால் டிவி நேரலை வர்ணனையில் சஞ்சய் மஞ்சிரேக்கர் சொன்னது போல, இது 3-1 எனும் ஸ்கோர் லைன் காட்டுமளவு தரைமட்டமான தொடர் தோல்வி அல்ல. மேலும் கீழுமாய் ஊசலாடிய தொடர் இது. இரண்டாவது டெஸ்டை தவிர மிச்ச மூன்று ஆட்டங்களிலும் இந்தியா கடுமையாய் போராடியது. நான்காவது டெஸ்டிலும் கூட கடைசி இன்னிங்ஸ் வரை ஆட்டம் தொடர்ந்து குடிகாரன் கால்கள் போல தடுமாறிக் கொண்டே வந்தது – கடைசியில் நிலைபெற்றது இங்கிலாந்தின் கால்கள், அதுவும் மிக சன்னமாய் தான்.

 என்னதான் தொடரை இழந்தாலும் கோலி தன் அணியின் போராட்டத்தைப் பொறுத்தமட்டில், தனது அபாரமான மட்டையாட்டத்தைப் பொறுத்தமட்டில், பெருமைப்படலாம். தென்னாப்பிரிக்க பயணத் தொடரைப் போன்றே, இத்தொடரிலும் இந்தியா வெற்றியை வெகுஅருகில் நெருங்கி வந்து, கடைசி கட்ட திறன் குறைபாடு மற்றும் மன உறுதியின்மை காரணமாய், தவற விட்டுள்ளது. அடுத்த முறை கோலி இதே போல இங்கிலாந்துக்கு பயணப்படும் போது, வளர்த்துக் கொள்ள வேண்டிய சில திறன்கள் என்ன? இனிமேல் பயணத் தொடர்களை எப்படி வெல்வது?
முன்பு மூன்றாவது வேகவீச்சாளரின் குறைபாடு இந்தியாவை பின்னுக்குத் தள்ளும். ஆனால் இம்முறை வேகவீச்சு சிறப்பாகவே அமைந்தது. அதுவும், புவனேஷ்வர் குமார் காயம்பட்டு விலகிய பின்னரும், பும்ரா, இஷாந்த் ஆகியோரின் சிறப்பான வீச்சு இந்தியாவை வலுப்படுத்தியது. ஷாமி அவ்வப்போது கங்காவாகவும் அவ்வப்போது சந்திரமுகியாகவும் ஆடினார்.
இத்தொடரில், இந்தியாவை விட இங்கிலாந்தை முன்னுக்கு தள்ளியவை 1) கீப்பரின் ரன்கள், (2) ஆல்ரவுண்டர்களின் ஆட்டம்.
இங்கிலாந்தை பொறுத்தமட்டில் கீப்பர்கள் பேர்ஸ்டோவ் (212), பட்லர் (260) ஆகியோர் இந்தியாவின் கார்த்திக் (21), பாண்ட் (43) ஆகியோரை விட பலமடங்கு கூடுதலாய் ரன்கள் அடித்தனர்.
இங்கிலாந்து: 472 vs இந்தியா: 64
வேகவீச்சாளர்களைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் வோக்ஸ் (149), ரஷீத் (84), புராட் (49) ஆகியோர் இந்தியாவின் பும்ரா (6), ஷாமி (26), இஷாந்த் (33) ஆகியோரை விட அதிகமாய் ரன் அடித்துள்ளனர்.
இங்கிலாந்து: 282 vs இந்தியா: 65

ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் குர்ரன் (251),ஸ்டோக்ஸ் (152), மொயின் அலி (49) ஆக்யோர் இந்தியாவின் பாண்டியா (164), அஷ்வின் (126) ஆகியோரை விட அதிகமாய் ஸ்கோர் செய்தனர்.
இங்கிலாந்து: 502 vs இந்தியா: 290

ஆல்ரவுண்டர்கள் விசயத்தில் மட்டும் தான் இந்தியா இங்கிலாந்துடன் ஓரளவுக்காவது போட்டியிட்டுள்ளது. பவுலர்கள், கீப்பர்களின் ரன்களின் விசயத்தில் போட்டியே இல்லை. இந்த இரண்டு அம்சங்களில் தான் இங்கிலாந்து இந்தியாவை சுலபமாய் முறியடித்தது.
மூன்று டெஸ்டுகளிலும் இந்த அம்சங்கள் தாம் இந்தியா பின்னுக்கு செல்ல பிரதான காரணங்களாய் அமைந்தன. அதாவது, இரண்டு அணிகளிலும் துவக்க மட்டையாளர்கள் திணறினர். மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் நன்றாய் ஆடினர். ஆனால் கீழ்மத்திய வரிசையில் இங்கிலாந்து குவித்த ரன்களே வெற்றி தோல்வியை நிர்ணயித்தன.
ஏன் இந்த கீழ்மத்திய வரிசை (5-8 எட்டுக்குள் வந்த பேட்ஸ்மேன்களின்) ரன்கள் ஏன் இத்தொடரில் முக்கியமாய் மாறின?
இத்தொடரில் மட்டையாட சிறந்த வேளை 50-80 ஓவர்களுக்குள் தாம். இந்த கட்டத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாய் ஆடுதளமோ பந்தின் நிலைமையோ இராது.  அப்போது இந்தியாவின் மட்டையாளர்கள் ஆடத் தெரியாமல் நடுங்கி சரிய இங்கிலாந்தின் மட்டையாளர்களோ அடித்தாடி அரைசதங்கள் குவித்தனர். குறிப்பாய் கீப்பர் பட்லர் (260) மற்றும் பவுலிங் ஆல்ரவுண்டர் குர்ரன் (251) ஆகியோரின் ரன்கள் தாம் இந்தியாவின் சாவுமணிகளாய் மாறின.
வரும் வெளிநாட்டு ஆட்டத்தொடர்களில் இந்தியா இது போல் மயிரிழையில் தோற்காமல் இருக்க, ரன் அடிக்கும் கீப்பர்களையும் ஆளுக்கு 30, 40 ரன்களை எடுக்க திறன் கொண்ட பவுலர்களையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். சாஹா நல்ல கீப்பர் தான், ஆனால் வெறும் கீப்பிங் போதாது. பும்ரா, இஷாந்த் ஆகியோர் 5 விக்கெட்டுகள் எடுத்தால் மட்டும் போதாது.
இப்போதைய ஆட்டத்தொடர்களில், ஆடுதளங்கள் பந்துவீச்சுக்கு மிகுதியாய் உதவுவதால், வேகவீச்சாளர்கள் சோபிப்பது சுலபம். துவக்க மட்டையாளர்கள் ஆடுவதோ சிரமம். ஆக 4-9 வரை ஆடும் மட்டையாளர்கள் தாம் ரன்களை பெரும்பாலும் எடுக்க வேண்டும். முதல் 3 மட்டையாளர்களால் பெரிதாய் பங்களிக்க முடியாது. அவர்கள் ஆளுக்கு 50 பந்துகளை தடுத்தாடினாலே போதும். மேற்சொன்ன மத்திய-கீழ் வரிசையின் 6 மட்டையாளர்களில் முதல் மூவர் சற்றே தடுத்தாடி ரன் சேர்ப்பவர்களாகவும் அடுத்த மூவர் அடித்தாடி அதிரடி ரன் எடுப்பவர்களாகவும் இருப்பது அவசியம். இங்கிலாந்தின் ஆல்ரவுண்ட் திறனே இத்தொடரில் அவர்கது வெற்றி மார்க்கம்.
இந்தியாவில் நாம் ஆடும் போது துவக்க மற்றும் மத்திய வரிசையே ரன்களைக் குவிக்கும். ஏனெனில் முதல் மூன்று நாட்களில் அதுவும் மதியம் 2 மணி வரை தான் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும். ஆகையால் முதல் 4 மட்டையாளர்களே அதிக ரன்கள் எடுப்பர். கீப்பர் மற்றும் பந்து வீச்சாளர்களின் ரன்கள் நமக்கு இந்தியாவில் ஆடுகையில் அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் வெளிநாடுகளிலோ நிலைமை தலைகீழ்.
இந்தியாவில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை வென்று வரும் கோலி, இந்த முக்கியமான இரு துறைகளின் ரன்கள் போதுமான அளவுக்கு கவனிக்கவில்லை. ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள், கீப்பர் எனும் அழுத்தத்தில் இருந்து அவர் மீள வேண்டும். ஆடுதளமும், சீதோஷ்ண நிலையுமே நம் நிலைப்பாட்டை முடிவு செய்ய வேண்டும். வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில், கோலியின் வியூகங்கள் தவறானவை.
தீபக் சஹார் போன்ற கீழ்வரிசை ரன்கள் விளாசக் கூடிய வேகவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து அவர் அடுத்து வரும் வெளிநாட்டு பயணங்களில் கொண்டு செல்ல வேண்டும். பாண்ட் போன்ற இளம் கீப்பர்களுக்கு உள்ளூர் ஆட்டங்களில் அதிக வாய்ப்பளித்து ஊக்குவிக்க வேண்டும்.
எளிமையாய் சொல்வதானால் - வரும் ஆட்டத்தொடர்களில் நம் மட்டையாட்டம் கீழிருந்து மேலாக அதிக ரன் குவிப்பதாய் அமைந்தால் நாம் வெல்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...