Skip to main content

இங்கிலாந்திடம் கோலி கற்றுக் கொள்ள வேண்டியது


Image result for india england test series


நான்காவது டெஸ்டில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்தியா 3-1 என்கிற நிலையில் தொடரை இழந்துள்ளது. ஆனால் டிவி நேரலை வர்ணனையில் சஞ்சய் மஞ்சிரேக்கர் சொன்னது போல, இது 3-1 எனும் ஸ்கோர் லைன் காட்டுமளவு தரைமட்டமான தொடர் தோல்வி அல்ல. மேலும் கீழுமாய் ஊசலாடிய தொடர் இது. இரண்டாவது டெஸ்டை தவிர மிச்ச மூன்று ஆட்டங்களிலும் இந்தியா கடுமையாய் போராடியது. நான்காவது டெஸ்டிலும் கூட கடைசி இன்னிங்ஸ் வரை ஆட்டம் தொடர்ந்து குடிகாரன் கால்கள் போல தடுமாறிக் கொண்டே வந்தது – கடைசியில் நிலைபெற்றது இங்கிலாந்தின் கால்கள், அதுவும் மிக சன்னமாய் தான்.

 என்னதான் தொடரை இழந்தாலும் கோலி தன் அணியின் போராட்டத்தைப் பொறுத்தமட்டில், தனது அபாரமான மட்டையாட்டத்தைப் பொறுத்தமட்டில், பெருமைப்படலாம். தென்னாப்பிரிக்க பயணத் தொடரைப் போன்றே, இத்தொடரிலும் இந்தியா வெற்றியை வெகுஅருகில் நெருங்கி வந்து, கடைசி கட்ட திறன் குறைபாடு மற்றும் மன உறுதியின்மை காரணமாய், தவற விட்டுள்ளது. அடுத்த முறை கோலி இதே போல இங்கிலாந்துக்கு பயணப்படும் போது, வளர்த்துக் கொள்ள வேண்டிய சில திறன்கள் என்ன? இனிமேல் பயணத் தொடர்களை எப்படி வெல்வது?
முன்பு மூன்றாவது வேகவீச்சாளரின் குறைபாடு இந்தியாவை பின்னுக்குத் தள்ளும். ஆனால் இம்முறை வேகவீச்சு சிறப்பாகவே அமைந்தது. அதுவும், புவனேஷ்வர் குமார் காயம்பட்டு விலகிய பின்னரும், பும்ரா, இஷாந்த் ஆகியோரின் சிறப்பான வீச்சு இந்தியாவை வலுப்படுத்தியது. ஷாமி அவ்வப்போது கங்காவாகவும் அவ்வப்போது சந்திரமுகியாகவும் ஆடினார்.
இத்தொடரில், இந்தியாவை விட இங்கிலாந்தை முன்னுக்கு தள்ளியவை 1) கீப்பரின் ரன்கள், (2) ஆல்ரவுண்டர்களின் ஆட்டம்.
இங்கிலாந்தை பொறுத்தமட்டில் கீப்பர்கள் பேர்ஸ்டோவ் (212), பட்லர் (260) ஆகியோர் இந்தியாவின் கார்த்திக் (21), பாண்ட் (43) ஆகியோரை விட பலமடங்கு கூடுதலாய் ரன்கள் அடித்தனர்.
இங்கிலாந்து: 472 vs இந்தியா: 64
வேகவீச்சாளர்களைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் வோக்ஸ் (149), ரஷீத் (84), புராட் (49) ஆகியோர் இந்தியாவின் பும்ரா (6), ஷாமி (26), இஷாந்த் (33) ஆகியோரை விட அதிகமாய் ரன் அடித்துள்ளனர்.
இங்கிலாந்து: 282 vs இந்தியா: 65

ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் குர்ரன் (251),ஸ்டோக்ஸ் (152), மொயின் அலி (49) ஆக்யோர் இந்தியாவின் பாண்டியா (164), அஷ்வின் (126) ஆகியோரை விட அதிகமாய் ஸ்கோர் செய்தனர்.
இங்கிலாந்து: 502 vs இந்தியா: 290

ஆல்ரவுண்டர்கள் விசயத்தில் மட்டும் தான் இந்தியா இங்கிலாந்துடன் ஓரளவுக்காவது போட்டியிட்டுள்ளது. பவுலர்கள், கீப்பர்களின் ரன்களின் விசயத்தில் போட்டியே இல்லை. இந்த இரண்டு அம்சங்களில் தான் இங்கிலாந்து இந்தியாவை சுலபமாய் முறியடித்தது.
மூன்று டெஸ்டுகளிலும் இந்த அம்சங்கள் தாம் இந்தியா பின்னுக்கு செல்ல பிரதான காரணங்களாய் அமைந்தன. அதாவது, இரண்டு அணிகளிலும் துவக்க மட்டையாளர்கள் திணறினர். மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் நன்றாய் ஆடினர். ஆனால் கீழ்மத்திய வரிசையில் இங்கிலாந்து குவித்த ரன்களே வெற்றி தோல்வியை நிர்ணயித்தன.
ஏன் இந்த கீழ்மத்திய வரிசை (5-8 எட்டுக்குள் வந்த பேட்ஸ்மேன்களின்) ரன்கள் ஏன் இத்தொடரில் முக்கியமாய் மாறின?
இத்தொடரில் மட்டையாட சிறந்த வேளை 50-80 ஓவர்களுக்குள் தாம். இந்த கட்டத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாய் ஆடுதளமோ பந்தின் நிலைமையோ இராது.  அப்போது இந்தியாவின் மட்டையாளர்கள் ஆடத் தெரியாமல் நடுங்கி சரிய இங்கிலாந்தின் மட்டையாளர்களோ அடித்தாடி அரைசதங்கள் குவித்தனர். குறிப்பாய் கீப்பர் பட்லர் (260) மற்றும் பவுலிங் ஆல்ரவுண்டர் குர்ரன் (251) ஆகியோரின் ரன்கள் தாம் இந்தியாவின் சாவுமணிகளாய் மாறின.
வரும் வெளிநாட்டு ஆட்டத்தொடர்களில் இந்தியா இது போல் மயிரிழையில் தோற்காமல் இருக்க, ரன் அடிக்கும் கீப்பர்களையும் ஆளுக்கு 30, 40 ரன்களை எடுக்க திறன் கொண்ட பவுலர்களையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். சாஹா நல்ல கீப்பர் தான், ஆனால் வெறும் கீப்பிங் போதாது. பும்ரா, இஷாந்த் ஆகியோர் 5 விக்கெட்டுகள் எடுத்தால் மட்டும் போதாது.
இப்போதைய ஆட்டத்தொடர்களில், ஆடுதளங்கள் பந்துவீச்சுக்கு மிகுதியாய் உதவுவதால், வேகவீச்சாளர்கள் சோபிப்பது சுலபம். துவக்க மட்டையாளர்கள் ஆடுவதோ சிரமம். ஆக 4-9 வரை ஆடும் மட்டையாளர்கள் தாம் ரன்களை பெரும்பாலும் எடுக்க வேண்டும். முதல் 3 மட்டையாளர்களால் பெரிதாய் பங்களிக்க முடியாது. அவர்கள் ஆளுக்கு 50 பந்துகளை தடுத்தாடினாலே போதும். மேற்சொன்ன மத்திய-கீழ் வரிசையின் 6 மட்டையாளர்களில் முதல் மூவர் சற்றே தடுத்தாடி ரன் சேர்ப்பவர்களாகவும் அடுத்த மூவர் அடித்தாடி அதிரடி ரன் எடுப்பவர்களாகவும் இருப்பது அவசியம். இங்கிலாந்தின் ஆல்ரவுண்ட் திறனே இத்தொடரில் அவர்கது வெற்றி மார்க்கம்.
இந்தியாவில் நாம் ஆடும் போது துவக்க மற்றும் மத்திய வரிசையே ரன்களைக் குவிக்கும். ஏனெனில் முதல் மூன்று நாட்களில் அதுவும் மதியம் 2 மணி வரை தான் ஆடுதளம் மட்டையாட்டத்துக்கு சிறப்பாக இருக்கும். ஆகையால் முதல் 4 மட்டையாளர்களே அதிக ரன்கள் எடுப்பர். கீப்பர் மற்றும் பந்து வீச்சாளர்களின் ரன்கள் நமக்கு இந்தியாவில் ஆடுகையில் அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் வெளிநாடுகளிலோ நிலைமை தலைகீழ்.
இந்தியாவில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளை வென்று வரும் கோலி, இந்த முக்கியமான இரு துறைகளின் ரன்கள் போதுமான அளவுக்கு கவனிக்கவில்லை. ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள், கீப்பர் எனும் அழுத்தத்தில் இருந்து அவர் மீள வேண்டும். ஆடுதளமும், சீதோஷ்ண நிலையுமே நம் நிலைப்பாட்டை முடிவு செய்ய வேண்டும். வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில், கோலியின் வியூகங்கள் தவறானவை.
தீபக் சஹார் போன்ற கீழ்வரிசை ரன்கள் விளாசக் கூடிய வேகவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து அவர் அடுத்து வரும் வெளிநாட்டு பயணங்களில் கொண்டு செல்ல வேண்டும். பாண்ட் போன்ற இளம் கீப்பர்களுக்கு உள்ளூர் ஆட்டங்களில் அதிக வாய்ப்பளித்து ஊக்குவிக்க வேண்டும்.
எளிமையாய் சொல்வதானால் - வரும் ஆட்டத்தொடர்களில் நம் மட்டையாட்டம் கீழிருந்து மேலாக அதிக ரன் குவிப்பதாய் அமைந்தால் நாம் வெல்வோம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...