Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

96 படத்தில் பிராமணியமா?


Image result for 96 movie
கே.என். சிவராமன் முகநூலில் 96 படம் குறித்து ஒரு ஆர்வமூட்டும் பதிவை எழுதி இருக்கிறார். அப்படத்தின் இசையிலும் ஜானகியின் பாத்திரத்திலும் ஊடாடும் பிராமணிய சிலாக்கியம் குறித்து சில கேள்விகள் எழுப்புகிறார் அவர். என்னவெல்லாம் எனப் பார்ப்போம்.

1)   ஏன் இப்படத்தில் கர்நாடக ராகங்களின் அடிப்படையிலான இளையராஜா பாடல்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்?
2)   இம்மாதிரி கர்நாடக இசையை சிலாகிப்பது ஒருவித மயக்கநிலை; இது மக்களை சாதிய மனநிலையில் ஆட்படச் செய்வது; இளையராஜா பாடல்கள் பிராமணியத்தை ஒருவகையில் தூக்கிப் பிடிக்கின்றன. இப்பாடல்களை 96 பிரதானப்படுத்துகையில் கர்நாடக இசையை சொந்தம் கொண்டாடும் ஒரு சமூகத்தினர் முன்னிலைப்படுகின்றனர். கே.என் சிவராமன் இதற்கு மாற்றாக மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்” படத்தின் அரசியல் உணர்வு பொருந்திய கலக இசையை முன்வைக்கிறார். இரண்டில் எது நமக்கு இப்போது தேவை என்பது அவரது கேள்வி.
3)   ஜானகியின் சாதி என்ன? ஜானகியின் குடும்ப பின்னணி, அவளது அப்பா, அம்மா குறித்த தகவல்கள் எவையும் படத்தில் இல்லை. மேலும் ஜானகி பாட்டுப் பாடும் பெண். இதைக் கொண்டு ஜானகி ஒரு பிராமணப் பெண்ணோ என சிவராமன் ஐயப்படுகிறார். இது சரியெனில், ஒரு மத்திய சாதி ஆணுக்கு தன்னை விட மேம்பட்டவள் என நம்பப்படும் ஒரு பிராமணப் பெண் மீதான மயக்கமாய், ஒரு சமிஸ்கிருதமயமாக்கல் விருப்பமாய் இப்படத்தின் கதையாடல் அமையாதா?
எனக்கு கே.என் சிவராமனின் கருத்துக்கள் / கேள்விகளுடன் முழுக்க உடன்பாடில்லை; ஆனாலும் ஒரு மாற்றுப் பார்வையை அளிக்கும், கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பும் குறிப்பு என்கிற வகையில் இது முக்கியமானது என நினைக்கிறேன்.
இனி எனது எதிர்வினை, அதே வரிசையில்.
1)   இளையராஜாவின் கணிசமான பாடல்கள் கர்நாடக ராகங்களின் அடிப்படையிலானவை தாம். அவர் ஒருவித இந்துத்துவ நோக்கு கொண்ட திரைக்கலைஞர் தான். ஆனால், கே.என் சிவராமன் செய்வது போல, கர்நாடக இசையை ஒரு சமூகத்துக்கு மட்டுமே உரித்தானதாய் பார்க்கலாமா? கலைஞர் கருணாநிதி கூட கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் கொண்டவரே (சிறிது காலம் இசை பயின்றிருக்கிறார்). தலித் கவிஞர்களில் முக்கியமானவரான என்.டி ராஜ்குமார் கர்நாடக இசை பயிற்றுநர், மிக நல்ல பாடகர். கர்நாடக இசை அனைவருக்குமானது என்பது என் பார்வை. அதில் ஒருவித சாதி அரசியல் உண்டு தான்; ஆனால் அத்தகைய அரசியல் தமிழ் நவீனத்துவ மேதைகளான பலரிடமும் உண்டு. மௌனி, லா.ச.ரா, தி.ஜா, கா.ந.சு என பலரிடமும். ஆனால் அவர்கள் (பாரதி உட்பட) வெறும் சாதியத்தில் ஊறினவர்கள் மட்டுமல்ல. சாதி அவர்களின் ஆளுமையின், சமூக அரசியல் இருப்பின் ஒரு சிறு பகுதி மட்டுமே. “ஒரே பிராமணாள் (அல்லது பிள்ளைமார்) கதைகளாயிருக்கே” என ஒருவர் நவீனத்துவ இலக்கியத்தை முழுக்க நிராகரித்தால் எப்படி இருக்கும்? நாளை நான் லா.ச.ராவை சிலாகித்து எழுதினால் நான் பிராமணிய ஆதரவாளன் ஆகிடுவேனா? இல்லை. இத்தகைய தட்டையான பார்வைகள் ஆரோக்கியமானவை அல்ல சிவராமன்.
2)   இசையின் ஒழுங்கு, அதன் ஆதிக்க அரசியல், பிறழ்வையும் ஒழுங்கின்மையையும் பிரதானப்படுத்தும் விளிம்புநிலை இசையின் (இரைச்சல் எனும் இசையின்) அரசியல் தேவை என்பதெல்லாம் மிக சுவாரஸ்யமான பின்நவீனத்துவ கருத்துக்கள். இளையராஜா பற்றின பிரேம்-ரமேஷின் நூலில் இந்த கோணத்திலான கேள்விகள் வருகின்றன. சிவராமனின் கேள்வி எனக்கு அந்த காலத்தைய பின்நவீன அரசியல் நிலைப்பாடுகளை நினைவுபடுத்தின. நான் இதை ஏற்கிறேன். ஒரே சமயம் நமக்கு ஒழுங்கும் ஒழுங்கின்மையும் கலைக்குள் தேவை, ஒன்றின் அதிகாரத்தை மற்றது எதிர்த்து எழ வேண்டும். நமக்கு 96இல் இளையராஜாவின் சுகமான ராகங்களும் வேண்டும், கானா பாலாவின் ஒழுங்கின்மையின்-அழகியல்-கொண்ட இசையும் வேண்டும். விளிம்பிலுள்ள இசை மையத்துக்கு வர வேண்டும், அது மையத்தை தொடர்ந்து சிதைக்க வேண்டும். ஆனால் அதற்காக அரசியல் சரித்தனத்தை பேணும் போக்கை நாம் மறுக்க வேண்டும். கானாவும் தகர தப்பட்டையும் மட்டுமே ஆதரிக்கத் தக்கது என்பது ஒரு அவசியமற்ற அரசியல் சரித்தன்மை.
3)   படத்தில் ஜானகியின் சாதி குறித்த குழப்பம் நிச்சயம் உள்ளது. அது இயக்குநரின் அரசியல் அல்ல, புத்திசாலித்தனம். ஒருவித வெளிப்படை சாதி அடையாளமின்மை பார்வையாளர்களை தடையின்றி நினைவேக்கத்தில் ஆழ்த்த உதவுகிறது. சரி, சிவராமன் சொல்கிறபடி அப்பெண் பிராமணர் தானா? அவளுக்கு ஜானகி எனப் பெயர் வைக்கப்பட பெற்றோரின் இசை ஆர்வமே காரணம் என படத்தில் குறிப்பு வருகிறது. இது ராமாயண ஜானகி அல்ல, சினிமா பாடகி ஜானகி. அடுத்து அவள் எங்குமே பிராமண பாஷையை மறந்தும் பேசுவதில்லை. அவள் கணவன் பெயர் சரவணன். அப்பெயர் பிராமணர்களுக்கு அமைந்து நான் கண்டதில்லை. சிவராமன் சொல்வது போல, அவள் அக்கிரகாரத்தில் வாழ்வதாய் படத்தில் காட்டப்படுவதில்ல. இறுதியாய், அவள் சைவ உணவே வேண்டும் என எங்கும் கேட்பதில்லை. மாறாக, நண்பர்களின் கூடுகையின் போதான விருந்தில் அவளுக்கு ராமசந்திரன் ஒரு தட்டு நிறைய பிரியாணியும் கூட சிக்கன் (மட்டன்?) வைத்துக் கொடுக்கிறான். அவள் அதை ஸ்டைலாய் ரசித்து உண்கிறாள். ஒருவேளை அசைவப் பழக்கம் அவளுக்கு சிங்கப்பூர் சென்று ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், அதை ராமச்சந்திரன் அறிந்திருக்க வழியில்லை. தனக்கு அசைவமே போதும் என அவள் கூறுவதும் இல்லை. ஆக, அவனாகவே அசைவம் கொணர்ந்து அளிப்பது அவள் இயல்பிலேயே, இளமையில் இருந்தே, அசைவம் உண்கிறவள் எனக் காட்டுகிறது.
நீங்கள் குறிப்பிடும் இசையின் அரசியலை நான் ஏற்கிறேன் சிவராமன். ஆனால் இசையை முழுக்க சாதி-வயப்படுத்துவதை மற்றும் ஜானகி பிராமணப் பெண்ணே எனக் கோருவதை நான் ஏற்கவில்லை.

Comments

பாடல் தேர்வை வேண்டுமானால் சொல்லலாம்.
அவள் பிரமணப்பெண்ணாக இருந்தால் என்ன...
இங்கேய அவளின் குடும்ப பின்னணி எத்தகு..?
சாதீய குறியீடுகள் மலிந்து கிடந்த பரியேறும் பெருமாள் போன்ற படங்களை நாம் தூக்கி பிடிப்போம்... அதனாலதான் குறியீடுகள் இல்லை என்றால் என்ன சாதி என்று தேடுவோம்.
இப்போ கர்நாடக சங்கீதத்தை எல்லாரும் படுகிறார்கள். இது ஒரு சாதிக்கான பட்டு இல்லை.
ஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படியான தேடலை தவிர்த்தல் நலம்.
கே.என் சிவராமன் பார்ப்பனர்தானே?
Anonymous said…
இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜாவா?
இல்லை. கோவிந்த் மேனன்
//கே.என் சிவராமன் பார்ப்பனர்தானே?// தேவையில்லாத கேள்வி

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...