முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செல்பி புள்ளயின் உளவியல்


எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கில் என் நண்பரான மெல்ஜோ எனும் ஆசிரியர் ஒரு கட்டுரை வாசித்தார். தற்படங்கள் இன்று ஒரு சமூக சுயமாக, தன்னிலையாக மாறிவருகிறது என்பதே அவரது கருதுகோள். அதாவது, நாம் ஒவ்வொருவரும் சமூக அங்கீகாரத்துக்காகத் தற்படங்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறோம். இது மிகையாக மாறும்போது தற்பட விரும்பிகளுக்குச் சமநிலை குலைகிறது. பல எடிட்டிங் ஆப்கள் மூலம் தம் தோற்றத்தை மெருகேற்றிப் பொய்யான பிரதியை அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கு விருப்பக் குறிகள் அதிகமாக ஆக, உண்மைக்கும் பொய்க்கும் இடையே இடைவெளி அதிகமாகிறது.
ஒரு நண்பர் இதை வேறுவிதமாய் முன்வைத்தார். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை மரபியல் ரீதியாய்ப் பெற்றிருக்கிறோம். இத்தோற்றத்தோடு உடன்பட முடியாமல் போகும்போது, மாற்று சுயத்தைக் கற்பிக்கும் வண்ணம் நாம் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறோம்; அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்கள் அங்கீகரிக்கும்போது புளகாங்கிதம் அடைகிறோம் என்றார்.

நான் அமைதியாக இருந்தேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நண்பரின் கருதுகோளில் ஏதோ ஒன்று முரணாய், இடறலாய் பட்டது. வெளியே வந்து கொஞ்ச நேரத்தில் புரிந்துபோனது. அழகற்றவர்களை விட அழகானவர்களே அதிகமாய் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். மிக “அசிங்கமான” முக அமைப்பு கொண்ட ஒருவர் தினமும் தற்படங்கள் வெளியிடுவதும் விருப்புக்குறிகளின் அங்கீகாரம் பெறுவதும் நடப்பதில்லை. ஓரளவுக்கு மேல் எடிட் செய்து தன் தோற்றத்தை முழுக்க மாற்ற முடியாது. மாநிறத்தைக் கொஞ்சம் சிவப்பாக்கலாம், பளிச்செனக் காண்பிக்கலாம், பருமனைச் சற்றே மறைக்கலாம். ஆனால், குரூரமான ஒருவரோ, அழகே இல்லாத ஒருவரோ தன்னை அழகனாக / அழகியாய் தற்படத்தில் சுலபத்தில் மாற்றிக் காண்பிக்க முடியாது.
அழகு குறைவான ஒருவர் நன்றாய் மேக் அப் அணிந்தும் வாளிப்பாகத் தோன்றும் ஆடைகள் அணிந்தும் இதே அழகு மேம்பாட்டைச் செய்ய முடியும். களிம்புகளுக்குப் பின்னால், சிகை அலங்காரத்துக்குப் பின்னால் பலர் வேறு ஒருவராக இருக்கிறார்கள். ஆக, இதைத் தற்படத்தில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. தோற்றத்தை ஒருவர் திருத்துவது அழகின்மையை ஈடுகட்டுவதாக அல்லது தாழ்வு மனப்பான்மைக்கு மாற்றாக அன்றி, மற்றொரு தன்னிலையைக் கட்டமைப்பதாகவே பார்க்க வேண்டி உள்ளது. உதாரணமாய், மேக் அப் அணிய விரும்பாமல் வெளியிடங்களுக்கு வரும் அழகிய பிரபல நடிகைகள் இருக்கிறார்கள். இவர்கள் தமது பிரபல, அன்றாடத் தன்னிலைகள் என இரண்டு தன்னிலைகளை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இரண்டையும் சமமாகப் பார்க்கிறார்கள்.
இயல்பிலேயே அழகான பெண்கள் மேக் அப் அணிய அவசியமே இல்லை. ஆனாலும் ஏன் செய்கிறார்கள் என்றால் தம் உடலைத் திருத்தி ஓர் ஓவியத்தைப் போல வரைய அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது நீங்கள் ஓர் அழகிய பெண்ணென்றால் உங்கள் உடலே நீங்கள் வரையும் ஓவியம் ஆகிறது.
ஓரளவு அழகானவர் தன்னைத் திருத்தித் தற்படம் வெளியிடுகையில் அவர் ஒரு மாற்றுத் தன்னிலையை உருவாக்கி அதை தானே ரசித்து வலைதளங்கள் வழி சமூக அங்கீகாரமும் பெறுகிறார். ஓர் அழகி தற்படங்களால் தன் பிரதிபிம்பங்களைப் பெருக்கும்போது, அவை “பிரதிபிம்பங்கள்” அல்ல, அப்பெண்ணின் தன்னிலை நீட்டிப்பு. தற்படம் ஒருவரின் இரட்டையாக மாறுகிறது. இரட்டை பின்னர் நான்காக, எட்டாக, பதினாறாகப் பெருகுகிறது.
எந்தப் பெண்ணிடமும் சென்று “நீங்கள் அழகுதான். ஆனால், உங்கள் தற்படம் அசிங்கமாக உள்ளது” என சொல்ல முடியாது. அது அவரைக் காயப்படுத்தும். அவர் தன் உடலையும் தன் தற்படத்தையும் சமநிலையாக வைத்தே பார்க்கிறார். இது பிறழ்வு அல்ல. தன் பிம்பத்தைத் தானாக நினைப்பதன் பிரச்சினை அல்ல.
ஒரு மனிதன் தனது தன்னிலையைத் தொடர்ந்து பற்பல வடிவங்களில் பெருக்கிட விரும்புகிறான், அதன் வழி ஒரு பேரனுபவத்தைப் பெறுகிறான். மனிதனின் ஆதார மையம் என்ற ஒன்றும் அதன் பிரதிபலிப்புகள் என மற்றொன்றும் உள்ளதாய் நம்புவது புராதனச் சிந்தனை; பின்நவீனத்துவத்தில் நிராகரிக்கப்பட்ட சிந்தனை அது. மனிதன் மொழிக்குள் தன்னைப் பெருக்கியபடியே இருக்கிறான், அதுவே அவனது இருப்பு என்பதே இன்றைய தத்துவம். இதற்கான கச்சித உதாரணமாகத் தற்படங்கள் உள்ளன.
இப்படி ஒருவர் தன்னைப் பண்பாட்டுக்குள், மொழிக்குள், உரையாடல்கள் வழி பெருக்கித் தன் படைப்பான தன்னழகையும் ரசிக்கிறார். இதைச் சுய-பெருக்க விருப்பம் என விளக்கலாம். அவர் தன்னை மேம்படுத்தத்தான் அப்படிச் செய்கிறார் என்றும் கூறிவிட முடியாது. ஏனென்றால் அவர் தூங்கி வழிந்தும், களைத்துப்போயும், மேக் அப் அணியாமலும்கூடத் தற்படங்களை வெளியிடுவார். நிஜ உலகிலும் அவர் மேக் அப் இன்றித் தெரிவார். ஆக, அழகு மேம்பாடு மட்டும் காரணமல்ல. அழகின்மையை ஈடுகட்டுவதும் தற்படம் எடுப்பதன் ஒரே நோக்கமல்ல.
இணையத்தில் கிடைக்கும் கேத்ரினா கைஃப்பின் தற்படங்களைப் பாருங்கள். மிகுதியான மேக் அப்புடன், மேக் அப் இன்றித் தூங்கி வழிந்தபடி, டல்லாக எனப் பல விதங்களில் அவர் தற்படங்கள் வெளியிடுகிறார். ஏற்கனவே கொண்டாடப்படும் அழகியாக இருக்கும் ஒரு நடிகை ஏன் தற்படம் எடுக்க வேண்டும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...