Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

செல்பி புள்ளயின் உளவியல்


எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கில் என் நண்பரான மெல்ஜோ எனும் ஆசிரியர் ஒரு கட்டுரை வாசித்தார். தற்படங்கள் இன்று ஒரு சமூக சுயமாக, தன்னிலையாக மாறிவருகிறது என்பதே அவரது கருதுகோள். அதாவது, நாம் ஒவ்வொருவரும் சமூக அங்கீகாரத்துக்காகத் தற்படங்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறோம். இது மிகையாக மாறும்போது தற்பட விரும்பிகளுக்குச் சமநிலை குலைகிறது. பல எடிட்டிங் ஆப்கள் மூலம் தம் தோற்றத்தை மெருகேற்றிப் பொய்யான பிரதியை அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கு விருப்பக் குறிகள் அதிகமாக ஆக, உண்மைக்கும் பொய்க்கும் இடையே இடைவெளி அதிகமாகிறது.
ஒரு நண்பர் இதை வேறுவிதமாய் முன்வைத்தார். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை மரபியல் ரீதியாய்ப் பெற்றிருக்கிறோம். இத்தோற்றத்தோடு உடன்பட முடியாமல் போகும்போது, மாற்று சுயத்தைக் கற்பிக்கும் வண்ணம் நாம் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறோம்; அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்கள் அங்கீகரிக்கும்போது புளகாங்கிதம் அடைகிறோம் என்றார்.

நான் அமைதியாக இருந்தேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நண்பரின் கருதுகோளில் ஏதோ ஒன்று முரணாய், இடறலாய் பட்டது. வெளியே வந்து கொஞ்ச நேரத்தில் புரிந்துபோனது. அழகற்றவர்களை விட அழகானவர்களே அதிகமாய் தற்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். மிக “அசிங்கமான” முக அமைப்பு கொண்ட ஒருவர் தினமும் தற்படங்கள் வெளியிடுவதும் விருப்புக்குறிகளின் அங்கீகாரம் பெறுவதும் நடப்பதில்லை. ஓரளவுக்கு மேல் எடிட் செய்து தன் தோற்றத்தை முழுக்க மாற்ற முடியாது. மாநிறத்தைக் கொஞ்சம் சிவப்பாக்கலாம், பளிச்செனக் காண்பிக்கலாம், பருமனைச் சற்றே மறைக்கலாம். ஆனால், குரூரமான ஒருவரோ, அழகே இல்லாத ஒருவரோ தன்னை அழகனாக / அழகியாய் தற்படத்தில் சுலபத்தில் மாற்றிக் காண்பிக்க முடியாது.
அழகு குறைவான ஒருவர் நன்றாய் மேக் அப் அணிந்தும் வாளிப்பாகத் தோன்றும் ஆடைகள் அணிந்தும் இதே அழகு மேம்பாட்டைச் செய்ய முடியும். களிம்புகளுக்குப் பின்னால், சிகை அலங்காரத்துக்குப் பின்னால் பலர் வேறு ஒருவராக இருக்கிறார்கள். ஆக, இதைத் தற்படத்தில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. தோற்றத்தை ஒருவர் திருத்துவது அழகின்மையை ஈடுகட்டுவதாக அல்லது தாழ்வு மனப்பான்மைக்கு மாற்றாக அன்றி, மற்றொரு தன்னிலையைக் கட்டமைப்பதாகவே பார்க்க வேண்டி உள்ளது. உதாரணமாய், மேக் அப் அணிய விரும்பாமல் வெளியிடங்களுக்கு வரும் அழகிய பிரபல நடிகைகள் இருக்கிறார்கள். இவர்கள் தமது பிரபல, அன்றாடத் தன்னிலைகள் என இரண்டு தன்னிலைகளை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இரண்டையும் சமமாகப் பார்க்கிறார்கள்.
இயல்பிலேயே அழகான பெண்கள் மேக் அப் அணிய அவசியமே இல்லை. ஆனாலும் ஏன் செய்கிறார்கள் என்றால் தம் உடலைத் திருத்தி ஓர் ஓவியத்தைப் போல வரைய அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது நீங்கள் ஓர் அழகிய பெண்ணென்றால் உங்கள் உடலே நீங்கள் வரையும் ஓவியம் ஆகிறது.
ஓரளவு அழகானவர் தன்னைத் திருத்தித் தற்படம் வெளியிடுகையில் அவர் ஒரு மாற்றுத் தன்னிலையை உருவாக்கி அதை தானே ரசித்து வலைதளங்கள் வழி சமூக அங்கீகாரமும் பெறுகிறார். ஓர் அழகி தற்படங்களால் தன் பிரதிபிம்பங்களைப் பெருக்கும்போது, அவை “பிரதிபிம்பங்கள்” அல்ல, அப்பெண்ணின் தன்னிலை நீட்டிப்பு. தற்படம் ஒருவரின் இரட்டையாக மாறுகிறது. இரட்டை பின்னர் நான்காக, எட்டாக, பதினாறாகப் பெருகுகிறது.
எந்தப் பெண்ணிடமும் சென்று “நீங்கள் அழகுதான். ஆனால், உங்கள் தற்படம் அசிங்கமாக உள்ளது” என சொல்ல முடியாது. அது அவரைக் காயப்படுத்தும். அவர் தன் உடலையும் தன் தற்படத்தையும் சமநிலையாக வைத்தே பார்க்கிறார். இது பிறழ்வு அல்ல. தன் பிம்பத்தைத் தானாக நினைப்பதன் பிரச்சினை அல்ல.
ஒரு மனிதன் தனது தன்னிலையைத் தொடர்ந்து பற்பல வடிவங்களில் பெருக்கிட விரும்புகிறான், அதன் வழி ஒரு பேரனுபவத்தைப் பெறுகிறான். மனிதனின் ஆதார மையம் என்ற ஒன்றும் அதன் பிரதிபலிப்புகள் என மற்றொன்றும் உள்ளதாய் நம்புவது புராதனச் சிந்தனை; பின்நவீனத்துவத்தில் நிராகரிக்கப்பட்ட சிந்தனை அது. மனிதன் மொழிக்குள் தன்னைப் பெருக்கியபடியே இருக்கிறான், அதுவே அவனது இருப்பு என்பதே இன்றைய தத்துவம். இதற்கான கச்சித உதாரணமாகத் தற்படங்கள் உள்ளன.
இப்படி ஒருவர் தன்னைப் பண்பாட்டுக்குள், மொழிக்குள், உரையாடல்கள் வழி பெருக்கித் தன் படைப்பான தன்னழகையும் ரசிக்கிறார். இதைச் சுய-பெருக்க விருப்பம் என விளக்கலாம். அவர் தன்னை மேம்படுத்தத்தான் அப்படிச் செய்கிறார் என்றும் கூறிவிட முடியாது. ஏனென்றால் அவர் தூங்கி வழிந்தும், களைத்துப்போயும், மேக் அப் அணியாமலும்கூடத் தற்படங்களை வெளியிடுவார். நிஜ உலகிலும் அவர் மேக் அப் இன்றித் தெரிவார். ஆக, அழகு மேம்பாடு மட்டும் காரணமல்ல. அழகின்மையை ஈடுகட்டுவதும் தற்படம் எடுப்பதன் ஒரே நோக்கமல்ல.
இணையத்தில் கிடைக்கும் கேத்ரினா கைஃப்பின் தற்படங்களைப் பாருங்கள். மிகுதியான மேக் அப்புடன், மேக் அப் இன்றித் தூங்கி வழிந்தபடி, டல்லாக எனப் பல விதங்களில் அவர் தற்படங்கள் வெளியிடுகிறார். ஏற்கனவே கொண்டாடப்படும் அழகியாக இருக்கும் ஒரு நடிகை ஏன் தற்படம் எடுக்க வேண்டும்?

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...