ஜீவஜோதியின் கணவர் 2001இல் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான சரவண பவன் அதிபர் ராஜகோபால் நீண்ட கால சட்டப்போராட்டத்துக்குப் பிறகு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் மருத்துவ சிகிச்சையின் பெயரில் வெளியே இருந்து இப்போது நிச்சயமாய் சிறையில் தொடர்ந்து காலம் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட சூழலில் காலமாகி உள்ளார். இரு பத்தாண்டுகளில் ஒரு மிகப்ப்பெரிய வணிக சாம்ராட்டின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சரிவுகள் சற்றே சினிமாத்தனமும் நிறைய பூடகத்தன்மையும் கொண்டவை.
அதுமட்டுமல்ல, ஜீவஜோதி தனியாக இறுதிவரை ஒரு மிகப்பெரிய செல்வந்தருக்கு, செல்வாக்கான ஆளுமைக்கு எதிராக நடத்திய போராட்டமும் மக்களுக்கு, பணமும் அதிகாரமும் படைக்காத மத்திய வர்க்கத்தினருக்கு, ஒரு உத்வேகமான சேதியாக அமைந்தது. இதுவரை ஊடகங்களில் வெளிவந்த செய்திக்குறிப்புகளை மட்டுமே பார்க்கையில் நமக்கு ஒரு முழுமை போன்று தொனிக்கும் (ஆனால் நிஜத்தில் முழுமையற்ற) ஒரு சித்திரம் கிடைக்கிறது:
சரவண பவன் அண்ணாச்சி ஏற்கனவே இரு திருமணங்கள் பண்ணியவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். தன் ஆலோசகர்களின் கருத்துப்படி கார்த்திகை நட்சத்திரத்தில் ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாவது “மணந்து” கொள்கிறார். மூன்றாவதாகவே, ஜோதிட அறிவுரைப்படி, அவர் ஜீவஜோதியை மணக்க விரும்புகிறார். ஜீவஜோதி மறுக்கிறார். அவர் சாந்தகுமார் எனும் குடும்ப நண்பர் / உறவினரை காதலிக்கிறார். அவரையே மணக்க விரும்புகிறார். அண்ணாச்சியின் வற்புறுத்தலையும் மீறி அவர் சாந்தகுமாரை மணம் புரிகிறார். அண்ணாச்சியின் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அண்ணாச்சி ஆள் வைத்து சாந்தகுமாரை கடத்தி வந்து கொல்கிறார். ஜீவஜோதி தன் கணவனைக் காணவில்லை என புகார் அளிக்கிறார். காவல்துறையினர் சாந்தகுமாரின் உடலை கொடைக்கானலில் கண்டெடுக்கிறார்கள். வழக்கு நடக்கிறது. ஊடகங்களில் ஜீவஜோதிக்கு சார்பாக செய்திகள் வருகின்றன. இந்த வழக்கு மொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுக்கிறது. ஜீவஜோதியின் புதுப்புது புகைப்படங்கள் தொடர்ந்து வார இதழ்களின் முகப்புப் படமாகின்றன. அண்ணாச்சியை நிலைகுலைய வைக்குமளவுக்கு பேரழகி இல்லை என்றாலும் இந்த பெண்ணிடம் என்னவோ வசீகரம் இருக்கிறது என பொதுமக்கள் நினைக்கிறார்கள். சரவணகார்த்திகேயன் முகநூலில் எழுதிய போது குறிப்பிட்டதைப் போல அந்த காலகாலத்தின் உன்னதமான “ஆன்டி” ஜீவஜோதி தான். சினிமா நடிகைகளுக்கு இணையாக அவர் புகழ் பெற்றார் (அதற்காக அவர் எந்த பிரயத்தனமும் பண்ணவில்லை என்றாலும்). தன்மனுஷியாக இந்த பெண் எப்படி ஒரு கொடூரமான தொழிலதிபரை எதிர்கொண்டு வீழ்த்துவாள் எனக் காண மொத்த தமிழகமும் ஆர்வமாய் விழித்திருந்தது. வழக்கு ஜீவஜோதிக்கு ஆதரவாக நடக்க ஜெயலலிதாவின் ஆதரவும் ஆசியும் உதவியது.
இந்த வழக்கு நடக்கும் இரு பத்தாண்டுகளில் ஜீவஜோதியின் வாழ்வின் வேறு பல திருப்பங்கள் வருகின்றன. ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அண்ணாச்சி ஜிவஜோதியை கடத்த முயன்றதாய் ஒரு வழக்கு பதியப்பட்டது. இது அண்ணாச்சி மீண்டும் சிறைத் தண்டனை பெற, வழக்கு அவருக்கு எதிராக திரும்ப, அவரது தண்டனைக் காலம் அதிகமாக்கப்பட காரணமானது. ஜீவஜோதி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். அவரது கணவர் ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார். ஒரு தையல் கடையும் ஓட்டலும் நடத்தி வருகிறார்கள். முதல் குழந்தை பிறந்த ஒன்பது மாதங்களில் காலமாகி விட்டது. அத்துயரில் இருந்து மீண்டு, இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் அவர் ஒரு அமைதியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. இதுவரையில் ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கைகள், கட்டுரைகளின் எளிய தொகுப்பு தான் இது. ஆனால் உற்று கவனித்தால் இந்த “திரைக்கதையில்” சில ஓட்டைகள் உள்ளது அம்பலமாகும்.
ஏனென்றால் இந்த செய்திகளும் குறிப்புகளும் ஜீவஜோதி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டவை. திருமணமாகி நிம்மதியாக வாழ நினைத்த ஒரு உத்தமி என்றே ஜீவஜோதி அதில் தன்னை சித்தரிக்கிறார். சுலபத்தில் ராமாயண சீதையை போல (ராவணன் இடத்தில் ராஜகோபால்) ஒரு தொன்மமாக அவர் மாற நமக்கு அவரை அங்கீகரிப்பது, அவருக்காக உச்சுக்கொட்டுவது சுலபமாகிறது. அதனாலே இந்த ஓட்டைகளை நாம் கவனியாமல் கடந்து போகிறோம்.
முதலில், தனது வாக்குமூலத்தில் திருமணத்துக்குப் பின்னர் தானும் கணவரும் வியாபாரம் பண்ண ராஜகோபால் பண உதவி பண்ணியதாக அவர் சொல்கிறார்.
எந்த வியாபாரம் என்றாலும் முதலீட்டுக்கு சில லட்சங்களாவது தேவையிருக்கும். ராஜகோபால் ஒரு வியாபாரி. தன் கடை ஊழியர்கள் காலையில் களைப்பாக வேலைக்கு வரக் கூடாது என அவர்கள் இரவில் திரையரங்குக்குப் போய் படம் பார்ப்பதையே தடை பண்ணியவர், உணவில் முடி விழக் கூடாது என்பதால் பரிமாறும், சமைக்கும் பணியாளர் வாராவாரம் முடி வெட்ட வேண்டும் என பணித்தவர் அவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு கராறான ஆசாமி தயை உள்ளம் காரணமாய் இலவசமாய் லட்சக்கணக்கில் பணத்தை கொடுப்பார் என நான் நம்பவில்லை. இந்த உதவியின் பின்னணியில் தான் அண்ணாச்சி தன்னை தொந்தரவு பண்ணியதாக, தன் கணவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது என வற்புறுத்தியதாக, தனக்கு உடல்நலிவுற்று இருந்த போதும் தன்னை “தொந்தரவு” பண்ணியதாக சொல்கிறார் ஜீவஜோதி.
இங்கே அடுத்த கேள்வி எழுகிறது:
ரோட்டில் போகிற ஒரு பெண்ணையோ அல்லது உங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் ஒருவரின் பெண்ணையோ கண்டு நீங்கள் இச்சிக்கலாம், ஆனால் அவர் தன் கணவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது எனக் கோருவீர்களா? நிச்சயமாக மாட்டீர்கள்.
இதன் தொடர் கேள்வி: அவனுடன் நீ படுக்கக் கூடாது என அவர் ஜீவஜோதியிடம் கோரினால் அதன் உட்கிடக்கை என்ன? “என்னுடன் மட்டுமே படுக்க வேண்டும்” என்பதே. நீங்கள் ஒன்று “இப்படித் தான் வேண்டூம்” என எப்போது கேட்பீர்கள்? அது ஏற்கனவே உங்களுக்கு கிடைத்திருந்தால். உ.தா, தீபாவளிக்கு வருடாவருடன் விடுமுறை என்பது நடைமுறை. விடுமுறை இல்லையென்றால் “வேண்டும்” எனக் கேட்பீர்கள்.
அடுத்த கேள்வி ஜோசியம் சம்மந்தமானது. நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்படுவது அண்ணாச்சி தன் மிதமிஞ்சிய ஜோசிய நம்பிக்கை, மூடநம்பிக்கையினால் தான், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை இரண்டாம், மூன்றாம் தாரமாக்கிக் கொள்ள துடித்தார், மேலும் பெரும் பணக்காரனாக வேண்டும் எனும் ஆசையினாலே அவர் ஜீவஜோதியை மணக்க விரும்பினர் என்பது. ஜீவஜோதியின் ஜாதகம் எப்படி அண்ணாச்சி வசம் போனது? அண்ணாச்சியின் இரண்டாம் மனைவியாக உள்ளவரும் ஏற்கனவே திருமணமானவரே. அவரையும் ஜாதகத்தின் அடிப்படையில் அண்ணாச்சி மணந்ததாக சொல்கிறார்கள். அவரது ஜாதகம் எப்படி அண்ணாச்சி வசம் போனது? வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் எல்லாரும் ஜாதக பிரதியுடன் அலைகிறார்களா? பார்க்கிறவருக்கு எல்லாம் ஒரு ஜெராக்ஸ் பிரதி கொடுக்கிறார்களா? இல்லை.
பெண்ணின் ஜாதகம் என்பது திருமண ஏற்பாடுகளின் போது மட்டும் முளைக்கும் ஒரு சமாச்சாரம். அதை ரோட்டில் போகிறவரெல்லாம் பார்த்து விட முடியாது. ஒரு பெண்ணிடம் நட்பான அடுத்த நாளே ஜாதகம் கேட்க முடியாது. இந்த ஜாதக விசயம் இந்த இரு பெண்களுக்கும் அண்ணாச்சியிடம் ஏற்கனவே இருந்த நெருக்கத்தை காட்டுகிறது என்பது வெளிப்படை.
Comments