விலைவாசி உயரும் போது வேலைப்பளுவும் அதிகமாகிறது. அப்போது ஊழியர்களின் உழைப்பு, உற்பத்தி (வேலையின் வெளிப்பாடு, பொருண்மையாகவோ அல்லாமலோ) அதிகமாகிறது. சம்பளமும் அதிகமாகிறது. ஆனால் இந்த சம்பளத்தை வைத்து வசதியாக வாழவோ சேர்த்து வைக்கவோ முடியாது. முன்பு ஏழெட்டு மணிநேரம் வேலை செய்தவர்கள் 12-14 மணிநேரங்கள் உழைக்கிறார்கள். முன்பு 20,000 சம்பாதித்தவர் 40,000 சம்பாதிப்பார். தாம் அதிக வேலை செய்வதற்கு ஈடாக கூடுதல் பணம் கிடைக்கிறதே என நினைப்பார். ஆனால் விலைவாசி அனைத்துக்கும் மூன்று நான்கு மடங்கு அதிகரிக்கும். அவர் செலவு செய்து அதே அளவுக்கே பொருள் வாங்குவார். அவரது சேமிப்பும் அதிக அளவுக்கே இருக்கும். அவருக்கு ஒரே மாயமாக இருக்கும். முன்வாசல் வழியாக புன்னகையுடன் ஒருவர் மூட்டை நிறைய பணத்தைத் தருவார்; உடனே பின்வாசல் வழியாக மற்றொருவர் கோபத்துடன் வந்து அதைப் பறித்துக் கொண்டு போய் விடுவார். இவரும் அவரும் ஒரே போல தோன்றுகிறாரே என அவருக்கு குழப்பமாக இருக்கிறது. என்னதான் நடக்கிறது?
பொருளாதாரம் தடுமாறும் போது, பணவீக்கம் ஏற்படும் போது வேலையிழப்பு, அது குறித்த பதற்றம், நெருக்கடியும் அதிகரிக்கிறது. இவ்வளவு சம்பாதித்தும் பயனில்லையே என அவர் வேலைகுறித்து ஏமாற்றமடைந்து ஆர்வமிழப்பார். இப்போது அவரால் வேலையிடத்தில் சுணக்கம் காட்டவோ புது வேலையைத் தேடவோ முடியாது. வேலையைத் தக்க வைக்க அவர் கூடுதல் நேரங்கள் மாரடித்தே ஆக வேண்டும். உடல்நலமில்லாமல் போகும் போதும் அவரால் விடுப்பெடுக்க முடியாது. எல்லா வித வேலையிட அதிகார துஷ்பிரயோகங்கள், ஒடுக்குமுறைகளையும் அவர் தாங்கிக் கொள்ள வேண்டும்.
பொருளாதாரம் சீரழியும் போது அரச வன்முறை, கொடுங்கோன்மை, பாசிசம் ஆகியவையும் அதிகரிக்கின்றன. வேலையிடத்தில் அடிமையாக இருக்கிறோமே வெளியிலாவது சற்று உண்மையாக இருக்கலாமே என ஒருவர் நினைத்தால் அது சற்றும் சாத்தியப்படாது. அவரது ஒவ்வொரு சிறு அசைவும் கண்காணிக்கப்படும். அவர் குற்றம் செய்யுமுன்னே அரச அதிகாரம் அவனைத் தண்டிக்கும். சமீபத்தில் இந்திய-சீன தலைமைகள் தமிழகத்தில் சுற்றுலா சந்திப்பு நடத்திய போது சீனாவுக்கு எதிராக திபெத்திய மாணவர்கள் சென்னையில் போராட்டம் நடத்தக் கூடும் என ஐயப்பட்ட உளவுத்துறை சீன பிரதமர் வரும் முன்பே என் திபெத்திய நண்பர் ஒருவரை கைது செய்தது. அவர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டதாகக் கூட ஆதாரம் இல்லை. திபெத்திய கலகக்கரார்களின் தலைவர் அவர் என ஒரு குருட்டுத்தனமான குற்றச்சாட்டை வைத்து அவரையும் வேறு சில மாணவர்களையும் காவல்துறை புழல் சிறையில் தள்ளியது. அத்துடன் அவர் வேலை செய்த கல்லூரிக்கு செய்தி அனுப்பி அவரை வேலையில் இருந்து நீக்கவும் வழிவகை செய்தது. மற்றொரு நண்பர் முன்பு முதுகலை மாணவராக இருக்கையில் பல மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். அவர் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்த நிலையில் அவர் போராட்டங்கள் நடத்தக் கூடும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் தூக்கப்பட்டார். இப்போதெல்லாம் நீங்கள் அரசரைப் பற்றி, அவரது சர்வாதிகார செயல்களைப் பற்றி அரை வினாடி யோசிக்கும் போதே வாயில் மணி அடிக்கும்; தூக்கி புழலில் போட்டு விடுவார்கள். எப்படி வேலையிடத்தில் நிர்வாகத்தை கேள்வியின்றி பின்பற்றுகிறோமோ அப்படியே சமூகத்தில் அரசரையும் அடிபணிந்தாக வேண்டும்.
பொருளாதார வீழ்ச்சி பற்றி யோசிக்கும் போது ஊடகங்கள் முன்வைப்பது என்ன? பெருமுதலாளிகளின் நெருக்கடி, பல நூறு கோடிகள் நஷ்டமாவது பற்றி, தொழில் நிறுவனங்களின் நசிவு பற்றி கண்ணீர் சிந்துகின்றன ஊடகங்கள். காபி டே நிறுவனர் தற்கொலை செய்ததை வைத்து ஒப்பாரி வைக்கிறது. ஆனால் பெருமுதலாளிகளுக்கு இதில் லாபம் அதிகம். கூடுதல் வேலை நேரம், கேள்வியற்ற அடிபணிவு, அதிக உற்பத்தி, குறைவான சம்பளம், சம்பளத்தைக் கூடுதலாகக் கேட்டு கிடைக்காத நிலையில் புது வேலையை நாடும் துணிச்சலின்மை என முதலாளித்துவத்துக்கு சாதகமான சூழல் அமைகிறது. பொருளாதாரம் நசிந்து விட்டது எனக் காட்டி ஆட்குறைப்பை செய்யவும், மேலும் ஆட்குறைப்பு செய்ய நேரும் என மிரட்டி, கார்ப்பரேட் வரியை குறைக்க அரசை நிர்பந்திக்கவும் முடியும். சிறுவியாபாரிகளும் சிறுமனிதர்களும் தாம் தவிக்கிறார்கள்; பணம் எங்கே போகிறது எனப் புரியாமல் குழம்புகிறார்கள்.
அரசுக்கும் இந்த சூழல் பயனளிக்கிறது. பொருளாதார நெருக்கடியின் வெக்கையை அவர்களால் திசை திருப்பி விட முடிகிறது. மற்றமைகளை உண்டுபண்ணி அவர்களைத் தாக்கி மக்களுக்கு செயற்கையான திருப்தியை, நம்பிக்கையை, அதிகாரத்தைத் தர முடிகிறது. அதாவது ஆட்சியை முழுக்க ஒரு ஆக்ஷன் சினிமாவாக மாற்றி நாட்களை கடத்தவும் நல்ல பெயர் வாங்கவும் முடிகிறது. எந்த பிரச்சனையையும் தீர்ப்பதற்காக மண்டையை போட்டு உடைக்கவோ, தீர்வுகளை வகுக்கவோ தேவையில்லை. அரசியல் எதிரிகளே இருக்க மாட்டார்கள். உ.தா., இந்திய பொருளாதாரம் மிக மிக மோசமான நிலைமையில் இருக்கும் போது தான் இந்திய பிரதமர் மக்களின் நாயகனாகவும் கொண்டாடப்படுகிறார். வில்லனே இல்லாத சினிமாவின் நாயகன் அவர். வில்லன்கள் அவரது காலடியில் பணிந்து அவர் காலடி மண்ணைத் தொட்டு வணங்குகிறார்கள்.
மனிதன் ஒரு விசித்திரமான மிருகம். அவன் கடுமையான நெருக்கடியில், எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கும் போது முழுக்க பணிந்து, அமைதியாகி விடுகிறான். ஒரு மிருகம் கூட பயத்தில் அதிக வன்முறை கொண்டதாகும்; அதை நெருங்க அஞ்சுவார்கள். ஆனால் மனிதனுக்கு வெறுப்பை, கோபத்தை நேரடியாகக் காட்டத் தெரியாது. அவனது வன்மத்தை மடைமாற்றி விடுகிறவனை அவன் தலைவனாக ஏற்று காலில் பணிவான். அவர் காட்டுகிற திசையில் மொத்த கொலைவெறியையும் பிரயோகிப்பான். இரண்டாம் உலகப்போரின் தறுவாயில் ஜெர்மனியிலும் இப்போதும் ஒவ்வொருமுறை உலகம் முழுக்க பொருளாதாரம் சரியும் போது வலதுசாரிகள் எழுச்சி பெறுவது இப்படித் தான்.

Comments