முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல்





மோடி திரும்ப ஆட்சிக்கு வந்த பிறகான எதிர்க்கட்சியினரின் அரசியலை இந்த இரண்டு சொற்களில் சுருக்கி விடலாம்: பொறுப்பை கைகழுவுவது. ஏன் கைகழுவும் நிலைக்கு அவர்கள் வந்தார்கள்?
 பாஜக செய்வது எல்லா பிரச்சனைகளிலும் நாட்டை இந்து-முஸ்லீம் எனப் பிரிப்பது. முஸ்லீம்கள் அனைவரும் தேசதுரோகிகள் என அவர்கள் முடிவு செய்து விட்ட நிலையில் பாஜகவினரை எதிர்ப்போர் அனைவரும் முஸ்லீம்கள் அல்லது தேசதுரோகிகள் என முத்திரை குத்துவது சுலபமாகி விட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்குக் கிடைத்த பெருவாரியான வெற்றியைக் கொண்டு இந்த பிரிவினை அரசியலை நேருக்கு நேர் எதிர்க்காமல் இருப்பதே சாமர்த்தியம் எனும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்தன; காங்கிரஸ் தன் எதிர்ப்பை நாடாளுன்றத்திலும் ஊடகங்களிலும் கண்டனம் தெரிவிப்பது எனும் வகையில் சுருக்கிக் கொண்டது. சில மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் அது முனைப்பாக பிரச்சாரம் செய்யவில்லை; அது தன் நம்பிக்கையை முழுக்க இழந்து விட்டிருப்பதாகவே தெரிகிறது. பாஜகவிடம் வாய் கொடுப்பது ஒரு படத்தில் வடிவேலு கிட்னி உருவும் கும்பலிடம் மாட்டிக் கொள்வதற்கு சமம் என இன்று எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டுள்ள நிலையில் தேசத்தை உலுக்கும் எந்த பிரச்சனையிலும் முழுமூச்சாய் களமிறங்கிப் போராட அவர்கள் தயாரில்லை. அதற்குப் பதிலாக மக்களே போராட்டும் என விட்டு விட்டார்கள்.

ஆனால் அப்போதும் பாஜக விடவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க எழுந்த தன்னிச்சையாக மக்கள் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் பின்னிருந்தும் இயக்கும் போராட்டங்கள் என பாஜக குற்றம் சாட்டியது. இப்போது எதிர்க்கட்சிகளால் அதை மறுக்க முடிந்ததே ஒழிய தாம் இச்சட்டத்தை எதிர்க்கிறோம் என்பதை சொல்லாமல் மறுக்க முடியவில்லை. இது சந்தேகத்தை விளைவிக்கும், அதைக் கொண்டு மொத்த போராட்டங்களின் பொறுப்பையும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்தலாம் என பாஜக திட்டமிட்டது. இதனால் தான்அமைதி வழியில் போராடுங்கள், ஆனால் வன்முறையை கையில் எடுக்காதீர்கள்என ரஜினியைக் கொண்டு அது சொல்ல வைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களிடம் எதிர்க்கட்சியினர் குழப்பத்தை விளைவிக்கிறார்கள், அதன் நீட்சியே இப்போராட்டங்கள் என மற்றொரு தரப்பையும் பாஜக எடுத்தது - பாஜகவின் தலைவர்கள், பிரசசாரகர்கள் திரும்பத் திரும்ப இதையே சொன்னார்கள்; நடுநிலையாளர்கள் எனும் மறைமுக பிரச்சாரர்களைக் கொண்டும் சொல்ல வைத்தார்கள். இப்படி எப்படி சுற்றி வந்தாலும் பழியை மொத்தமாய் எதிர்க்கட்சியினர் தலையில் சுமத்தி அவர்களை ஒவ்வொரு மூத்திர சந்தாக வளைத்து அடிப்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது

தில்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் முன்னர் கேஜ்ரிவாலை பாஜக இந்த உத்தியைக் கொண்டு வம்புக்கு இழுத்தார்கள். எப்படியாவது அவரை சிறுபான்மை ஆதரவாளர் என முத்திரை குத்தி தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை திசைதிருப்புவதே திட்டம். ஆனால் கேஜ்ரிவால் தடுத்தாடினார். அவர் தனது வளர்ச்சித் திட்டங்களை மட்டுமே வைத்து பிரச்சாரம் செய்தார். இது போதாது என ஹனுமான் சாலிஸாவை ஜெபிப்பது, கோயிலுக்கு செல்வது என பாஜகவின் மதவாத மார்க்கங்களை மென்மையாக தானும் கையாண்டு பார்த்தார். கேஜ்ரிவாலின் இந்த பிரச்சார பாணி வெற்றி கண்டது. அவர் மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் இப்போது அவருக்கு ஒரு தர்மசங்கடம் - அதே அரசியலை தேர்தலுக்குப் பின்னும் தொடர்வதா அல்லது லட்சியவாத அரசியலை எடுப்பதா?
 உதாரணமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் வரை தில்லி மீது அமித் ஷாவின் அதீத கவனம் இருக்கும். காவல்துறையை பயன்படுத்தி அவர் அங்கு பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டி அடிப்பார் என்பது பட்டவர்த்தமானது. இப்போது கேஜ்ரிவால் தனக்கு வாக்களித்த மக்களை ஆதரித்து களமிறங்க வேண்டுமா அல்லது அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதற்குப் பதில் காண அவர் கீழ்வரும் கேள்விக்கு முதலில் பதிலளிக்க வேண்டும்: பிரிவினைவாதத்துக்கு எதிராக மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார்களா? இரண்டாவது தான் உண்மையெனில் இத்தேர்தலில் மக்கள் சராசரியாக ஏனும் பாஜகவுக்கு வாக்குகளை அளித்து அவர்களை இரண்டாமிடத்துக்கு கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் அது நிகழவில்லை. இது தலைநகரில் மக்கள் பிரிவினைவாத அரசியலை கொண்டாடவில்லை என்பதைக் காட்டுகிறது.
 ஆனால் கேஜ்ரிவால் இதை நம்பவில்லை. ஆகையால் அவர் காந்தியின் வாய்பொத்திய குரங்காக தன் அரசியலைத் தொடர்கிறார். அவர் இப்போது தில்லியின் முதல்வர் எனபதை நம்பவே சிரமாமாக உள்ளது. வெறுமனே நிர்வாகம் செய்வது தான் ஒரு முதல்வரின் பணியா? காவல்துறை அவரது பொறுப்பில் இல்லையென்றாலும் கூட மக்கள் கொல்லப்படும் போது, அத்தாக்குதலை பாஜகவின் தலைவர்களே பொதுவெளியில் தூண்டி விடும் போது அதை எதிர்க்க வேண்டியது அவரது பொறுப்பு அல்லவா? ச்சீய் என காறித் துப்பலாம் அல்லவா? அப்படி செய்தால் மத்திய அரசு ஆட்சியைக் கலைக்கும் என்பதெல்லாம் வெற்று பயம். இதை விட சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் மத்திய அரசை கடுமையாக அவர் விமர்சித்திருக்கிறார். இப்போது எங்கே போயிற்று அந்த துணிச்சல்? கேஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் ஏமாற்றமளிக்கும் காலகட்டம் இதுவே என்பேன்
ராகுலும் சோனியாவும் கூட நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட காரணத்துக்காகவே பாதுகாப்பாக விளையாடுகிறார்கள் என கணிக்கிறேன். அவர்கள் நேரடியாக போராட்டக் களத்துக்கு செல்லாவிடினும் கூட தாம் இருக்கும்  இடத்தில் இருந்து உண்ணாநிலை போராட்டதை ஆரம்பிக்கலாம் (அது அவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது தானே; ஒரு மனிதனால் சுமார் 40 நாட்கள் வரை உண்ணாமல் இருக்க முடியும் என்கிறார்கள். இவர்களால் நாலு நாட்கள் இருக்க முடியாதா?). நாடு முழுக்க பிற தலைவர்களையும் அவ்வாறு போராடக் கேட்கலாம். களத்தில் மக்கள் ரத்தம் சிந்தும் போது அரசியல்வாதிகள் ஏஸியில் இருந்து ட்வீட் செய்து ஆபாசத்திலும் உச்சமான ஆபாசம் என்பேன். காந்தியிடம் இருந்து எதிர்க்கட்சிகள் இச்சமயம் கற்றுக் கொள்ள வேண்டியது இது: அரசு ரத்தத்தைக் காட்டி மக்களை பயமுறுத்தினால் அதற்கு எதிராக தலைவர்கள் ரத்தம் சிந்த வேண்டும். அப்போது மட்டுமே ஒரு நாட்டின் மனசாட்சியை அவர்கள் தட்டி எழுப்ப முடியும். ஆனால் கடைசியாக ஒரு தலைவர் இங்கு தலையில் அடி வாங்கியது எப்போது? உண்ணாவிரம் இருந்து மயங்கி விழுந்தது எப்போது? (சுதந்திரப் போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் இதை செய்திருக்கிறார்கள்.)

 பாஜகவும் காங்கிரசிடம் இருந்து இதையே விரும்புகிறது என்பேன் - அதனால் தான் அவர்கள் சோனியாவையோ ராகுலையோ ப்ரியங்காவையும் இதுவரை கைது செய்து சிறையில் தள்ளவில்லை; ஒரு சொத்தை வழக்கில் பா. சிதம்பரத்தை சிறையில் வைத்த அவர்களுக்கு இதை செய்யவா முடியாது? ஆனால் அப்படி செய்து மக்களின் சிறிய பச்சாதாபம் கூட அவரக்ளின் பால் வந்து விடக் கூடாது. அவர்கள் பங்களாவை விட்டு வெளியேறாத சொகுசு தலைவர்கள் எனும் பிம்பத்தை தக்க வைக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. காங்கிரஸ் விழித்துக் கொள்ள இதை விட சிறந்த சந்தர்ப்பம் அமையாது.

மக்கள் தெருவில் இறங்கிப் போராட்டடும். தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவாக தெருவுக்கு வராவிட்டாலும் சிறைக்காவது செல்லட்டும். அங்கிருந்து உண்ணாவிரதம் இருந்து அரசை அச்சுறுத்தட்டும். ஒரு முக்கிய தலைவர் தன்னை வருத்தி மக்களுக்காக போராடுகிறார் எனும் சேதியை கடத்தாவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் பாசிசத்தை யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் மக்கள் எதிர்க்கட்சிகள் மீதான நம்பிக்கையை வேகவேகமாய் இழந்து வருகிறார்கள். நமக்குத் தேவை சுதந்திர போராட்ட கால அரசியல். நமக்குத் தேவை எமர்ஜென்ஸி கால அரசியல். நமக்குத் தேவை காந்தி உயிரோடு இன்றும் இருந்திருந்தால் செய்திருக்கக் கூடிய அரசியல். நமக்குத் தேவை ஸ்டாலின் தமிழகத்தில் முன்னெடுக்கும், கேரளாவில் பிணராஜி விஜயன் மேலெடுக்கும் பாஜகவை நேரடியாக தாக்கி எதிர்க்கும் அரசியல். ஹிட்லர்களையும் முசோலினிகளையும் வேறெப்படியும் அடித்து துரத்த முடியாது.

நன்றி: அங்கே என்ன சத்தம் - 13

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...