Skip to main content

கொரோனா கொண்டான்



(21 நாள் கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படப் போவதாய் செய்தி வந்ததை ஒட்டி எழுதபட்டது.)

இன்னும் சில தினங்களில் கொரோனா கொண்டான் கோப்பரகேசரி மோடிஜி அவர்கள் தான் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அறிவிப்பொன்றை செய்ய இருப்பதாக ஒரு அறிவிப்பை செய்வார். இம்முறை நாம் பதற வேண்டியதில்லை - லாக்டவுனை தான் நீட்டிக்க போவதாகத் தான் தலைவர் சொல்லப் போகிறார். அது மேலும் இரு வாரங்களா அல்லது ஒரு மாதமா என்கிற எண்ணிக்கையில் தான் வித்தியாசம் இருக்கும். அதற்கு முன்பு தனது விண்ணப்பங்களை ஏற்று கொரோனாவை பாதி முறியடித்து விட்ட நாட்டு மக்களை தான் சிரம் தாழ்ந்து வணங்குவதறாக கண்கலங்குவார். மீதி பாதி கொரோனாவைக் கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்ட நாம் ஜனங்கள் படைவீரர்களாக தன்னுடன் அணிவகுக்க வேண்டும் என மேலும் குரல் தழுதழுக்க சொல்வார். உடனே நாமும் கண்கலங்குவோம். (நடிகண்டா!) 


சரி, சற்று சீரியசாக ஒன்றைக் கேட்போம்: அது தான் தொற்று குறைந்து விட்டதே, வியாதி இறங்குமுகத்தில் இருக்கிறதே, இருந்தும் மோடிஜி ஏன் நம்மை வீட்டுச்சிறை வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்?

இப்போதுள்ள ஊரடங்கு அரைகுறையானது. தமிழகத்தில் மக்கள் சாலையில் சகஜமாக உலவுவதை டிவியில் பார்த்தேன். கடைகளிலும் கூட்டம் தான். வேலைக்குப் போக மட்டும் தான் மக்கள் வெளிவர இல்லையே தவிர வெளியே தான் இருக்கிறார்கள். அரசுக்கும் இது தெரியும். அரசுக்கு மற்றொன்றும் தெரியும் - கொரோனா இந்தியாவில் ஆவேசமாகப் பரவாது. இந்தியர்களின் மரபணுவினாலா, தடுப்பாற்றல் நமக்கு அதிகமென்பதாலோ தெரியவில்லை. இந்த வாரத்தில் மட்டுமே லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அதில் பாதி பேர் செத்து விடுவார்கள் என பல மருத்துவர்கள் பயமுறுத்தியது போல ஏதும் நடக்கவில்லை; அதனால் நினைத்தளவுக்கு ஆபத்தில்லை என மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறோம். இன்னொரு பக்கம், கொரோனா அதிகம் நம்மைத் தாக்காததில் நம்மை விட அதிகம் பயன்பெற்றது மோடிஜி தான். ரோஹித் ஷர்மா முப்பதாவது ஓவரில் சதம் அடித்ததும் என்ன நினைப்பார்? அடுத்த இருபது ஓவர்களும் ஆடி இதை இரட்டை சதமாக்கலாமே என. மோடிஜியும் அப்படித்தான் யோசிக்கிறார்.

இப்போதைக்கு இது நிர்வாகம் அல்ல அரசியல் (என்றைக்குமே அப்படித்தானே என கேட்காதீங்க).

 குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் பரவலாகிய போது மோடிஜி அரசு மீது அதிருப்தி தொன்றியது உண்மை. அதனால் பதற்றம் ஏற்படத் தான் அவர் தில்லியில் குண்டர்களை அவிழ்த்து விட்டு போராளிகளைத் தாக்கி கொல்ல வைத்தார். மாணவர்களை கல்லூரிக்குள்ளும் விடுதிக்குள்ளும் புகுந்து அடிவெளுக்க வைத்தார். பலவந்தமாக போராளிகளை தெருவில் இருந்து அகற்றினார். அது அவர் மீதான அதிருப்தியை அதிகப்படுத்தி விட்டது. ஆனால் நமது மோடிஜிக்கு மக்களின் மறதி மீது நம்பிக்கை அதிகம்; அவருக்குத் தெரியும் தனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் ஒரு நல்வாய்ப்பு வரத்தான் போகிறது என - அப்படி எதிர்பாராமல் வந்தது தான் கொரோனா. கொரோனாவை எதிர்கொள்ள இந்த அரசு எந்த விதத்திலும் தயாராக இல்லை. அதற்காக பணம் செலவழிக்கவும் தயாரில்லை. ஆனால் மோடிஜி இதை வைத்து தன்னுடைய பெயரை எப்படி மேம்படுத்ததலாம் என்று மட்டுமே யோசித்தார். அப்படி ஆரம்பித்தது தான் இந்த ஊரடங்கு உத்தரவும், அதை ஒட்டி அவர் வெளியிட்டது நெஞ்சுருக வைக்கும் காணொளிகள். எவ்வளவு ஆபத்தான, எதிர்மறையான சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் மோடிஜியின் இந்த திறமையை நாம் எவ்வளவு பாராட்டினாலும் மிகாது.

ஊரடங்கை மோடிஜி ஒரு பெரிய கொண்டாட்டமாக மாற்றினார் - பால்கனியில் நின்று மக்கள் கைதட்டினார்கள், விளக்குகளைக் கொளுத்தினார்கள், சத்தமிட்டார்கள், பட்டாசு வெடித்தார்கள். கொரோனாவின் தாக்கம் எதிர்பாராதபடி குறைந்துள்ளதையும் அவர்கள் மோடிஜியின் நல்லாட்சியின் விளைவாகவே கண்டார்கள். இப்போது இதை உணர்ந்துள்ள அவர் ஊரடங்கை இன்னும் ஒரு மாதம் நீடித்தால் என்ன என யோசிக்கலாம். அவ்வப்போது ஊடகங்களில் தோன்றி மக்களின் நெஞ்சை நக்கும்படி பேசி அவர்களுக்கான ஒரே ஆபத்பாந்தன் தானே, தான் மட்டுமே என நிறுவிடவும் அவரால் முடியும்

இதனால் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு செல்லப் போவதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார். டிமானிடைசேஷனின் போதே அவர் கண்டுகொண்ட உண்மை இது - மக்களுக்கு தற்காலிகமான சிரமங்களைப் பற்றியோ எதிர்கால அழிவுகளைப் பற்றியோ கவலையில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு நம்பிக்கை; ஒரு கனவு; ஒரு லட்சியம். அதை மோடிஜி கொடுத்து விடுகிறார். அந்த நம்பிக்கையை செயலாக நிகழ்த்தும் போது அவர் மக்களையும் அதில் பங்கெடுக்க வைப்பார். அப்படிப் பங்கெடுப்பவர்கள் போதை மருந்துகளை உட்கொள்ளும் பழக்க அடிமைகளைப் போன்றவர்கள். அவர்களுக்கு போதை மருந்து தரும் கனவுலகம் ஒரு empowerment (தன்மேம்பாடு).
 டிமானிடைசேஷன் காலத்தில் மக்கள் பணத்துக்காக தெருத்தெருவாக அலைந்தார்கள். வரிசையில் நின்று களைத்து விழுந்தார்கள்; உயிர்விட்டார்கள். ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் தாம் ஒரு மகத்தான லட்சியத்துக்காக - கறுப்புப் பணத்தை ஒழிப்பது - செயலாற்றுவதாக உணர்ந்தார்கள். அவர்கள் மோடியும் தாமும்ஒன்றேஎன உணர்ந்தார்கள். கறுப்புப் பணத்தைப் பதுக்கிய பணக்காரர்கள் இப்போது ஏமாளிகளாகி தவிப்பதை நினைத்து உவகை அடைந்தார்கள். அந்த சாதனையில் தமக்கும் பங்கிருப்பதை எண்ணி புளகாங்கிதம் கொண்டார்கள். டிமானிடைசேஷனால் இந்திய பொருளாதாரம் மீட்க முடியாதபடிக்கு குப்புற விழுந்தது. ஆனால் அதே வேளையில் தான் மோடியின் புகழும் பல மடங்கு உயர்ந்தது.
 கொரோனா லாக்டவுனின் போது இதுவே தான் நடக்கிறது - மக்கள் துன்புறுகிறார்கள்; கூட்டங்கூட்டமாய் நடந்து ஊருக்கு பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு நடந்து போகிற வழியில் சாகிறார்கள். பலர் வேலையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கு ஊதியம் குறைக்கப்படலாம். வாங்கிய கடனைக் கட்ட முடியாது. வாடகையை கொடுப்பது எப்படி எனத் தெரியாது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் இதே சமயத்தில் தான் மக்கள் தாம் ஒரு மகத்தான இலக்குக்காக போராடுவதாக நினைத்து மகிழ்கிறார்கள். அவர்கள் சிரித்தபடி அழுகிறார்கள்; அழுதபடி சிரிக்கிறார்கள். மோடிஜி எனும் கொரோனா கொண்டானை எண்ணி கையெடுத்து வணங்குகிறார்கள். அவருக்காக விளக்குகளைக் கொளுத்தி வைத்து வாழ்த்துகிறார்கள். மோடிஜியின் புகழ் நூறு மடங்கு அதிகரிக்கிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர அவர் வேறொன்றும் பண்ணவில்லையே என நீங்கள் கேட்கலாம். இல்லை, அவர் இந்த சூழலில் மக்கள் தம்மை முக்கியமானவர்களாக நினைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். தமது துன்பங்களை தியாகம் என நம்புவதற்கு வழிவகை செய்தார். நாட்டின் அரசியல் நிர்வாகத்தில் தமக்கும் பங்குண்டு, தாமின்றி மோடிஜியால் ஒரு அங்குலமும் நகர முடியாது என பெருமிதம் கொள்ள வைத்தார். எப்படியான துன்பங்களையும் மக்களுக்குக் கொடுக்கும் போது கூடவே ஒரு நியாயத்தை, நம்பிக்கையை அதனோடு கொடுத்தால், அதைக்கொண்டு இந்த அவஸ்தைகளை மகத்தானவவையாய் நினைக்க வைத்தால் மக்கள் துன்பங்களை கொண்டாடுவார்கள் எனும் உளவியலை மோடிஜி அளவுக்கு புரிந்து கொண்டவர் வேறில்லை என நான் சொல்ல மாட்டேன். எப்படி?
ஏற்கனவே ஹிட்லர் உலகப்போரின் கொடுமைகளை, பீதியை உன்னதமான வாழ்நிலைகளாக ஜனங்களை நம்ப வைத்திருக்கிறார். மோடிஜி அன்றாட வாழ்க்கையையே ஒருஉலகப்போராக்கிமக்களை உணர்வெழுச்சி கொள்ள வைப்பதில் வல்லவர் என்பது தான் வித்தியாசம். உலகப்போரை நீடிக்க முடியாது, அது அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதாலே ஹிட்லர் வீழ்ந்தார். ஆனால் அன்றாடங்களில் உலகப்போரைக் காணும் ஒரு தலைவனுக்கு வீழ்ச்சியே இல்லை. (மோடிஜி வாழ்க வாழ்க)

இந்த ஊரடங்கு நிச்சயம் ஒருநாள் முடிவுக்கு வரும்; அன்று மோடிஜி ஒரு மிகப்பெரும் விழா எடுப்பார். அதில் பல பிரபலங்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம். அது டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகும். அன்று அற்புதமான குர்தாவும் அதற்கு பொருத்தமாக தலைப்பாவும் அணிந்து பளிசென்று தோன்றுவார் நமது மோடிஜி. மைக்கின் முன்பு ஸ்டைலாக வந்து நின்று உணர்வு கொப்புளிக்கும் உரையொன்றை நிகழ்த்துவார். அன்று ஒவ்வொரு குடிமகனும் பெருமிதத்தில் கண்ணில் நீர் வழிய கைதட்டுவான்.  

கொரோனா எனும் இந்த படம் பாகுபலியை விட மிகப்பெரிய வெற்றி என, வைர விழா கொண்டாட்டத்தில் பாரத மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மோடிஜி கைகூப்பி கண்கள் ஈரமாய் மின்ன சொல்லி முத்தாய்ப்பாக முடிப்பார்.

எங்கே, ஒருமுறை ஜோரா கைதட்டுங்கள்!

(ஏப்ரல் 2020)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...