வாசிப்பு ஒரு ஆன்மீக நிலை, அதற்கு என ஒருவித அறிவுத்தகுதி தேவையென நீங்கள் சொன்னால் அறிவைக் கொண்டு வாசிக்க முடியாது என நான் சொல்வேன். வாசிப்புக்கு அறிவு எப்போதும் ஒரு இடையூறு மட்டுமே.
வாசிக்க மனதுக்குள் ஒரு கண் திறந்திருக்க வேண்டும். இதைப் புலப்படுத்தும் நோக்கிலேயே தெரிதா தன் விமர்சனங்களை முன்னுக்குப் பின் முரணான, மிக கவித்துவமான மொழியில் நிகழ்த்துவார். பகுத்தறிவு பூர்வமான தெளிவாக ஒன்றை நிறுவி அங்கிருந்து மற்றொன்றுக்கு வேட்டையாடும் கழுகைப் போல தாவிச் செல்லும் (சு.ராவினுடையது போன்ற) விமர்சன மொழியை அவர் வெறுத்தார். ஏனென்றால் வாசிப்பின் முதல் விரோதி தான் வாசிப்பதாய் நினைக்கும் மனமே, பிரக்ஞைபூர்வமான ஒழுங்கே என அவர் அறிந்திருந்தார்.
ஆனால் பயிற்சியைக் கொண்டு நுட்பமாக வாசிக்கும் கண்ணைத் திறக்க முடியாது. அது இன்று திறக்கும், நாளை மூடும். நாளை மூடின நிலையில் நான் உதிக்கிற ஒரு கருத்தை நேற்று நான் தெளிவாக இருந்து விவரமாகப் பேசினேன் என்பதை வைத்து மதிப்பிட முடியாது. இப்படியான காலக்கிரமான மதிப்பிடலுக்கு வாசிப்பில் இடமில்லை. தெரிதா சொல்வதைப் போல வாசிப்பு காலம் சார்ந்த அர்த்தக் கட்டுமானங்களை முதலில் உடைக்கிறது. பண்பாடு சார்ந்த கட்டுமானங்களை நொறுக்கிறது. அர்த்தமே இல்லாத இடத்தில் ஒரு வாசகனை ஒரு நொடி நிறுத்தி வைக்கிறது. அப்போது மௌனித்திருப்பவனே நல்ல வாசகன். (பேசத்தெரியாதவன் வாசகன் என்றல்ல இதன் பொருள்) அப்படி இருக்க அவனுக்கு என்ன தகுதி தேவை, அவன் மனிதனாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர?
மேலும், வாசகத் தகுதி, அது இது என்பதெல்லாம் சாதிய மனநிலையின் ஒருவித முகமூடியிட்ட வாதமே. நம்மிடையயே இப்படி படிநிலையை உருவாக்கும் உளவியல் அழியவே அழியாது. அதற்கு முதலில் இந்த சாதிய அமைப்பு, உடல் பிம்பத்தை, பின்னணியைக் கொண்டு அகத்தை எடையிடும் போக்கு ஒழிய வேண்டும்.

கருத்துகள்