ஜெயமோகன் வாசகர்களின் தகுதி பற்றி எழுதியதை ஒட்டி எழுந்த சில எதிர்வினைகளைப் பார்த்தேன். அந்த எதிர்வினைகள் மீதான எதிர்வினை இது:
வாசிப்பை பொருள் விளக்கம் பெறும் ஒரு நிகழ்முறையைப் பார்க்கும் ஒரு போக்கு தமிழில் உள்ளது. இது என்ன சொல்கிறது, இதைக் கொண்டு நான் என்ன அறிந்து கொள்கிறேன் என யோசிப்பது இது. நம்முடைய பகுத்தறிவு மரபுக்கு இந்த அபத்தத்தை உருவாக்கியதில் ஒரு பெரிய பங்கிருக்கிறது. ஆனால் வாசிப்பு இதற்கு நேர் எதிரான தளத்தில் அர்த்தத்தை உதறி அர்த்தமின்மை நோக்கி நம்மை மேலெடுத்து செல்வதாகும். பொருள் காண்பது, கண்டதை உரைப்பது விமர்சனம் - இந்த விமர்சனம் சுவாரஸ்யமாக ஆழமாக ஆகும் போது அது ஒரு தனி படைப்பாகிறது. அதிலும் இனிமை உண்டு, ஆனால் அது வாசிப்புக்கு மாற்று அல்ல. வாசிப்பின் நேர் எதிர் நிலை.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு படைப்பை ஊன்றி வாசிக்கும் போது உங்கள் போத மனம் அதைப் பற்றி சிந்திக்கிறதா என கவனியுங்கள். உங்கள் பகுத்தறிவு அதை அலசி வகைப்படுத்தி லேபள் ஒட்டுகிறதா என நோக்குங்கள். நிச்சயம் இராது. யோசிக்க மறக்கும் போதே வாசிப்பு துவங்குகிறது. படைப்புக்குள் எழும் சிந்தனைகள், குறிப்பான்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு தம்மை அழிக்கும் போதே நாம் ஒரு படைப்பை வாசித்த நிலையில் சிரிக்கிறோம், அழுகிறோம், மனம் திளைக்க “ஆஹ்” என்கிறோம், கருணையில் உருகுகிறோம், சமூகத்தை நினைத்து கோபப்படுகிறோம், இந்த நெகிழ்வுக்கு, இந்த கோபத்துக்கு அர்த்தமே இல்லை என வியக்கிறோம், கைவிடப்பட்டதாய் தவிக்கிறோம்.
வாசிப்பு ஒரு தியானம். அது தானே அமைவது. சிலருக்கு முதல் அனுபவத்தில், பலருக்கு பல வருடங்கள் கழித்து.
வாசகத் தகுதியின்மை என ஜெயமோகனும், வாசகனின் மொண்ணைத்தனம் என கார்ல் மார்க்ஸும் குறிப்பிடுவது விமர்சனத் திறனின்மையையே. வாசகனின் போதாமையை அல்ல. ஒரு அற்புதமான வாசகனுக்கு துல்லியமாக தன்னை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். அவன் முட்டாளைப் போலப் பேசலாம். ஒரு பிரதியை பற்றி அட்டகாசமாகப் பேசும் ஒருவன் அதை முழுக்க தன் மூளையைக் கொண்டு பிரமாதமாக வாசித்து தன் வாதத்திறமையால், மொழியால் உங்களை மயங்க வைக்கலாம். விமர்சனத் திறனை வைத்து, போத மனத்தின் விளையாட்டை வைத்து அபோத நிலை ஒன்றை யாரும் மதிப்பிட கூடாது. வாசகனும் விமர்சகனும் ஒன்றல்ல.

கருத்துகள்