“வெண்முரசு” நிறைவு பெறுகிறது. சுமார் 25,000 பக்கங்கள். சும்மா ஒரு கணக்கு: ஒரு வருடத்திற்கு ஆயிரம் பக்கங்கள் படிக்கிற வாசகர்களுக்கு 25 வருடங்கள் ஆகும், மற்றவர்கள் இதை மட்டுமே வருடம் முழுக்கப் படித்து ஒரு சில வருடங்களில் முடிக்கலாம். (ஆனால் அது ஒரு ஸ்டாக்ஹோம் சிண்டுரோத்துக்கு வாசகனை ஆளாக்காதா? அதாவது கடத்தினவனை வழிபடும் கடத்தப்பட்டவரின் மனநிலை.). நான் இவ்வளவு பக்கங்கள் ஒருவர் எழுதுவதை வியக்கவில்லை, மாறாக ஆறு வருடங்களுக்கு மேலாக அவரால் ஒரே மையத்தில் மனத்தை குவித்து, உத்வேகம் குறையாமல், நெருப்பு அணையாமல் பயணிக்க முடிந்திருக்கிறதே என எண்ணி அசந்து போகிறேன். மூன்று வருடங்கள் ஒரு நாவலில் மனம் குவித்து எழுதுவதே பலருக்கும் பெரும் பிரயத்தனமாக இருக்கும் போது இவர் எப்படி ஆர்வம் குன்றாமல் இருக்கிறார்? நடுவே அவர் விட்டிருந்தால் ஒட்டுமொத்த முயற்சியும் வீணாகியிருக்கும். இதில் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு படிப்பினை உள்ளது.
“வெண்முரசை” நான் தொடர்ந்து படிக்கவில்லை, உதிரியாக அவ்வப்போது ஊன்றிப் படித்தேன். “நீலம்” போன்ற வெண்முரசு நாவல் வெளியீடுகள் சிலவற்றை வாங்கினேன். எனக்கு மகாபாரதக் கதை மீது மட்டுமீறிய விருப்பம் உண்டு. யார் பாரதக்கதையைப் பற்றிப் பேசினாலும் உட்கார்ந்து கேட்டு விடுவேன், எந்தக் கதை இதன் பின்னணியில் எழுந்தது என்றாலும் படிக்கத் தவற மாட்டேன். ஆனால் ஜெ.மோவின் இத்தொடர் நாவல்களைப் படிப்பதில் ஒரு சிக்கல் இருந்தது; இது நான் மட்டுமல்ல மேலும் பல நவீன இலக்கிய வாசகர்கள் உணர்ந்ததே. இதனாலே தமிழ் நவீன உலகில் “வெண்முரசு” பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. யாரும் அவரைப் புறக்கணிக்கவில்லை, மாறாக இந்த தொடர் நாவல்கள் நவீன, பின்நவீன வாசகர்களைப் புறக்கணித்தது. இன்னொரு பக்கம், தீவிர இலக்கியப் பயிற்சி அதிகம் இல்லாதவர்கள் அல்லது வெகுஜன வெளியில் இருந்து மகாபாரதக் கதையை முதலில் படிக்க வந்தவர்கள் மற்றும் மகாபாரதத்தை புனித நூலாகக் கருதியவர்களுக்கு “வெண்முரசைப்” படிப்பது மேலும் சுலபமாக இருந்தது என கணிக்கிறேன். ஏன் என சொல்கிறேன்:
நாவல் என்ற கலைவடிவம் ஐரோப்பாவில் தோன்றியது. நவீன நாவலானது அதன் போக்கு, வடிவம், மொழி என ஒவ்வொன்றிலும் எந்திரமயமாக்கத்தின், நகரவயப்பட்ட வாழ்வின் நீட்சியாக, பிரதிபலிப்பாக அமைந்தது. இந்தியாவில் நவீன இலக்கியம் தோன்றிய போது நாமும் இதையே பின்பற்றினோம். வணிக நாவலாசிரியர்களே செவ்விலியக்கத்தில் இருந்தும், நாட்டார் நாடக வடிவங்களில் இருந்தும் அம்சங்களை எடுத்துக் கொண்டு வடிவ ஒழுங்கற்ற தொடர் சரித்திர நாவல்களை எழுதினர் - அதில் மிகை கற்பனையான பாத்திரங்கள், சம்பவங்கள் வந்தன, தமிழ்ப்பெருமை குறித்த மீட்புவாதம் தோன்றியது, இவையெல்லாம் சேர்ந்து வெகுமக்களிடையே பெரும் வரவேற்பை இந்நாவல்கள் பெற்றன. ஆனால் தமிழ் நவீன நாவல்கள் நவீனத்துவ அழகியலை கைவிடவில்லை. பின்னர் லத்தீன் அமெரிக்க, ஜப்பானிய தொல்மரபின், நாட்டார் கதைகளின் தாக்கம் பெற்று பின்நவீன நாவல் இலக்கியம் ஐரோப்பாவில் வலுவாகக் காலூன்றியது. இதைப் பின்பற்றி நாமும் பின்நவீன கதைகள், நாவல்களை படைத்தோம். ஆரம்பத்தில் ஐரோப்பிய பாணியில் எழுதி பின்னர் நாட்டார் கதையம்சங்களையும் உள்ளே கொண்டு வந்தோம். ஜெயமோகனுக்கு இந்த இரண்டையும் விடுத்து இந்தியாவின் தனித்துவமான, பாரம்பரியமான கதைகூறல் மரபின் வழியில் நாவல்களை எழுத விருப்பம் என நினைக்கிறேன். தொண்ணூறுகளின் துவக்கத்தில் அவர் பிரசுரித்த “நாவல்” எனும் விமர்சன நூலில் இப்படியான ஒரு காவிய நாவல் வடிவின் சாத்தியங்களை பரிசீலிக்கிறார். 2014இல் “வெண்முரசு” துவங்கிய பிறகு தான் அவர் தன் ‘கனவை’ நடைமுறைப்படுத்துகிறார் - “வெண்முரசின்” பிரச்சனையே இதுதான் என்பது என் பார்வை.
பாரதக் கதை பல முறை நவீன இலக்கியத்தில் மீளுருவாக்கம் பெற்றுள்ளது - ஆனால் இது பாரதக் கதையை திரும்ப சொல்வதல்ல. புராணக் கதை ஒன்றை அதே பாணியில் மாற்றமின்றி மீளச் சொல்லும் போது அதற்கு ஒரு காலத்தால் மாறாத உளவியலை அளிக்கிறோம் - கிருஷ்ணருக்கு புன்னகை மாறாத, புத்திசாலித்தனான அழகான குழந்தைமை மாறாத மகத்தான பகவான் எனும் பிம்பம் நமது பாகவத பாராயணங்கள், கதாகாலட்சேபங்களில் தோன்றுகிறது. இதையே பின்னர் மகாபாரதம் தூரதர்ஷனில் தொடராக வெளியான போது சாம்பலிட்டுத் துலக்கி இயக்குநர் பி.ஆர் சோப்ரா நம் வீட்டுக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்தினார். நமது நாட்டார் வாய்மொழிக் கதைகளில் பாரதக்கதை பலவிதமாய் புது வடிவங்களில் பேசப்பட்டது என்றாலும் நாம் திரும்பத் திரும்ப பாரதக் கதையின் பாத்திரங்களை, அவர்களின் உறவாடல்களை, எதிர்கொள்ளும் சந்தர்பங்களை நமது வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அல்ல, இந்த பூமியில் இருந்து விலகி மற்றொரு கிரகத்தில் மற்றொரு மகத்தான, கற்பனைக்கப்பான இயல்புகளுடன் வாழ்ந்த மனிதர்களாக, அவர்களின் கதையாகவே பார்த்திருக்கிறோம். ஜெயமோகனும் இதையே செய்கிறார்.
ஜெயமோகன் நமது மரபில் பாரதக்கதை பலவித தனித்தன்மைகளுடன், ஊடுபாவும் கதையாடல்களும் கவனித்து உள்வாங்கி தன் நாவல் தொடரில் சித்தரித்தாலும் அதில் ஒரு காவியத்தன்மை வந்து விடுகிறது. உ.தா., கிருஷ்ணனையோ அர்ஜுனனையோ பற்றிப் படிக்கும் போது இதுவரை நாம் வெகுஜன மரபில், புராண மீளுருவாக்கங்களில் கண்ட அதே ‘நபர்களையே’ - நபர்கள் என்பது கூட தவறு, மாமனிதர்கள் என சொல்ல வேண்டும் (!) - காண்கிறோம். இவர்கள் தவறிழைத்தால் மாபெரும் தவறிழைத்தவர்கள், இவர்கள் தும்மினால் அது மகத்தான தும்மலாகிறது, இவர்கள் பார்வையை தவழ விட்டால் அது தெய்வாதிகமான பார்வையாக புரள்கிறது. இவ்விதத்தில் அவரது புகழ்பெற்றக் கதையான “பத்மவியூகத்தில்” உள்ள கிருஷ்ணரில் இருந்து, அதில் வரும் யுத்தச் சூழலில் இருந்து “வெண்முரசு” வெகுவாக வித்தியாசப்படுகிறது; அக்கதை வெளியான போது ஈழத்தமிழ் வாசகர்கள் அந்த யுத்தக்காட்சிகளை, மானுட அழிவை தமது நேரடி அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனம் உடைந்து கடிதங்கள் எழுதினார்கள். ஆனால் “வெண்முரசு” அத்தகைய சாத்தியங்களை சுலபத்தில் அளிப்பதில்லை. இதில் வரும் மானுட அழிவானது அமானுட அழிவாக, காவிய அழிவாக உள்ளது. ஆம், அங்கங்கே சில மீறல்களை ஜெ.மோ நிகழ்த்துகிறார், ஆனால் புராணிக, சுட்டுவிரலில் சக்கராயுதம் சுழலும் ஆரவாரங்கள் இடையே இவை காணாமல் போய் விடுகின்றன.
இந்த புராணிக மிகையை பின்நவீனப் புனைவில் மாந்திரகமாக சித்தரிக்கலாம், ஆனால் அந்த மாந்திரிக எதார்த்தத்தில் ஒரு விலகி நின்று ரசிக்கும் மனநிலை உள்ளது. பின்நவீன இலக்கியம் மிகையான மாந்திரிகக் காட்சிகளை ஒரு தற்சார்பற்ற, நம் அனுபவத்துக்கு அப்பாலான ஒரு பொருளாகவே கையாள்கிறது. மார்க்வெஸின் A Very Oldman with Enormous Wings சிறுகதை இதற்கு நல்ல உதாரணம் - கடற்கரை கிராமம் ஒன்றிக்கு வரும் அந்த நீண்ட இறக்கைகள் படைத்த தேவதையைப் போன்ற வயோதிகர் கர்த்தருக்கான உருவகம் என நமக்குத் தோன்றும்படியே அக்கதை எழுதப்பட்டிருக்கும். மேலும் அவருக்காக வருந்தும் போதே வாசகன் இதை ஒரு வியப்புடன் விலகி நின்று நோக்கவும் செய்கிறான். ஏனென்றால் பின்நவீன இலக்கியம் மையப்படுத்தப்பட்ட உண்மைகளை ஏற்பதில்லை. அது கதையையும் ஒரு செயற்கையான கட்டமைப்பாகவே பார்க்கிறது. இந்த பிரக்ஞையை ஒவ்வொரு பின்நவீன பிரதியிலும் பார்க்கலாம். ஆனால் ஜெயமோகன் மகாபாரதத்தை ஒரு மாந்திரிக எதார்த்தக் கதையாக அல்லாமல், நாம் உணர்வுரீதியாக கேள்வியின்றி ஏற்க வேண்டிய புராணமாகவே “வெண்முரசில்” காட்டுகிறார். இந்த நாவல் வரிசை - அவர் தன் பேட்டியொன்றில் சொல்வதைப் போல - ஒட்டுமொத்தமான இந்திய ஞானத்தை, தொன்மங்களின் சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என விரும்புகிறர. இப்படி ஒட்டுமொத்தமாய் இந்தியாவுக்கு என ஒரு சாரமான ஆன்மிகம், வரலாறு, நுண்ணுணர்வு உள்ளதென அவர் நம்புவதாலே துரோணரை துரோணராக, பீஷ்மரை பீஷமராக, கிருஷ்ணனை கிருஷணனாக எந்த பெரிய உடைவுகளும், முரண்களும், பின்நவீன மொழி விளையாட்டுகளும் இன்றி காட்டுகிறார்; இதனாலே இந்த கதாமாந்தர்களை ஒரு பொருளாக காணுறாமல், சாரமற்ற உண்மையொன்றின் சித்திரமாக படைக்காமல், சாரம் உள்ள ஒற்றைத்தன்மை கொண்ட ஒரு சித்திரமாக உருவாக்குகிறார். பன்முகத்தன்மையே இல்லை என நான் கூறப் போவதில்லை, ஒரு இலக்கிய படைப்பாளிக்கு இயல்பிலேயே கைவரும் பன்முகத்தன்மை ஜெயமோகனின் கைவண்னத்திலும் அங்கங்கே வெளிப்படுகிறது, ஆனால் ஒட்டுமொத்தமாக ஜெயமோகன் நம்மை ஒரு மையமான கதையாடலுக்கே அழைத்து செல்ல முனைகிறார். இது அவர் பின்நவீனத்தின் ‘அடிப்படையான’ கருத்தியலான அர்த்தமின்மை, சாரமின்மை போன்றவற்றை ஏற்கவில்லை, பாரதவர்ஷத்துக்கு ஆன்மா என ஒன்று இருக்கிறது என நம்புவதாலே நிகழ்கிறது. அதாவது இது ஒரு அழகியல் சிக்கல் மட்டுமல்ல, ஜெயமோகன் தத்துவார்த்தமாய் சமகால பின்நவீன சிந்தனைப் போக்குகளுக்கு எதிராக இருக்கிறார் என்பதே “வெண்முரசாகி” இருக்கிறது.
அடுத்து, இலக்கியப் படைப்புக்கு என ஒரு அளவுகோல் உள்ளது (இலக்கியப் படைப்பு என பெயருக்குதான் சொல்கிறேன் - எந்த படைப்பூக்கமான பிரதிக்குமான அளவுகோல் இது) - பாத்திரங்கள், அவர்களது செயல்கள், அவற்றாலான கதை நகர்வு ஒவ்வொன்றிலும் உள்முரண்கள் வேண்டும். பீஷ்மர் வருகிறார் என்றால் அவர் என்னவெல்லாமாகக் காட்டப்படுகிறாரோ அதற்கு நேர் மாறான ஒரு சித்திரமும் உணர்த்தப்பட வேண்டும். அவர் இன்னவகையானவர் என தெளிவுபட முடியாதபடி ஒரு பூடகத்தன்மை வேண்டும். ஜெ.மோ இங்கு சிக்கல்களை பாத்திர அமைப்பில் கொண்டு வரும் அளவுக்கு உள்முரண்களை, பொருள்மயக்கத்துக்கு இடமளிப்பதில்லை. “வெண்முரசின்” பீஷ்மர் நாம் தூரதர்ஷனில் கண்ட அதே பீஷ்மராக மூச்சை இறுக்கிப் பிடித்த நிலையில் இருக்கிறார்.
திரௌபதனின் நாட்டை பாண்டவ, கௌரவ சீடர்களைக் கொண்டு வியூகம் வகுத்து துரோணர் கைப்பற்றுவதைப் போன்ற பல காட்சிகள் சினிமாத்தனமாக உள்ளன. இதை நான் இதற்கு முன்பு ஜெயமோகனின் நாவலில் கண்டதில்லை.
நவீன இலக்கியத்தில் பீஷ்மரைக் கொண்டு வந்தால் அவரை சமகாலத்தின் பல உளவியல், தத்துவச் சிக்கல்களுக்கு ஆட்படுத்தி ஒரு உருவகமாக மாற்றுவோம். இதுவே வாசகனுக்கு சுவாரஸ்யமாகிறது. பல உடைவுகளை பண்பாட்டுத் தளத்தில் சாத்தியமாக்குகிறது, நிறைய அடுக்குகளை அந்த பாத்திரத்துக்கு அளிக்கிறது. ஆனால் ஜெ.மோ நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மீட்புவாதத்தையே பிரதானப்படுத்துகிறார். இதுவே “வெண்முரசு” இலக்கிய வாசகனுக்கு அலுப்பூட்ட முக்கிய காரணம் என நினைக்கிறேன்.
ஆனால் ஜெயமோகன் இதைத் தெரியாமல் செய்த பிழையாக, அவரது படைப்பாற்றலில் ஏற்பட்ட சறுக்கலாக நான் கருதவில்லை. அவர் திட்டமிட்டே ஒரு மீட்புவாத புராண நாவலாக இதை இயற்றியிருக்கிறார் - இதற்கு அவர் ‘புராணிக எதார்த்தம்’ என ஒரு பெயரும் அளிக்கிறார். அது என்னவோ, நம்மைப் போல இலக்கிய வாசகர்களுக்கு கண்ணைக் கட்டி டினோசர்கள் மத்தியில் உலவ விட்டதைப் போல இருக்கிறது.
மற்றொரு பக்கம் இந்த நாவல் வரிசை வெகுஜன வாசகர்களில் மகாபாரதக் கதையை வாசிக்கும் விருப்பம் கொண்டோர் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களுக்கு தூரதர்ஷன் மகாபாரதத் தொடரில் இருந்து “வெண்முரசுக்குத்” தாவுவது வெண்ணையை ரொட்டியில் தடவி உள்ளே இறக்குவதைப் போல சுலபமாக இருக்கிறது. ஜெயமோகன் இவர்களை இலக்காக்கியே இதை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன், கூடவே நவீன வாசகர்களும் படித்தால் நல்லது என எதிர்பார்த்திருக்கலாம். (இந்த இரு சாராருக்கும் நடுவே விஷ்ணுபுரம் வாசக வட்டத்தினரை எங்கே வைப்பதெனத் தெரியவில்லை.)
எப்படியோ, ஜெயமோகன் தான் நினைத்ததை சாதித்திருக்கிறார். அவருக்கு அதற்கான முழு உரிமையும் உள்ளது. விவிலியத்தில் ஊதாரி மைந்தன் என ஒரு கதை வரும். ஊதாரி மைந்தன் எல்லா செல்வத்தையும் அழித்துவிட்டு வீடு திரும்பும் போது அவனது வயதான அப்பா அவனுக்கு ஆடு, கோழி அடித்து விருந்து படைத்து வரவேற்பார். நாமும் ஜெயமோகனை வரவேற்போம். அவருக்கு வாழ்த்துக்கள்.

Comments
நீங்கள் உங்களுடைய கட்டுரையின் தொடக்கத்தில் "“வெண்முரசை” நான் தொடர்ந்து படிக்கவில்லை, உதிரியாக அவ்வப்போது ஊன்றிப் படித்தேன். “நீலம்” போன்ற வெண்முரசு நாவல் வெளியீடுகள் சிலவற்றை வாங்கினேன்." என்று குறிப்பிடுகிறீர்கள். இப்படி முழுவதும் படிக்காமல் எப்படி அந்த நாவலின் பாத்திரப் படைப்புகளை இவ்வளவு உறுதியாக எழுதுகிறீர்கள்.
இப்படி முழுவதும் வாசிக்காமல் எப்படி உங்களுக்கு ஒரு மிகப்பெரிய படைப்பை, படைப்பாளியை விமர்சிக்க உரிமை வருகிறது. நிற்க
""பீஷ்மர் நாம் தூரதர்ஷனில் கண்ட அதே பீஷ்மராக மூச்சை இறுக்கிப் பிடித்த நிலையில் இருக்கிறார்" என்று எழுதியிருப்பதன் மூலம் உங்களுக்கு இந்த விமர்சனம் எழுத கொஞ்சம் கூட தகுதி இல்லை என்று நிரூபித்து உள்ளீர்கள்.
உண்மையில் வெண்முரசில் பீஷ்மரின் பல மனநிலைகள் பல நாவல்களில் விரிவாக்கப் பேசப்பட்டுள்ளது. அவரது மன உளைச்சல்கள் அவரது ஊசலாட்டங்கள் உறவுக்கும், தனது கடமைக்கும் இடையே அவரது மனம் போகும் போக்குகளை இத்தனை விரிவாக ஒருவர் எழுதியிருப்பதை இப்படி மனம் போன போக்குக்கு எழுதியிருக்கிறீர்கள்.
பீஷ்மர் மட்டுமல்ல, வெண்முரசில் காட்டப்பட்ட திருதராஷ்டிரரை, துரியோதனனை, துச்சாதனனை, கர்ணனை, ஏன் கண்ணனைக் கூட அவர் விவரித்திருக்கும் வகையை இதுவரை எவரும் தொட்டிருக்கக் கூட இல்லை. நீங்கள் வாய் புளித்ததோ என்று எழுதியிருப்பதை உங்களின் மண அழுக்கின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்கிறேன்.
ஒரு பெரிய, உங்களால் நினைத்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ள படைப்பாளியை இப்படி அவர் படைப்பை முழுவதும் வாசிக்காமல் போகிறபோக்கில் எழுதியமையால் உங்களை பற்றி கொண்டிருந்த கொஞ்சம் நல்ல எண்ணமும் அழிந்தது.
அதுவும் இறுதியில் நீங்கள் கொடுத்த விவிலிய ஒப்புமை கூட ""ஊதாரி மைந்தன் எல்லா செல்வத்தையும் அழித்துவிட்டு வீடு திரும்பும் போது அவனது வயதான அப்பா அவனுக்கு ஆடு, கோழி அடித்து விருந்து படைத்து வரவேற்பார்""' அவர் சமீபத்தில் ஒரு கதையில் எழுதிவிட்டார்.
அவரை விமர்சனம் செய்வதற்கு கூட நீங்கள் அவரைத் தாண்டி சிந்திக்க முடியவில்லை. இதுதான் இன்றைய எழுத்தாளர்களின் நிலை.
தயவுசெய்து நெல்மணியளவு கூட உண்மையில்லாத இந்த பதிவை நீக்கிவிடுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.