அண்மையில் வாசித்ததில் ஒரு மறக்க முடியாத அனுபவம் ராம்ஜியின் “அல்லிக்கேணி”. அவர் இதை பேஸ்புக்கில் எழுதும் போது துண்டுத்துண்டாக வாசித்த போது என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் நூலாக வாசிக்கையில் இவரை இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது. இந்த நூலில் அப்படி என்ன பிடித்திருக்கிறது?
1) நகைச்சுவை - தனியாக படிக்கையில் பல இடங்களில் சத்தம் போட்டு சிரித்தேன், கூட்டத்தின் நடுவே இருக்கையில் மௌனமாக புன்னகைத்தேன். தமிழில் நகைச்சுவை எழுத்து என ஒரு வகைமை உண்டெனில் நிச்சயமாக ராம்ஜியின் எழுத்து மேல்தளத்தில் இருக்கும். அவர் தன்னை, தன் நண்பர்களை, தோழிகளை, அம்மாவை, அப்பாவை, பிடித்தவர்களை, பிடிக்காதவர்களை என விதிவிலக்கில்லாமல் பகடி பண்ணுகிறார். ஆனால் இவர்களை அவர் தட்டையான கோட்டோவியமாக்குவதில்லை. குள்ளமாக இருந்து தாவித் தாவிட அடிக்கிற அவரது அம்மாவின் பாத்திரம் வேறு சில இடங்களில் அழுத்தமான, முதிர்ச்சியானவராகத் தெரிகிறார். அழகான, கவர்ச்சியான, புத்திசாலித்தனமான தோழியரையும் அபத்தமானவர்களாக காட்டத் தவறுவதில்லை. அவர் யாரையெல்லாம் மகத்தானவர்களாக காட்டுகிறாரோ அவர்களுடைய ஏதாவது ஒரு கோணலையும் காட்டி விடுகிறார்.
2) எழுத்தாளுமை - சிலருக்கு வசீகரமான ஆளுமை இருக்கும், அது எழுத்தில் தெரியாது. சிலருக்கு எழுத்தில் மட்டுமே வெளிப்படும் ஒரு தனி ஆளுமை இருக்கும். ராம்ஜி அப்படியானவர். இந்த நூல் நெடுக கதைசொல்லியின் அப்படியான ஒரு தனித்த இயல்பு துலங்குகிறது. அந்த குரலைக் கேட்கவே நூலை விடாமல் படிக்கிறோம். அதனாலே ரௌடிகள், தாதாக்கள், விசித்திரமான வழக்கறிஞர் என சுவாரஸ்யமாக சில அத்தியாயங்கள் செல்லும் போதும் நமக்கு அலுப்பேற்படுகிறது; ஆனால் ராம்ஜியும் அவரது நண்பர்கள், தோழியர் திரும்பும் போது எழுத்து மீண்டும் சூடு பிடிக்கிறது.
3) பெண் பாத்திரங்கள். பெண்களை அவ்வளவு அணுக்கமாக இருந்து பார்த்து புரிந்து கொண்டவரைப் போல சில பாத்திரங்களை வடித்துள்ளார். ஒரே சமயம் அன்பும் புரிதலும் குரூரமும் குழப்பங்களும் மிக்கவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். Male gaze என்று சொல்வார்களே அந்த ஆண் நோக்கு, அது இல்லாமல் இப்பெண்கள் உயிரோட்டமாக இருக்கிறார்கள்.
ராம்ஜியின் எழுத்தில் உள்ள பலவீனம் அசோகமித்திரன், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் சாயல். இதைக் கைவிட்டாரெனில் அவரால் சொந்த ஸ்டைலுடன் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளராக வர முடியும் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்