சீமானின் “கர்வாப்ஸி” பேச்சைக் கேட்ட போது ஒருவிசயம் தெளிவாகியது: அவருக்கு தன்னுடைய சுயசாதி, தமிழ் தேசிய தொண்டர் படை தன்னை விட்டுப் போகிறதோ எனும் அச்சம் அவருக்கு உண்டாகி இருக்கிறது. அந்த பேச்சில் அவருடைய முகத்திலும், குரலிலும் அந்த பதற்றம், கசப்பு தெரிகிறது. இந்த அச்சம் விஜய்யின் ரசிகர் மன்றம் உள்ளாட்சி தேர்தலில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது மிகப்பெரிய கவனத்தை ஊடகங்களில் பெற்றது, நாம் தமிழர் கட்சி இன்னொரு பக்கம் இதே தேர்தலில் டவுசர் கழன்று போயுள்ளது குறித்த கேலி, கேள்விகளில் இருந்து வருகிறது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால், விஜய் தன்னுடைய சாதியை சேர்ந்த மற்றும் சேராத இளைஞர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவாரோ என சீமான் பதறுகிறார். ஒருவேளை விஜய்யின் ரசிகர் மன்றம் ஒரு கட்சியாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு இதே போல கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது சீமானின் வாக்குவங்கியை அரித்து விடும்.
ஆக சீமான் தமிழரின் பூர்வ மதம் இந்து மதம், கிறித்துவர்களும், இஸ்லாமியரும் அம்மதங்களை பின்பற்றும் வரையில் தமிழர்களாக அவர்களை ஏற்க முடியாது என்கிறார். இந்து மதம் என்று சொன்னால் தான் பாஜகவுடன் நேரடியாக அடையாளப்படுத்தப் படுவோம் என பயப்படும் அவர் சைவமும், மால்யமும் இந்து மதங்கள் அல்ல என்கிறார். கவனியுங்கள், சைவமும் வைணவமும் வைதீக மதங்கள் அல்ல என்று அவர் கூறவில்லை. வில்லியம் ஜோன்ஸ் சட்டமியற்றி தமிழர் மதங்களை இந்து மதம் என பெயர் மாற்றி விட்டார், அப்பெயரை நீக்கினால் அவை தமிழர் மதமாகி விடும் என குழப்புகிறார். வரலாறும், மெய்யியலும் அறிந்த எவரும் இந்த அபத்தமான விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். இந்து மதம் என அறியப்பவடுகிற பிரதான இரு கிளைகள் வைணவமும் சைவமும். இரண்டுமே அத்வைதத்தின் மெய்யியல் படி தொடர்ந்து விளக்கப்பட்டு வருகின்றன. தொன்மங்களும் அவ்வாறே வடிக்கப்பட்டுள்ளன. சீமான் வழிபடும் வடபழனி முருகனும் தான். சிவனையோ விஷ்ணுவையோ வைதீக பூச்சுகளை ஒழித்து பழங்குடி தெய்வங்களாக்கும் எந்த முயற்சியையோ சீமானின் கட்சியினர் எடுக்கவில்லை. சைவத்தை பக்தி காலகட்டத்தில் எப்படி முன்வைத்தார்களோ அப்படித்தான் சீமானும் பார்க்கிறார். சொல்லப் போனால் சிவனை வைதீக எதிர்ப்புக் கடவுளாக மறுகட்டமைப்பு பண்ணுவதும் அவருடைய நோக்கமல்ல; அவர் மதநம்பிக்கையும் சுயசாதி பாசமும் கொண்ட ஒரு மக்கள் திரளை தமிழ் தேசிய முலாம் பூசி தன் வசம் இழுக்க இப்போது முயல்கிறார். இந்து என்று சொன்னால் எடுபடாது என்றால் சைவம் எனும் தமிழர் மதம் என ஒரு புதிய கதையாடலை எடுத்து விடுகிறார். இங்கு தான் விஜய்க்கும் ஒரு செக் வைக்கிறார்:
விஜய்யை ஏற்கனவே கிறித்துவ வந்தேறி என பாஜக எதிர்க்க முயன்று தோற்றது. இப்போது சீமான் அதையே விஜய்யின் பெயர் சொல்லாமல் செய்கிறார். விஜய் நம்முடைய சாதி நடிகர் என்று எண்ணி பின்னால் போகாதீர்களடா, அவர் கிறித்துவர், அதனாலே அவர் தமிழர் அல்ல என்று தன் தம்பிகளை கையைப் பிடித்து இழுக்கிறார்.
சீமான் இதற்கு முன்பும் அவ்வப்போது விஜய்யை “என் தம்பி” என்று கூறுவது, பின்னர் தாக்குவது என இருந்திருக்கிறார். குறிப்பாக, தன்னுடைய 6% வாக்குகளுக்கு பங்கு வந்து விடுமோ என பயம் வரும் போது அவர் “அரசியல் செய்யாமல் நேரடியாக தேர்தலில் போட்டியிடும் நடிகர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று விஜய்யையும் சேர்த்து சாடுவார். இப்போது ஒரு படி மேலே சென்று “அந்நிய மிஷினரி” என்று தாக்கி விட்டு கூடவே இருக்கட்டும் என “அரபு வந்தேறிகள்” என இஸ்லாமியரையும் சாடி இருக்கிறார். கோபத்தில், அச்சத்தில் நிதானத்தை இழந்திருக்கிறார்.
ஆனால் இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் சீமானின் வீழ்ச்சி வரும் பத்தாண்டில் வேகமெடுக்கும் எனத் தோன்றுகிறது.

Comments