முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புது ஊடகத்தில் செயல்படும் மூன்று வகை வலதுசாரிகள்


புது ஊடகம் என அறியப்படும் யுடியூப், இணையதளம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செய்தி ஊடகம் ஒன்றை தனிநபர்கள் ஆரம்பித்து நடத்தும் போது அவர்களுடைய அரசியல், சித்தாந்த பின்புலம் வெளிப்படையாக இருக்கிறது. ஒருவர் இன்று என்ன வகை யுடியூப் சேனல்களைப் பார்க்கிறார், இணையதளங்களைப் படிக்கிறார் என்பதை வைத்து அவருடைய அரசியல் நிலைப்பாட்டை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும். பழைய ஊடகத்துக்கு (செய்தித்தாள், தொலைக்காட்சி சேனல்) இருந்தது போல இந்த புது ஊடகங்களுக்கு நடுநிலையான, நிதானமான, பொறுப்பான, மக்களுக்கு அணுக்கமான அரசியலை விவாதிக்கும் கட்டாயமில்லை. இது மக்களை ஒரு குறிப்பிட்ட சித்தாந்த அரசியலுக்கு பழக்குகிறது என்ற அளவில் பழைய கட்சி மேடைப்பேச்சுகளின் இடத்தை எடுத்துக் கொள்ள, பிளவுபடுத்தி வெறுப்பரசியகுக்கு வழிவகுக்கிறது என்ற அளவில் மோசமான பாகுபாடுகளை, பிற்போக்குத்தனங்களை பரப்பும் பணியையும் செய்கிறது. முதல் வகையில் முன்பு இல்லாத வகையில் தமிழ் தேசியமும் பெரியாரியமும் இன்று இளைஞர்களிடம் போய் சேர்கிறது, ஒரு சமூகப்பிரக்ஞையை ஒட்டி முடிவெடுக்க, அரசியல் மொழியில் நிலைமை வகுத்துக் கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஏற்கனவே இங்கு நிலைப்பெற்றிருந்த சமூக நீதி அரசியலுக்கு ஒரு ஊக்கத்தை, சகஜத்தன்மையை புது ஊடகம் ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களுக்கு இயல்பாக கிடைக்கும் மக்கள் ஆதரவு, சப்ஸ்கிரைபர்களின் பெருக்கமே வருமானத்துக்கு போதுமானதாக இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் நோக்கிலே ஒன்று பழைய ஊடகத்தை - அரசு விளம்பரம் மூலம் - கையில் எடுத்துக் கொள்ளவும், - தணிக்கை மூலம் - சினிமா, வெப் சீரிஸ் போன்ற வடிவங்களை கட்டுப்படுத்தவும் இந்துத்துவர்கள் முயல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர்கள் பழைய ஊடகத்தில் பணியில் இருந்து வெளிவந்த துணை ஆசிரியர்களை, தொகுப்பாளர்கள், நெறியாளர்களை இணையதளம், யுடியூப் சேனல் ஆரம்பிக்க நிதியளிக்கிறார்கள். இவர்கள் ஒன்று தீவிர வலதுசாரிகளாக இருந்து நேரடியாக இந்துத்துவத்தை, பாஜகவை ஆதரித்து பெரியாரை, திமுகவை தாக்குவார்கள். அல்லது நடுநிலை வலதுசாரிகளாக மென்று முழுங்குவார்கள். அல்லது மென்வலதுசாரிகளாக இருந்து  காந்தியத்தை மெச்சிக் கொண்டே, சமூக நீதி பற்றி உரையாடிக் கொண்டே இன்னொரு பக்கம் சாவர்க்கர், கோட்ஸேவை தம் இரு கண்களாக பாவித்து கட்டுரைத்தொடர்கள் வெளியிட்டும் மெச்சுவார்கள். கேட்டால் நான் முன்பு திராவிடம், அண்ணாயிசம் பற்றியும் எழுதியிருக்கிறேன், நூல் வெளியிட்டிருக்கிறேன் என்பார்கள். இவர்களை நாம் சுலபத்தில் தவிர்க்க முடியாதபடி பல முக்கிய பங்களிப்புகளை பழைய ஊடகத்தில் செய்திருப்பார்கள். நான் இந்த மூன்றாம் வகைமையைப் பற்றி அண்மையில் ஒரு எழுத்தாளர் நண்பரிடம் இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் சொன்னார், “நீங்கள் இவர்கள் 2014ஐ ஒட்டிய காலத்தில் எப்படி ஊழல் எதிர்ப்பு, 2ஜி குற்றச்சாட்டுகள், அன்னா ஹசாரே ஆதரவு என காங்கிரஸ் எதிர்ப்பு வாளை வெகுஜன இதழ்களில் சுற்றிக்கொண்டிருந்தார்கள் எனப் பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட், அதன் படி செயல்படுவார்கள்.” இதில் ஒரு முக்கிய உண்மை உள்ளது. இந்த பிழைப்புவாதிகளை மென்வலதுசாரிகள் மத்தியில் ஒரு தனிப்பிரிவாகவே பார்க்க வேண்டும். 


  இந்த ஸ்லீப்பர் செல் மென்வலதுசாரிகள் பேசுவது உண்மையா பொய்யா, இவர்கள் நல்லவர்களா இல்லையா என்பதல்ல முக்கியம். மாறாக, இந்த தீவிர, மென், ஸ்லீப்பர் செல் வலதுசாரிகளுக்கு நிதியாளர் ஒருவரே என்பது தான் இங்கு முக்கியம்.

நாம் இவர்களுடைய வயிற்றுக்கு படியளப்பவர்கள் யார் என்பதை முதலில் பார்த்து விட்டு, இவர்களுடைய அரசியலை அடுத்து பேச வேண்டும். ஏனென்றால் இவர்களுடைய கேங் லீடர் காந்தியின் நிலைப்பாடுகள், கருத்தியலைப் போன்றே இவர்களுடைய தரப்பும் சுலபத்தில் வரைமுறைப்படுத்த முடியாதது. காந்தி ஒருநாள் வெள்ளையர்களை எதிர்ப்பார், மறுநாள் பாராட்டுவார், ஒருநாள் மதவாதத்தை கண்டிப்பார், மறுநாள் மதவாதிகளுடன் தோளோடு தோள் உரசி மேடையில் தோன்றி அவர்களை புகழ்ந்துரைப்பார். ஒருநாள் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பார், மறுநாள் தீண்டாமை ஒழிப்பில் இஸ்லாமியர் தலையிடக் கூடாது, அரிஜன மக்களை இந்து மதத்தை விட்டு கடத்திப் போக இஸ்லாமியர் முயல்கிறார்கள் என்று சொல்வார். ஒரு இந்து மாற்றுமதப் பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை இந்துமுறைப்படி வளர்க்கப்பட வேண்டும், அதற்கு அப்பெண்ணும் இந்து மதத்தை பின்பற்ற வேண்டும், அதே சமயம் தான் மதத்தை கடந்தவன் என்று கடிதமெழுதி குழப்புவார். காந்தியின் வழித்தோன்றல்களிடையே இத்தகைய குரங்கு தாவல்களை இன்றும் பார்க்க முடியும். அவர்கள் இங்கும் அங்கும் கரைக்கும் கிளைக்குமாக குதித்துக்கொண்டே இருப்பார்கள், ஆனால் முதலை மீது அமர்ந்த குரங்கின் இதயம் போல இவர்களுடைய இதயம் மதவாதம் எனும் கரையிலே இருக்கும்.

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
சமஸ் மாதிரியானவர்களிடம் இந்த அறிவுஜீவி மென் வலதுசாரித்தனம் அப்பட்டமாக வெளிப்படுவதை அவர் தொடங்கி இருக்கும் அருஞ்சொல் இணைய இதழின் கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது. வெளிப்படையான வலதுசாரிகளை விடவும் இவரைப் போன்றவர்கள் மிகமிக ஆபத்தானவர்கள். சமஸுக்கு எதையும் நியாயப் படுத்தும் எழுத்தாற்றல் இருக்கிறது. அவரின் தமிழ் இந்து நடுப்பக்க கட்டுரைகளின் வழியே அவருக்கு நிறைய வாசகர்களும் இருக்கிறார்கள். நான் கூட அவரின் தமிழ் இந்து கட்டுரைகளின் ரசிகன் தான். ஆனால் இதை ஆதாயமாக வைத்து அவர் வலதுசாரி அரசியலை முன்னிலைப் படுத்துவது தான் மிகவும் பயமாக இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...