Skip to main content

புது ஊடகத்தில் செயல்படும் மூன்று வகை வலதுசாரிகள்


புது ஊடகம் என அறியப்படும் யுடியூப், இணையதளம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செய்தி ஊடகம் ஒன்றை தனிநபர்கள் ஆரம்பித்து நடத்தும் போது அவர்களுடைய அரசியல், சித்தாந்த பின்புலம் வெளிப்படையாக இருக்கிறது. ஒருவர் இன்று என்ன வகை யுடியூப் சேனல்களைப் பார்க்கிறார், இணையதளங்களைப் படிக்கிறார் என்பதை வைத்து அவருடைய அரசியல் நிலைப்பாட்டை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும். பழைய ஊடகத்துக்கு (செய்தித்தாள், தொலைக்காட்சி சேனல்) இருந்தது போல இந்த புது ஊடகங்களுக்கு நடுநிலையான, நிதானமான, பொறுப்பான, மக்களுக்கு அணுக்கமான அரசியலை விவாதிக்கும் கட்டாயமில்லை. இது மக்களை ஒரு குறிப்பிட்ட சித்தாந்த அரசியலுக்கு பழக்குகிறது என்ற அளவில் பழைய கட்சி மேடைப்பேச்சுகளின் இடத்தை எடுத்துக் கொள்ள, பிளவுபடுத்தி வெறுப்பரசியகுக்கு வழிவகுக்கிறது என்ற அளவில் மோசமான பாகுபாடுகளை, பிற்போக்குத்தனங்களை பரப்பும் பணியையும் செய்கிறது. முதல் வகையில் முன்பு இல்லாத வகையில் தமிழ் தேசியமும் பெரியாரியமும் இன்று இளைஞர்களிடம் போய் சேர்கிறது, ஒரு சமூகப்பிரக்ஞையை ஒட்டி முடிவெடுக்க, அரசியல் மொழியில் நிலைமை வகுத்துக் கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஏற்கனவே இங்கு நிலைப்பெற்றிருந்த சமூக நீதி அரசியலுக்கு ஒரு ஊக்கத்தை, சகஜத்தன்மையை புது ஊடகம் ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களுக்கு இயல்பாக கிடைக்கும் மக்கள் ஆதரவு, சப்ஸ்கிரைபர்களின் பெருக்கமே வருமானத்துக்கு போதுமானதாக இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் நோக்கிலே ஒன்று பழைய ஊடகத்தை - அரசு விளம்பரம் மூலம் - கையில் எடுத்துக் கொள்ளவும், - தணிக்கை மூலம் - சினிமா, வெப் சீரிஸ் போன்ற வடிவங்களை கட்டுப்படுத்தவும் இந்துத்துவர்கள் முயல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர்கள் பழைய ஊடகத்தில் பணியில் இருந்து வெளிவந்த துணை ஆசிரியர்களை, தொகுப்பாளர்கள், நெறியாளர்களை இணையதளம், யுடியூப் சேனல் ஆரம்பிக்க நிதியளிக்கிறார்கள். இவர்கள் ஒன்று தீவிர வலதுசாரிகளாக இருந்து நேரடியாக இந்துத்துவத்தை, பாஜகவை ஆதரித்து பெரியாரை, திமுகவை தாக்குவார்கள். அல்லது நடுநிலை வலதுசாரிகளாக மென்று முழுங்குவார்கள். அல்லது மென்வலதுசாரிகளாக இருந்து  காந்தியத்தை மெச்சிக் கொண்டே, சமூக நீதி பற்றி உரையாடிக் கொண்டே இன்னொரு பக்கம் சாவர்க்கர், கோட்ஸேவை தம் இரு கண்களாக பாவித்து கட்டுரைத்தொடர்கள் வெளியிட்டும் மெச்சுவார்கள். கேட்டால் நான் முன்பு திராவிடம், அண்ணாயிசம் பற்றியும் எழுதியிருக்கிறேன், நூல் வெளியிட்டிருக்கிறேன் என்பார்கள். இவர்களை நாம் சுலபத்தில் தவிர்க்க முடியாதபடி பல முக்கிய பங்களிப்புகளை பழைய ஊடகத்தில் செய்திருப்பார்கள். நான் இந்த மூன்றாம் வகைமையைப் பற்றி அண்மையில் ஒரு எழுத்தாளர் நண்பரிடம் இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் சொன்னார், “நீங்கள் இவர்கள் 2014ஐ ஒட்டிய காலத்தில் எப்படி ஊழல் எதிர்ப்பு, 2ஜி குற்றச்சாட்டுகள், அன்னா ஹசாரே ஆதரவு என காங்கிரஸ் எதிர்ப்பு வாளை வெகுஜன இதழ்களில் சுற்றிக்கொண்டிருந்தார்கள் எனப் பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட், அதன் படி செயல்படுவார்கள்.” இதில் ஒரு முக்கிய உண்மை உள்ளது. இந்த பிழைப்புவாதிகளை மென்வலதுசாரிகள் மத்தியில் ஒரு தனிப்பிரிவாகவே பார்க்க வேண்டும். 


  இந்த ஸ்லீப்பர் செல் மென்வலதுசாரிகள் பேசுவது உண்மையா பொய்யா, இவர்கள் நல்லவர்களா இல்லையா என்பதல்ல முக்கியம். மாறாக, இந்த தீவிர, மென், ஸ்லீப்பர் செல் வலதுசாரிகளுக்கு நிதியாளர் ஒருவரே என்பது தான் இங்கு முக்கியம்.

நாம் இவர்களுடைய வயிற்றுக்கு படியளப்பவர்கள் யார் என்பதை முதலில் பார்த்து விட்டு, இவர்களுடைய அரசியலை அடுத்து பேச வேண்டும். ஏனென்றால் இவர்களுடைய கேங் லீடர் காந்தியின் நிலைப்பாடுகள், கருத்தியலைப் போன்றே இவர்களுடைய தரப்பும் சுலபத்தில் வரைமுறைப்படுத்த முடியாதது. காந்தி ஒருநாள் வெள்ளையர்களை எதிர்ப்பார், மறுநாள் பாராட்டுவார், ஒருநாள் மதவாதத்தை கண்டிப்பார், மறுநாள் மதவாதிகளுடன் தோளோடு தோள் உரசி மேடையில் தோன்றி அவர்களை புகழ்ந்துரைப்பார். ஒருநாள் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பார், மறுநாள் தீண்டாமை ஒழிப்பில் இஸ்லாமியர் தலையிடக் கூடாது, அரிஜன மக்களை இந்து மதத்தை விட்டு கடத்திப் போக இஸ்லாமியர் முயல்கிறார்கள் என்று சொல்வார். ஒரு இந்து மாற்றுமதப் பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை இந்துமுறைப்படி வளர்க்கப்பட வேண்டும், அதற்கு அப்பெண்ணும் இந்து மதத்தை பின்பற்ற வேண்டும், அதே சமயம் தான் மதத்தை கடந்தவன் என்று கடிதமெழுதி குழப்புவார். காந்தியின் வழித்தோன்றல்களிடையே இத்தகைய குரங்கு தாவல்களை இன்றும் பார்க்க முடியும். அவர்கள் இங்கும் அங்கும் கரைக்கும் கிளைக்குமாக குதித்துக்கொண்டே இருப்பார்கள், ஆனால் முதலை மீது அமர்ந்த குரங்கின் இதயம் போல இவர்களுடைய இதயம் மதவாதம் எனும் கரையிலே இருக்கும்.

Comments

சமஸ் மாதிரியானவர்களிடம் இந்த அறிவுஜீவி மென் வலதுசாரித்தனம் அப்பட்டமாக வெளிப்படுவதை அவர் தொடங்கி இருக்கும் அருஞ்சொல் இணைய இதழின் கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது. வெளிப்படையான வலதுசாரிகளை விடவும் இவரைப் போன்றவர்கள் மிகமிக ஆபத்தானவர்கள். சமஸுக்கு எதையும் நியாயப் படுத்தும் எழுத்தாற்றல் இருக்கிறது. அவரின் தமிழ் இந்து நடுப்பக்க கட்டுரைகளின் வழியே அவருக்கு நிறைய வாசகர்களும் இருக்கிறார்கள். நான் கூட அவரின் தமிழ் இந்து கட்டுரைகளின் ரசிகன் தான். ஆனால் இதை ஆதாயமாக வைத்து அவர் வலதுசாரி அரசியலை முன்னிலைப் படுத்துவது தான் மிகவும் பயமாக இருக்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...