Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புது ஊடகத்தில் செயல்படும் மூன்று வகை வலதுசாரிகள்


புது ஊடகம் என அறியப்படும் யுடியூப், இணையதளம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செய்தி ஊடகம் ஒன்றை தனிநபர்கள் ஆரம்பித்து நடத்தும் போது அவர்களுடைய அரசியல், சித்தாந்த பின்புலம் வெளிப்படையாக இருக்கிறது. ஒருவர் இன்று என்ன வகை யுடியூப் சேனல்களைப் பார்க்கிறார், இணையதளங்களைப் படிக்கிறார் என்பதை வைத்து அவருடைய அரசியல் நிலைப்பாட்டை ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடியும். பழைய ஊடகத்துக்கு (செய்தித்தாள், தொலைக்காட்சி சேனல்) இருந்தது போல இந்த புது ஊடகங்களுக்கு நடுநிலையான, நிதானமான, பொறுப்பான, மக்களுக்கு அணுக்கமான அரசியலை விவாதிக்கும் கட்டாயமில்லை. இது மக்களை ஒரு குறிப்பிட்ட சித்தாந்த அரசியலுக்கு பழக்குகிறது என்ற அளவில் பழைய கட்சி மேடைப்பேச்சுகளின் இடத்தை எடுத்துக் கொள்ள, பிளவுபடுத்தி வெறுப்பரசியகுக்கு வழிவகுக்கிறது என்ற அளவில் மோசமான பாகுபாடுகளை, பிற்போக்குத்தனங்களை பரப்பும் பணியையும் செய்கிறது. முதல் வகையில் முன்பு இல்லாத வகையில் தமிழ் தேசியமும் பெரியாரியமும் இன்று இளைஞர்களிடம் போய் சேர்கிறது, ஒரு சமூகப்பிரக்ஞையை ஒட்டி முடிவெடுக்க, அரசியல் மொழியில் நிலைமை வகுத்துக் கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஏற்கனவே இங்கு நிலைப்பெற்றிருந்த சமூக நீதி அரசியலுக்கு ஒரு ஊக்கத்தை, சகஜத்தன்மையை புது ஊடகம் ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களுக்கு இயல்பாக கிடைக்கும் மக்கள் ஆதரவு, சப்ஸ்கிரைபர்களின் பெருக்கமே வருமானத்துக்கு போதுமானதாக இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் நோக்கிலே ஒன்று பழைய ஊடகத்தை - அரசு விளம்பரம் மூலம் - கையில் எடுத்துக் கொள்ளவும், - தணிக்கை மூலம் - சினிமா, வெப் சீரிஸ் போன்ற வடிவங்களை கட்டுப்படுத்தவும் இந்துத்துவர்கள் முயல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர்கள் பழைய ஊடகத்தில் பணியில் இருந்து வெளிவந்த துணை ஆசிரியர்களை, தொகுப்பாளர்கள், நெறியாளர்களை இணையதளம், யுடியூப் சேனல் ஆரம்பிக்க நிதியளிக்கிறார்கள். இவர்கள் ஒன்று தீவிர வலதுசாரிகளாக இருந்து நேரடியாக இந்துத்துவத்தை, பாஜகவை ஆதரித்து பெரியாரை, திமுகவை தாக்குவார்கள். அல்லது நடுநிலை வலதுசாரிகளாக மென்று முழுங்குவார்கள். அல்லது மென்வலதுசாரிகளாக இருந்து  காந்தியத்தை மெச்சிக் கொண்டே, சமூக நீதி பற்றி உரையாடிக் கொண்டே இன்னொரு பக்கம் சாவர்க்கர், கோட்ஸேவை தம் இரு கண்களாக பாவித்து கட்டுரைத்தொடர்கள் வெளியிட்டும் மெச்சுவார்கள். கேட்டால் நான் முன்பு திராவிடம், அண்ணாயிசம் பற்றியும் எழுதியிருக்கிறேன், நூல் வெளியிட்டிருக்கிறேன் என்பார்கள். இவர்களை நாம் சுலபத்தில் தவிர்க்க முடியாதபடி பல முக்கிய பங்களிப்புகளை பழைய ஊடகத்தில் செய்திருப்பார்கள். நான் இந்த மூன்றாம் வகைமையைப் பற்றி அண்மையில் ஒரு எழுத்தாளர் நண்பரிடம் இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் சொன்னார், “நீங்கள் இவர்கள் 2014ஐ ஒட்டிய காலத்தில் எப்படி ஊழல் எதிர்ப்பு, 2ஜி குற்றச்சாட்டுகள், அன்னா ஹசாரே ஆதரவு என காங்கிரஸ் எதிர்ப்பு வாளை வெகுஜன இதழ்களில் சுற்றிக்கொண்டிருந்தார்கள் எனப் பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட், அதன் படி செயல்படுவார்கள்.” இதில் ஒரு முக்கிய உண்மை உள்ளது. இந்த பிழைப்புவாதிகளை மென்வலதுசாரிகள் மத்தியில் ஒரு தனிப்பிரிவாகவே பார்க்க வேண்டும். 


  இந்த ஸ்லீப்பர் செல் மென்வலதுசாரிகள் பேசுவது உண்மையா பொய்யா, இவர்கள் நல்லவர்களா இல்லையா என்பதல்ல முக்கியம். மாறாக, இந்த தீவிர, மென், ஸ்லீப்பர் செல் வலதுசாரிகளுக்கு நிதியாளர் ஒருவரே என்பது தான் இங்கு முக்கியம்.

நாம் இவர்களுடைய வயிற்றுக்கு படியளப்பவர்கள் யார் என்பதை முதலில் பார்த்து விட்டு, இவர்களுடைய அரசியலை அடுத்து பேச வேண்டும். ஏனென்றால் இவர்களுடைய கேங் லீடர் காந்தியின் நிலைப்பாடுகள், கருத்தியலைப் போன்றே இவர்களுடைய தரப்பும் சுலபத்தில் வரைமுறைப்படுத்த முடியாதது. காந்தி ஒருநாள் வெள்ளையர்களை எதிர்ப்பார், மறுநாள் பாராட்டுவார், ஒருநாள் மதவாதத்தை கண்டிப்பார், மறுநாள் மதவாதிகளுடன் தோளோடு தோள் உரசி மேடையில் தோன்றி அவர்களை புகழ்ந்துரைப்பார். ஒருநாள் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பார், மறுநாள் தீண்டாமை ஒழிப்பில் இஸ்லாமியர் தலையிடக் கூடாது, அரிஜன மக்களை இந்து மதத்தை விட்டு கடத்திப் போக இஸ்லாமியர் முயல்கிறார்கள் என்று சொல்வார். ஒரு இந்து மாற்றுமதப் பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை இந்துமுறைப்படி வளர்க்கப்பட வேண்டும், அதற்கு அப்பெண்ணும் இந்து மதத்தை பின்பற்ற வேண்டும், அதே சமயம் தான் மதத்தை கடந்தவன் என்று கடிதமெழுதி குழப்புவார். காந்தியின் வழித்தோன்றல்களிடையே இத்தகைய குரங்கு தாவல்களை இன்றும் பார்க்க முடியும். அவர்கள் இங்கும் அங்கும் கரைக்கும் கிளைக்குமாக குதித்துக்கொண்டே இருப்பார்கள், ஆனால் முதலை மீது அமர்ந்த குரங்கின் இதயம் போல இவர்களுடைய இதயம் மதவாதம் எனும் கரையிலே இருக்கும்.

Comments

சமஸ் மாதிரியானவர்களிடம் இந்த அறிவுஜீவி மென் வலதுசாரித்தனம் அப்பட்டமாக வெளிப்படுவதை அவர் தொடங்கி இருக்கும் அருஞ்சொல் இணைய இதழின் கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது. வெளிப்படையான வலதுசாரிகளை விடவும் இவரைப் போன்றவர்கள் மிகமிக ஆபத்தானவர்கள். சமஸுக்கு எதையும் நியாயப் படுத்தும் எழுத்தாற்றல் இருக்கிறது. அவரின் தமிழ் இந்து நடுப்பக்க கட்டுரைகளின் வழியே அவருக்கு நிறைய வாசகர்களும் இருக்கிறார்கள். நான் கூட அவரின் தமிழ் இந்து கட்டுரைகளின் ரசிகன் தான். ஆனால் இதை ஆதாயமாக வைத்து அவர் வலதுசாரி அரசியலை முன்னிலைப் படுத்துவது தான் மிகவும் பயமாக இருக்கிறது.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...