முன்குறிப்பு: இது ஒரு தாமதமான நிலைத்தகவல்
கோயில் நுழைவு சீர்திருத்தங்கள் அபத்தமானவை. ஏன் பட்டியலின மக்கள் சில கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றால் அவர்கள் பூர்வ பௌத்தர்கள். ஏமாற்றப்பட்டு இந்துமதத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதம் - கோயில், வேதங்கள், இதிகாசங்கள், சனாதன நம்பிக்கைகள், சாதியத்தின் அடிப்படையில் பிராமணர்களின் மதம். மத்திய சாதிகள் வாலை மட்டும் இந்துமதத்துக்குள்ளும் மிச்சத்தை நாட்டார் கடவுள்களிடமும் வைத்திருக்கிறார்கள். பௌத்தம் உச்சத்தில் இருந்த போது இந்த மத்திய சாதியினர் முழுமையாக பிராமணர்களை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை. அதனாலே இந்து மதம் போர் செய்து பௌத்தத்தை அழித்த பின்னர் பிராமணர்கள் பட்டியலினத்தவர்களை கோயிலில் இருந்து வெளியேற்றினர். மத்திய சாதியினரை சற்று குறைவான மரியாதையுடன் அனுமதித்தனர்.
இந்த கோயிலும் அதில் உள்ள சாமிகளும் பௌத்தர்களுடையது என்பதே இதில் ஆகப்பெரும் வேடிக்கை.
சரி உங்கள் வீட்டுக்குள் நீங்கள் நுழைய எதற்கு இவ்வளவு பெரும் முயற்சிகள்? ஏனென்றால் வீட்டு உரிமையை போலி பத்திரம் மூலம் மாற்றி ஆக்கிரமித்து விட்டார்கள். அதை மீட்பதே தீர்வு. அதில் நுழைய அனுமதி கேட்பது அபத்தமல்லவா?
மரியாதையும் சமத்துவமும் வேண்டுமெனில் புதிய பௌத்த ஆலயங்களை உருவாக்கி நம் மதத்துக்குள் நாம் திரும்ப செல்ல வேண்டும். நம் தெய்வங்களை அதன் மேலுள்ள வேடங்களைக் களைந்து திரும்பக் கொணர வேண்டும். அப்படி ஒன்று நிகழ்கையில் தீண்டாமை இருக்காது, நீ வேறு நான் வேறு எனும் பிரிவினை இருக்காது. இதைப் படிக்கும் சில மத்திய சாதி பக்தர்கள் என்ன இந்து மதத்தை பழிப்பதா எனக் கொந்தளிப்பார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் - அது உங்கள் மதமல்ல, அங்கு உங்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இல்லை. அங்கே எல்லாவற்றுக்கும் நீங்கள் கைகட்டி நிற்க வேண்டும். கருவறைக்குள் போக முடியாது. ஏனென்றால் அது உங்களுக்கு உரிமையுள்ள இடமல்ல. புத்தியுள்ளவர்களுக்கு இது புரியும்.
பக்தியும், அதன் மயக்கமும் தர்க்கத்துக்குள் வராத அர்ப்பணிப்பு உணர்வும் எனக்குப் புரிகிறது. ஆனால் சமூகப் பண்பாட்டு, பொருளியல் அறிவும், வைதீக அதிகாரம் குறித்த புரிதலும் இருந்தால் சுயமரியாதை கிடைக்கும். அடிமையாக எத்தனையோ இடங்களில் இருக்கலாம், மகிழ்ச்சியாகவே இருக்கலாம், அது நம் விருப்பம்.
ஆனால் கோயில் நுழைவு அபத்தத்தை புரட்சி என்று கூறாதீர்கள். அப்படிச் செய்து உங்கள் கோயிலைத் திருடிய ஏமாற்றுவேலையை அங்கீகரிக்காதீர்கள். பௌத்த கோயில் உருவாக்க புரட்சியே நமக்குத் தேவை. பறிக்கப்பட்ட கோயில்களில் போய் வணங்கி மேலும் மேலும் பணியும் போலிப் புரட்சி அல்ல.
Comments