எழுதும் அனுபவம் எவ்வளவு பெரிய ஆறுதலாக உள்ளது என்பதை எழுத முடியாத ஒருநாள் நம் மனம் கொள்ளும் தத்தளிப்பு, துயரம், அழுத்தத்தைக் கொண்டு மட்டுமே அறிய முடிகிறது. அதுவும் கடும் நெருக்கடிகள், சிக்கல்கள் சூழ்ந்து நின்று மென்னியைப் பற்றுகையில் எழுத்து என்னை சட்டென மீட்கிற தேவதையாக உள்ளது. ஒருநாள் முடிகையில் எழுத்து இன்று அர்த்தபூர்வமாக ஒன்றை செய்தோம், இன்று நாம் செய்த பணி ஒரு பெரிய வெற்றியை விரைவில் தரும் எனும் நம்பிக்கையை தருகிறது. அந்த நம்பிக்கையே வாழ்தலின் அடித்தளம். அது கூட இல்லாமல் தூங்கச் செல்வது பெரிய அவலம். அப்போது 'நாளை விடிந்துவிடும், நாளை இதைவிட நன்றாக இருக்கும்' என்று மட்டுமே யோசிக்க முடிகிறது. அது தப்பித்தல். நான் அதை விரும்பவில்லை.
நேற்று அப்படித்தான் வகுப்புகள், சந்திப்புகள், அலைச்சல் என பகல் நேரத்தில் பத்து நிமிடம் கூட எழுத முடியவில்லை. வீட்டுக்கு வந்ததும் களைப்பு. சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் வாசிக்கவும் மனமில்லை. எழுதலாம் என்றால் உடலில் தாள முடியாத களைப்பு. தூங்கு, தூங்கு என ஒரு புறமும், எழுது, சிறிதாவது எழுது என இன்னொரு புறம் மனம் இரட்டைக் குரலில் பேசுகிறது. உறங்கிவிட்டேன். தூக்கத்தில் ஒரு நெடிய கனவு. அதில் அண்மையில் ஒரு நண்பர் வெளியிட்ட முக்கியமான நாவல் ஒன்றின் தலைப்பு வருகிறது. அதன் கதையைப் பற்றி கற்பனையாக ஏதோ ஒரு பார்வை திரும்பத் திரும்ப வருகிறது. நான் அதைப் போன்ற கதைச்சரடில் ஏதோ ஒரு நாவலை எழுதப் போகிறேன் என்று மீள மீள ஒரே எண்ணம் வந்தபடியே இருக்கிறது. அப்படித்தான் காலையில் சட்டென எழுந்து கொண்டேன். அதன் பிறகு இந்த எண்ணமே அபத்தமாக இருந்தது. எழுதாமல் கடந்த நாளொன்றில் என் மனம் தங்கியிருந்து கனவுக்குள் எழுதுகிறது, எழுதுவதைப் பற்றி உரையாடி என்னை ஆறுதல்படுத்துகிறது என்று புரிந்து கொண்டேன்.
அதனால் இன்றைய தினம் மிகவும் கொந்தளிப்பாக, மிக மோசமாக அமைந்தாலும் (வகுப்பில் மாணவர்கள் என் புத்தகத்தைத் திருடி மறைத்துவிட்டு நான் எவ்வளவோ கேட்டும் திரும்பத் தராமல் கடும் மனம் உளைச்சல் கொடுத்துவிட்டார்கள்) கிடைத்த நேரத்தில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, சுற்றிலும் நிகழ்வனவற்றில் இருந்து விடுபட்டு வேறெங்கோ சென்றேன், நிறைய எழுதினேன். ஒரு நொடியைக் கூட வீணடிக்கக் கூடாது என முடிவெடுத்து செயல்பட்டேன்.
இன்று எனக்குள் வருத்தங்கள் இருந்தாலும் எழுத்து தரும் ஆறுதல் உள்ளது. அதை யாரும் என்னிடம் இருந்து பறிக்கக் கூடாது என எண்ணினேன். இன்று நான் நிம்மதியாக உறங்கச் செல்வேன். இன்று என் கனவில் நான் எழுத மாட்டேன். எனக்கு சலனங்களற்ற, ஆழ்ந்த கனவுகள் வாய்க்கும். நான் அடர் இருட்டின் பாதையில் நடக்கையிலும் எழுத்தெனும் தேவதூதன் என்னுடன் வருவான், கடும் துன்பத்தின் பள்ளத்தாக்கில் விழுந்தழியாமல் அவன் என்னைக் காப்பாற்றுவான் எனத் தோன்றுகிறது. எழுத்தாளனாக இருப்பதன் மிகப்பெரிய கொடுப்பினை இதுவே. எழுத்தாளனுக்குத் தனிமையே இல்லை. எழுதுகோல் எனும் தெய்வம் அவனுடன் என்றும் இருக்கும்!
Comments