முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர்களின் கட்டுப்பெட்டித்தனம்

"எல்லா வகையிலும் தற்கால எழுத்தாளர்கள் கட்டுப்பெட்டியாக இருக்கிறார்கள். உள்ளுக்குள் சுருங்கிப் போயிருக்கிறார்கள். (...)

சுந்தர ராமசாமியிடமிருந்துதான் இந்தக் கட்டுப்பெட்டித்தனம் எல்லாம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ஒரு உதாரணம் தருகிறேன். சுந்தர ராமசாமியின் நாவல் ஒன்றில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் வருகிறது. அதில் பார்வையாளர்களுக்கான படிக்கட்டுகள் இருக்கும் அல்லவா? அதில் ஒரு படிக்கட்டில் சிமென்ட் போடும்போது எழுதப்பட்ட ஒரு கெட்ட வார்த்தை இருந்தது என்று எழுதுகிறார் சு.ரா. அதைப் படித்தபோது எனக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அடப்பத்தாம்பசலிகளா என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தையில் என்னய்யா நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை? அது என்ன வார்த்தை என்றுதான் எழுதுங்களேன், தமிழின் கற்பு கெட்டுவிடுமா? (...)

நான் கேட்கிறேன், சல்மான் ருஷ்டியைப் போல், ஓர்ஹான் பாமுக்கைப் போல் நான் இருபது வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு தாங்குமா? அட, இவர்கள் தாங்குவார்களா?"

- சாரு நிவேதிதா, அருஞ்சொல் பேட்டியில்

# சாரு சொல்வதில் நிறைய உண்மை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் சமகால தமிழ் படைப்பாளிகள் நான் அறிந்தவரையில் கட்டுப்பெட்டியானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தங்களது அந்தரங்க உலகில் உள்ள சேட்டைகள், கலகங்கள், மீறல்களை எழுத்தில் கொண்டு வருவதில்லை. எழுத்தில் - குறிப்பாக புனைவிலும் கட்டுரைகளிலும் - அவர்கள் உத்தமமான கணவர்களாக, கருணை மிக்க காதலர்களாக, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உன்னதமான மகனாக, தம் பிள்ளைகளுக்கு லட்சிய தகப்பனாக, சமூகக் கோபம் கொண்ட பிரஜைகளாக, ஒடுக்கப்பட்டோரைக் கண்டு ரத்தக்கண்ணீர் வடிப்பவர்களாக இருக்கிறார்கள். பார்க்க கறுப்புவெள்ளை படங்களின் சிவாஜி கணேசனைப் போலிருக்கிறார்கள்.
இவர்கள் அடுத்தவர்களின் கதையை எழுதும் போதும் ஒரு மெல்லிய ஒழுக்கவாதம் வருகிறது. புனைவில் தான் என்றில்லை, இலக்கிய கூட்டங்களில் சந்திக்கும் போது கூட ஜெண்டில்மேன்களாகவே பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், பார்க்கிறார்கள்.  இவர்கள் எப்போது தான் இயல்பாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

 இந்த செயற்கைத்தனம் சமூகவலைதளங்களின் காலத்தில் தோன்றிய படைப்பாளிகளின் சுபாவம் என நினைக்கிறேன். இவர்களுக்கு முந்தின இரு பத்தாண்டுகளில் தோன்றியவர்களிடம் இருந்த தான்-தோன்றித்தனத்தை, கவலைப்படாமல் பேசும், செயல்படும் போக்கை இவர்களிடம் அதிகமாக நான் காண்பதில்லை. இலக்கிய உலகம் திடீரென நல்லவர்களால், சிவாஜி கணேசன்களால், அரசியல் சரித்தனத்தால், ஒழுக்கவாதத்தால் நிரம்பி வழிகிறது. எம்.ஜி.ஆரைப் போலக் கூட ஒருத்தரும் இல்லை.

 கட்டுப்பெட்டித்தனமானது இவர்களிடம் இருந்தோ நம் மொழியில் இருந்தோ அல்ல, சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் கண்காணிப்பு உணர்வால் வருகிறது என நினைக்கிறேன். 

ஆம், விதிவிலக்குகளும் உண்டு.  ஆனால் இவர்கள் சமூகவலைதளத்திலே கலகக்காரர்களாக, இலக்கிய உலகில் உதிரிகளாக இருப்பவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...