"எல்லா வகையிலும் தற்கால எழுத்தாளர்கள் கட்டுப்பெட்டியாக இருக்கிறார்கள். உள்ளுக்குள் சுருங்கிப் போயிருக்கிறார்கள். (...)
சுந்தர ராமசாமியிடமிருந்துதான் இந்தக் கட்டுப்பெட்டித்தனம் எல்லாம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ஒரு உதாரணம் தருகிறேன். சுந்தர ராமசாமியின் நாவல் ஒன்றில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் வருகிறது. அதில் பார்வையாளர்களுக்கான படிக்கட்டுகள் இருக்கும் அல்லவா? அதில் ஒரு படிக்கட்டில் சிமென்ட் போடும்போது எழுதப்பட்ட ஒரு கெட்ட வார்த்தை இருந்தது என்று எழுதுகிறார் சு.ரா. அதைப் படித்தபோது எனக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அடப்பத்தாம்பசலிகளா என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தையில் என்னய்யா நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை? அது என்ன வார்த்தை என்றுதான் எழுதுங்களேன், தமிழின் கற்பு கெட்டுவிடுமா? (...)
நான் கேட்கிறேன், சல்மான் ருஷ்டியைப் போல், ஓர்ஹான் பாமுக்கைப் போல் நான் இருபது வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு தாங்குமா? அட, இவர்கள் தாங்குவார்களா?"
- சாரு நிவேதிதா, அருஞ்சொல் பேட்டியில்
# சாரு சொல்வதில் நிறைய உண்மை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் சமகால தமிழ் படைப்பாளிகள் நான் அறிந்தவரையில் கட்டுப்பெட்டியானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தங்களது அந்தரங்க உலகில் உள்ள சேட்டைகள், கலகங்கள், மீறல்களை எழுத்தில் கொண்டு வருவதில்லை. எழுத்தில் - குறிப்பாக புனைவிலும் கட்டுரைகளிலும் - அவர்கள் உத்தமமான கணவர்களாக, கருணை மிக்க காதலர்களாக, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உன்னதமான மகனாக, தம் பிள்ளைகளுக்கு லட்சிய தகப்பனாக, சமூகக் கோபம் கொண்ட பிரஜைகளாக, ஒடுக்கப்பட்டோரைக் கண்டு ரத்தக்கண்ணீர் வடிப்பவர்களாக இருக்கிறார்கள். பார்க்க கறுப்புவெள்ளை படங்களின் சிவாஜி கணேசனைப் போலிருக்கிறார்கள்.
இவர்கள் அடுத்தவர்களின் கதையை எழுதும் போதும் ஒரு மெல்லிய ஒழுக்கவாதம் வருகிறது. புனைவில் தான் என்றில்லை, இலக்கிய கூட்டங்களில் சந்திக்கும் போது கூட ஜெண்டில்மேன்களாகவே பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், பார்க்கிறார்கள். இவர்கள் எப்போது தான் இயல்பாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.
இந்த செயற்கைத்தனம் சமூகவலைதளங்களின் காலத்தில் தோன்றிய படைப்பாளிகளின் சுபாவம் என நினைக்கிறேன். இவர்களுக்கு முந்தின இரு பத்தாண்டுகளில் தோன்றியவர்களிடம் இருந்த தான்-தோன்றித்தனத்தை, கவலைப்படாமல் பேசும், செயல்படும் போக்கை இவர்களிடம் அதிகமாக நான் காண்பதில்லை. இலக்கிய உலகம் திடீரென நல்லவர்களால், சிவாஜி கணேசன்களால், அரசியல் சரித்தனத்தால், ஒழுக்கவாதத்தால் நிரம்பி வழிகிறது. எம்.ஜி.ஆரைப் போலக் கூட ஒருத்தரும் இல்லை.
கட்டுப்பெட்டித்தனமானது இவர்களிடம் இருந்தோ நம் மொழியில் இருந்தோ அல்ல, சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் கண்காணிப்பு உணர்வால் வருகிறது என நினைக்கிறேன்.
ஆம், விதிவிலக்குகளும் உண்டு. ஆனால் இவர்கள் சமூகவலைதளத்திலே கலகக்காரர்களாக, இலக்கிய உலகில் உதிரிகளாக இருப்பவர்கள்.
Comments