முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நுண்-வன்முறை

இந்த முறை இன்னொரு பரிதாபமான மனிதரையும் சந்தித்தேன். 67 வயதானவர். அரசுத்துறை ஒன்றில் சிறிய பதவியில் இருந்து ஓய்வுபெற்று சொற்ப ஓய்வுத்தொகையில் வாழ்பவர். திருச்சிக்காரர். 2001இல் அவரது மனைவி அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து போனார். இவர் மனைவி திரும்ப வரக் கேட்டு வழக்குத் தொடுக்க நீதிமன்றத்தில் வைத்து நீதிபதியே “அவர் உன்னை துன்புறுத்தலியே, நல்லா தானே நடத்தினார், போய் அவர் கிட்ட சேர்ந்துக்கோம்மா” என்று கேட்டும் “என்னை அத்து விட்டிருங்க” என ஒப்பாரி வைத்திருக்கிறார். ஆனால் அவர் விவாகர்த்து கோரவில்லை. பதிலாக ஜீவனாம்ச வழக்கை மட்டும் போட்டிருக்கிறார். நீதிமன்றமும் ஒரு தொகையை இவரது சம்பளக் கணக்கில் இருந்து மாதாமாதம் எடுத்துள்ளது (இவர் ஜீவனாம்சத்தை செலுத்தாததால் என நினைக்கிறேன்.) இவர் ஓய்வுற்ற பின்னர் அப்படி எடுத்துக் கொடுக்கவில்லை என்பதால் அத்தொகையை மொத்தமாகக் கேட்டு (அரியர்ஸ்) இப்போது மனைவி மீண்டும் வழக்குத் தொடுத்திருக்கிறார். நீங்கள் ஏன் ஜீவனாம்சத்தைக் கொடுக்கவில்லை என்று நான் கேட்டதற்கு அவர் தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்ததில் தன்னிடம் இருந்த சேமிப்பு முழுக்க கரைந்துவிட்டது. இப்போதுள்ள சொற்ப ஓய்வூதியத்தைக் கொண்டு ஜீவனாம்சமும் கொடுப்பது சிரமம் என்றார். எனக்கு அந்த வாதம் நியாயமாகப் படவில்லை. அவர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஏதேதோ காரணம் சொல்லித் தட்டிக் கழித்திருக்கிறார் - குறிப்பாக தன் மனைவி தன்னை விட வசதியாக இருக்கிறார், தான் திருச்சியில் வாடகை வீட்டில் வசிக்க தன் மனைவியோ சென்னையில் அன்ணா நகரில் சொந்த வீடு கட்டும் அளவுக்கு வசதியுடன் இருக்கிறார் என்கிறார். இது உண்மையெனில் இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க அவர் ஏன் முயலவில்லை? அவர் முயன்றிருந்தால் அப்பீல் செய்து ஜீவனாம்சத்தை வெகுவாக குறைத்திருக்க முடியுமே என்றேன். அவர் அதற்கு வீட்டை தன் மனைவி கட்டினாலும் அதை சாமர்த்தியமாக தன் அம்மாவின் பெயரில் பதிவு பண்ணியிருப்பதாக சொன்னார். 


எனக்கு வேறொரு காரணம் தோன்றியது - இரு பத்தாண்டுகளுக்கு மேலாக இவர் எவ்வளவோ கெஞ்சியும் மனைவி இவருடன் வாழ மறுத்துவிட்டார். இது இவரது ஈகோவை காயப்படுத்தி விட்டது. தன்னை தனித்து விட்டுப் போனவளுக்கு எதற்கு தன் பணத்தைக் கொடுக்க வேண்டும் என நினைத்து முரட்டுத்தனமாக பிடிவாதமாக நீதிமன்ற ஆணையை சரிவர பின்பற்றாமல், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடவும் திராணியும் இல்லாமல் இப்போது சிக்கிக் கொண்டிருக்கிறார். நாம் எதை சரி என நினைக்கிறோம் என்பதல்ல சட்டம் என்ன சொல்கிறது என்பதே நடைமுறையில் மதிப்புள்ளது. உங்கள் நியாயம் சட்டத்திற்கு அநியாயமாக இருந்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு பணிய வேண்டியதுதான், வேறுவழியில்லை.

ஆனால் எனக்கு அவரது மனைவி இன்னும் சற்று மனித நேயத்துடன் விட்டுக்கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. காரணம் அந்த மனிதரின் உடல் நிலை - அவருக்கு சிறுநீரகம் பழுதாகி விட்டது. வழக்கு விசாரணை நிலைக்கு வந்துவிட்டதால் வாய்தா கொடுக்க நீதிபதி மறுத்துவிட்டாராம். இவரும் அதற்காக சிறுநீரக அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார். அவர் திருச்சியில் வாடகை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு காரில் வரும் வசதி இல்லை. பஸ்ஸில் தான் திருச்சியில் இருந்து சென்னைக்கு மாதம் இருமுறை நீதிமன்ற ஹியரிங்காக வருகிறார். இங்கு 750 ரூபாய்க்கு விடுதி அறையை வாடகைக்கு எடுத்து சில மணிநேரங்கள் படுத்து ஓய்வெடுக்காவிடில் முதுகுவலி உயிர்போகிறது, அத்துடன் சிறுநீர கோளாறு தரும் வலி வேறு. அவரால் சரிவர நடக்கவோ மூச்சுவாங்காமல் பேசவோ முடியவில்லை என்பதை கவனித்தேன். அடிவயிற்றில் இருந்து எக்கியே பேசுகிறார். அந்த முகத்தைப் பார்த்த போது இவர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாழ மாட்டார் என்று எனக்குத் தோன்றியது. ஒரு அந்நிய மனிதனான எனக்கு ஏற்பட்ட இரக்கம் ஏன் அவரது மனைவிக்கு தோன்றவில்லை? இந்த வயதில் செயலிழந்த விட்டு சிறுநீரகம் கொண்ட மனிதனை இப்படி அலைய விட்டு சிகிச்சையெடுக்கவும் அனுமதிக்காமல் தொந்தரவு பண்ணி அவர் எதை சாதிக்கப் போகிறார்? அரியர்ஸ் தொகையை நாளை வாங்கி விட முடியும், ஆனால் இவர் செத்துப்போனால் எங்கிருந்து ஜீவனாம்சத்தை வாங்குவார்?  
இந்த கேள்விகளுக்கு ஒரே பதில் நம் சட்டமும் நீதிமன்ற நடைமுறையும் சகமனிதர் மீது அக்கறையோ கருணையோ காட்ட நம்மை அனுமதிப்பதில்லை என்பதே. அப்பெண் விரும்பினாலும் கூட இந்த சட்டமும் நடைமுறைகளும் அவரை மேலும் மேலும் கொம்பு சீவி விடவே செய்யும். நீதிமன்றம் ஒரு குத்துச்சண்டை அரங்கைப் போன்றது. பார்வையாளர்கள் “அவனைக் கொல், அவனைக் கொல்” எனக் கத்தி உங்களை ஊக்கப்படுத்துவதைப் போல இங்குள்ள சூழலும் அழுத்தமும் ஈவிரக்கமில்லாமல் எதிர்த்தரப்பை நசுக்கவே வழிவகுக்கும். அதாவது குத்துச்சண்டையிலாவது வன்முறை நேரடியாக வெளிப்படையாக இருக்கும். ஆனால் நீதிமன்றத்திலோ சிறுநீரகம் செயலிழந்த ஒருவரை நீண்ட தூரம் பயணிக்க வைப்பதைப் போல நுட்பமாக மறைமுகமாக ‘நாகரிகமாகவே’ வன்முறை இருக்கும். நீங்கள் அதற்கு ஆட்பட்டால் உங்களுக்கே தெரியாமல் சில நேரம் எதிர்த்தரப்பை காலால் நசுக்கிக் கொண்டிருப்பீர்கள். அவர் கூழான பின்னரே காலை எடுத்துப் பார்த்து “இவ்வளவு நேரமும் இவரை மிதிச்சிக்கிட்டா இருந்தேன்” என வியப்பீர்கள். நம் நீதிமன்ற இப்படியான நுண் வன்முறை சடங்குகளால் இயங்குவது. 
நீங்கள் உங்கள் மனைவியிடம் பேசி சமரசம் பண்ணலாமே என்று கேட்டால் “அவள் என் பேச்சைக் கேட்கவே தயார் இல்லை” என்கிறார். உங்கள் மகள்களிடம் தம் அம்மாவிடம் பேசக் கேட்கலாமே என்றேன். மகள்களும் அம்மாவின் பக்கம் நிற்பதாக சொல்கிறார். நான் என் மொத்த சேமிப்பையும் செலவழித்து கட்டிக்கொடுத்தேன், ஆனால் இப்போது எனக்கு ஆதரவாக அவரக்ள் இல்லை என்பதுடன், என் நிலை பற்றி எந்த இரக்கமும் காட்டாமல் மோசமாக் நடந்து கொள்கிறார்கள் என கசந்து கொண்டார்.

நீதிமன்றத்துக்கு மனசாட்சி இல்லை, அதை விடுங்கள். இவர் செத்துப்போனால் மனைவியாலோ மகள்களாலோ மனசாட்சி உறுத்தாமல் நிம்மதியாக உறங்க முடியுமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...