ஒரு வாக்குவாதம் தடிக்கும் போது ஏதாவது பாலியல் அவதூறு இருக்கும் தான். "டேய் நீ எல்லாம் ஒரு அவனா டா, ஒரு இவனாடா" என்றா மாமா மாதிரியா திட்ட முடியும்? இங்கே முற்போக்கு பேசும் எவரும் கெட்டவார்த்தைகளே பயன்படுத்துவதில்லையா? இது சமூக வலைதளம் என்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் நோண்டி எடுத்து அரசியல் பண்ணுகிறார்கள். அரசியல் சரிநிலையுடன் திட்டலாம் என்றால் எப்படி என்று மட்டும் சொல்லுங்கள். செருப்பை எடுத்து அடிப்பேன் என்றால் செருப்பின் பின்னுள்ள ஒடுக்கப்பட்டொரின் அரசியல் தெரியுமா என ஒன்றரை முழத்துக்கு எழுதுவார்கள். உன் பாட்டியைத் தான் கேட்கணும் என்றால் ஒன்றரை அணா பெண்ணியத்தை தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
இந்த அரசியல் சரிநிலை பயங்கரவாதம் அளவை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. "பொதுவெளியில் ஒரு கண்ணியம்" என்று ஆரம்பிக்க நினைக்கிறவர்கள் தெருவுக்குப் போய் நின்று அங்கு மனிதர்கள் பேசுகிற வசவுகளைக் கேளுங்கள். இளைஞர்கள் ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு முறை கெட்ட வார்த்தைகளை கிரெடிட் கார்டைப் போல எடுத்து நீட்டுகிறார்கள் என கவனியுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் பிறர் பாலுறுப்புகளைப் பற்றி பேசுகிறார்கள் எனக் கேளுங்கள்!
உண்மையில் நாம் இன்று வீட்டிலும் தெருவிலும் நாம் சுதந்திரத்துடன் இருக்கிறோம், ஆனால் சமூகவலைதளங்களில் கடும் கண்காணிப்பின் கீழ் இருக்கிறோம். வெர்ச்சுவல் உலகம் பாராளுமன்றம் போலாகிவிட்டது. எதையெடுத்தாலும் பெஞ்சைத் தட்டி கத்தி கூப்பாடு போடுவது, அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது என அபத்தமாக இருக்கிறது.
இந்த போலி ஆண் பெண்ணியவாதிகள், அரசியல் சரிநிலையாளர்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான் - உங்கள் தேடுபொறி வரலாற்றை அழிக்காமல், கடவுச்சொல்லுடன் உங்கள் போனை என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் அதை ஒரு வாரம் வைத்து சோதித்துவிட்டு தந்துவிடுகிறேன். பதிலுக்கு என் போனைத் தருகிறேன். நீங்க தான் தைரியசாலி ஆச்சே? காந்தியவாதி, பெண்ணியவாதி, உத்தமர் ஆச்சே?
Comments