சினிமாவில் புர்கா குறித்த சித்தரிப்புகளைப் பற்றி நான் சொன்ன கருத்தொன்று இஸ்லாமிய வட்டாரங்களில் சுற்றி வருவதாக சில நண்பர்கள் சொன்னார்கள். அதைப் பற்றின சிறுவிளக்கம் இது:
நோக்கு (gaze) என்றொரு கோட்பாட்டு சொல் உண்டு - நாம் ஒருவரை பார்க்கிறோம் என்பதல்ல எப்படிப் பார்க்கிறோம் என்பதில் ஒரு இச்சை, அதிகார விழைவு உள்ளது, அது பார்க்கப்படுபவரின் உடலை, அவர்களுடைய தன்னிலைக் கட்டமைப்பை பாதிக்கிறது, அவர்களும் பின்னர் இந்த நோக்கின் தவிர்க்க இயலாத கண்ணியாகிறார்கள் என்பதே இக்கருத்தின் விளக்கம். இதற்கு ஆண் பெண் பேதம் பெரிதாக இல்லை. ஆண் நோக்கை ஒரு பெண்ணும் வெளிப்படுத்த முடியும். இந்த நோக்கானது ஒரு இயல்பு பிறழ்ந்த (மாற்றுத்திறனாளி) உடல் மீதும் செயல்பட முடியும், இது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக ஆளின் உடல் மீதும் செயல்பட முடியும். இது யார் மீதும் செயல்பட முடியும். இஸ்லாமிய பெண்கள் என்று வரும் போது இதில் சிறிது கிளர்ச்சி, கிளுகிளுப்பு, அவர்கள் வழியாக அச்சமூகத்தின் மொத்த உடல்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகார விருப்பமும் சேர்ந்தே வருகிறது. அதனாலே சினிமாவிலும் ஊடகங்களிலும் ஒரு இஸ்லாமிய ஆணின் தாடியை விட பெண்ணின் முகத்திரையே அதிகமாக பதிவாகிறது, கவனப்படுத்தப்படுகிறது, துய்க்கப்படுகிறது. ஏனென்றால் அது ஒரு குறியீடு. அதை வைத்து நீங்கள் இஸ்லாமியர் பிற்போக்காளர்கள் என்றும், நாங்கள் முற்போக்காளர்கள் என்றும் சொல்லிவிட்டு உடலரசியல் அதிகார இன்பத்தையும் துய்க்க முடியும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.
புர்கா அரசியல் படங்களின் வியாபார பார்முலா இது தான் - ஒரே சமயம் பார்வையாளர்களின் கவனமும் அறிவுச்சமூகத்தின் புரட்சியாளர்களின் முற்போக்காளர்களின் பாராட்டும் கிடைக்கும். நீங்கள் மணிரத்னத்தின் "பம்பாய்" படத்தில் மனிஷா கொய்ராலாவின் சய்ரா பானு பாத்திரம் எங்கெல்லாம் புர்கா, முகத்திரை இன்றி வருகிறார், எங்கெல்லாம் அவர் "வெளிப்படுத்தப்படுகிறார்" என்பதை வைத்து ஒரு ஆய்வு பண்ணினால் நான் சொல்ல வருவது புரியும். அதில் உள்ள பாலியல் நோக்கு இன்பத்தையும், முற்போக்கு அரசியல் லாபத்தையும் மணிரத்னம் ஒரே கல்லில் கொய்திருப்பார். அடுத்தடுத்த வந்த எல்லா படங்களிலும் இதுதான் நடக்கிறது. நான் இஸ்லாமிய பெண்களின் புர்கா குறித்து பொதுசமூகம் கொள்ளும் ஆர்வத்தை இந்த மேற்சொன்ன 'நோக்கின்' அடிப்படையிலே 'பார்க்கிறேன்'. உங்கள் பெண்களை மற்ற சமூகத்தினர் கவரப் பார்க்கிறார்கள் என 'எச்சரிப்பது' என் நோக்கமல்ல. அது அவ்வாறு புரிந்து கொள்ளப்படக் கூடாது என்பதாலே இவ்விளக்கம். பொதுமொழியில் எழுதுவதன் சிக்கல் அது.
இன்னொரு விசயம்: இந்த புர்காவை நான் ஆதரிக்கிறேனா? அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.
Comments