முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.பி.எல்லில் இரண்டு அற்புதங்கள்



ராஜஸ்தானுக்கும் ஹைதராபாதுக்கும் இடையிலான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் என்ன ஆயிற்று, யார் வென்றார்கள் என்பதை விடுங்கள். அந்த கடைசி பந்து நோ பால் சந்தேகத்துக்குரியதா என்பதையும் விடுங்கள். என்னை அப்போட்டியில் வெகுவாக கவர்ந்தவர்கள் இருவர் - இருவருமே கால்சுழலர்கள்: ஒருவர் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் விவ்ராந்த் ஷர்மா. மற்றவர் நமக்கு நன்கு தெரிந்த ரவிச்சந்திரன் அஷ்வின்.
விவ்ராந்த் ஜம்மூ காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர். விவ்ராந்தின் பந்துவீச்சு ஸ்டைல் தென்னாப்பிரிக்காவின் முந்தைய கால்சுழலர் போல் ஆடம்ஸையும் நம்மூர் பியுஷ் சாவ்லாவையும் கலந்ததைப் போல் இருக்கிறது. நேற்றைய போட்டியில் இவர் மார்க்கெண்டேவை விட நன்றாக தனக்கு அளிக்கப்பட்ட களத்தடுப்புக்கு ஏற்ப வீசினார். ஒரு அரைக்குழிப் பந்தை போட்டார் என்றாலும் அடிவாங்கியதும் கலங்காமல் திரும்பவும் தன் களத்துக்கு ஏற்ப ஆப் ஸ்டம்புக்கு வெளியில் தொடர்ந்து வீசினார். ஒரு கூக்ளி போடக் கூட முயலவில்லை. அது மட்டுமல்ல ஒரே நீளத்தில் - short of the length அல்லது length - இல் தொடர்ந்து வீசினார். ஒன்றிரண்டு முழுநீளப் பந்துகளை வீசுவோம் என்றெல்லாம் குழப்பவில்லை. எனக்கு இந்த தெளிவான அணுகுமுறை பிடித்திருந்தது. ஆள் குள்ளமென்றாலும் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகிறது. இவரது கூக்ளியும் சிறப்பானது என்பதை ஒரு உள்ளூர் போட்டியில் அவரது பந்துவீச்சை கவனிக்கையில் கண்டேன்.
விவ்ராந்த் ஒரு மேல் மத்திய வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அண்ணனும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இவரது தந்தை ஒரு ரசாயன நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர் அண்மையில் இறந்த பின்னர் தனது அண்ணனே குடும்பத்தின் பொறுப்பை எடுத்து வேலை செய்து தன்னை கிரிக்கெட் ஆட ஊக்கப்படுத்தியதாக விவ்ராந்த் சொல்லி இருக்கிறார். ஐ.பி.எல் ஏலத்தின் போது 2.6 கோடிக்கு இவர் வாங்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரே நாளில் இவரது வாழ்க்கை மாறிவிட்டது. இவ்வளவு கவனம் இவருக்கு கிடைக்க ஒரு முக்கிய காரணம் அவர் ஒரு கால்சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது - இது ஒரு அரிய சேர்க்கையாகும். பெரும்பாலான மட்டையாளர்கள் ஆப் ஸ்பின் அல்லது இடதுகை ஸ்பின் போடுவார்கள். மிக மிக அரிதாகவே கால்சுழல் போடுவார்கள், அப்படி வீசினாலும் அதில் கட்டுப்பாடு இராது. கால்சுழல் ஆல்ரவுண்டர்களில் உலகம் முழுக்க பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களே அதிகம் - ஹசரங்காவைப் போல. ஒரு கால்சுழல் மட்டையாட்ட ஆல்ரவுண்டர் தனிச்சிறப்பான வரவாக இருப்பார். ஆல்ரவுண்டர்களில் மிதவேகப்பந்து வீசக் கூடியவர்களுக்கு அடுத்தபடியாக கால்சுழல் ஆல்ரவுண்டர்களுக்கு ஐ.பி.எல்லிலும் தேசிய போட்டிகளிலும் கணிசமான மதிப்பு கிடைக்கும். அவ்விதத்தில், இந்த விவ்ராந்த் தன் பந்துவீச்சில் மேலும் சற்று பயிற்சி எடுத்து மெருகேற்றினால், கூடவே தன் உடற்தகுதியை மேம்படுத்தினால் (சிறுவயது போட்டிகளில் ஆள் பார்க்க உருளைக்கிழங்கைப் போல இருக்கிறார் என்பதால் இவருக்கு இயல்பாகவே வலுவான உடலமைப்பு இல்லை என கணிக்கிறேன்) ஒருநாள் இந்திய அணிக்காக ஆடுவார் என கணிக்கிறேன்.
வரக்கூடிய போட்டிகளில் நான் விவ்ராந்தின் மட்டையாட்டத்தை ஊன்றி கவனிப்பேன்.
அடுத்து நம் அஷ்வின். நேற்றைய போட்டியில் அவர் வலதுகை மட்டையாளர்களுக்கும் இடதுகை மட்டையாளர்களுக்கும் பந்து உள்ளே வருவதைப் போல drift செய்து வெளியே கொண்டு போனதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அஷ்வின் ஐ.பி.எல் போட்டிக்குள் ஒரு தனி போட்டியாக, ஒரு தனி ஆட்டமாக தன் பந்துவீச்சை மாற்றக் கூடியவர். அவர் மட்டையாளரை எப்படி செட் செய்து தூக்குகிறார் என்பதைப் பார்க்க ஷேன் வார்ன் நினைவுக்கு வருவார். நேற்று அவர் அபிஷேக் ஷர்மாவை அவுட் செய்தது அப்படியான ஒரு கிளாசிக் தருணம். கடைசி ஓவரைக் கூட சந்தீப் ஷர்மாவுக்குப் பதில் அவர் - ஆப் பக்கத்தில் களத்தடுப்பாளர்களை அதிகமாக நிறுத்தி - floaterகளை வீசியிருந்தால் வென்றளித்திருப்பார் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...