கிஷனின் கீப்பிங் உத்தியை, நேர்த்தியின்மையை கடுமையாக வெறுப்பவனாக நான் இருந்தேன். பெருக்கத் தெரியாதவர்கள் பெருக்கும் போது இடதுபக்கம் துடைப்பத்தை நகர்த்தினால் குப்பை வலப்பக்கம் சிதறுமே அப்படி இருக்கும் அவர் கீப்பின். ஆனால் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் கீப்பிங் வாய்ப்பு வழங்கப்பட்ட போது ஓரளவுக்கு மேம்பட்டிருந்தார். இப்போது நடந்துவரும் மே.இ தீவுகள் - இந்தியா டெஸ்டின் முதல் நாளன்று கிஷான் தான் கீப்பர். அபாரமாக இல்லாவிடினும் வெகுச்சிறப்பாகவே செய்தார். அதுவும் வேகப்பந்துக்கு வேகமாக பாய்ந்து பிடிப்பதாகட்டும் சுழல்பந்தின் பாதையை சரியாக கவனித்து நேரம் கொடுத்து அதை சேகரிப்பதாக இருக்கட்டிம் வெகுவாக கவர்ந்தார். அவர் நிச்சயமாக நன்றாக மட்டையாடுவார்.
பரத்தின் காலம் முடிந்துவிட்டது என நினைக்கிறேன். அடுத்த ஆண்டு பண்ட் வந்துவிடுவார். அதன் பிறகு அவரும் கிஷனுமே எதிர்காலம். பரத்தின் கீப்பிங் ஆரம்பத்தில் கவர்ந்தாலும் அதிலுள்ள தொழில்நுட்ப குறை பின்னர் புலப்பட்டது. மட்டையாட்டத்திலும் அவருக்கு தடுப்பாட்ட தொழில்நுட்பமோ அடித்தாடும் திறனோ போதுமான அளவுக்கு இல்லை. தன்னம்பிக்கை, ஆளுமையும் இல்லை. கீப்பருக்கு எது இல்லையோ ஆளுமை / தன்னம்பிக்கை மிகவும் அவசியம். இவரைப் பார்க்க பெரும்பாலும் முதல் கவிதை நூல் வெளியிட்ட தமிழ்க்கவிஞரைப் போல், போய்யா என்றால் உடனே போய் விடுபவரைப் போல் இருக்கிறார்.
கருத்துகள்