ஏன் எனும் கேள்வி வேண்டாம், எப்படி எனக் கேட்போம்
கல்ட் சாமியார்கள் நாம் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் நவீன பொருளாதார மாற்றங்களின் கலாச்சார முகங்கள். முக்கியமாக மிகுதியான லாபம், முறையற்ற லாபத்தை கணக்கு காட்டாமல் பதுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவர்கள். அதற்காகவே சாமியார்கள் மட்டும் எந்த கணக்கும் காட்டாமல் பணம் வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது (இந்தியாவின் எல்லா மத சாமியார்களும் இதில் வருவார்கள்.) அதனாலே சாமியார்கள் பூஜ்யத்தில் இருந்து ஒரு சில ஆண்டுகளில் கோடானு கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகி அதைக்கொண்டு ஊரையே வளைத்துப் போட்டு சமூகப்பண்பாட்டு அதிகாரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஊடகங்கள், பெருவணிகர்கள், தலைவர்கள் என எல்லாருக்கும் இவர்கள் தேவைப்படும் சூட்சுமம் இதுவே. நாம் இதை பொதுமக்க்ளின் ஏதோ ஒரு உளவியல் தேவையை நிறைவேற்ற வந்தவர்கள் எனும் கணக்கில் இவர்களை நியாயப்படுத்துவது உண்மையை பார்க்க விரும்பாமை மட்டுமே. இதைப் பண்பாட்டு உளவியல் ரீதியாக, சமூகநீதி கிரீம் பன்களைக் கொண்டு சிந்திப்பது பொய்யை தித்திக்க வைக்கும் உத்தி மட்டுமே.
கல்ட் சாமியார்கள் ஒரு பொருளாதார புற்றுநோய். நான் ஏற்கனவே இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். என் பிளாகில் உள்ளது. படித்துப் பாருங்கள்.
நாம் கேட்க வேண்டியது சட்டத்தை மாற்றுங்கள், ஒன்று சாமியார்களுக்கு யாரும் கணக்கில்லாமல் நிதியளிக்கக் கூடாது, அஞ்சு பைசா என்றாலும் அதற்கு கணக்கு காட்ட வேண்டும் என்பது. அதை விட சிறப்பு இச்சாமியார்கள் ஓரளவுக்கு மேல் நிதியளிப்பு வழி சொத்துக்களைப் பெறக் கூடாது, அதை வைத்து வணிக நடவடிக்கைகளில், நிறுவனமயமாக்கலில் ஈடுபடக் கூடாது என சட்டம் வர வேண்டும். அல்லாவிடில் நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கும் வரி கட்டாமல் கணக்கு காட்டாமல் பணத்தை சம்பாதிக்கும் உரிமையைக் கொடுங்கள். எனில் வளர்ச்சி கீழிருந்து மேலாக வரும்.
Comments