ஒரு நாவலைப் போல ஜனநாயகமான வடிவத்தை காட்டுவது சிரமம் (பாதல் சார்க்கரின் வீதி நாடகத்துடன் ஓரளவுக்கு ஒப்பிட்டலாம் என்றாலும்). எத்தனையோ விதமான கதைகளை, மொழிகளை, சாத்தியங்களை உள்ளடக்கியது நாவல். ஒருவர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கூட அப்படியே எழுதியே சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து ஒரு நாவலாக்கலாம். மின்னஞ்சல்கள், வாட்ஸாப் சேதிகளை, தமது மருத்துவ அறிக்கைகளைக் கூட கதையாக்கலாம். நீங்கள் உங்கள் நண்பருடன் உரையாடியதை நீட்டித்து ஒரு அத்தியாயம் எழுதலாம். இவையெல்லாமே மொழிகள். நாவலின் வேர்கள் இவையெங்கும் ஓடுகின்றன. இம்மொழிகளுக்கு ஒரு வடிவத்தை அல்லது ஒரு அர்த்தத்தைக் கொடுப்பது மட்டுமே அதை கலையாக்குகிறது. அதுவே நாவல் எழுதும் கலை. என்னுடைய நாவல் வகுப்புகளில் நான் கற்பிக்கிறேன் என்பதை விட பயிற்றுநர்களை, மாணவர்களை கட்டவிழ்த்து விடுகிறேன் என்பதே சரி. உங்களை ஈர்க்கிற ஒரு மொழியை பதிவு பண்ணுங்கள், அதை நாவலாக்கும் நம்பிக்கையை நான் அளிக்கிறேன். எல்லாருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அது வெளிவரும் போது தமிழின் நாவல் வெளி இன்னும் விரிவாகும். நான் கைகொடுக்கிறேன்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்