முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"கொட்டுக்காளி" இயக்குநரிடம் சில கேள்விகள்

"கொட்டுக்காளி" படத்தின் மையச் சேதி இந்த ஒரு வரிதான் - ஆண்கள் எல்லாரும் கொடூரமானவர்கள், கேவலமானவர்கள், படுபயங்கரமானவர்கள்.

நாம் இயக்குநரிடம் கேட்க வேண்டியது ஒரே ஒரு கேள்வியைத்தான்; அதற்கு அவர் பதிலளிக்கும்வரை பலவிதங்களில் கேட்க வேண்டியுள்ளது - ஐயா, இந்தப் படத்தை எடுத்த நீங்கள் ஆண் அல்லவா?

இயக்குநர்: அது வந்துங்க நான் ஆம்பளதான், ஆனால் கெட்ட ஆம்பிளை இல்ல. முற்போக்கு முகாமை சேர்ந்த ஆம்பள. நாங்க அடிப்படையிலே ரொம்ப நல்லவங்க.

நம் கேள்வி: ஏன் உங்கள மாதிரி நல்ல ஆண்கள் உங்க படத்தில வரதில்ல?

இயக்குநர்: என் படம் கிராமத்துல நடக்குது. அங்க எல்லா ஆம்பளங்களும் இப்படித்தான்.

நம் கேள்வி: நீங்க கிராமத்தை சேர்ந்தவர் இல்லையா?

இயக்குநர்: ஆமாங்க, ஆனா நாங்கல்லாம் படிச்சி சிந்திச்சு வித்தியாசமா நல்லவங்களா இருப்போம். 

நம் கேள்வி: உங்களை மாதிரி ஆம்பளைகளை வச்சு எதிர்காலத்தில படமெடுப்பீங்களா?

இயக்குநர்: நாங்க சிறுபான்மையானவங்க. பெரும்பான்மை ஆண்களைப் பத்தி தானே படம் எடுக்க முடியும்?

நம் கேள்வி: பெரும்பான்மையின்னா நீங்க அதுக்கு எதாவது ஆய்வு பண்ணியிருக்கீங்களா? புள்ளி விபரம் இருக்குதா?

இயக்குநர்: என் வாழ்க்கையில நான் பார்த்த ஆண்களை வச்சு எடுத்திருக்கேன்.

நம் கேள்வி: அவங்க நீங்க பார்த்த ஒருசிலர் தானே?

இயக்குநர்: இலக்கியத்தில, சினிமாவில இந்த மாதிரி படுகேவலமான கொடூரமான ஆண்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கே...

நம் கேள்வி: அவை தனிப்பட்ட பதிவுகள், கற்பனை. சரி விடுங்க, நமது முதல்வர் ஸ்டாலின் இப்படி கொடூரமான கேவலமான மட்டமான ஆம்பளையா?

இயக்குநர்: இல்லீங்க.

நம் கேள்வி: நமது துணை முதல்வர் உதயநிதி, நமது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், முப்படைத் தளபதிகள், தமிழ்நாட்டு சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் கணிசமாக உள்ள ஆண்கள்?

இயக்குநர்: இல்லீங்க.

நம் கேள்வி: உங்களுக்கு ஆதரவளித்த இயக்குநர் ராம்? உங்கள் படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வெற்றிமாறன், சூரி...

இயக்குநர்: சத்தியமா இல்ல பாஸ். 

நம் கேள்வி: அப்போ யாரைப் பத்தித்தான் படம் எடுக்கிறீங்க?

இயக்குநர்: பெரும்பான்மை ஆண்களுங்க.

நம் கேள்வி: யாரு உங்க படத்தை திரையரங்கிலும், ஒ.டி.டியிலும் பார்க்கிறவர்களா?

இயக்குநர்: ச்சேச்சே!

நம் கேள்வி: அப்போ யாருதாங்க அது?

இயக்குநர்: ஆணினமின்னு பொதுவா சொல்லலாம்.

நம் கேள்வி: மேற்சொன்னவர்கள் எல்லாரும் ஆணினம் தானே?

இயக்குநர்: இல்லீங்க.

நம் கேள்வி: சரி அந்தக் கொடூரமான பயங்கரமான படுகேவலமான ஆண்கள் யார்?

இயக்குநர்: பாஸ், இப்படி ஆம்பளைத் திட்டிப் படமெடுத்தா அவார்டு கெடைக்குன்னு சொன்னாங்க. அதான் எடுத்தேன். என்னை விட்டிருங்க.

நம் கேள்வி: யாருங்க சொல்லித் தந்தது? முற்போக்கு சிந்தனைகளைப் படித்தும் எழுதியும் தேர்ந்த சிந்தனையாளராக இருந்துகொண்டே தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளைஞர்களை பலாத்காரம் செய்தால், சுரண்டினால் அக்குற்றங்களைத் தெரிந்தும் எதிர்க்காமல் நைசாக இருந்துவிட்டு வெளியே பெண்ணியம் பேசுகிறவர்களின் முற்போக்கு முகாமா? படித்தும் தீமைக்குத் துணைபோகிறவர்கள் படிக்காத முரட்டு ஆண்களை விடக் கேவலம் அல்லவா?

இயக்குநர் தலைதெறிக்க ஓடுகிறார்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...