"கொட்டுக்காளி" படத்தின் மையச் சேதி இந்த ஒரு வரிதான் - ஆண்கள் எல்லாரும் கொடூரமானவர்கள், கேவலமானவர்கள், படுபயங்கரமானவர்கள்.
நாம் இயக்குநரிடம் கேட்க வேண்டியது ஒரே ஒரு கேள்வியைத்தான்; அதற்கு அவர் பதிலளிக்கும்வரை பலவிதங்களில் கேட்க வேண்டியுள்ளது - ஐயா, இந்தப் படத்தை எடுத்த நீங்கள் ஆண் அல்லவா?
இயக்குநர்: அது வந்துங்க நான் ஆம்பளதான், ஆனால் கெட்ட ஆம்பிளை இல்ல. முற்போக்கு முகாமை சேர்ந்த ஆம்பள. நாங்க அடிப்படையிலே ரொம்ப நல்லவங்க.
நம் கேள்வி: ஏன் உங்கள மாதிரி நல்ல ஆண்கள் உங்க படத்தில வரதில்ல?
இயக்குநர்: என் படம் கிராமத்துல நடக்குது. அங்க எல்லா ஆம்பளங்களும் இப்படித்தான்.
நம் கேள்வி: நீங்க கிராமத்தை சேர்ந்தவர் இல்லையா?
இயக்குநர்: ஆமாங்க, ஆனா நாங்கல்லாம் படிச்சி சிந்திச்சு வித்தியாசமா நல்லவங்களா இருப்போம்.
நம் கேள்வி: உங்களை மாதிரி ஆம்பளைகளை வச்சு எதிர்காலத்தில படமெடுப்பீங்களா?
இயக்குநர்: நாங்க சிறுபான்மையானவங்க. பெரும்பான்மை ஆண்களைப் பத்தி தானே படம் எடுக்க முடியும்?
நம் கேள்வி: பெரும்பான்மையின்னா நீங்க அதுக்கு எதாவது ஆய்வு பண்ணியிருக்கீங்களா? புள்ளி விபரம் இருக்குதா?
இயக்குநர்: என் வாழ்க்கையில நான் பார்த்த ஆண்களை வச்சு எடுத்திருக்கேன்.
நம் கேள்வி: அவங்க நீங்க பார்த்த ஒருசிலர் தானே?
இயக்குநர்: இலக்கியத்தில, சினிமாவில இந்த மாதிரி படுகேவலமான கொடூரமான ஆண்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கே...
நம் கேள்வி: அவை தனிப்பட்ட பதிவுகள், கற்பனை. சரி விடுங்க, நமது முதல்வர் ஸ்டாலின் இப்படி கொடூரமான கேவலமான மட்டமான ஆம்பளையா?
இயக்குநர்: இல்லீங்க.
நம் கேள்வி: நமது துணை முதல்வர் உதயநிதி, நமது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், முப்படைத் தளபதிகள், தமிழ்நாட்டு சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் கணிசமாக உள்ள ஆண்கள்?
இயக்குநர்: இல்லீங்க.
நம் கேள்வி: உங்களுக்கு ஆதரவளித்த இயக்குநர் ராம்? உங்கள் படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வெற்றிமாறன், சூரி...
இயக்குநர்: சத்தியமா இல்ல பாஸ்.
நம் கேள்வி: அப்போ யாரைப் பத்தித்தான் படம் எடுக்கிறீங்க?
இயக்குநர்: பெரும்பான்மை ஆண்களுங்க.
நம் கேள்வி: யாரு உங்க படத்தை திரையரங்கிலும், ஒ.டி.டியிலும் பார்க்கிறவர்களா?
இயக்குநர்: ச்சேச்சே!
நம் கேள்வி: அப்போ யாருதாங்க அது?
இயக்குநர்: ஆணினமின்னு பொதுவா சொல்லலாம்.
நம் கேள்வி: மேற்சொன்னவர்கள் எல்லாரும் ஆணினம் தானே?
இயக்குநர்: இல்லீங்க.
நம் கேள்வி: சரி அந்தக் கொடூரமான பயங்கரமான படுகேவலமான ஆண்கள் யார்?
இயக்குநர்: பாஸ், இப்படி ஆம்பளைத் திட்டிப் படமெடுத்தா அவார்டு கெடைக்குன்னு சொன்னாங்க. அதான் எடுத்தேன். என்னை விட்டிருங்க.
நம் கேள்வி: யாருங்க சொல்லித் தந்தது? முற்போக்கு சிந்தனைகளைப் படித்தும் எழுதியும் தேர்ந்த சிந்தனையாளராக இருந்துகொண்டே தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளைஞர்களை பலாத்காரம் செய்தால், சுரண்டினால் அக்குற்றங்களைத் தெரிந்தும் எதிர்க்காமல் நைசாக இருந்துவிட்டு வெளியே பெண்ணியம் பேசுகிறவர்களின் முற்போக்கு முகாமா? படித்தும் தீமைக்குத் துணைபோகிறவர்கள் படிக்காத முரட்டு ஆண்களை விடக் கேவலம் அல்லவா?
இயக்குநர் தலைதெறிக்க ஓடுகிறார்!
Comments