Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

குடியாட்சியும் மன்னராட்சியும்




குடியாட்சியின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று அது கார்ப்பரேட் லாபியிங் எனப்படும் மறைமுக ஊழலை, பெருவியாபாரிகள் அதீதமாக அரசைக் கட்டுப்படுத்துவதை அது குற்றமாகக் கருதுவதோ தடுப்பதோ இல்லை என்பது. இதனால் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்நான் குடியாட்சியே தவறென்று சொல்லவில்லை; குடியாட்சி அடிப்படையில் ஏற்றத்தாழ்வை அனுமதிக்கும் இயல்பைக் கொண்டிருப்பதே தவறென்கிறேன். பொருளாதார ஏற்றத்தாழ்வு என வந்துவிட்டால் அங்கு எல்லாரும் சமம் அல்ல. இங்கு 130 கோடி மக்களை விட அதானியும் அம்பானியுமே அதிக அதிகாரம் பெற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் சட்டத்தை வளைத்து அநியாயமான வகையில் கோடானுகோடி சொத்துக்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள். குடியாட்சி அமைப்பு தனியார் சொத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதில்லை. அதனாலே சட்டத்தை வளைக்கும் அதிகாரத்தை அது தனியாருக்கு வழங்குகிறது. விளைவாக அவர்கள் ஆளும் அரசைத் தம் கைப்பாவையாக்கவும் அனுமதிக்கிறது. அதாவது குடியாட்சி முதலீட்டியத்திற்கு தரும் அபரிதமான சுதந்திரமே நிதி ஓரிடத்தில் குவியவும், அந்த இடத்தில் உள்ளவர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இதன் பெயர்தான் கார்ப்பரேட் லாபியிங். அமெரிக்காவில் இது ஒரு மிகப்பெரிய தீமையாக உருவெடுத்திருக்கிறது - அங்கு மருந்து நிறுவன லாபியினால் மருந்து விலையை மிகமிக அதிகமாகி விட்டது. நோயினால் வாடும் மத்திய வர்க்கம் மருந்தில்லாமல் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல மருத்துவக் காப்பீடு இருந்தாலே முடியும். காப்பீட்டு நிறுவனங்களின் லாபி அரசைக் கட்டுப்படுத்துவதால் காப்பீட்டுத் தொகையும் காப்பீட்டு நிறுவனங்களின் தன்னிச்சையான செயல்பாடும் அதிகரித்து மக்களால் காப்பீட்டை நம்பி சிகிச்சைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இப்போது தனிநபர்களின் வசமுள்ள வாடகை வீடுகளை கார்ப்பரேட்டுகள் விலைக்கு வாங்கி வாடகையைப் பரவலாக உயர்த்தி (அதாவது செயற்கையாக வீங்க வைப்பதால்) ஏற்கனவே வேலையிழந்தவர்களும் பெரிய தொகையைக் கொடுக்க முடியாதவர்களும் பரவலாக நடைபாதைகளிலும் வேனிலும் காரிலும் வாழும் நிலை ஏற்பட்டு வருகிறது என்று ஆவணப்படமொன்றில் பார்த்தேன். உலகின் மிகப்பெரும் பணக்கார தேசத்தில் 11.6% பேர் வறுமையில் தவிக்கிறார்கள். பேஸ்புக், கூகிள் போன்ற சமூகவலைதள, தேடற்பொறி பெருநிறுவனங்கள் இணையப் பரிவர்த்தனையில் உள்ள தரவுகளைத் தம் வசம் வைத்துக்கொள்ளவும், அவற்றைக்கொண்டு அரசியல் கதையாடல்களைத் தீர்மானிக்கவும், தம் செல்வாக்கைக் கொண்டு மேலும் அரசியல் அதிகாரத்தையும் பணத்தையும் திரட்டவும் லாபியிங்கை பயன்படுத்துகிறார்கள். இன்று பேஸ்புக்கும் கூகிளும் நமது அந்தரங்கத் தரவுகளை வெளிநிறுவனங்களுக்கு விளம்பரத்துக்காக விற்பதை எந்த அரசும் கட்டுப்படுத்தாதது இதனாலே. அமெரிக்காவில் ராணுவ ஆயுத, தளவாட உற்பத்தியாளர்களின் (லாக்ஹீட் மார்ட்டின், போயிங்) தரகர்களின் அழுத்ததாலே பெரும் தொகை ராணுவச் செலவுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அதனாலே அமெரிக்காவின் யுத்தவெறி செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது, அவர்கள் நேரடியாக யுத்தத்தில் பங்களிக்காதபோதும் மறைமுகமாக ஆயுதங்களையும் ஆதரவையும் தம் ஆதரவு நாடுகளுக்குக் கொடுப்பது இந்த முதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும்தான் என விமர்சிக்கப்படுகிறது. இப்போது நடந்து வரும் ஆட்சியில் டிரம்ப் நிழல் மட்டுமே, அவருடைய கட்சிக்கு பெருந்தொகையை நிதியளித்த எலான் மஸ்க் தான் நிஜ ஜனாதிபதி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்


நம்மூரில் கார்ப்பரேட் லாபியிங்கின் மோசமான தாக்கத்தை நாம் தேர்தல் பத்திரங்களின் வழியாக பாஜகவுக்கு பணத்தை அள்ளி இறைத்த நிறுவனங்கள் அரசிடம் பல்வேறு சலுகைகளைப் பெற்று தாம் செலவழித்த பணத்தை பின்னர் பலமடங்கு லாபமாக (அரசின் ஒப்பந்தப் பணிகள், ஊழலுக்கும் கறுப்புப்பணத்துக்குமான அனுமதி) பெருக்கியதைப் பார்த்தபோது உணர்ந்தோம். நீதிமன்றம் தலையிட்டு அந்த மறைமுக கார்ப்பரேட் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்தது. கொரோனோ காலத்தில் கார்ப்பரேட்டுகளின் வரிகளை பெருமளவு குறைத்திட ஒரே ஆண்டில் அவர்களுடைய லாபம் மும்மடங்காகியது. அவர்களால் ஏற்பட்ட லட்சங்கோடி நட்டத்தை ஈடுகட்ட அரசு மத்திய வர்க்கத்தின் வரியை அதிகரித்தது. இது எந்தளவுக்குச் சென்றது என்றால் நாம் வாங்கும் பொருட்களுக்கான வரியை விற்பவர்களிடம் இருந்து வாங்காமல் வாடிக்கையாளர்களான நம்மிடமே வாங்குகிறார்கள். இவ்வருட பட்ஜெட் அறிவிப்பின்போது அண்மையில் நிர்மலா சீத்தாராமன் தனியார் ஆய்வொன்றில் பெரும்பாலான பெருமுதலாளிகள் ஜி.எஸ்.டி விசயத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும்

இன்று நாம் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் நூறு ரூபாயில் 60 ரூபாயை வரியாகச் செலுத்துகிறோம். நாம் மாதம் இருபதினாயிரத்திற்கு பொருட்களை வாங்கினால் அதில் ஐயாயிரமாவது மறைமுக வரியில் போய்விடுகிறது. அதாவது 40,000 சம்பாதிக்கிறவருக்கு சம்பாத்தியத்தில் 10-20% மறைமுக வரியில் போகிறது. இப்போது அரசு ஊழியர்கள் சேமிப்புப் பணத்தை 80 சியில் திரும்பக் கோருவதையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக செய்தியில் படித்தேன். அதாவது நீங்கள் எங்குமே சேமிக்கக் கூடாது என்கிறார்கள். சரி செலவழித்தால்தான் சந்தையில் பணம் புழங்கும் என்று சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்பணத்தை அவர்கள் நம்மிடம் திரும்பத் தந்தால்தானே செலவழிக்கவே முடியும். அரசு சொல்வது செலவழிக்கவும் கூடாது, சேமிக்கவும் கூடாதென்பதே. 12 லட்சம் வரையில் சம்பாதிக்கிறவர்களுக்கு வரியில்லை என்று மக்களவையில் சொல்லிவிட்டு அதே பகுப்பினருக்கு 10% வரியென்று ஆவணத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்கள் என்று தயாநிதி மாறன் விமர்சித்திருப்பது கவனிக்கத்தக்கது. இன்று இந்தியாவில் உள்ள 130 சொச்சம் கோடி மக்களில் 3 கோடி பேர்களே வருமான வரி செலுத்துகிறார்கள். அரசுக்கு வேண்டிய நான்கைந்து பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை கடுமையாக 12-14 மணிநேரம் உழைக்கும் மத்திய, உயர்மத்திய வர்க்கத்தை செலுத்த வைக்கிறார்கள். அதாவது, ஐந்து சதவீதத்திற்கும் கீழே உள்ளவர்கள் கார்ப்பரேட்டுகளின் சுமையைச் சுமக்கிறார்கள். மீதமுள்ள 95% மக்களின் பணத்தையும் மறைமுக வரி மூலமாகவும், விலைவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், கார்ப்பரேட் வரியைக் குறைத்து அதன் காரணமாக வாழும் செலவை அதிகமாக்கியும் பறித்துக் கொள்கிறார்கள். வரி ஏன் இந்தளவுக்கு அநியாயமாக இருக்கிறதென்றால் கடந்த 15 ஆண்டுகளில் கார்ப்பரேட் லாபியின் ஆற்றல் வலுத்துவிட்டது. அவர்கள் நேரடியாக அரசைக் கைப்பாவையாக்கி தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். வாக்களிப்பது நாம், ஆனால் அரசு செயல்படுவது அவர்களுக்காக. அதெப்படி தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் உலகம் முழுக்க ஏற்படும்போது பெருமுதலாளிகள் அரசை விட வலுவானவர்களாக வளர்ந்து உலகை தம் கைக்குள் கொண்டு வருகிறார்கள்? வளர்ச்சி என்பது நல்லதெனில் அது ஏன் மக்களுக்கு கெடுதியாக மாறுகிறது


இதைக் குறித்து விரிவான விவாதங்கள் மேற்கில் நடந்துள்ளன - ஜேம்ஸ் மேடிஸன் இந்த முதலீட்டிய அரசியல் ஆதரவுக் குழுக்கள் (special interest groups) மக்களாட்சி அமைப்பை கபளீகரம் பண்ணும் ஆபத்தைப் பற்றி ஆராயும்போது உலகில் எந்த அரசியலமைப்புச் சட்டத்தாலும் இவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை என்கிறார். அதற்குப் பரிகாரமாக அவர் மக்களவையில் பல்வேறுபட்ட மக்கள் பிரதிகள், குழுக்கள் இடம்பெறும்போது, அவர்களுடைய சமூக அதிகாரமும் செல்வாக்கும் அரசின் மீது அழுத்தம் செலுத்தி அரசியல் ஆதரவு நாடும் முதலீட்டிய பிரதிநிதிகளை, தரகர்களைப் பின்னுக்குத் தள்ளவும், அதிகாரத்தைச் சமநிலைப்படுத்தவும் கூடும் என்றார். ஆனால் நவீன யுகத்திலோ இந்த சமநிலையாக்கம் நிகழ்வதில்லை. ஒருசில பெருமுதலாளிகள் ஒன்று சேர்ந்து ஆளும் கட்சியினரை விலைக்கு வாங்கி சட்டங்களை வளைத்தும், வரியைச் செலுத்தாமலும், மோனோபொலி செய்தும் கட்டற்ற அதிகாரக் குழுமங்களாக மாறுகின்றனர். அரசு நினைத்தால் கூட அவர்களை எதிர்க்க முடியாத நிலை தோன்ற, மக்களாட்சியும் தேர்தலும் கேலிக்கூத்தாகின்றன. இதைப் பற்றி Scientific Research எனும் ஆய்விதழில் எழுதும் ஸ்டீபன் மெக்கீயும் க்வாங் யூவும் தொழில்நுட்ப யுகத்தில் தேச இறையாண்மைகள் பலவீனமாகி, மக்கள் குரலுக்கு ஆற்றல் இல்லாமலாகிட, பழைய முதலீடிய அமைப்புகள் காணாமல் போய் அவ்விடத்தில் புதிய பின்காலனிய பெருமுதலீட்டியம் தோன்றிட கார்ப்பரேட் தரகுக் குழுக்களின் செல்வாக்கு மக்களாட்சி அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டுகிறது என்கிறார்கள். அதாவது இணையமும் உலகமயமாதலும் மக்களாட்சியை தம் பெருவிரலால் நசுக்கும் தன்மை கொண்டவை. அடுத்து மானுட சமூகமே வலுத்தவன் பலவீனர்களை முறியடித்து மேலெழுகிற வேட்டை விலங்கு மனப்பான்மையைக் கொண்டது, இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் இது தவிர்க்க முடியாதது என்கிறார்கள்.


ஆனால் வலுத்தவர்கள், சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைக்கும் நபர்களின் வெற்றியே பெருமுதலாளிகளின் வெற்றி என்று எனக்குத் தோன்றவில்லை. “மூலதனத்தில்மார்க்ஸ் சொல்வதைப் போல, பணம் எனும் பொருளே நம் முன்னுள்ள அநீதியை, மாய்மாலத்தைக் காணவிடாமல் தடுக்கும் திரைதான். பணமென நிலையற்ற மதிப்புள்ள, பொருண்மையற்ற அரூப மதிப்புள்ளபோதே சமூகத்தில் ஏற்றத்தாழ்வு பெருகி, பணமும் அதன்வழியாக அதிகாரமும் ஓரிடத்திலும் குவிந்து பெரும்பான்மையினர் அடிமையாவார்கள். அதைத் தடுக்க ஒரேவழி பணம், சொத்திற்கு ஒரு உச்சவரம்பைக் கொண்டு வருவதுதான். இதைப் பற்றி பெர்னாட் ஷா அன்றே சொல்லியிருக்கிறார்: “எனது அரசியல் செயல்திட்டத்தின் முதல் நோக்கமே செல்வத்திற்கு உச்சவரம்பைக் கொண்டு வருவது.” “ஒருங்கிணைக்கப்பட்ட (முதலாளிகளின்) குழுக்களின் பணத்தால் நடத்தப்படும் அரசு கும்பல் ஆட்சிக்கு நிகரானதுஎன்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெட்ல் கூறினார். “21ஆம் நூற்றாண்டில் முதலீட்டியம்நூலின் ஆசிரியர் தாம்ஸ் பிக்கெட்டி உலகளாவிய செல்வ வரி விதிப்பின் மூலம் செல்வத்தை மறுவினியோகம் பண்ணாமல் ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியாது என்று மென்மையான தீர்வை முன்வைக்கிறார். ஆனால் அதிக செல்வ வரி மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. முதலீடுகள் அயல்தேசங்களுக்குப் பாயக் கூடும். அதனால் அரசு உற்பத்தியிலும் வணிகத்திலும் கட்டாயப் பங்குதாரராக இருப்பதை சட்டம் வழியாக உறுதிப்படுத்துவதே மறைமுகமாக தனிநபர் சொத்து வரம்பை சாத்தியப்படுத்தி, கறுப்புப் பணத்தையும் ஒழிக்க உதவும். மெல்லமெல்ல வரியற்ற சமூகமாகவும் நாம் மாற முடியும்.


இது சாத்தியமா என்றால் ஆம் என்பேன். குவைத் நல்ல உதாரணம். அங்கு அரசின் 90% நிதி கெ.பி.ஸி எனப்படும் அரசின் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் இருந்தே வருகிறது. அவர்கள் மக்களிடமோ தனியாரிடமோ வரிவசூலிக்கத் தேவையில்லை. மற்ற பெருநிறுவனங்களான வங்கிகள், உள்கட்டமைப்பு கட்டுமானத்துறைகள், தொலைதொடர்பு நிறுவனங்கள் முழுமையாகவோ ஓரளவுக்கோ அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. குவைத் வலுவான மக்கள் நல அரசாகவும் உள்ளது. அங்கு அரசு தன் சொந்த ஊதியத்தினாலே மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவை, குடியிருக்க வீடுகளை பெரும் சலுகை விலையில் அளிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகமும், சிங்கப்பூர், சீனாவும் (இரு நாடுகளிலும் அதிக வரி இருந்தாலும்) கூட இப்படியானஅரச முதலாளியத்தின்உதாரணங்களே. முக்கியமான விசயம் என்னவெனில் இந்த நாடுகளில் அரசு முழுமையாக மக்களை தனியாரிடம் கைவிடவில்லை. மானியத்தின் வழியாக செலவில் பெரும்பகுதியை அரசே எடுத்துக்கொள்கிறது (இந்தியாவோ விரைவில் அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனைகளை மூடவோ பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கவோ துடித்துக்கொண்டிருக்கிறது). 


நாம் எங்கு சுதந்திரமும் பேச்சுரிமையும் அதிகம் என நினைக்கிறோமோ அங்கு மக்கள் அன்றாடச் செலவுகளுக்காக மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறார்கள். எங்கு இவையெல்லாம் குறைவு எனப் பழிக்கிறோமோ அங்கு மக்களை அரசு நன்றாக கவனித்துக் கொள்கிறது. எனில் மக்களாட்சியின் கோளாறுதான் என்ன? அது யாருக்கானது?    


மேலும் தெரிந்து கொள்ள:


Why The U.S. Can’t End Poverty. CNBC. Youtube.com


Homeless Crisis: Middle-Class Americans on the Brink of Homelessness. Our 50 States. youtube.com


"Lobbying Is a Biologically Necessary Transaction Cost in a Democracy

written by Stephen P. Magee, Kwang-Yeol Yoo

published by Modern Economy, Vol.10 No.6, 2019


Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்