"கால்கள்" என் முதல் நாவல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் விருப்பப்படி எழுதியது. அதன் கோளாறுகளும், நன்மைகளும் அதில் உண்டு. வெளியான முதல் ஆண்டு இது பரவலாக இலக்கிய உலகினுள் படிக்கப்பட்டது என்னை ஆச்சரியப்படுத்தியது. 2014ஆம் ஆண்டில் சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் இதற்கு கிடைத்தபோது இன்னும் வெகுவாக ஆச்சரியப்பட்டேன்.
"கால்கள்" நாவலுக்கு கிண்டில் பதிப்பு வர வேண்டும் என வாசக நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான்கு விதங்களில் இது உதவியானது:
1) "கால்கள்" எப்போதுமே அச்சில் இருக்காது. காலியாகும்போது திரும்ப அச்சுக்கு வர நேரம் எடுக்கும். ஆகையால் கிண்டில் பதிப்பு உபயோகமானது.
2) விலை - இப்போதைக்கு 250 ரூ வைத்திருக்கிறேன். இது அச்சு நூல் விலையை விடக் குறைவே. அடுத்த மாதத்தில் இருந்து அவ்வப்போது விலையை மேலும் குறைக்கலாம் என இருக்கிறேன். அதிக விலை கொடுத்து வாங்காதோருக்கு நாவலைக் கொண்டு சேர்க்க இது உதவும்.
3) பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அச்சுநூலில் படிக்க முடியாது - அவர்களுக்கு கிண்டில் பதிப்பே ஏற்றது. கிண்டில் பக்கங்களை படிக்கும் மென்பொருளை பயன்படுத்தி ஒலிநூலாக இதைக் கேட்டுக் கொள்வார்கள்.
4) வெளிநாடு-வாழ் வாசக அன்பர்களுக்கும் குறைந்த செலவில் உடனடியாக வாங்கிப் படிக்க இது உதவும்.
இப்போதைக்கு கிண்டில் அன்லிமிட்டட் எனும் விருப்பத்தேர்வையும் கொடுத்திருக்கிறேன். நூலகத்தில் கடனுக்கு எடுப்பதைப் போல தரவிறக்கி சில நாட்கள் படித்துக் கொள்ளலாம். இது சற்றே பெரிய நாவல் என்பதால் அப்படி என்னதான் இருக்கிறது என நூறு பக்கங்களை முதலில் படித்துப் பார்க்க விரும்புவோருக்கு இது ஏற்றது.
கிண்டில் பதிப்பின்போது நாவலைத் திருத்தி அதன் வடிவத்தை மாற்றிவிடலாமா என்றும் யோசித்தேன் - ஆனால் அது நியாயமாக இருக்குமா, அதற்கு அவகாசம் இருக்குமா என யோசித்து அம்முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் எதிர்காலத்தில் ஒரு குறும்பதிப்பைக் கொண்டு வருவேன். அப்போது இந்நாவலை வேறொரு வடிவில் மொழியில் எழுதிப் பார்ப்பேன். ஆங்கிலத்தில் முன்பு செவ்வியல் நாவல்களுக்கு அப்படியான வடிவங்கள் பிரசித்தமாக இருந்தன. இப்போது இல்லை.
இப்போதைக்குப் படியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
நாவலை வாங்குவதற்கான தொடுவழி: https://www.amazon.in/dp/B0F3PJYNTK
Comments