12) காலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்புவதே திட்டம். ஆனால் நான்கு மணிக்கு எழுந்ததும் தூக்கம் கண்ணை அழுத்தியது. ஆறே முக்கால் ஆகியது நாங்கள் புறப்பட. கனகபுரா-மலவள்ளி சாலை குறுகியது என்றாலும்அழகானது. குறைவான போக்குவரத்து. இருமருங்கும் மரங்கள், குன்றுகள் அடுத்தடுத்து வந்தன. ஏறி இறங்குகிற சற்றே மலைப்பாங்கான பாதை. பின்னிருந்து ஒலிப்பானை முழுக்கி அச்சுறுத்தும் பெருவாகனங்கள் இல்லை, விர்ரெனத் தாண்டிப் போகும் அசுர பைக்குகள் இல்லை, பறவைகள் நமக்கு மேல் பறந்து போனால் நாம் அதே வேகத்தில் கீழே பறந்துபோவதான உணர்வு வரும். அவெஞ்சரில் எந்த குலுக்கமும் இல்லாமல் மிதந்து போவது இன்னொரு சுகம். மலவள்ளியை நெருங்கியதும் பார்க்க அப்பகுதியே ஊட்டியைப் போலத் தோன்றியது. எந்தவொரு இடைஞ்சலும் இல்லாத பயணம். மைசூரை நெருங்கியதும் போக்குவரத்து மோசமாகத் தொடங்கியது. மணி அப்போது12: 30. ஒன்றரை மணிநேரம் தாமதம்.
13) நாங்கள் மூன்று முறைகள் ஓய்வுக்காக வண்டியை நிறுத்தியிருந்தோம். தொடர்ந்து பயணித்தால் அலுப்பும் உடல்வலியும் ஏற்படும் என்பதால் இதை முன்கூட்டியே முடிவு செய்திருந்தோம். இன்னொரு முக்கியமான பிரச்சினை தூக்கம். தூக்கச் சடவு நான் பைக்கை ஓட்டும்போதே அதிகமானது. அடிக்கொரு தரம் கண்கள் தாமாகச் சொருகின. அதனால் காபி, தேநீர் எனக் குடித்து வேடிக்கை பார்த்து இயல்பானபின் ஓட்டுவது, கண்கள் களைத்ததும் வண்டியை நிறுத்துவது என்றிருந்தேன். கடைசியாக வேகம் - முதல் 500 கிலோமீட்டர்களின்போது 60 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டக் கூடாது. அதனால் சாலையில் இடமிருந்தாலும் மன்மோகன் சிங் உரையாற்றுவதைப்போலத்தான் ஓட்ட வேண்டியிருந்தது. ஸ்கூட்டரிலே 80-90க்கு வேகத்தைத் திருகும் என் கையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன். ரொம்ப மெதுவாகப் போகும்போது வண்டியோட்டும் சுகமும் கிடைப்பதில்லை. நாம் வண்டியோட்டும்போது வண்டியின் மனநிலையை நம் கால்கள், இடுப்பு வழியாக அதன் அதிர்வுகள், சப்தம், பொதுவான உணர்வு வழியாக உணர்வோம். மெதுவாகப் போகும்போது என் வண்டி ஏதோ டியூஷன் வகுப்பில் உட்கார்ந்து மனனம் செய்யும் சிறுவனைப் போல உணர்வதை, அடிக்கடி கொட்டாவி விடுவதை உணர முடிந்தது. பொறு, பொறு உன் தன்னமைதல் காலம் முடியும் என அதனிடம் அரைமனதாகச் சொன்னேன். பிடிக்காத மனைவி தேநிலவுக்கு வருவதைப் போன்றே “ம்ம்ம்ம்” என்றே வந்தது. இம்மூன்றும் சேர்ந்து தாமதாக்கின.
14) மைசூரில் சுற்றுவிட்டு மதியமே அங்கிருந்து கிளம்பத் திட்டம். மாலை 7 மணிக்குள் பெங்களூர் வந்துவிட வேண்டும். ஆனால் விதி விடவில்லை. என் பைக்கின் தலைப்பகுதியில் இருந்து ஏதோ ஒரு அதிர்வுச் சப்தம் வந்தபடி இருந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகே ஒரு போல்ட் உடைந்த பல்லைப் போல ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது. சரி அதை முறுக்குவதற்கு மெக்கானிக்கைத் தேடினால் கிடைக்கவில்லை. ஒரு பஞ்சர் கடையில் ஒரு தாத்தா ராமரைக் காத்திருந்த அகலிகையைப் போல சமைந்து இருந்தார். நான் அழைத்ததும் நம் மோடி கம்பீரமாக இருப்பதாக நினைத்து மேடையில் எழுந்து வருவதைப் போல வந்து மிகக் கவனமாக ஆராய்ந்து மிகமிக மெதுவாக போல்ட்டை முடுக்கிவிட்டு “போல்ட்டை மாற்றணும், ஆனால் இங்கே முடியாது” என்று அனுப்பினார். வேறெங்கும் அதைச் செய்ய ஆள் இல்லை. இது மைசூரின் பொதுவான நிலையா அல்லது வார இறுதியென்பதாலா என்று தெரியவில்லை. அப்படியே கிளம்பி வந்தோம்.
வரும் வழியில் இருட்டத் தொடங்க எங்குமே தெருவிளக்கு இல்லையா நான் பிரேக் எடுக்க விரும்பவில்லை (பயம்தான்). ஆனால் பின்பக்கம் கூர்மையாக வலியெடுக்க வேறுவழியின்றி வனப்பகுதியின் இடையே தெரிந்த ஒரு கிராமப் பகுதியில் ஒரு பெட்டிக் கடையின் முன் நிறுத்தினேன். அங்கே மிட்டாயும் பிஸ்கட்டும் நிழலைப் போல ஒரு மனிதரும் அவரது காலடியில் ஒரு நாயும் இருந்தனர். நான் கடலை மிட்டாய் வாங்கி கடித்துக்கொண்டு காலையிலே கொண்டு வந்திருந்த கருங்காப்பியில் மீதமிருந்ததைக் குடித்தேன். பல்லவி தனக்கு முருங்கைக் கீரை பறிக்க வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். பெங்களூரில் அப்படியெல்லாம் கேட்டால் சுலபத்தில் கொடுக்க மாட்டார். தண்ணீருக்கும் போக்குவரத்துக்கும் அடுத்தபடியாக அவர்கள் தம் உயிராகக் கருதுவது இந்த முருங்கை மரங்களைத்தாம். முருங்கைக் கீரையைக் கொஞ்சம் பறிச்சிக்கவா என்று பல்லவி அங்கு பலரிடமும் கூச்சமில்லாமல் கேட்டிருக்கிறாள். அவர்கள் தவறாமல் சொல்வார்கள், “என்னது முருங்கைக் கீரையா, இல்லா, எங்கள் உயிரைக் கேட்டாலும் கொடுக்கிறோம், முருங்கைக் கீரை கேட்காதீங்க” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த கடைக்காரர்கள் தமிழர்கள். அவர்கள் பேசியது ஒருவித மலையாள வாடையுள்ள, பழங்குடித்தன்மையுள்ள தமிழ். பல்லவி அவர்களிடம் தெனாலி கமல் போல் பேசி அவர்களைச் சிரிக்கவைத்து அவர்களிடம் உள்ள நாயைப் பற்றி உரையாடி பத்தே நிமிடங்களில் உற்ற குடும்பத் தோழியாகி அவர்கள் வீட்டுக்கே போய் முருங்கைக் கீரை பறித்துக் கொண்டு வந்துவிட்டாள். கடைக்கார அம்மா “அடுத்தவாட்டி வீட்டுக்கு வந்து சாப்டிட்டுப் போங்க” என்று மூன்றுமுறைகள் வாயெல்லாம் சிரிப்புடன் சொன்னார். போகும்போது நான் கேட்காமலே பல்லவி என்னிடம் சொன்னாள், “நான் முருங்கைக்கீரைக்காகத்தானெ அவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தேன்னு நினைக்கிறே?” “சேச்சே, நீ பேச்சுக்கொடுக்கத்தான் முருங்கைக் கீரை வாங்கினேன்னு நினைக்கிறேன்.” “ரெண்டுமே இல்ல, சட்டுன்னு தோணிச்சு கேட்டுட்டேன், அவங்களும் சந்தோஷமா கொடுத்தாங்க.” ஜென்ஸி போராட்டம் நடக்கும் நேபாளத்தில் எல்லாரையும் சமாளித்து புதிய பிரதமராகும் தகுதிகொண்டவள் அவள் என அத்தருணத்தில் புரிந்துகொண்டேன். இப்படிக் கீரையெல்லாம் வாங்கிக் கிளம்பியபோது நன்றாக இருட்டிவிட்டது.
கருத்துகள்