பாகிஸ்தான் ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை ரொம்ப மோசமாகக் கணித்துவிட்டார்கள் போல. வேகவீச்சாளர்களுக்குப் பந்து நன்றாக ஸீம் ஆகிறது. முதல் சில ஓவர்களிலாவது குறிப்பாக குறைநீளத்திலோ லெங்திலோ விழுந்தால் ஸீம் ஆகி உள்ளே வெளியே என்று சீறுகிறது. குத்திப் போட்டால் எகிறுகிறது - குறிப்பாக அந்த பஞ்சு போன்ற எகிறும் பந்து உயரத்தின் அளவுக்கு வேகம் கொண்டிருக்காது. அதைப் புல், ஹூக் அடிப்பது கடினம். அப்படித்தான் ஹர்த்திக் முதல் ஓவரிலும் விக்கெட் எடுத்தார். பும்ராவின் ஒரு விக்கெட்டும் அப்படித்தான் விழுந்தது. அவரது முதல் பந்தே விக்கெட் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அது எட்ஜ் வாங்கி சிக்ஸர் போனது. அப்போதே எனக்கு சயிம் குச்சிகளுக்குக் குறுக்கே போகிறார், பும்ரா யார்க்கர் வீசக் கூடும் எனத் தோன்றியது. அவ்வாறே அடுத்த பந்தில் நடந்தது. இதையெல்லாம் பார்த்தபோது பாகிஸ்தான் அணித்தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் தாம் செய்தது முட்டாள்தனம் எனத் தோன்றியிருக்க வேண்டும் - ஷகீன் அப்ரிதியைத் தூக்கிவிட்டு இரண்டு நல்ல வேகவீச்சாளர்களை ஆடியிருக்க வேண்டும். இந்த ஆடுதளத்தில் உள்ள உயரத்தை, ஸீம் அசைவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதிகமான சுழலர்கள் (6 பேர்கள்) அவ்வப்போது ஓட்டங்களைக் குறைத்தார்கள், ஆனால் கொத்துக்கொத்தாக விக்கெட் எடுக்கவில்லை. அங்கேயே ஆட்டத்தைப் பறிகொடுத்து விட்டார்கள்.
பாகிஸ்தான் வர்ணனையாளர்கள் தம் அணியின் தலைவரை நேரடியாக விமர்சிக்க மாட்டார்கள். மையமாக நக்கலடிப்பார்கள். இன்று அக்ரம் சொன்னார்: இந்த ஆடுதளத்தில் சுழலர்களுக்கு இணையாக வேகவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தாளர்கள், அவர்களுடைய ஓட்ட விகிதமும் மேலாக உள்ளது.
அதே போலத்தான், இந்தியாவை விட பாகிஸ்தான் அணி ரொம்பப் பதற்றமாகத் தென்பட்டார்கள். டாஸ் வென்றதும் இந்தியாவை மட்டையாட அழைத்ததிலும் என்ன லாஜிக் உள்ளதென எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
இதுவரை பாகிஸ்தானுக்குச் சார்பாக ஒன்று மட்டுமே நடந்துள்ளது - அவர்களுடைய சுழலர்கள் 80கள் வேகத்தில் வீசியதால் பந்து அதிகமாகத் திரும்பியது. நம் சுழலர்கள் ஏதோ பேயைப் பார்த்து ஓடுவதைப் போல மரண வேகத்தில் வீசுவதால் பந்து அதிகம் திரும்பவில்லை.
ஷகீப் அப்ரிதியை அவரது மட்டையாட்டத்துக்காகத்தான் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு வர்ணனையாளர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அவர் எண் 9இல் அல்லவா ஆடுகிறார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் 13வது ஓவரிலே ஆட வந்துவிட்டார். இப்போது 'புரிகிறது'.
இந்த கரகாட்டக்கார அணியை அஸோஸியே நாடாகப் பாவிப்பதே நியாயம். இவர்களுடைய இடத்தில் நபீபியா, யு.எஸ்.ஏ, ஸிம்பாப்வே ஆடலாம். இந்தப் அணிக்கு இவ்வளவு பில்ட் அப் வேற!
Comments