இன்று ஊடகங்கள், குறிப்பாக செய்தி ஊடகங்கள், ஒருவித தற்கொலைப் பாதையில் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுக்குச் செய்தியில் ஆர்வமுள்ளது. ஆனால் அவர்களுக்கு பொய்ச் செய்திகளில் விருப்பதில்லை. பொய்ச் செய்தி என்றால் பிரச்சாரம். பொய்ச்செய்தி என்றால் நரேட்டிவ் செட் செய்வது. என்னைப் பொறுத்தவரையில் இதுதான் இன்று செய்தி ஊடகங்களை உள்ளிருந்து அரிக்கிறது. நமது பெரும்பாலான விவாதங்களைப் பாருங்கள் - அவை ஒன்று ஆளுங்கட்சிக்காகப் பிரச்சாரம் செய்ய உத்தேசிக்கப்படுபவை. அல்லது மூன்றாவது அணிக் கட்சிக்காக நரேட்டிவ் செட் செய்பவை. சிலநேரங்களில் ஆளுங்கட்சியில் உள்ள கூட்டணிக் கட்சியினரை உடைப்பதற்காக நடத்தப்படுபவை. ஒரு சின்ன வட்டத்துக்குள் நடக்க வேண்டிய அதிகாரப் பகிர்தலுக்கான சமூக அழுத்தத்தை ஏற்படுத்த இன்று விவாதங்கள் நடத்தப்படுகின்றன, அரசியல் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. மக்கள், குறிப்பாக இளைஞர்கள், வெளிப்படையாகவே இதைப் பற்றிப் பேசுவதை பொதுவிடங்களில் கேட்கிறேன். இந்தச் சேனல் ஆளுங்கட்சி உடையது, அது பாஜகவின் சேனல், இது விஜய்யின் சேனல். இதைவிட பெரிய அவமானம் இல்லை. கேட்க சொப்பன சுந்தரி ஜோக் நினைவு வந்தது.
இன்று இத்'தொழில் முடிவுகள்' ஊடகங்களுக்கு வருமானம் கொண்டு வரும். ஆனால் மக்களிடம் எந்தச் செல்வாக்கும் இல்லை எனும் நிலை வரும்போது இந்த தொழில் முதலீட்டாளர்களும் கைவிரிப்பார்கள். அப்போது ஊடகங்களை ஆதரிக்க மக்களும் இருக்க மாட்டார்கள். முழுமையாக சினிமாச் செய்திகள். ரியாலிட்டி ஷோ, வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் என இலக்கை மாற்ற வேண்டி இருக்கும்.
கொஞ்சம் நேர்மையும் பொறுமையும் இருந்தால் எந்த சார்பும் இன்றி, நரேட்டிவ் செட் செய்யாமல் உண்மைத்தன்மை உள்ள விவாத நிகழ்ச்சிகளையும் செய்தித் தொகுப்புகளையும் இன்றும் நம் அலைவரிசைகளும் இதழ்களும் தர முடியும். இதழ் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது - ஒரு புலனாய்வு இதழைத் தொடர்ந்து படித்து வந்தேன். அவர்கள் ஒரு சாமியாரை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதி வந்தார்கள். அதன் பிறகு இன்னொரு புலனாய்வுப் 'புலி' (அவரும் வாடகைப் புலிதான்) ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் பணம் வாங்கிக் கொண்டு குற்றங்களைப் பேசாமல் இருக்கும் இதழ்களின் பெயர்கள் இருந்தன. மேற்சொன்ன இதழ் அதே சாமியாரிடம் பணம் வாங்கியதைச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் ஏன் 'அம்பலப்படுத்துவதை' ஒரு கட்டத்தில் நிறுத்தினார்கள் எனப் புரிந்து கொண்டேன். அவர்கள் செய்வது அம்பலப்படுத்தல் அல்ல 'மிரட்டிப் பணம் வாங்கும் தொழில்'. அதன் பிறகு அவ்விதழை நான் சந்தேகத்துடனே படிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் நம்பகத்தன்மை இல்லாமல் ஆகிறது.
நம்பகத்தன்மைதான் உலகின் மிகச்சிறந்த முதலீடு, பணம் அல்ல. நம்பகத்தன்மையை விற்றுப் பணம் வாங்கி ஒன்றும் செய்ய முடியாது. அது ஒருவித தற்கொலை.
பின்குறிப்பு: பேஸ்புக்கில் நான் வெறுப்பது கட்சி சாரா 'கட்சி எழுத்தாளர்களைத்தான்'. இவர்கள் பேஸ்புக்கை ஏதோ கட்சி அலுவலகம் போல, பிரச்சார மேடை போல மாற்றி விடுகிறார்கள். பேஸ்புக்கின் நோக்கம் சொந்தக் கருத்துக்களை எழுதுவது, அனுபவங்களைப் பகிர்வது, தொடர்புவலையை ஏற்படுத்துவது, சுய-முன்னெடுப்பைச் செய்வது, சொந்தச் சரக்கைச் சந்தைப்படுத்துவது. தனிப்பட்ட தளத்தில் இருந்து பொதுத்தளத்திற்குப் போனதும் பேஸ்புக் போரடிக்கத் தொடங்குகிறது. மக்களுக்கு எதை எழுதினாலும் யாராவது ஒருவரின் உணர்வுகளைக் காயப்படுத்துவோமோ, நம்மை யாராவது gas light செய்வார்களோ எனும் பயம் வருகிறது. ஏனென்றால் மேற்சொன்ன கட்சிசாரா கட்சிக்காரர்கள் அரசியல் சரித்தன்மையை வைத்து ஒரு போலி நாடகம் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். பணமே வாங்காமல் அவர்களும் நரேட்டிவ் செட் செய்கிறார்கள். இவர்கள் இன்னும் ஊடுருவாதது நம் வீடுகளுக்குள், நம் படுக்கை அறைக்குள் தான்.
கருத்துகள்