முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய டி20 அணியின் உண்மையான சவால்

 


அயர்லாந்துடன் இந்தியா தோற்றதில் பெரிய துயரம் இல்லை. கடந்த முறை இந்தியா அங்கு டி20 ஆடியபோதும் அயர்லாந்தினர் நன்றாகவே ஆடினார்கள். இம்முறை ஆட்டச்சூழலும் மைதான அமைப்பும் மட்டையாட்டத்துக்குச் சாதகமாக இல்லாதது அவர்களுடைய ஆட்டபாணிக்குப் பொருத்தமாக இருந்தது. பெரிய சவால்கள் இன்றியே வென்றார்கள். இரண்டு ஆட்டங்களிலும் எந்த நிலையிலும் இந்தியா அவர்களை நெருக்கித் தள்ளவில்லை. இதெல்லாம் பலரும் விவாதிப்பதுதான். இங்கிலாந்துடனான அடுத்து வரும் தொடரில் இதே அணி மேலும் நன்றாக ஆடுவார்கள், ஏனென்றால் அப்போது ஆடுதளம் இன்னும் சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இங்கிலாந்து மட்டையாட்டக்கார்கள் இன்னும் ஆவேசமாக மட்டையாடுவார்கள், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களை நமக்குக் கொடுப்பார்கள் என்பதால் ரன்களைக் கட்டுப்படுத்தும் கவலையே நம் அணிக்கு இருக்கும். விக்கெட் கொடுக்காமல் ஆடுவது அல்ல. மேலும் தட்டையான ஆடுதளங்களிலேயே பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் திறன்கள் தேவையுள்ளது - துல்லியமான யார்க்கர்கள், நல்ல பவுன்சர்கள், மெதுப்பந்துகள், அகலமான திசை என நிறைய சவால்கள். அயர்லாந்தில் குறிப்பிட்ட நீளத்தில் வீசிக்கொண்டே இருக்கலாம், பந்து நின்று வரும் என்பதால் வீச்சாளர்களுக்கு ஆபத்து குறைவு. இது ஒன்றிரண்டு நல்ல வீச்சாளர்களை வைத்தே அவர்களால் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த உதவியது. இந்த ஆட்டச்சூழலுக்குப் பழகாத இந்திய மட்டையாளர்களைத் திணறடிக்க முடிந்தது. இவையெல்லாம் ஆட்டச்சூழலைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வெல்கிற உத்தி அடிப்படையிலான ஆட்டம். அதனாலே உலக சாம்பியன் இந்தியாவை வென்றதால் யாரும் அயர்லாந்தை சிறந்த டி20 அணி எனக் கூறப் போவதில்லை. ஆகையால் இது இயல்பான நிலைமையில் நடக்கக் கூடியதல்ல, இதற்காக யாரும் மண்டையை உடைத்துக் கொள்ளவும் போவதில்லை.

உண்மையான பிரச்சினை அதுவல்ல - ஐயர்லாந்தில் நடந்த போட்டிகளே ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணித்தலைவராக முதல் தொடர். ஐம்பத்து சொச்சம் போட்டிகளுக்குப் பிறகு அவர் டி20 அணியில் இடம்பெறுகிறார். இந்த அணி அவர் இல்லாமலே கடந்த இரு ஆண்டுகளாக சேர்ந்து ஆடி பல வெற்றிகளைக் குவித்தது. உலகக்கோப்பையை வென்றது. இப்போது அணித்தலைவர் சூர்யகுமாரை நீக்கிவிட்டு ஷ்ரேயாஸை அணித்தலைவர் ஆக்கி உள்ளார்கள். இதை அணி வீரர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் மைதானத்தில் நடந்து கொள்ளும் விதம், விக்கெட் விழும்போது அதைக் கூட்டாகக் கொண்டாடாதது, பந்துவீச்சாளர்களை தடுப்பாளர்கள் ஊக்கப்படுத்தாதது, வீரர்கள் ஷ்ரேயாஸை சுற்றிக் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதது காட்டுகிறது. ஆட்டம் முழுக்கவே ஷ்ரேயாஸும் பெருமளவு அமைதியாக இருந்தார். இதுதான் இத்தோல்வியை விட மோசமான அறிகுறி. இதுவே பெரிய சவால்.

இதற்கான காரணங்கள் இரண்டு:
1) தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும் ஷ்ரேயாஸை அணிக்குள் முதலில் சேர்த்து ஆட வைத்து அவர் சில போட்டிகளை வென்றளித்த பின்னர், அணிக்குள் அவர் ஏற்கப்பட்ட பின்னர் அவரைத் தலைவராக்கி இருக்க வேண்டும். ஐ.பி.எல் அணியில் சேர்ந்து தலைவராகி ஒரு ஆண்டு ஆடுவதற்கும் இந்திய அணியில் தலைவராவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் - ஐ.பி.எல்லில் யாரையும் ஏற்றுக் கொள்வார்கள். அவ்வீரர்கள் பணத்துக்காக ஏலத்தில் எடுக்கப்படுவோர். ஒரு ஆண்டு சரியாக ஆடாவிட்டால் அடுத்த ஆண்டு இன்னொரு அணிக்கு பரிமாற்றம் செய்யப்படுவர். ஆனால் இந்திய அணியில் ஒருவர் நன்றாக ஆடி நிலைப்பெற்றால் அவர் அங்கு 10 ஆண்டுகள் ஆடுவார். அதனாலே ஐ.பி.எல் பாணியில் அங்கு ஒருவரைத் தலைவராக்கி உடனே அவர் வெல்வார் என தேர்வாளர்கள் எதிர்பார்த்தது பிழைத்து விட்டது.

2) சஞ்சு சாம்ஸன், இஷான் கிஷன், திலக் வர்மா என அணிக்குள் ஏற்கனவே தலைவராகும் தகுதியுள்ள போட்டியாளர்கள் இருக்கையில், முன்பு எம்.ஜி.ஆர் காலமானதும் ஜானகி அதிமுகவின் தலைமையைக் கோரியது போல, ஷ்ரேயாஸை கம்பீரும் அகார்க்கருமாக அதிரிபுதிரியாகத் தலைவராக்கியது ஏதோ ஒரு கசப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை அணிக்கு ஹர்த்திக்கைத் தலைவராக்கியதை இதனுடன் ஒப்பிடலாம்.

இப்பிரச்சினை தொடருமானால் இந்தியா மேலும் சில தொடர்களை இழக்கும். இதற்கு இரண்டு தீர்வுகள் உண்டு:

1) ஷ்ரேயாஸ் தன் மட்டையாட்டத்தில் கவனம் செலுத்தி ரன்களைக் குவித்து ஆட்டங்களை வென்றளித்து அணியில் மரியாதையை ஏற்படுத்தி தன் சகவீரர்களின் ஏற்பையும் அன்பையும் பெறுவது.

2) அக்ஸர் பட்டேலை இடைக்காலத் தலைவராக்கி விட்டு ஷ்ரேயாஸ் தன்னை ஒரு சர்வதேச டி20 வீரராக நிறுவுவதற்கு கால அவகாசமளிப்பது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...