விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து ஆளும் பட்சத்தில் அவரை இப்போது ஆதரிக்கும் மார்க்ஸிஸ்டுகள், விசிகவினர் போன்றோரும் எதிர்க்கட்சியான அதிமுகவும் மிக மோசமாக அவரால் வேட்டையாடப்படப் போகிறார்கள். அறவுணர்வோ கருணையோ இல்லாத இயல்பிலேயே கொடுங்கோலரான பாசிஸ்ட்தான் இந்த விஜய். இப்போது அவர் தன் உணர்கொம்புகளை வெளியே விட்டு சோதித்துக் கொண்டிருக்கிறார். முழுரூபத்தை அவர் காட்டும் நாளில் இவர்கள் எல்லாம் அத்துக் கொண்டு ஓடுவது நடக்கும் என்பது என் கணிப்பு. இவரை கொஞ்சமாவது அவர்கள் எதிர்த்தாலோ மறுத்தாலோ மிக மோசமான ஒடுக்குமுறையைச் சந்திப்பார்கள். ஐ.யு.எம்.எல் கூட்டணியில் இருக்கும்போதே சில தவெக நிர்வாகிகள் ஒரு திமுக சார்பு இளைஞரை இஸ்லாமியர் என்று தவறாக நினைத்து ஆண்குறியை அறுப்பேன் என மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் துன்புறுத்தியதில் அவருக்கு வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அந்த தவெக நிர்வாகி ஒன்று ஏதோ அறியாப் பிள்ளை அல்லர். அவரது கட்சிக்குள் இருக்கும் மதவெறுப்பையும் இனவாதத்தையும்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சட்டமன்றத்தில் பேசும்போது எதிர்க்கட்சி தலைவரை கொளத்தூரில் தோற்கடித்ததை தலையை வெட்டிவிடுவேன் எனும் சைகையைக் காட்டிச் சொன்னவர். அவரது கட்சியின் நிர்வாகிகளும் அப்போது அதே வன்முறையைத்தானே கையில் எடுப்பார்கள். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காது எனும்போது அவர்கள் மேலும் துணிவார்கள்தானே. என்னுடைய கேள்வி இதுதான்: கூட்டணியில் இருக்கும்போதே இப்படிப் பேசுகிறார்கள் எனில் இல்லாவிட்டால் என்னவெல்லாம் சொல்வார்கள்? பெரும்பான்மை கிடைக்காததற்கே இப்படி என்றால் கிடைத்திருந்தால் தன் கட்சியை வைத்து ஒரு தனி குண்டர் படையை உருவாக்கி எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவியிருப்பார். மே.வங்கத்தில் நாம் காண்கிற காட்சிகள் இங்கும் நடந்திருக்கும். தமிழ்நாடு தப்பித்தது.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் பாஜகவினர் மட்டும்தான் இப்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பாகப் பேச முடியும் என்று நினைத்தால் அவர்களையும் அவர் இப்படித்தான் பொய் வழக்குப் போட்டு அலைய வைக்கிறார். விஜய்யின் மாமாவான போதகர் ஒருவரும் மற்றொரு மாமாவான ஜான் பிரிட்டோன் என்பவரும் லயோலா கல்லூரியின் வலைத்தொடர்பையும், துபாய் நிறுவனத்தையும் பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகள் கறுப்புப் பணத்தைத் தவெகவின் தேர்தல் செலவுக்காக உள்ளே கொண்டு வந்துள்ளனர் என்று மாரிதாஸ் ஒரு காணொளியில் சொல்கிறார். அது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால் விஜய் மீது ஏற்கனவே வரி ஏய்ப்பு வழக்கு உள்ளது. அவருக்காக பணம் செலவழித்த லாட்டரி கும்பல் வெள்ளைப் பணத்தையா செலவழித்திருப்பார்கள். தேர்தல் செலவிலேயே இவ்வளவு தில்லுமுல்லு செய்தவர்கள் வார்த்தைக்கு வார்த்தை தானொரு ஊழலற்ற ஆட்சியைச் செய்கிறேன் என்று பாவனை செய்வதுதான் வேடிக்கை. மாரிதாஸ் தன் காணொளியின் ஒன்றைச் சொல்கிறார்: இவரது மாமா கடவுளின் பெயரால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டராக கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்களை விசாரிக்கும் அமைப்பொன்று அறிக்கையில் சொல்லியுள்ளதாகக் கூறுகிறார். இப்படியே சொல்வதொன்று செய்வதொன்று என்று இருந்தால் அது ஆன்மீகத்தை மட்டுமல்ல அரசியலையும் புற்றுநோய் போல உள்ளிருந்தே தின்றுவிடும்.
மாரிதாஸ் தன் காணொளிகளில் அவர் விடாமல் விஜய்யின் பின்னணியை அம்பலப்படுத்தி விமர்சிப்பதைப் பார்க்கையில் எனக்கென்னமோ அவர் மீண்டும் சிறை செல்வார் எனத் தோன்றுகிறது. அல்லது அமித்ஷாவிடம் போய் கெஞ்சிக் கதறி மாரிதாஸின் வாயை மூட வைப்பார்கள்.
தமிழ்நாட்டை விடுங்கள். எனக்குத் தெரிந்த இந்தளவுக்கு அவலமான ஒரு ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.
கருத்துகள்