Skip to main content

வெற்றி அடைவது எப்படி -- சில புருடாக்களும், நிஜங்களும்

வெற்றியாளர்களை நமக்கு உள்ளூரப் பிடிக்காது. இதன் காரணம் ஒருவர் தொடர்ந்து வெற்றி பெறுவதில் ஒரு அதர்க்கம் உள்ளது. இந்த அதர்க்கம் வெற்றியாளன் மீது கோபமாக மாறுகிறது. வெற்றியின் காரணங்களாக ஒரு பட்டியல் தரப்படுகிறது. அடிப்படையான உழைப்பு, மனவலிமை, ஒழுக்கம் ... என்று போக இந்த சூத்திரத்தில் நமக்கு அகப்படாத ஒரு கூட்டல் / பெருக்கல் குறி மறைந்துள்ளது. அது என்ன? சரியான சந்தர்பத்தில் சரியான நபர் வலது காலை வைப்பதா?

சந்தர்ப்பவாத வெற்றிக்கு ஏகப்பட்ட உதாரண கதைகள். தற்போது வெளியான Luck by Chance இந்திப் படத்தின் கரு இதுதான். ஆனால், அங்கேயும் ஒரு ஓட்டை உள்ளது. சந்தர்ப்பம் (ஒழுக்கமான, கடுமையாய் உழைக்கும், மனவலிமை மிக்க ... ) வெற்றியாளனை ஒரு சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வதில்லை. நம் மத்தியில் சந்தர்பங்கள் ஒத்துழைக்காத, சோம்பல் கொண்ட, உள்நடுக்கம் மறைக்கும் பல குழப்பமான வெற்றியாளர்கள் வேறு. மேலும் குழப்பம். வெற்றி எனும் இந்த புதிர் பற்றி எத்தனையோ சுயமுன்னேற்ற புத்தகங்கள். இவை வெற்றியை ஒரு பழக்கம் என்பவை. ஒரே மாதத்தில் வெற்றியாளனாவது எப்படி, வெற்றியாளனுக்கான ஏழு பழக்கங்கள், உங்களுக்குள் இருக்கும் ராட்சதனை உசுப்பி விடுங்கள் ... இப்படி. இவை மனவியல், நரம்பியல் என்று அலசி ஒரு வெற்றியாளனுக்கான மனநிலையை பயிற்சி மூலம் உருவாக்கினால் நீங்களும் வெற்றியாளன் என்கிறது. இவற்றைப் படித்த கோடிகள் வெற்றியாளர்கள் ஆகவில்லை. புதிர் தொடர்கிறது. அதனால் மேலும் பலர் கோடிக்கணக்கில் வாங்கிப் படிக்கின்றனர்!

விடாமல் நட்சத்திரங்கள் சொல்லும் வெற்றி ரகசியங்களை ஞாயிறு மலர்களில், டி.வி பேட்டிகளில் காப்பி டம்ளர் வாயருகே வைத்து படிக்கிறோம், கேட்கிறோம்: "நள்ளிரவு பன்னிரெண்டுக்கு தூங்கினால் பத்து நிமிடத்தில் எழுந்து அம்மா தரும் ஹார்லிக்ஸ் குடித்து, மறக்காமல் கக்கூஸ் போய் விட்டு, மறுபடி கடுமையான உழைப்பை தொடர்வேன்". என்ன மனிதர்கள்! மனுஷ்யபுத்திரன் பற்றி ஜெயமோகன் என்னிடம் சொன்னார்: "தொடர்ச்சியாய் ஒரு நாளில் 22 மணிநேரம் உழைக்கக் கூடியவர். தீபாவளி, பொங்கல், கலவரம் என்றால் ஊடகங்களில் தேடி வந்து மைக் நீட்டும் இடத்தை இப்போது அடைந்து விட்டார் பாருங்கள்!" ஆனால் ஒரு கலைஞன் அலாரம் கிளாக் உழைப்பாளியாக இருக்க முடியாது. பிற்பாடு என் ஊகம் சரி என்று உணர்ந்தேன். ம.பு.விடமும் நிறைய சோம்பல் உண்டு.

வெற்றியாளனிடம் ஒரு மிகையான தன்னம்பிக்கை, அதன் விளைவான மூர்க்கம், கடிவாள மனக்குவிப்பு தனியாகத் தெரியும். உங்கள் நெரிசலான, ஓட்டை மின்விசிறி சடசடக்கும், புத்தகங்கள் சிதறிய அறைக்குள் ஒரு நிர்வாண அழகி நுழைகிறாள் என்று கொள்ளுங்கள். உங்கள் உடலுள் ஜிவ்வென்று சூடு கிளம்ப அவளை அடையப் போகிறேன் என்று நொடியில் நம்பிக்கை கொள்கிறீர்கள். ஐயம் சிறு பிசிறு அளவும் இல்லாமல். ஒரு வெற்றியாளனுக்கு இதுபோல் பரிசு கையருகிலேயே உள்ளது என்ற பிரமை உள்ளது. எண்ணமல்ல, உணர்வு. வெற்றியை அறியாதவனுக்கு அது பார்வைப் புலம் தாண்டி வெகுதொலையில் எங்கோ...

கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகள் குவிக்கும் அணிகள் படிப்படியாக அவ்விடத்துக்கு வருவதை கவனிக்க வேண்டும். அப்புறம் அந்த இடத்திலிருந்து ஒருசேர தள்ளினாலும் புட்டம் உயர்த்த மாட்டார்கள். ஒரு குழுவின் வெற்றியின் வரலாறு தான் தொடர்ந்து வெற்றியை தக்க வைக்க பயன்படுகிறது. வெற்றி வரலாற்றை சுமப்பவர்கள் வெற்றிக்காக குனிந்து தத்தம் பெருவிரல் நக்கவும் தயங்க மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணி போன முறை ஆஸ்திரேலியா பயணித்தபோது ஆஸி அணியினர் பல பொய் பாசாங்குகள் மூலம் டெஸ்டு தொடரை தாங்கள் வெல்வதை உறுதி செய்தது. "ஒரு அணி மற்றும் தான் நேர்மையாக ஆடியது" என்று கும்பிளே ஊடகங்களிடம் பஞ்சியதும் உலகமே ஆஸி மூர்க்கத்தை வெறுத்தது. பின்னர் இந்தியா வந்து மீண்டும் தொடர் ஆடி தோற்ற பின்பும் ஆஸி தலைவர் ரிக்கி பாண்டிங் தோல்வியை முழுக்க ஒப்புக் கொள்ள மறுத்தார். "தொடரில் பெரும்பாலும் நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம்" என்றார். இது திமிர் அல்ல. வெற்றியின் நீண்ட பாரம்பரியத்தின் எல்லையில் கூட ஒருவனுக்கு இருக்கும் 'வெற்றி இதோ அடுத்து வரப் போகிறது' என்ற அபரித நம்பிக்கை. இந்த முறை பிடி நழுவு விட்டது, அடுத்த முறை அகப்படும் என்ற உறுதிப்பாடு. தோல்வி அடைந்து வருகிறோம் என்று நம்ப ஆஸி அணிக்கு வெகுகாலம் பிடிக்கும். இதுவரை எந்த ஒரு குறிப்பிடும்படியான தொடர் வெற்றிகளையும் அறிந்திராத நியூசிலாந்தின் அணித் தலைவர் விட்டோரி தற்போதைய இந்திய தொடரின் ஒரு நாள் ஆட்டம் ஒன்றின் போது சேவாக் ஒரு போட்டியில் விளாசிட உடனே இப்படி சொல்கிறார்: "எங்கள் அணி வீரர்களுக்கு சேவாக்கின் மீது உள்ளூர நடுக்கம்". அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா அதிரடியாய் ஓட்டங்கள் குவித்து தொடரை வெல்ல தொடர்ந்து தண்டனிடுகிறார்: "இந்தியாவைத் தோற்கடிக்க நாங்கள் 500 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்". ரிக்கியின் சவடால்களோடு இந்த பணிவை ஒப்பிடுங்கள். வெற்றியாளனுக்கு இரண்டாவது கன்னம் காட்டத் தெரியாது.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கவாஸ்கர் சொன்னார்: "எங்கள் காலத்தில் இவ்வளவு சுதந்திரமாக, ஆக்ரோசமாக ஆட முடியவில்லை.". காரணம் அப்படி ஆடும் முன்னோடிகள் அவருக்கு இல்லை. பிறகு வந்த சச்சினுக்கு கவாஸ்கரும், விவியன் ரிச்சர்ட்ஸும் முன்னோடிகள். அவரது ஆட்டம் இவ்விருவரின் கலவை. சேப்பாக்கில் வார்னேயை மட்டு மரியாதை இன்றி சச்சின் விளாசிய சிக்சரின் ரீப்ளேதான் யுவ்ராஜின் சமீபத்திய 6 சிக்சர்கள். இப்போதைய ரைனா, உத்தப்பா, ரோஹித் வகையினரின் தன்னம்பிக்கை சேவாகின் ஆட்டத்தை தொடர்ந்து வருவது.

இப்படி முதல் வெற்றிக்குப் பின் இரண்டாவது எளிதாகி விடுகிறது. அது எப்படி என்பது ஒரு சிக்கலான கேள்வி.

சமீபத்தில் ரோயல் சொசைட்டி இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தேன் (rspb.royalsocietypublishing.org/content/early/2009/03/06/rspb.2009.0132.abstract ). இனப்பெருக்க காலத்தில் சிக்ளிட் மீன்கள் துணைக்காக மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் மீனுக்கு அதிகமாய் ஆண்டுரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பு காரணமாய் அடுத்த போட்டியில் இதே மீன் படு மூர்க்கமாய் மோதுகிறது. முன்னர் தோற்ற மீன் இப்போது எளிதாய் தோற்று சடுதியில் ஓடி விடுகிறது. சரி, ஆண்டுரோஜன் தானே வெற்றியை தீர்மானிக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தோற்ற மீனுக்கு வெற்றியாளனது அளவில் ஆண்டுரோஜென் ஏற்றி மீண்டும் மோத விட்டார்கள். யார் ஜெயித்திருப்பார்கள்? முதல் சுற்றில் வென்ற மீன்தான்.

என்னதான் ஹார்லிக்ஸ், மெமரி பிளஸ், ஏஸி, டியூசன் என்று அமைத்துக் கொடுத்தாலும் பையன் படிக்க மாடேன் என்கிறானே சார் என்று விசனிக்கும் பெற்றோர் பொறுமை காக்க வேண்டும். வெற்றி மிதிவண்டி பழகுவது போல. பழகினால் மறக்க சிரமம். மேற்சொன்ன ஆராய்ச்சியாளர்களின் முடிவும் இதுவே. தோல்வி அனுபவம் மேலும் தோல்விக்கு தள்ளி விடுகிறது. மற்றபடி 'தோல்வி வெற்றிக்கு முதற் படி' என்பது எல்லாம் புருடா.

தற்போது நடக்கும் இந்தியா--நியூசிலாந்து தொடரில் நியூசிலாந்து தோற்றதற்கு ஒரு காரணம் அவர்களின் தோல்வி ஞாபங்களே.

சரி, இந்த முதல் வெற்றி எப்படி கிடைக்கிறது? தெரிந்தால் சொல்லுங்கள்!

Comments

///சரி, இந்த முதல் வெற்றி எப்படி கிடைக்கிறது? தெரிந்தால் சொல்லுங்கள்!///

இதோ இப்படி-


'தோல்வி வெற்றிக்கு முதற் படி'

:-))

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...