முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை சொல்ல வாழ்கிறேன்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (அத்தியாயம் 5)



"இரண்டும் ஒன்றுதான் என்கிறார் உன் அப்பா", அவள் சொன்னாள்.
அது பொய்யென்று அறிந்த நான் சொன்னேன்:
"அவரும் வயலின் வாசிப்பதற்காக படிப்பை விட்டவர் தானே"
"அது வேறு", அவள் பெரும் ஊக்கத்துடன் சொன்னாள், "அவர் விருந்துகள் மற்றும் மாலை நேர காதல் பாடல்களின் போது மட்டுமே வாசித்தார். சாப்பிடக்கூட காசில்லாமல் இருந்ததனால் மட்டுமே அவர் படிப்பை நிறுத்தினார். ஆனால், அரகடகாவில் உள்ள எல்லாருக்கும் முன்பே, ஒரு மாதத்தில் அவர் தந்திக்கலை படித்தார்; அது அப்போது மிகச்சிறந்த வேலையாக இருந்தது"

"நானும் கூட பத்திரிகைகளுக்கு எழுதி சம்பாதிக்கிறேன்", நான் சொன்னேன்.
"நான் பயப்படாமல் இருப்பதற்கு சொல்லுகிறாய்", அவள் சொன்னாள், "ஆனால் தொலைவில் இருந்து பார்த்தாலே உன் நிலைமை எல்லாருக்கும் புரியும். அந்த புத்தகக்கடையில் எனக்கு அடையாளமே காண முடியாதபடி மோசமான நிலைமை"
"என்னால் கூட உன்னை அடையாளம் காண முடியவில்லையே", நான் சொன்னேன்.
"ஆனால் இதுமாதிரியான காரணத்தினால் அல்ல", அவள் சொன்னாள், "உன்னைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் என்று நினைத்தேன்"
என் நைந்து போன் செருப்புகளை பார்த்து தொடர்ந்தாள், "ஒரு காலுறை கூட கிடையாது"
"அதுதான் ரொம்ப வசதியாக உள்ளது", நான் சொன்னேன், "ரெண்டு சட்டை, ரெண்டு ஜோடி உள்ளாடைகள், ஒன்று காயும்போது மற்றொன்றை அணிந்து கொள்ளலாம். ஒருவருக்கு வேறென்ன வேண்டும்?"
"சற்று கௌரவம்", அவள் சொன்னாள். ஆனால் வித்தியாசமான ஒரு தொனிக்கு உடனடியாக மாறி இதைக் கூறி மென்மையானாள், "நாங்கள் உன்னை மிக அதிகமாய் நேசிப்பதனால் தான் இதை சொல்கிறேன்"
"எனக்குத் தெரியும்", நான் சொன்னேன், "ஆனால் ஒரு விஷயம் சொல், என் இடத்திலே இருந்திருந்தால் நீயும் இதையேதான் செய்திருப்பாய்?"

"நான் செய்திருக்க மாட்டேன்", அவள் சொன்னாள், "என் பெற்றோர்களை வருந்த செய்யும் என்றால் நான் அதை செய்ய மாட்டேன்". அவளது திருமணத்தின் பாலான குடும்பத்தினரின் எதிர்ப்பை விடாப்பிடியாய் அவள் முறியடித்ததை நினைவில் கொண்டு சிரித்துக் கொண்டு சொன்னேன்:
"என் கண்ணைப் பார்த்து சொல் பார்க்கலாம்"
நான் என்ன யோசிக்கிறேன் என்பதை மிக நன்றாக அறிந்திருந்ததால் என் பார்வையை தவிர்த்த அவள் துயருற்று தெரிந்தாள்.
"என் பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும் வரையில் நான் மணமுடிக்க இல்லை", அவள் சொன்னாள், "மனதில்லாமல் தான், நான் அதை ஒத்துக் கொள்கிறேன், ஆனால் எனக்கு அது கிடைத்தது".
அவள் விவாதத்தை தற்காலிகமாக நிறுத்தினாள், என் விவாதக் கருத்துக்களால் தோற்கடிக்கப்பட்டு அல்ல, அவளுக்கு கழிப்பறைக்கு போக வேண்டும் என்பதாலும், அதன் சுகாதார நிலைமையை அவள் நம்பாததாலும். கப்பலின் ஒருங்கிணைப்பு மற்றும் எந்திர மேற்பார்வை அதிகாரியிடம் மெலும் சுத்தமான இடம் கிடைக்குமா என்று விசாரித்தேன்; ஆனால் தானே பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்துவதாய் அவர் சொன்னார். என்னவோ கோன்ரெடை படித்தது போல் அவர் சொல்லி முடித்தார், "கடலிலே எல்லாரும் ஒன்றுதான்". அதனால் அம்மா சமத்துவ விதிக்கு அடிபணிந்தார். நான் பயந்ததற்கு நேர்மாறாய் வெளியே வந்தபின் அவள் முயன்ற¦ல்லாம் தன் சிரிப்பை அடக்க முயன்றது தான், "நானொரு சமூக நோயுடன் திரும்ப சென்றால் உன் அப்பா என்ன நினைப்பார் என்பதை உன்னால் கற்பனை பண்ண முடிகிறதா?"

கருத்துகள்

குணா கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
"கதை சொல்ல வாழ்கிறேன்" என்ற மொழிபெயர்ப்பை நான் நம்பவில்லை."கதை சொல்ல வாழ்தல்" என்பதே என் கருத்து.
குணா கந்தசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் மொழிபெயர்ப்பு கவித்துவ அழகை கொடுத்தாலும்.........................................
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
”கதை சொல்ல வாழ்கிறேன்” பொருளை சிதைக்கவில்லை. எழுதும் முன் இதைப் பற்றி நெடிது யோசித்தேன் தான். உங்கள் பரிந்துரையும் தோன்றியது. கடைசியில் மார்க்வெஸும் இதையே விரும்புவார் என்று சமாதானம் கொண்டேன். “கதை சொல்ல வாழ்தல்” இலக்கண ரீதியாய் நேரடியாக இருந்தாலும், தட்டையாக தோன்றுகிறதல்லவா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...