முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா அடுத்த உலகக் கோப்பை வெல்லுமா?


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றியை ஒட்டி சச்சின் இந்திய அணியால் அடுத்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மட்டையாட்டம் வலுவானது. பந்து வீச்சு சுமார். களத்தடுப்பு செம கூர்மை. ஆனால் உலகக் கோப்பை ஒரு நீண்ட தொடர். அதில் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். எல்லாவிதமான பந்து வீச்சுகளையும் சமாளிக்க வேண்டும். தொடர் முழுக்க நன்றாக ஆடி விட்டு ஒரு ஆட்டத்தினால் இறுதி சுற்றுக்கு போக முடியாத அணிகள் உண்டு.

போன உலகக் கோப்பையின் போதும் இதே போல் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா வெல்லும் என்றார்கள். இரண்டுமே பிரமாதமாய் பந்து வீசின. ஆனால் போக போக எரிபொருள் தீர்ந்து புகை விட்டன. எனக்கு இலங்கை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் இறுதிச் சுற்றில் அழுத்தம் தாளாமல் சட்டென ஸ்தம்பித்தார்கள். மேலும் அணித்தேர்விலும் தவறு பண்ணினார்கள். பாகிஸ்தான் வழக்கம் போல் எப்போது கழன்று விழுந்தார்கள் என தெரியாதபடி காணாமல் போனார்கள். ஆனால் இந்த நான்கு அணிகளுமே உலகக் கோப்பைக்கு முன் அட்டகாசமாய் ஆடி வந்தார்கள். ஆனால் ஒரு நீண்ட ஆட்டத்தொடரில் இந்த சமீபத்திய ஆட்டநிலை எல்லாம் எடுபடாது.
இரண்டு விசயங்கள் வேண்டும். சிறந்த தலைமை. அது இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கையிடம் உள்ளது. மெல்ல மெல்ல ஆட்ட உச்சத்தை அரை இறுதியின் போது அடைய வேண்டும். போன உலகக் கோப்பையில் அதை இந்தியா செய்தது. இரண்டு அல்லது மூன்று வீரர்கள் தொடர்ந்து ஜொலிக்க வேண்டும். 92 உலகக் கோப்பையில் இம்ரான், இன்சமாம், 96இல் அரவிந்தா, ஜெயசூர்யா போல. போன உலகக் கோப்பையில் கூட யுவ்ராஜும் சஹீரும் தொடர்ந்து அணியை காப்பாற்றினார்கள். இந்த தொடர் ஆட்டநாயகன்கள் உலகக் கோப்பையில் ரொம்ப முக்கியம். இந்தியாவுக்கு இம்முறை அப்படி ஆட யார் இருக்கிறார்கள்?அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில்?
துள்ளலான ஆடுகளங்களில் ரெய்னா எப்படி ஆடுவார் என உறுதியாக தெரியவில்லை. கோலி நன்றாக ஆடினால் நல்லது. ரஹானே கூட ஆடலாம். ஆனால் நாம் ஒட்டுமொத்தமாக எல்லா மட்டையாளர்களின் பங்களிப்பையும் நம்பி இருக்கிறோம் எனலாம். போன தடவை போல் அனுபவமுள்ள நட்சத்திரங்கள் இந்த அணியில் இல்லை. பந்து வீச்சில் ஒருவர் கூட இல்லை.
ஆக இந்தியா முற்றிலும் வேறு விதத்தில் ஒருமித்த அணியாக தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். 96இல் இலங்கை ஆடியது போல். அது தான் ஒரே வாய்ப்பு. மனதளவில் திணறாமல் இருந்தால் தென்னாப்பிரிக்க நிச்சயம் வெல்லலாம். உலகின் சிறந்த மட்டையாட்ட அணி அவர்களுடையது. ஆஸ்திரேலியாவின் மட்டையாட்டமும், ஒருநாள் வடிவில் பந்து வீச்சும் சுமார் தான். அதனால் அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவில்லை. நியுசீலாந்த் கூட நன்றாக ஆட வாய்ப்புண்டு. ஆனால் ஒரு பெரிய தொடரை வெல்லும் தன்னம்பிக்கையும் அனுபவமும் முக்கியம். அது அவர்களிடம் இல்லை. இலங்கை, பாகிஸ்தான் இரண்டின் பந்து வீச்சும் நன்றாக உள்ளது; ஆனால் மட்டையாட்டம் மழைகாலத்தில் அப்பளம் போல் இருக்கிறது. இங்கிலாந்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இம்முறை உலகக் கோப்பை ஒருமாதிரி சமநிலையாய் சராசரியாய் போகும் என நினைக்கிறேன். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா தவிர பிற அணிகள் ஒரே போல் இருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை சொல்லித் தரும் பாடம் எதையும் ஊகிக்க கூடாது என்பது. என்னதான் காதலன் என்றாலும் கல்யாணம் ஆனதும் கணவன் அல்லவா! அது போல் என்னதான் நன்றாக/மோசமாக ஆடியிருந்தாலும் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் அணிகள் மாறி விடும். வேறு ஏதோ ஒரு மேஜிக் நிகழும். பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...