Skip to main content

ஜெயமோகன் மெக்தலீனா மீது கல்லை வீசும் முன் ஒரு நொடி யோசியுங்கள்!


சமீபமாய் ஜெயமோகன் பத்திரிகைகள் பற்றி இவ்வாறு சொல்லி இருக்கிறார்:
“பொதுவாக தமிழ் பெரிய இதழ்களின் பிரசுர அரசியலும் சிறிய இதழ்களின் பிரசுர அரசியலும் வெவ்வேறானவை. பெரிய இதழ்களில் நீடிக்கும் கோபம் , காழ்ப்பு என ஏதும் இருப்பதில்லை. எவருக்கும் எந்த அக்கறையும் இருப்பதில்லை, அவ்வளவுதான். நம் இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குள் நுழையும் கனவுள்ளவர்கள். எஞ்சியவர்கள் பல்வேறுவகை செய்தித்தொடர்பாளர்கள். இலக்கியம் வாசிப்பு என்றெல்லாம் ஆர்வமுடையவர்கள் சொற்பம்

கூடவே பெரிய இதழ்களில் சாதியரசியல் உண்டு. நெடுங்காலம் பிராமண அரசியல் செல்வாக்குடன் இருந்தது. இன்று அது அனேகமாக பின்தள்ளப்பட்டுவிட்டது. இன்று உள்ளது தேவர்-நாடார் அரசியல். விகடன் அனேகமாக ஒரு தேவர் பத்திரிகை இன்று. வைரமுத்துவின் ‘மணிமுடி அவ்வாறு தயாரிக்கப்படுவதே. அதில் அறிமுகமாகும் எழுத்தாளர்களும் அவர்களே. சினிமா விமர்சனங்கள் வரை அந்தக் குறுகிய அரசியல் விகடனில் கோலோச்சுகிறது. அங்கே பணியாற்றும் சிலருடைய சொந்த சாதிப்பற்று அது.
மறுபக்கம் சிற்றிதழ்களில் உள்ளது குழு அரசியல்.
உயிர்மைகுழு காலச்சுவடு குழு என. அவர்கள் முழுமையான விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள்.
-ஜெயமோகன்”
வணிக பத்திரிகைகளின் சாதி விசுவாசம், சிறுபத்திரிகைகளின் குழு விசுவாசம் பற்றி பொங்கும் ஜெயமோகன் சினிமா உலகின் அரசியல் பற்றி ஏன் மௌனமாக இருக்கிறார்? ஒருமுறை விகடன் பேட்டியில் ஜெயமோகன் பற்றி இவ்வளவு இழிவாக பாலா பேசினார்:ஜெயமோகன் எதையாவது எழுதி விட்டு என் பின்னால் பதுங்கிக் கொள்வார்”. இதற்கு ஜெயமோகன் பதிலுக்கு பொங்கினாரா? இல்லை. அமைதியாக வாயை பொத்திக் கொண்டார்.
ஏன்? ஏனென்றால் சிவாஜியை கிண்டல் பண்ணி ஜெ.மோ எழுதப் போக அவரை இனி சினிமாவில் இயங்கவே விட மாட்டோம் என சிவாஜி குடும்பம் மிரட்டியது. பயந்து போன ஜெ.மோ பாலாவிடம் சரணடைந்தார். பாலா இனி சிவாஜி பற்றி எழுதக் கூடாது என ஜெ.மோவிடம் அறிவுறுத்திய பாலா பிறகு சிவாஜி குடும்பத்திடம்இனி அவர் ஒழுங்கா இருப்பார். ஒருமுறை மன்னிச்சிடுங்கஎன சமரசம் பேசினார். அப்படித் தான் ஜெ.மோ அன்று தப்பினார்.
அப்படி பஞ்சாயத்து பண்ணி தன்னை காப்பாற்றி விட்ட பாலாவின் உண்மையான அதிகாரமும் பலமும் ஜெ.மோவுக்கு தெரியும். பாலா இல்லையென்றால் ஜெ.மோவிடம் திரை வாழ்க்கை அன்றோடு முடிந்திருக்கும். இந்த பாலா ஒரு இறுமாப்புடன் விகடன் பேட்டியில் ஜெயமோகனை “பேசிப் பேசிக் கொல்லக் கூடியவர்” என்றார். இப்படி ஜெ.மோவை கேலி பண்ணும் அருகதை பாலாவுக்கு உண்டா என்றால் இல்லை. பாலா வெறுமனே ரெண்டு பாட்டு, நாலு சண்டைக்காட்சியுடன் கொஞ்சம் எதார்த்தமாய் வணிகப் படம் எடுப்பவர். ஆனால் ஜெ.மோ “விஷ்ணுபுரம்” போல் மிக முக்கியமான நாவல் எழுதியவர். ஜெ.மோவை கிண்டல் செய்ய பாலாவுக்கு தைரியம் வருவதற்கு ஜெ.மோவே தான் காரணம். அவர் அவ்வளவு எளிதில் ஒரு சினிமா இயக்குநரின் காலில் விழுந்து விடுகிறார். பிறகு எப்படி அவருக்கு மரியாதை கொடுக்க தோன்றும்?
இது போல் ஒரு எழுத்தாளன் ஜெயமோகனை கேலி பண்ணினார் என்றால் அவர் அந்த எழுத்தாளனை சூரசம்ஹாரம் பண்ணி விடுவார். இப்போது தன் “வெண்முரசை” மட்டம் தட்டி ஒரு கருத்தை அசோகமித்திரன் பேட்டியில் வெளியிட்டதற்காக காலச்சுவடு கண்ணனை அது தான் செய்கிறார். ஆனால் பாலா விசயத்தில் ஜெயமோகன் தன் மீது அடி விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவரது “அறிவுச் செருக்கு”, கௌரவம் எல்லாம் அங்கே காயப்படவில்லையா? ஏன் அவரால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை?
 உயிர்மை, காலச்சுவடு ஆகிய பத்திரிகைகள் அதில் எழுதும் எழுத்தாளர்களிடம் முழு விசுவாசத்தை கோருவதாய் கூறும் ஜெயமோகன் தன் கோடம்பாக்க காட்பாதர் பாலாவிடம் தான் காட்டும் விசுவாசத்தை ஏன் மறைக்கிறார்? சொல்லப் போனால் இலக்கிய, நடுநிலை பத்திரிகைகளில் தான் எழுத்தாளர்கள் தமக்கு வாய்ப்பளித்தவர்களை விமர்சிக்கும் மரபு உள்ளது. அங்கே உயிர்மையை மிக கடுமையாய் விமர்சித்த சாரு நிவேதிதா திரும்ப போய் மீண்டும் கட்டுரை எழுத முடியும். உயிர்மையில் தொடர்ந்து இயங்கும் ஷாஜி காலச்சுவடில் எழுத முடியும். ஒரு காலத்தில் சுகுமாரன் எந்த சிக்கலும் இன்றி இந்த இரு பதிப்பகங்களிலும் எழுதிக் கொண்டிருந்தார். என்னதான் குழு அரசியல் இருந்தாலும் ஒரு கண்காணா ஜனநாயகம் இலக்கிய பத்திரிகைகளில் செயல்படுகிறது.
ஆனால் அது சினிமாவில் இல்லை. சிவாஜியை தொடர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டு ஜெயமோகனால் தமிழ் சினிமாவில் இயங்க முடியுமா? இல்லை. அவர் சிவாஜி குடும்பத்தின் காலில் விழுந்து பாலா மூலம் சமரசம் பண்ணிக் கொள்கிறார். ஜெயமோகன் மணிரத்தினத்தை எதிர்த்து ஒரு வார்த்தை எழுதினால் அவர் மகன் இன்று மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக பணி செய்ய முடியாது. ஜெயமோகன் எப்படி இலக்கிய உலகுக்கும் கோடம்பாக்கத்துக்கும் இருவேறு மதிப்பீடுகளை வைத்துக் கொள்கிறார் என எனக்கு புரியவில்லை.
அதனாலே பாலா தன்னை வெளிப்படையாக கிண்டல் பண்ணினதுக்கு பதில் சொல்லாமல் வாய், காதை மூடிக் கொண்டார். ஆனால் அவரது வீரம், உதார், வீராப்பு எல்லாவற்றையும் பெண் எழுத்தாளர்கள், சிறுபத்திரிகையாளர்கள், சக எழுத்தாளர்கள் என்று காட்டிக் கொண்டிருப்பார். ஏனென்றால் எங்களுக்கு கட்ட பஞ்சாயத்து பண்ண சக்தியில்லை. பண பலமோ ஆள் பலமோ இல்லை. காறித் துப்பலாம், முழங்கையால் இடிக்கலாம். நாங்கள் முடிந்தளவுக்கு திரும்ப கத்துவோம். அவ்வளவு தான் முடியும். ஆனால் கோடம்பாக்கத்தில் நிஜ ரௌடிகள் இருக்கிறார்கள். அங்கே ஜெ.மோ அமைதியாகப் போவார்.
ஜெயமோகன் முதன்முறை இளையராஜாவை பார்க்கப் போன போது பட்டென்று அவர் காலில் விழுந்து வணங்கியதாய் அதைக் கூட இருந்து பார்த்த ஒரு இலக்கிய நண்பர் சொன்னார். இது போல் ஜெயமோகன் சி.சு செல்லப்பா அல்லது சு.ராவின் காலில் விழுந்திருப்பாரா? இல்லை. அவர் இளையராஜாவை இவர்களுக்கு மேலாக நினைக்கிறாரா?
ஒரு மனிதன் இருவேறு முரண்டபட்ட மதிப்பீடுகளை வைத்துக் கொள்ளலாம். அதை வாழ்க்கையிலும் பின்பற்றலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை விமர்சிக்கவும் கிண்டல் பண்ணவும் கூடாது. ஏனென்றால் அப்படியான கராறான வாழ்க்கை நிலைப்பாடு அவருக்கே இல்லை. ஜெயமோகனின் நிலைப்பாட்டை சு.ரா எடுக்கலாம். எஸ்.வீ ராஜதுரை எடுக்கலாம். ஏன் ஜெயகாந்தனும் பொன்னீலனும் கூட எடுக்கலாம். ஆனால் அதற்கான தார்மீக உரிமையை ஜெயமோகன் என்றோ இழந்து விட்டார். இலக்கிய உலகினுள் அவர் பெரிதாய் சமரசம் பண்ணாமல் இருந்திருக்கலாம். ஆனால் சினிமாவுக்காக தனிப்பட்ட முறையில் தன்னை சமரசம் பண்ணி யார் காலிலும் விழத் துணிந்து விட்ட அவருக்கு அடுத்தவர்கள் மீது, அதுவும் எந்த வருமானமும் சன்மானமும் இன்றி ஒரு சின்ன உலகுக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு எழுத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்து வாழும் சக எழுத்தாளன் மீது தன் தார்மீக சாட்டையை சொடுக்க அருகதை இல்லை.

கர்த்தர் சொன்னது போல் விபச்சாரி மீது கல்லெடுத்து அடிக்கும் முன் நீங்கள் ஒரு நொடி உங்களைப் பற்றி யோசியுங்கள்!

Comments

Chitra said…
மிகுந்த வன்மத்தோடும், நிஷ்டூரமாகவும், ஏறத்தாழ சாபமிடுதலைப் போன்ற தொனியுடன் கூடிய கட்டுரை ஜெ வினுடையது. உங்கள் பதில் ஆழமானது. இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம். அவர் எவ்வளவு அடித்தாலும், வலிக்காத மாதிரியே காட்சியளிப்பார்.
ஆமா, மணிரத்தினத்திடம் பயின்று, அவர் மகன் என்ன செய்யப் போகிறார்?


//மணிரத்தினத்திடம் பயின்று, அவர் மகன் என்ன செய்யப் போகிறார்? // இயக்குநராகப் போகிறார்
This comment has been removed by the author.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...