முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீனியர் எழுத்தாளர்களும் விசித்திர தந்தை உளவியலும்


தொடர்ந்து எழுதுகிறவர்களை யாரும் புரமோட் செய்ய வேண்டியதில்லை. அவர்களாகவே மேலே வந்து விடுவார்கள். ஆனால் எழுத்தில் விருப்பம் இல்லாதவர்களை சீனியர் எழுத்தாளர்கள் புகழ்ந்து முன்னெடுத்தபடியே இருப்பார்கள். அவர்களும் ஒரே வருடத்தில் எழுதுவதை விட்டு மாயமாகி விடுவார்கள். இதை நான் என் ஞான திருஷ்டியால் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட இளம் எழுத்தாளர்களின் சிறு பட்டியலை எடுத்து பார்த்தால் யாருக்கும் புரியும். தமிழில் இந்த விசித்திரத்துக்கு முன்னுதாரணங்கள் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பே கா.ந.சு இது போல் சில எழுத தெரியாதவர்களை அடுத்த தலைமுறையின் சாதனை எழுத்தாளன் என பாராட்டி தள்ளி இருக்கிறார். அவர்களின் பெயரைப் இன்று பார்த்தால் யாரென்றே உங்களுக்கு தெரியாது. ஏன் திறமையும் எழுதும் வெறியும் இல்லாதவர்களை க.நா.சுவில் இருந்து இன்றுள்ளவர்கள் வரை புரமோட செய்ய வேண்டும்? இது ஒரு நிலப்பிரபுத்துவ ஆண்மைய குடும்ப மனநிலையில் இருந்து தோன்றும் விசித்திரம். நிலப்பிரபுத்துவ குடும்பங்களில் பொதுவாக அப்பாவுக்கு திறமை குறைந்த வேலையே செய்யாத உதவாக்கரை பையனையே பிடிக்கும்.

 விவிலியத்தின் Prodigal Son கதை இந்த உளவியலைத் தான் பேசுகிறது. பூஞையான பிள்ளை மீது அப்பாவுக்கு பிரியமும் வலுவான பிள்ளை மீது பொறாமையும் மென்மையான வெறுப்பும் ஏற்படுகிறது. விவிலியத்தில் ஆரம்பித்து இன்று வரை பல குடும்பங்களில் இதைப் பார்க்கலாம்.  சமகாலத்தில் கலைஞர்-அழகிரி உறவை உதாரணமாய் சொல்லலாம். கலைஞருக்கு ஸ்டாலின் மீது பொறாமையும் அழகிரி மீது பிரியமும் இருக்கும். நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டருக்கான ஒரு பாராட்டு நிகழ்வின் போது பிரபுதேவாவிடம் உங்க அப்பாவுக்கு மகன்களில் யாரை பிடிக்கும் என்று கேட்டார்கள். பிரபுதேவா அதற்கு தன்னையோ அண்ணன் ராஜுவையோ விட தம்பி நாகேந்திர பிரசாத்தை தான் அப்பாவுக்கு அதிகம் பிடிக்கும் என்றார். நாகேந்திர பிரசாத் தான் சகோதரர்களில் வெற்றி பெறாதவர். இதை விளக்கவே முடியாது. தந்தையின் உளவியல் அப்படித் தான்.

நம் சீனியர் எழுத்தாளர்கள் இயல்பிலேயே நிலப்பிரபுத்துவ சூழலின் நீட்சி. ஒரு தந்தையை போலத் தான் அவர்கள் இளைய எழுத்தாளர்களை நோக்குகிறார்கள். அடுத்த தலைமுறையினர் சீனியர்களாகும் போது நிலைமை நேர்கீழாக இருக்கும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று இவ்வாறு கூறியுள்ளார்…
சுஜாதாவின் மாஞ்சு என்ற சிறுகதையில் இந்த உளவியலை காண முடியும். ஆனால் அதில் அப்பாவுக்கு பதிலாக அம்மா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...