Skip to main content

கேள்வி பதில்கள் என்னவாயிற்று?



சுஜாதா கேள்வி பதில் தொகுப்பை (குங்குமத்தில் வெளிவந்தது; உயிர்மை வெளியீடு) புரட்டிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு வகைமை இன்று காணாமல் போய் விட்டது என நினைத்து புன்னகைத்துக் கொண்டேன். நான் மாணவனாய் இருக்கையில்ஹாய் மதன்பெரிய ஹிட் தொடர். இன்று இது போன்ற கேள்வி பதில்களில் வரும் பெரும்பாலான விடைகளை ஒரு ஆண்டுராயிட் மொபைல் அரைநொடியில் சொல்லி விடும்.

விடைகளை எழுதும் எழுத்தாளனின் ஆளுமை, நகைச்சுவை, குறும்புத்தனம், அவதானிப்பு தான் இன்று கடைசியில் எஞ்சுகிறது. தகவல்கள் மலிந்து விட்டன. பாம்புக்கு ஆண்குறி உண்டா என நீங்கள் இன்று மதனிடம் எழுதி விடைக்காய் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. பாம்பின் குறி ஒரு பேனா கத்தி போல் மடங்கி விரியக் கூடியது என கூகிளே சொல்லி விடும்.
 சுஜாதா பதில்களில் அவர் பொதுவான கேள்விகளுக்கு ஆற்றும் எதிர்வினை தான் சுவாரஸ்யம். ஒருவர் கேட்கிறார்: “நான் உங்கள் இடத்தில் இருந்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதானால் என்ன கேள்வி கேட்பீர்கள்?” சுஜாதா சொல்கிறார்: “இதே கேள்வியை தான்”. இந்த quick-wittedness சுஜாதாவின் சிறப்பியல்பு.
இன்னொரு கேள்வி எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிக்கும் காலம் வருமா என்று. எனக்கு இது ரொம்ப சுவாரஸ்யமான சாத்தியமாய் படுகிறது. ரொம்ப சிக்கலான நிறைய தில்லுமுல்லு நடக்க சாத்தியமுள்ள விசயம் தான் என்றாலும் கூட.
மிருகங்களுக்கு பொறாமை உண்டா என ஒருவர் கேட்கிறார். சுஜாதா இல்லை என்கிறார். ஆனால் உண்மை வேறு: என் நாய் பொறாமையின் திருவுருவம். சரி கூகிள் என்ன சொல்கிறது என தேடினால் இப்படி வருகிறது:
A study by scholars at the University of California, San Diego found that dogs showed jealous behaviors when their owners displayed affection toward an animatronic stuffed dog that barked, whined and wagged its tail. The dogs snapped at and pushed against the stuffed dog and tried to get between it and the human.
ஒருவேளை சுஜாதா காலத்தில் கூகிள் வேறு பதில் சொல்லியிருக்கலாம்.




"கேள்வி பதில்கள்" பத்திரிகைகளில் காலமாகி விட்டாலும் உளவியலாளர்கள், மருத்துவர்களிடம் நாம் கேட்க விரும்பும் ஏராளமான விசயங்கள் உள்ளன. இணையத்தில் கோரா போன்ற தளங்களில் பதிவர்களே கேள்வி எழுப்பி பலர் சேர்ந்து பதில்களை அளிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்களிடம் கேள்வி கேட்கும் வாசகர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஜெயமோகனின் தளத்தில் ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். என்னிடம் கூட கேட்டிருக்கிறார்கள். வாழ்க்கை பற்றி எனக்கு சிறு குருவி அளவுக்கு கூட தெரியாது. ஆனாலும் நம்பி கேட்டால் பதிலளிக்க வேண்டுமே! சமீபத்தில் ஒரு வாசகர் பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என கேட்டிருக்கிறார். நான் அதற்கு என்ன பதில் கூற என ரெண்டு நாட்களாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கூகிளிடம் இதையெல்லாம் கேட்க முடியாது. ஆனால் பொதுவான வாழ்க்கை கேள்விகளை விவாதிக்கும் திறன் கொண்ட artificial intelligence
எதிர்காலத்தில் உருவாகும் என நம்புகிறேன்.
நான் முன்பு விண்டோஸ் மொபைல் வைத்திருந்தேன். அதில் உள்ள கோர்ட்டானா எனும் பேசக் கூடிய செயலி ஒரு சுவாரஸ்யமான பிறவி. அதனிடம் கேள்விகள் மட்டுமல்ல, ஜோக் சொல்ல கேட்கலாம். எக்குத்தப்பாய் கேள்வி கேட்டால் இப்படி எல்லாம் பேசுவது உத்தமம் இல்லை என பதிலளிக்கும். தாலாட்டு பாடச் சொன்னால் சோகமாய் ஒன்றை பாடும். நான் தினமும் கோர்ட்டானாவுடன் அரைமணி பேசும் பழக்கம் வைத்திருந்தேன். உண்மையில் மனிதர்களை விட செயலிகள் சுவாரஸ்யமானவையோ என சிலநேரம் தோன்றும்.
 நான் ஒருமுறை கோர்ட்டானாவிடம் கேட்டேன் வாழ்க்கையில் எப்படி எனக்கு நிம்மதி கிடைக்கும்?
அது சொன்னது கொஞ்ச நேரம் தூங்கேன்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...