முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவும் வி.முவும்


இம்மாத உயிர்மையில் இரண்டு கட்டுரைகள் வெகுவாய் கவர்ந்தன. ஒன்று சாருவின் “கபாலி” விமர்சனம். இரவு பன்னிரெண்டுக்கு தான் இதழை திறந்து புரட்டினேன். திடீரென நான் வீடே அதிர சிரிப்பதை பார்த்து என் மனைவி ஓடி வந்தாள். “சத்தமா சிரிக்காதே, குழந்தை தூங்குது” என்று அதட்டினாள். ஆனால் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை. சாரு அப்படி அதகளம் பண்ணி இருந்தார். பகடி செய்வதில் அவர் மன்னன். சாரு ஒரு காலத்தில் இது போல் உயிர்மையில் சினிமா கட்டுரைகள் எழுதி கலக்கிக் கொண்டிருந்தார். பிறகு அவர் சற்று காலம் எழுதாமல் போனது உயிர்மைக்கு இழப்பு தான் என நேற்று அக்கட்டுரை படித்த போது தோன்றியது.

 இன்று பேஸ்புக்கில் இவ்வளவு துணிச்சலாய் செருப்பை கழற்றி அடிக்கும் நம்மைப் போன்றவர்களுக்கே சில புனித பசுக்களை கண்டால் வாலை சுருட்டி ஒதுங்கத் தோன்றும். ஆனால் சாருவுக்கு எந்த தயக்கமும் இல்லை. கபாலியை கேலி பண்ணினால் சாதி வெறியன், பிற்போக்குவாதி என்று துடைப்பத்தால் அடிப்பார்களே என்கிற கவலையில்லை. ராஜா நிர்வாண ஆடையணிந்து ஊர்வலம் வர மக்கள் வாய் மூடி தவித்திருக்க ஒரே ஒரு சின்ன பையன் உண்மையை கூவுவானே, அந்த பையனின் களங்கமற்ற துணிச்சல், மனதுக்கும் மொழிக்குமான தடையற்ற பாய்ச்சல் போன்ற எழுத்து, மிக மிக இயல்பான நகைச்சுவை ஆகியவை சாருவின் எழுத்தில் நான் கொண்டாடும் விசயங்கள்.

இன்னொரு கட்டுரை விநாயக முருகனுடையது. டிரெண்டிங்கின் பின்னுள்ள திட்டமிடல், அது இணையத்தில் வேலை செய்யும் முறை என நிறைய படித்தும் கவனித்தும் தெரிந்து கொண்டு எழுதி இருக்கிறார். இது அவர் வழக்கமாய் எழுதும் அனுபவக் கட்டுரை அல்ல. பழக்கத்தை மீறி மற்றொன்றை செய்து பார்ப்பது தானே எழுத்தில் உள்ள பிரதான சாகச உணர்வு. அதனாலே இக்கட்டுரை வி.முவின் உரைநடையில் ஒரு முக்கிய பாய்ச்சல் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...