Skip to main content

நிரப்ப முடியாத ஒன்று

Image result for சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் நல்ல கவிதைகள் போல. படிக்க படிக்க புது புது அர்த்தங்கள், நுணுக்கங்கள் புலப்படும். அவரது பெரும்பாலான கதைகளில் நீண்ட விவரணைகள் இருக்கும், மனவோட்டங்கள் சரம் சரமாய் வரும். எதிர்பாராத திருப்பம், நாடகீய தருணங்கள், உணர்ச்சி மோதல்கள், நெகிழ்வான முடிவுகள் இராது. நம்முடைய பெரும்பாலான சிறுகதைகள் இரண்டாம் வகையே. ஆனால் சு.ரா கதையை நவீன கவிதையின் இலக்கணப்படி கதையை எழுதியவர். அது என்ன?


கவிதையில் – அதாவது நவீன கவிதையில் – வடிவம் முக்கியம். அறையறையாக கட்டப்பட்ட வீடு போல் அது இருக்கும். ஒவ்வொரு சிறு வரி, பத்தி, கேள்வி, அவதானிப்பு, விவரணை, உவமை, உருவகம் எல்லாம் சேர்ந்து தலைப்பின்னல் போல் ஒட்டுமொத்தமாய் ஒரு வடிவம் எடுக்கும். கவிதையின் பிரதானமான கண்டுபிடிப்பு அல்லது திறப்புக்கு இந்த ஒவ்வொரு அங்கமும் உதவும். எதையும் தனியே பிரித்து எடுக்க முடியாது. ஒரு ஜன்னலை, கதவை மூட முடியாது. ஒரு மேஜையை நகர்த்தி இன்னொரு இடத்தில் வைக்க முடியாது. இந்த கட்டுக்கோப்பு, ஒவ்வொரு பொருளுக்குமான அர்த்தம் சு.ராவின் கதைகளில் இருக்கும். ரொம்ப சாதாரண ஒரு அன்றாட வாழ்க்கை நிகழ்வை அவர் பேசுவது போல் இருக்கும். இந்த கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது என படித்து முடிக்கையில் தோன்றும். ஆனால் கிளைமேக்ஸை படித்த பின் அதற்கு முன் வரும் காட்சிகள், விவரணைகள், கிண்டல் கேலி பகடி மற்றும் தலைப்புடன் இணைத்தால் கதையின் மொத்த உலகமும் புலப்பட்டு விடும்.
“பள்ளம்” சு.ராவின் அதிகம் பேசப்படாத கதை. ஆனால் அவரது சிறந்த கதைகளில் ஒன்று அது. இக்கதையிலும் வழக்கம் போல் மகனை உளவியல் ரீதியில் ஒடுக்கி வதைக்கும் ஒரு ஒழுக்கசாலீயான அப்பா வருகிறார். இலக்கியத்திலும் பகல் கனவுகளிலும் தோய விரும்பும், வேண்டாவெறுப்பாய் வேலை செய்ய நேரும் மகனும் வருகிறான். அப்பா ஒரு விடுமுறை நாள் அன்று மகனை தனது ஜவுளிக் கடையில் ஒரு வேலையை முடித்து வர அனுப்புகிறார். மகன் உள்ளுக்குள் அலுத்துக் கொள்கிறான். ஆனாலும் மறுக்க முடியாமல் கிளம்புகிறான். அவன் அப்பா எப்போதும் முடுக்கி விட்ட கடிகாரம் போல் ஒரே கதியான வாழ்க்கை வாழ்பவர். பையன் அப்பாவில் இருந்து தன்னை ஒவ்வொன்றிலும் வித்தியாசப்படுத்திக் கொள்பவன். அவன் ஒழுங்கின்மையை சிலாகிக்கிறான். அன்று அவன் வழக்கமான வழியை விடுத்து சந்து பொந்துகள் வழி பயணிக்கிறான். சேரிகளில் வசிக்கும் பலவித மக்களை பார்க்கிறான். சின்ன வயதில் இருந்தே கவனித்து வரும் வேசிகள், அபின் வாங்க ஒரு சிதிலமான கட்டிட வாயிலில் காத்திருக்கும் முதிய மக்கள் பலரை வேடிக்கை பார்க்கிறான். அன்று வார இறுதி ஆகையால் திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாகி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பப் பெண்கள் இடுப்பில் குழந்தைகளை தொத்திக் கொண்டு ஆவேசமாய் திரையரங்குக்கு விரைகிறார்கள்.
அன்று ஜவுளிக்கடையில் அவன் புதிதாய் வந்திருக்கும் துணிக்கட்டை உடைத்து கணக்கு சரி பார்த்து அதில் விலைப்பட்டி தைக்க வேண்டும். அவ்வேலையில் உதவுவதற்கு வேலையாளான மதுக்குஞ்சு வந்து காத்திருக்கிறான். மதுக்குஞ்சு சற்று முன்னரே வந்து விட்டான். அவன் அருகில் உள்ள சந்தில் ஒட்டப்பட்டுள்ள கவர்ச்சி வழியும் சினிமா சுவரொட்டிகளில் மனம் லயித்து நிற்கிறான். பையனைக் கண்டதும் அவன் ஓடி வருகிறான். இருவருமாய் வேலையை முடிக்கிறார்கள். பையனுக்கு அப்போது அப்பா அவனிடன் மதுக்குஞ்சு பற்றி சொன்ன ஒரு விசித்திரமான சேதி நினைவுக்கு வருகிறது. மதுக்குஞ்சுக்கு ஒரு கண் இல்லை. அங்கு அவன் அம்மாவின் கண் பொருத்தப்பட்டிருக்கிறது.
 இது எப்படி நடந்தது என அவன் விசாரிக்கிறான். மதுக்குஞ்சு குழந்தையாய் இருக்கையில் ஆற்று மணலில் அமர்ந்திருக்கும் அம்மாவின் மடியில் படுத்தபடி சினிமா பார்க்கிறான். கையில் கூழாங்கற்களை எடுப்பதும் போடுவதுமாய் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா எதேச்சையாய் கல்லுக்கு பதிலாய் அவன் கண்ணொன்றை நோண்டி எடுத்து விடுகிறாள். ஐயோ பிறகு என்னாச்சு?
 ஒன்றுமில்லை. அவன் அம்மா விரைவில் தற்கொலை பண்ண மருத்துவர்கள் அவன் அம்மாவின் கண்ணை அவனுக்கு பொருத்தி விடுகிறார்கள். இதெல்லாம் நடந்ததாய் அவனுக்கு நினைவில்லை. அவன் ஊர்க்காரர்கள் பலவிதமாய் சொன்ன கதைகளை அவன் இவ்வாறாய் தொகுத்து புரிந்து வைத்திருக்கிறான்.
ஆனாலும் அந்த கண்ணில் பார்வை இல்லை. அது வெறும் பள்ளம் தான் என மதுக்குஞ்சு சொல்கிறான். தலைப்பு இங்கிருந்து தான் வருகிறது.
மதுக்குஞ்சுக்கு ஒரு கண் சொந்தமில்லை. அங்கு கண் இருக்கிறது. ஆனாலும் அது இல்லாத மாதிரி தான். அவனால் என்றுமே நிரப்ப முடியாத பள்ளம் அது. அது கண்ணின் பள்ளம் மட்டுமல்ல, அவன் அம்மா இல்லாத ஏக்கத்தின் பள்ளமும் தான். வாழ்க்கை ஏற்படுத்திய வடுவின் பள்ளமும் தான்.
அந்த கதையில் வரும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போல் ஒரு பள்ளம் உள்ளது. அப்பா என்ன தான் கராறான வெற்றிகரமான குடும்ப நாதன் என்றாலும் அவர் சில நாட்கள் மனம் பொறுக்க முடியாமல் கொந்தளித்தபடி தன் அறையை நாடி வந்து அமர்கிறார். அங்கு இருக்கும் போது தான் அவருக்கு நிம்மதி கிடைக்கிறது. அவருக்குள் இருக்கும் ”பள்ளத்தை” அவர் அங்கு கிடைக்கும் ஆறுதலால் நிரப்ப முயல்கிறார்.
கதைசொல்லியான பையனின் வாழ்க்கையில் விரும்பின எதையும் பண்ண முடியாத, எதை உண்மையில் விரும்புகிறோம் என அறிய முடியாத அடையாளமின்மையின் ”பள்ளம்” உள்ளது. இளமையில் தழைத்த உடல் சுருங்கி தளர்ந்த வேசிகளுக்கு அந்த உடல் ஒரு பள்ளம். அபினுக்காய் ஏங்கும் முதியவர்களுக்கு போதை ஒரு பள்ளம். வார இறுதி கொட்டகை சினிமா கனவில் விழ ஏங்கும் குடும்ப பெண்களுக்கு அலுப்பு ஒரு பள்ளம். ஒவ்வொருவரின் வாழ்விலும் காலம் அகலமான ஒரு பள்ளமாய் இருக்கிறது. அதில் மணலை அள்ளிப் போட, குழாங்கற்களை இட்டு நிரப்ப, எதேச்சையாய் மனக்கொந்தளிப்பில் ஒரு குழந்தையின் கண்ணை பிடுங்கி போட நேர்கிறது.

வாழ்க்கையின் நிரப்ப முடியாத ஒன்றை பற்றின இந்த கதை அபாரமான விரிவை கொண்டது. ஒரு நாளின் காலைப் பொழுதின் சில மணிநேரங்களில் நடந்து முடிவதால் கதை சுலபத்தில் ஒரு புள்ளியில் வந்து ஒடுங்குகிறது. ஆனாலும் ஊத ஊத பலூன் போல் விரிந்து கொண்டே போகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...