Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நிரப்ப முடியாத ஒன்று

Image result for சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் நல்ல கவிதைகள் போல. படிக்க படிக்க புது புது அர்த்தங்கள், நுணுக்கங்கள் புலப்படும். அவரது பெரும்பாலான கதைகளில் நீண்ட விவரணைகள் இருக்கும், மனவோட்டங்கள் சரம் சரமாய் வரும். எதிர்பாராத திருப்பம், நாடகீய தருணங்கள், உணர்ச்சி மோதல்கள், நெகிழ்வான முடிவுகள் இராது. நம்முடைய பெரும்பாலான சிறுகதைகள் இரண்டாம் வகையே. ஆனால் சு.ரா கதையை நவீன கவிதையின் இலக்கணப்படி கதையை எழுதியவர். அது என்ன?


கவிதையில் – அதாவது நவீன கவிதையில் – வடிவம் முக்கியம். அறையறையாக கட்டப்பட்ட வீடு போல் அது இருக்கும். ஒவ்வொரு சிறு வரி, பத்தி, கேள்வி, அவதானிப்பு, விவரணை, உவமை, உருவகம் எல்லாம் சேர்ந்து தலைப்பின்னல் போல் ஒட்டுமொத்தமாய் ஒரு வடிவம் எடுக்கும். கவிதையின் பிரதானமான கண்டுபிடிப்பு அல்லது திறப்புக்கு இந்த ஒவ்வொரு அங்கமும் உதவும். எதையும் தனியே பிரித்து எடுக்க முடியாது. ஒரு ஜன்னலை, கதவை மூட முடியாது. ஒரு மேஜையை நகர்த்தி இன்னொரு இடத்தில் வைக்க முடியாது. இந்த கட்டுக்கோப்பு, ஒவ்வொரு பொருளுக்குமான அர்த்தம் சு.ராவின் கதைகளில் இருக்கும். ரொம்ப சாதாரண ஒரு அன்றாட வாழ்க்கை நிகழ்வை அவர் பேசுவது போல் இருக்கும். இந்த கதையில் அப்படி என்ன தான் இருக்கிறது என படித்து முடிக்கையில் தோன்றும். ஆனால் கிளைமேக்ஸை படித்த பின் அதற்கு முன் வரும் காட்சிகள், விவரணைகள், கிண்டல் கேலி பகடி மற்றும் தலைப்புடன் இணைத்தால் கதையின் மொத்த உலகமும் புலப்பட்டு விடும்.
“பள்ளம்” சு.ராவின் அதிகம் பேசப்படாத கதை. ஆனால் அவரது சிறந்த கதைகளில் ஒன்று அது. இக்கதையிலும் வழக்கம் போல் மகனை உளவியல் ரீதியில் ஒடுக்கி வதைக்கும் ஒரு ஒழுக்கசாலீயான அப்பா வருகிறார். இலக்கியத்திலும் பகல் கனவுகளிலும் தோய விரும்பும், வேண்டாவெறுப்பாய் வேலை செய்ய நேரும் மகனும் வருகிறான். அப்பா ஒரு விடுமுறை நாள் அன்று மகனை தனது ஜவுளிக் கடையில் ஒரு வேலையை முடித்து வர அனுப்புகிறார். மகன் உள்ளுக்குள் அலுத்துக் கொள்கிறான். ஆனாலும் மறுக்க முடியாமல் கிளம்புகிறான். அவன் அப்பா எப்போதும் முடுக்கி விட்ட கடிகாரம் போல் ஒரே கதியான வாழ்க்கை வாழ்பவர். பையன் அப்பாவில் இருந்து தன்னை ஒவ்வொன்றிலும் வித்தியாசப்படுத்திக் கொள்பவன். அவன் ஒழுங்கின்மையை சிலாகிக்கிறான். அன்று அவன் வழக்கமான வழியை விடுத்து சந்து பொந்துகள் வழி பயணிக்கிறான். சேரிகளில் வசிக்கும் பலவித மக்களை பார்க்கிறான். சின்ன வயதில் இருந்தே கவனித்து வரும் வேசிகள், அபின் வாங்க ஒரு சிதிலமான கட்டிட வாயிலில் காத்திருக்கும் முதிய மக்கள் பலரை வேடிக்கை பார்க்கிறான். அன்று வார இறுதி ஆகையால் திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாகி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பப் பெண்கள் இடுப்பில் குழந்தைகளை தொத்திக் கொண்டு ஆவேசமாய் திரையரங்குக்கு விரைகிறார்கள்.
அன்று ஜவுளிக்கடையில் அவன் புதிதாய் வந்திருக்கும் துணிக்கட்டை உடைத்து கணக்கு சரி பார்த்து அதில் விலைப்பட்டி தைக்க வேண்டும். அவ்வேலையில் உதவுவதற்கு வேலையாளான மதுக்குஞ்சு வந்து காத்திருக்கிறான். மதுக்குஞ்சு சற்று முன்னரே வந்து விட்டான். அவன் அருகில் உள்ள சந்தில் ஒட்டப்பட்டுள்ள கவர்ச்சி வழியும் சினிமா சுவரொட்டிகளில் மனம் லயித்து நிற்கிறான். பையனைக் கண்டதும் அவன் ஓடி வருகிறான். இருவருமாய் வேலையை முடிக்கிறார்கள். பையனுக்கு அப்போது அப்பா அவனிடன் மதுக்குஞ்சு பற்றி சொன்ன ஒரு விசித்திரமான சேதி நினைவுக்கு வருகிறது. மதுக்குஞ்சுக்கு ஒரு கண் இல்லை. அங்கு அவன் அம்மாவின் கண் பொருத்தப்பட்டிருக்கிறது.
 இது எப்படி நடந்தது என அவன் விசாரிக்கிறான். மதுக்குஞ்சு குழந்தையாய் இருக்கையில் ஆற்று மணலில் அமர்ந்திருக்கும் அம்மாவின் மடியில் படுத்தபடி சினிமா பார்க்கிறான். கையில் கூழாங்கற்களை எடுப்பதும் போடுவதுமாய் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா எதேச்சையாய் கல்லுக்கு பதிலாய் அவன் கண்ணொன்றை நோண்டி எடுத்து விடுகிறாள். ஐயோ பிறகு என்னாச்சு?
 ஒன்றுமில்லை. அவன் அம்மா விரைவில் தற்கொலை பண்ண மருத்துவர்கள் அவன் அம்மாவின் கண்ணை அவனுக்கு பொருத்தி விடுகிறார்கள். இதெல்லாம் நடந்ததாய் அவனுக்கு நினைவில்லை. அவன் ஊர்க்காரர்கள் பலவிதமாய் சொன்ன கதைகளை அவன் இவ்வாறாய் தொகுத்து புரிந்து வைத்திருக்கிறான்.
ஆனாலும் அந்த கண்ணில் பார்வை இல்லை. அது வெறும் பள்ளம் தான் என மதுக்குஞ்சு சொல்கிறான். தலைப்பு இங்கிருந்து தான் வருகிறது.
மதுக்குஞ்சுக்கு ஒரு கண் சொந்தமில்லை. அங்கு கண் இருக்கிறது. ஆனாலும் அது இல்லாத மாதிரி தான். அவனால் என்றுமே நிரப்ப முடியாத பள்ளம் அது. அது கண்ணின் பள்ளம் மட்டுமல்ல, அவன் அம்மா இல்லாத ஏக்கத்தின் பள்ளமும் தான். வாழ்க்கை ஏற்படுத்திய வடுவின் பள்ளமும் தான்.
அந்த கதையில் வரும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போல் ஒரு பள்ளம் உள்ளது. அப்பா என்ன தான் கராறான வெற்றிகரமான குடும்ப நாதன் என்றாலும் அவர் சில நாட்கள் மனம் பொறுக்க முடியாமல் கொந்தளித்தபடி தன் அறையை நாடி வந்து அமர்கிறார். அங்கு இருக்கும் போது தான் அவருக்கு நிம்மதி கிடைக்கிறது. அவருக்குள் இருக்கும் ”பள்ளத்தை” அவர் அங்கு கிடைக்கும் ஆறுதலால் நிரப்ப முயல்கிறார்.
கதைசொல்லியான பையனின் வாழ்க்கையில் விரும்பின எதையும் பண்ண முடியாத, எதை உண்மையில் விரும்புகிறோம் என அறிய முடியாத அடையாளமின்மையின் ”பள்ளம்” உள்ளது. இளமையில் தழைத்த உடல் சுருங்கி தளர்ந்த வேசிகளுக்கு அந்த உடல் ஒரு பள்ளம். அபினுக்காய் ஏங்கும் முதியவர்களுக்கு போதை ஒரு பள்ளம். வார இறுதி கொட்டகை சினிமா கனவில் விழ ஏங்கும் குடும்ப பெண்களுக்கு அலுப்பு ஒரு பள்ளம். ஒவ்வொருவரின் வாழ்விலும் காலம் அகலமான ஒரு பள்ளமாய் இருக்கிறது. அதில் மணலை அள்ளிப் போட, குழாங்கற்களை இட்டு நிரப்ப, எதேச்சையாய் மனக்கொந்தளிப்பில் ஒரு குழந்தையின் கண்ணை பிடுங்கி போட நேர்கிறது.

வாழ்க்கையின் நிரப்ப முடியாத ஒன்றை பற்றின இந்த கதை அபாரமான விரிவை கொண்டது. ஒரு நாளின் காலைப் பொழுதின் சில மணிநேரங்களில் நடந்து முடிவதால் கதை சுலபத்தில் ஒரு புள்ளியில் வந்து ஒடுங்குகிறது. ஆனாலும் ஊத ஊத பலூன் போல் விரிந்து கொண்டே போகிறது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...