முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறில் இருந்து அறுபது வரை

நான் இரவு வீட்டுக்கு திரும்பும் போது என் குடியிருப்பில் உள்ள மற்றொருவரும் கூட வருகிறார். அவரது வீடு முதல் மாடியில். நான் அவரை கடந்து தான் மூன்றாவது மாடிக்கு செல்ல வேண்டும். இன்று நான் மாடிப்படிகள் ஏறும் போது அவர் தன் வீட்டு வாசலை அடைந்து சிறுகுழந்தையான தன் மகனுக்கு குரல் கொடுப்பது கேட்டது. அவரது மகன் அப்பா என்று கூவியபடி ஓடி வருவதும் கேட்டது. அடுத்து பையன் அப்பாவிடம் ”நீ எனக்கு என்ன வாங்கி வந்தே?” என திரும்ப திரும்ப கேட்கிறான். இதை அடுத்து வீட்டில் உள்ளோரிடம் அப்பா தனக்கு முறுக்கு கொண்டு வந்துள்ளதை அறிவிக்கிறான். ஆனால் முறுக்கை அவன் அப்பாவிடம் தரக் கேட்கவில்லை. வாங்கி வந்த மகிழ்ச்சியே அவனை துள்ள வைக்கிறது. அவன் அவசரமாய் அப்பாவிடம் தனது அன்றைய நாளின் முக்கியமான அனுபவங்களை பகிர ஆவேசப்படுகிறான். கொய்யா மரத்தில் அணில் ஒன்றை பார்த்தது பற்றி சத்தமாய் தெரிவிக்கிறான். திரும்ப திரும்ப அணிலின் செயல்களை வர்ணிக்க முயன்று திணறுகிறான்.

எனக்கு அப்பையனின் நடவடிக்கைகள் ஒரு விசயத்தை புரிய வைத்தன. வளர்ந்த பின்னும் மனிதர்கள் தம்மை யாராவது சந்திக்க வரும் போது இந்த இரண்டு காரியங்களை தான் செய்கிறார்கள். ஒன்று, “நீ எனக்கு என்ன கொண்டு வந்துள்ளாய்?” என கேட்கிறார்கள். இது உணவுப்பொருள், மது, பரிசுப்பொருள், பணம், ஒரு நல்ல அனுபவம், சுவையான கதை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெறுங்கையுடன் வரும் நண்பர் கூட நம்மிடம் ஏதோ சில ஆர்வமூட்டும் சொற்களை பகிர வேண்டும் என முதலில் எதிர்பார்க்கிறோம். அந்த நண்பரை வெளியே சந்தித்தால் அவர் நம்மை ஒரு புது இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும், ஒரு இனிய புது நபரை அறிமுகப்படுத்த வேண்டும், சுவையான வித்தியாசமான உணவகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என கோருகிறோம். இதையெல்லாம் நண்பர் செய்யாவிட்டாலும் நமக்கே தெரியாமல் எதிர்பார்க்கிறோம். இதில் ஏதாவது ஒன்றை செய்யும் நண்பரை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இதை செய்யத் தெரிந்தவர்கள் உற்சாகமான நட்பு வட்டம் கொண்ட பிரபலமான பலரும் விரும்பும் நபராக இருப்பார்.


எனக்கு இதை சொல்லும் போது நண்பர் மனுஷ்யபுத்திரன் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பற்றி கூறியது நினைவு வருகிறது. அவர் முதலில் குமரகுருபரனை சந்திப்பது மழைவெள்ளத்தின் போது தான். குருபரன் அப்போது மனுஷுக்காக கொஞ்சம் உணவுடன் ஒரு ஆட்டோவில் அவரை தேடி வருகிறார். “நீங்கள் தனியாய் சிரமப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேன். அது தான் வந்தேன்” என்கிறார். அது போல் குருபரன் தன்னை பார்க்க வரும் போது ”உங்களுக்காக தேடி வாங்கி வந்தேன்” என வித்தியாசமாய் ஏதாவது ஒரு பரிசுப்பொருளை கொண்டு வரும் வழக்கம் வைத்திருந்ததாய் சொன்னார். அந்த பொருட்கள் முக்கியமில்லை. ஆனால் ஒருவர் நமக்காய் அக்கறையுடன் ஒன்றை கொண்டு வருகிறார் எனும் உணர்வு தரும் அணுக்கம் மிக ஆழமானது.
நீங்கள் உங்கள் நண்பர்களுடனான மறக்க முடியாத நினைவுகள் ஏதாவது ஒரு அனுபவத்தை, உணவை, மதுவை, சுவையான சம்பவங்களை பகிர்ந்ததாகவே இருக்கும்.

நான் முதலில் சொன்ன குழந்தைக்கு வெளியே செல்ல முடியாது. அதற்கு பரிசு கொண்டு வரும் ஒரே வெளியுலக பிரதிநிதி அப்பா தான். ஆனால் வளர்ந்து நாம் வெளியே செல்ல துவங்கிய பின்னரும் அது போல் ஒரு அப்பாவை நம் நண்பர்களிடம் எதிர்பார்க்கிறோம்.

இரண்டாவதாய் ஒருவர் நமக்காக ஏதோ ஒரு தனிச்சிறப்பான பரிசு கொண்டு வந்ததாய் அறிந்ததும் நாம் மடை திறந்தது போல் நம் அன்றைய நினைவுகளை, அனுபவங்களை, உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். நம் பேச்சை அப்படி தொந்தரவின்றி ஆர்வமாய் கேட்பவர்களை நாம் உள்ளார நேசிக்கிறோம்.

ஊரில் எனக்கு ஒரு பாட்டி இருக்கிறார். அவரால் நடக்க முடியாது. நிறைய உடல் உபாதைகள். ஒரு அறையில் அடைந்து கிடப்பார். அவரைப் பார்க்க என் அம்மா செல்லும் போது நான் வாங்கி அளித்ததாய் சொல்லி ஏதாவது ஒரு தின்பண்டத்தை தன் காசில் வாங்கி கொடுப்பார். அது போக தான் வாங்கி கொணர்ந்ததாய் சொல்லி ஏதாவது துணி மணியும் கொடுப்பார். இவற்றையெல்லாம் கையில் வாங்கியதும் பாட்டி பூரித்து போய் விடுவார். அடுத்து அரைமணி நேரம் தனக்கு கை கால் உளைச்சல் எடுக்கிறது, தன்னை யாரும் சரிவர கவனிப்பது இல்லை என புலம்புவார். அதை என் அம்மா மறுக்காமல் கேட்டிருந்து விட்டு திரும்ப வருவார். அந்த மகிழ்ச்சி பாட்டிக்கு ஆறு மாதங்களுக்கு போதும்.


மனிதன் பிறந்ததில் இருந்து கடைசி வரை மாறுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...