முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக”


இம்மாத உயிர்மையில் வெளிவந்துள்ள “ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக” எனும் மனுஷ்யபுத்திரன் கவிதை நீண்ட நேரம் என் நினைவில் இருந்து நீங்க மறுத்தது. அதில் ஒரு இளம் பெண் சூப்பர் மார்க்கெட்டில் நீண்ட நேரமாய் அவஸ்தையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஆணுறை ஒன்று வாங்க வேண்டும். ஆனால் யார் கண்ணிலும் படாமல் வாங்க வேண்டும். விலைப்பட்டியல் போடும் போது அது தனியாய் தெரியக் கூடாது என தேவையற்ற சில பொருட்களையும் சேர்த்து வாங்குகிறாள். அவளுக்கு ஒரு ஜோடி அரவணைத்து நிற்கும் படம் கொண்ட ஆணுறை பாக்கெட் வாங்க ஆசை. ஆனால் கூச்சப்பட்டு படம் இல்லாத பாக்கெட் ஒன்றை தேர்வு செய்கிறாள். அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக விலை போடும் பெண் ஆணுறை பாக்கெட்டை வேறு எல்லா பொருட்களையும் போன்று அக்கறையின்றி கையாள்கிறாள். அவள் கையில் பொருட்களின் பையுடன் அபரிதமான சுதந்திரத்துடன் வெளியே வீதியில் இறங்குகிறாள்.

 கவிதை இவ்வளவு தான். ஆனாலும் ஒரு அழுத்ததுக்காக, உணர்வுரீதியாய் வாசகனாய் ஒன்ற வைப்பதற்காக அப்பெண் பின்னாளில் தற்கொலை செய்வதாகவும் அவள் அம்மா அப்போது அவளது புத்தகத்தின் இடையே மகள் பயன்படுத்தாமல் வைத்திருந்த ஆணுறையை கண்டு அதிர்வதாகவும் மனுஷ்யபுத்திரன் எழுதுகிறார்.
அந்த பெண் ஏன் ஆணுறையை வாங்க வேண்டும்? அதுவும் பயன்பாட்டு நோக்கம் இல்லாதபட்சத்தில்? இது தான் கவிதையின் மையம்.
அவளுக்கு சமூக கண்காணிப்பை மீறி ஒரு செயலை செய்வதில் ஒரு த்ரில் உள்ளது. அவள் அபரிதமான சுதந்திரத்தை அச்செயல் வழி அடைகிறாள். இக்கவிதை சமூக கண்காணிப்பு பற்றினது. மீறல் வழி மனிதர்கள் அனுதினம் எவ்வாறு தம் சுதந்திரத்தை சிறுக சிறுக மீட்கிறார்கள் என அவதானிக்கிறது இக்கவிதை.
இக்கவிதையின் பிரதான உணர்வு கழிவிரக்கம். அதுவும் பலவீனமான ஒற்றை மனுஷியின் அவலமான மீறல், அவளது அபத்தம், தடுமாற்றம் மீதான நமது பரிவு.
சமீக காலமாய் மனுஷ்யபுத்திரன் 20 வருடங்களுக்கு முந்தைய தன் கவிதை பாணிக்கு திரும்புவதாய் எனக்கு தோன்றுகிறது. குறிப்பாய் அவரது “நீராலானது”, “என் படுக்கைறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” தொகுப்புகளின் பாணிக்கு. அப்போது அவர் தான் சொல்ல வரும் சிக்கல், அனுபவம், அபத்தம் எதுவென குறி வைத்து அதன் மீது லேசர் கதிர் பாய்ச்சுவது போல் எழுதுவார். ஸ்ருதி ஹாசன் போன்று கொழுப்பேயற்ற கவிதைகள் எழுதினார். அதன் பின்னர் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் குறிப்பாய் அவர் கவிதைகள் இன்னொரு தளத்திற்கு சென்றன. ஒரு நாவலின் அடர்த்தியான அத்தியாயம் ஒன்றிற்கு நிகரான கவிதைகள் எழுதினார். நிறைய அடுக்குகள், சம்பவங்கள், கேள்வி பதில்கள், நியாய தர்க்கங்கள் நிறைந்ததாய், சிதறலான சித்திரங்கள் கொண்டவையாய் கவிதைகளை மாற்றினார். ”பசித்த பொழுது”, “இதற்கு முன்பும் இதற்கு பிறகும்” ஆகிய தொகுப்புகளை இவ்வகை கவிதைகளின் உச்சம் எனலாம். இந்த முன்னகர்வின் மூலம் தன்னுடன் எழுத ஆரம்பித்த நவீனத்துவ எழுத்தாளர்களை அவர் நிச்சயம் தாண்டி சென்றார்.
ஆனாலும் எனக்கு அவரது “நீராலானது” காலத்துக்கு பாணி மீது ஒரு நினைவேக்க மயக்கம் உண்டு. மனுஷ்யபுத்திரனின் அக்காலத்துக்கு கவிதைகளில் ஒரு விசித்திரம், அந்நியத்தன்மை தூக்கலாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் ஐரோப்பிய தன்மை தனியாக தெரியும். இப்போது அவர் எழுதும் கவிதைகளில் மீண்டும் அந்த ஐரோப்பிய தன்மை தலைதூக்குகிறது. அதே போல் ஜிம்மில் இருந்து துள்ளி வெளியேறும் இளம்பெண்ணைப் போன்ற வடிவம் கொண்டவையாய் இவை உள்ளதும் சிறப்பு.
நான் குறிப்பிட்ட குணாதசியங்களுக்கு மேற்சொன்ன கவிதையே உதாரணம். அதில் வருகிற அந்நியமாதல், தனிமை ஐரோப்பிய கவிதைகளில் தோன்றுபவை. இந்திய கவிதை ஐரோப்பிய தன்மை கொண்டதாக இருக்கலாமா? ஆம் நிச்சயமாய். கவிதை எப்போதுமே எதார்த்தம் நோக்கி நகரத் தேவையில்லை. மலையாள சாயலில் எழுதப்படும் ஒரு தமிழ்க் கவிதை தமிழ் வாழ்வை பேசும் தமிழ்க்கவிதையை விட துலக்கமாய் தனித்தன்மை கொண்டதாய் இருக்கும். கவிதையில் இப்படி வேறொரு கலாச்சார புள்ளியில் இருந்து நம் உலகை பார்க்கும் தோரணை முக்கியமானது. நாம் நேரடியாய் பார்க்கும் தமிழ் வாழ்வை சிறுகதையில், நாவலில் சித்தரிக்கும் போது படிக்க பிடிக்கிறது. ஆனால் கவிதையில் அது அலுப்பூட்டும். கவிதையின் ஒரு தனித்துவமான பிரச்சனை இது. தமிழ் வாழ்வை எந்தளவு தமிழற்ற புலத்தில் இருந்து எழுதுகிறீர்களோ அந்தளவு அக்கவிதைகள் அபாரமாய் அமையும்.
இம்மாத உயிர்மை கவிதைகளில் மற்றொரு குட்டிக்கவிதையும் என்னை கவர்ந்தது. மேற்சொன்ன விசித்திரம், அபத்தம், எளிமை இக்கவிதையிலும் உள்ளது.
மீனாவின் சுயசரிதை

“மீனாவாக வாழ்வது
எவ்வளவு கஷ்டமென்று
மீனாவுக்கு தெரியும்”
என்றாள் மீனா

பிறகு எதையோ
யோசித்தவளாக
“மீனாவாக வாழ்வதைக் கூட
சகித்துக் கொள்ளலாம்
மீனாவுக்காக வாழ்வது
அதைவிட துயரமானது”
என்றாள் சிரித்துக் கொண்டே.


இக்கவிதையில் தனது நெருக்கடி ஏன் வருகிறது என மீனா யோசிக்கிறாள். தனது மிதமிஞ்சிய தன்னுணர்வே அதற்கு காரணம் என உணர்கிறாள். இதை உணர்ந்து கொண்டதும் அவள் தன்னை நோக்கி தானே நகைக்கிறாள். தனிமையில் தனக்குள் பேசிக் கொள்வது, சுயபிரக்ஞையுடன் தன்னை மதிப்பிட்டு பகடி செய்வது, அவள் தனது தன்னுணர்வு எனும் சிறைக்குள் தானே மாட்டி கொண்டிருப்பது ஆகியவற்றில் ஒரு ஐரோப்பிய தன்மை உள்ளது. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் எழுதிய கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் மீனாவை ஒரு சராசரி இந்தியப் பெண்ணாக, உணர்ச்சிகரமானவளாய், நாடகீய சித்திரங்கள் நிரம்பியவளாய், சதா உடைந்து உருகி மன்றாடுகிறவளாய் மாற்றியிருப்பார். இக்கவிதை வழி இப்போது மீனா தன் ”ஆதிநிலைக்கு” மீள்கிறாள். எனக்கு இந்த மீனாவை பிடித்திருக்கிறது. இந்திய மீனா ரொம்ப எதார்த்தமாய் இருக்கிறாள் எனக்கு அவளை கவிதையில் பார்க்க “பிடிக்கவில்லை”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...