முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைக்கிள் கமலாவின் தங்கை

Image result for ஞானக்கூத்தன்

”சைக்கிள் கமலாவின் தங்கை” இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எஸ்.ராவின் semi-fictional சிறுகதை. இதில் ஞானக்கூத்தன் நேரடியாகவே வருகிறார். அவர் கா.ந.சு பற்றி பேசுகிறார். ஞானக்கூத்தனின் கவிதையில் இருந்து சைக்கிள் ஓட்டும் பெண் பாத்திரமான கமலாவின் தங்கையும் வருகிறார். உண்மைக்கும் எதார்த்தத்திற்கும் நடுவிலானது இக்கதை. கிட்டத்தட்ட அஞ்சலிக்குறிப்பு. சிறுகதைக்கும் அஞ்சலிக்கும் இடையிலான இந்த வடிவம் எனக்கு பிடித்திருந்தது.

 எஸ்.ராவின் ஆரம்ப கால கதைகளில் கதை என ஒன்றும் இருக்காது. ஒரு மனநிலையை துலக்கமாய் வெளிப்படுவதில் மட்டுமே குறியாய் இருப்பார். அதன் பின்னர், குறிப்பாய் கடந்த ஏழெட்டு வருடங்களில் அவர் துவக்கம், வளர்ச்சி, திருப்பம் கொண்ட முடிவு ஆகியன கொண்ட “கதைகளை” எழுதத் துவங்கினார். மேற்சொன்ன கதை அவரது ஆரம்ப கால கதைகளின் கவித்துவ செறிவு, துல்லியம், கதைத்தன்மையை விடுத்து மனநிலையை பேசுவது ஆகிய தன்மைகளை கொண்டிருக்கிறது.
இக்கதையின் மையம் சிறுபத்திரிகை வாசகர்கள், எழுத்தாளர்களின் மனநிலை. இவர்கள் எதார்த்தத்தின் விளிம்பில் எப்போதும் இருக்கிறார்கள். அன்றாட வாழ்வின் அலுப்பை, வெறுமையை சுலபத்தில் தம் இலக்கிய திளைப்புகள் மூலம் கடந்து போகிறார்கள். சகபாடிகளுடனான உரையாடல்களின் போதும் அவர்கள் தமக்குள்ளே ஊறித் திளைக்கிறார்கள். ஞானக்கூத்தனை இக்கதையின் பிரதான பாத்திரமான இளைஞன் ஒருவன் சந்தித்து பேசுகிறான். பார்த்த அடுத்த நிமிடமே ஞானக்கூத்தன் அவனிடம் அணுக்கம் பாராட்டி கவிதை குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். கடற்கரைக்கு அழைத்து போகிறார். அங்கும் கவிதை பற்றி லயித்து பேசுகிறார். அவர் போன பிறகு அவர் தனது பெயர், வேலை பார்க்கும் இடம் ஆகிய விபரங்களை கேட்கவில்லையே என அவனுக்கு தோன்றுகிறது.
ஏன் கேட்கவில்லை? ஏனென்றால் அவருக்கு அவனது அந்த எதார்த்த அடையாளம் முக்கியமில்லை. ஞானக்கூத்தனின் மிகை எதார்த்த இலக்கிய உலகில் மனிதர்களுக்கு பெயர், வேலை அவசியம் இல்லை. அது ஒரு மிதக்கும் உலகம். அங்கு ஆர்வலர்களுக்கு உடனடி அனுமதியும் உறுப்பினர் பதவியும் கிடைக்கும். இந்த அடையாளமற்ற, எதார்த்த பிடிப்பற்ற திளைப்பு அந்த இளைஞனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவன் தன் அன்றாட வாழ்வின் வேர்களில் இருந்து விடுபட தவித்துக் கொண்டிருக்கிறான். தன்னை மற்றொருவராய் காண துடிக்கிறான். அவனது தப்பிக்கும் மனநிலையும் ஒரு சிறுபத்திரிகை உளவியல் கூறு தான்.
இக்கதையில் இரண்டே பிரதான சம்பவங்கள் தாம். ஒன்று, ஞானக்கூத்தனின் வீட்டை தேடி அலையும் போது அவரது கவிதையில் மட்டுமே உள்ள கமலா எனும் பாத்திரத்தின் தங்கை தோன்றுகிறாள். கமலா சைக்கிள் ஓட்டும் சுதந்திரப் பெண். நவீன காலத்தின் பிரதிநிதி. அவளின் தங்கையும் அக்காவை பின்பற்றி சைக்கிள் விட முயல்கிறாள். ஆனால் சைக்கிள் அவளுக்கு இன்னும் பழகவில்லை. சுவரில் போய் மோதுகிறாள். ஆனால் தவறு தன்னுடையது அல்ல, சைக்கிளுக்கு தான் ஓடத் தெரியவில்லை என அதை பழிக்கிறாள். இந்த சுட்டியான வேடிக்கையான பாத்திரத்தில் உள்ள பகடியை ரசித்தேன். இவள் தான் ஞானக்கூத்தனின் வீட்டை இளைஞனுக்கு காண்பிக்கிறாள். ஞானக்கூத்தனிடம் பிற்பாடு அவளைப் பற்றி அவன் வினவ அப்படி ஒரு பெண்ணே தன் தெருவில் இல்லை என்கிறார். ஆனால் கமலா எனும் பெண் தன் ஊரில் இருந்ததாய் சொல்கிறார். அவள் உண்மை பெயர் கமலா அல்ல. கமலம் – தாமரை – சரஸ்வதி எனும் பொருளில் தான் அப்படி பெயரளித்ததாய் ஞானக்கூத்தன் சொல்கிறார். அப்படி என்றால் கமலம் உண்மையில் இருக்கிறாரா? ”இருக்கலாம்” என ஞானக்கூத்தன் பதிலளிக்கிறார். இப்படி அவரது கவிதை பாத்திரங்களும் அவரும் எதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் நடுவில் இருக்கிறார்கள்.
இளைஞனுக்கு கோபால் என ஒரு நண்பன். அவன் தான் சிறுபத்திரிகை இலக்கியத்தை இவனுக்கு அறிமுகம் செய்தவன். அவன் முழுக்க தீவிர இலக்கிய விவாதங்களில் சிலநேரம் மூழ்கி விடுவான். ஆனால் தன்னுடன் உரையாடுபவர்களின் தனிப்பட்ட வாழ்வில் அவனுக்கு அக்கறையில்லை. உணர்ச்சிகரமாய், நடைமுறை சார்ந்து மனிதர்களுடன் அணுக மாட்டான். இலக்கியம் சார்ந்த லட்சியவாதம் எனும் உணர்வு தான் அவனை பிற மனிதர்களுடன் இணைக்கிறது. அதைத் தாண்டி அவன் யாருடனும் ஒட்டாமல் இருக்கிறான். இளைஞனுக்கு அவன் சிலநேரம் உணவு வாங்கி வருவான். அவன் துணிகளை துவைத்து தருவான் என ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் இந்த செயல்களில் ஒரு தனிமை உள்ளது. சிறுபத்திரிகையாளர்களால் என்றுமே மீற முடியாத ஒரு தனிமை அது.
இப்படி கதையில் ஒவ்வொரு வரும் ஒவ்வொருவரும் தன்னிலை சிறையில் இருக்கிறார்கள். ஞானக்கூத்தன் கதையில் முதலில் தோன்றும் போது ஒரு தெருவோர புத்தகக்கடையில் கண்களை மேய விட்டபடி இருக்கிறார். தன் அருகில் உள்ளவர்களிடம் பேச அவர் தலைப்படுவதில்லை. புத்தகங்களில் மட்டுமே முழு அக்கறை. புத்தகத்தை தேடி எடுத்து அதனை ஒரு குழந்தை போல் கையில் வாங்கி அதனுடன் பேசியபடி அங்கிருந்து அகல்கிறார்.
ஞானக்கூத்தனை இளைஞன் தேடி பின்னால் செல்கிறான். அவரிடம் பேச ஆசை. ஆனால் ஒரு தயக்கம். வீடு வரை அவர் பின்னால் சென்று விட்டு திரும்பி விடுகிறான். (சு.ராவை தான் இவ்வாறு தேடி வீடு வரை சென்று சந்திக்காமல் மீண்டது பற்றி எஸ்.ரா முன்பு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.) அவன் ஏன் அப்படி இருக்கிறான்? ஏன் எனில் நிஜ ஞானக்கூத்தனை விட அவரது பிம்பம் அவனுக்கு பிடித்திருக்கிறது. அதன் பின்னால் திரிவதில் அவனுக்கு ஒரு தனி கிளர்ச்சி. அது கலையக் கூடாது என நினைக்கிறான்.
இப்படி சிறுபத்திரிகை உலகின் உளவியல் பற்றி பல நுணுக்கமான அவதானிப்புகள் இக்கதையில் உள்ளன.
 கதை முடிவில் ஞானக்கூத்தனிடம் உரையாடி விட்டு கிளம்பும் போது அந்த இளைஞன் மனக்கிளர்ச்சியில் ஒரு பசுமாட்டிடம் ஞானக்கூத்தனின் கவிதை ஒன்றை ஒப்பிக்கிறான். அது அசமந்தமாய் வாலாட்டியபடி தலையை ஆட்டுகிறது. இந்த இடத்தில் அதுவரையிலான லட்சியவாத சிலாக்கியம் மீது ஒரு பகடி தோன்றுகிறது. இதுவும் ஞானக்கூத்தன் கவிதையில் உள்ள அம்சம் தான். அதாவது ஞானக்கூத்தனே ஒரு லட்சிய வடிவமாகவும் அதன் பகடி வடிவமாகவும் இக்கதையில் வருகிறார். இது போல் இக்கதையில் சில அழகான முரணான உபபிரதிகள் உள்ளன. சைக்கிள் கமலா ஒரு லட்சிய வடிவம் என்றால் சைக்கிள் விட முயன்று விழும், அதற்கு சைக்கிளையே வையும் அவள் தங்கை அந்த லட்சிய வடிவம் மீதான பகடி. இந்த தங்கையை சமகால பெண்ணியவாதிகள் என கருதிக் கொண்டால் இதன் முழு நகைச்சுவையும் புலப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...