பாலு மகேந்திரா தன் படங்களை தானே
எடிட் செய்வார். அதில் ஒரு தனி நேர்த்தி இருக்கும். இதை விவாதிக்க “அழியாத கோலங்களில்”
“பூவண்ணம்” பாடலில் இருந்து இந்த காட்சிகளை எடுத்திருக்கிறேன். (இந்த படத்தை டி.வாசு எடிட் செய்திருந்தாலும் நெறியாள்கை பாலு மகேந்திராவே. இதை அவரது முத்திரை ஸ்டைலில் இருந்து அறியலாம்.)
முதலில் நாயகனும் நாயகியும் சட்டகத்தில் வலப்பக்கம்
இருந்து இடப்பக்கமாய் நகர்ந்து வருகிறார்கள். அவர்கள் சட்டகத்தின் இடது விளிம்பில்
வர காட்சி முடிந்து போகும். அடுத்து அந்தி வானத்தை ஒரு sweeping shotஇல் காட்டுவார்.
இதுவும் இடப்பக்கம் இருந்து வலப்பக்கமாய் நகரும். இந்த நேர்த்தியை பாடல் முழுக்க அவர்
கடைபிடித்திருப்பார்.
பாலு மகேந்திராவின் கதைமொழியில்
கோயில் காதலில் ஒரு புனிதத்தை உணர்த்துவது. அவரது காதலர்கள் கோயில் வளாகத்தில் மெல்லிய
சீண்டல்களில் ஈடுபடுவார்கள்.
இக்காட்சியில் கோயில் தூணில் சாய்ந்திருக்கும் பிரதாப்
போத்தனிடம் ஷோபா வந்து நெற்றியில் திருநீர் வைக்கிறார். பிரதாப் அவரது அழகிலும் கோயில்
கொடுக்கும் தனிசோபையிலும் அசந்து போய் ஒரு பார்வை பார்ப்பார். உடனே பாலு மகேந்திரா
(தன் வழக்கப்படி) ஆணின் இச்சையின், அவனது சிலாகிப்பின் கோணத்தில் இருந்து பெண்ணை காட்டும்
ஒரு மிட் ஷாட் வைக்கிறார். அதில் ஷோபா அழகாய் புன்னகைத்து மிக மிக மெல்லிதாய் வெட்குகிறார்.
துவக்கத்தில் பிரதாப் சட்டகத்தில் இடது பக்கம் இருக்கிறார். மிட் ஷாட் வரும் போது ஷோபா
வலதுபக்கம் வருகிறார். இதை அடுத்த காட்சியில் பிரதாப் ஒரு மரக்கிளையில் ஸ்டைலாய் சாய்ந்தபடி,
ஒரு கையில் சிகரெட் புகைய, இருக்க, ஷோபா அவரிடம் வந்து குழைகிறார்.
இதில் பிரதாப் சட்டகத்தின்
வலப்பக்கம் இருக்கிறார். இதை அடுத்த காட்சியில் தான் நான் ஆரம்பத்தில் சொன்னது போல்
நாயகனும் நாயகியும் வலப்பக்கம் இருந்து இடமாக நடந்து வருகிறார்கள். ஸ்வீப்பிங் ஷாட்டும்
வருகிறது.
இதையெல்லாம் பாலு மகேந்திரா திட்டமிட்டு ஒளிப்பதிவு
செய்ததாய் நான் நம்பவில்லை. ஆனால் எடிட்டிங்கின் போது மிகுந்த போதத்துடன் காட்சிகளை
ஒருங்கிணைத்திருக்கிறார். அதனாலே வலப்பக்கம் இருந்து இடப்பக்கமும், இடதில் இருந்து
வலதுமாய் காட்சிகள் அவ்வளவு நாசூக்காய் வழுக்கிப் போகின்றன. மிக சொற்பமாய் அசைவுகள்
கொண்ட காட்சிகள் எனிலும், நமக்கு பாடல் முழுக்க ஒருவித தொடர் அசைவுகள் நிகழ்வதான தோற்றத்தை
அவர் ஏற்படுத்துகிறார்.







Comments