பலரும் அனிதாவின் மரணத்தை உள்ளார விரும்புவதை நான் கவனிக்கிறேன். நமக்கு அரசியல் பதாகையாக மனித உயிர்கள் தேவைப்படுகின்றன. அதை உயிர்க்கொடை என்கிறோம். ஏன் தலைவர்கள் எப்போதும் உயிர்க்கொடை செய்வதில்லை என யோசித்திருக்கிறோமா? இங்கு உயிர்க்கொடை பற்றி பேசுபவர்களில் எத்தனை பேர் இந்த நொடி நீட்டுக்காக உயிர் விட தயாராக இருக்கிறீர்கள்? இன்னொருவர் அதை செய்ய வேண்டும் என ஏன் கோருகிறீர்கள்?
அரசியலுக்காக உயிர் விடுவதை கொண்டாடும் நமக்கும் கெடா வெட்டி சாமி கும்பிடும் எளிய மக்களுக்கும் என்ன வித்தியாசம்? அங்கே கடவுள் என்றால் இங்கே லட்சியம். அவ்வளவு தானே?
நீங்கள் இதை கொண்டாட கொண்டாட, இதை உயிர்த்தியாகம் என மகத்துவப் படுத்த படுத்த, மேலும் பல அனிதாக்கள் எதிர்காலத்தில் உயிர்விட தூண்டப்படுவார்கள். ஒரு நாகரிக சமூகம் இதை ஒரு போதும் செய்யாது!
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்