Skip to main content

பா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்

Image result for பா. ராகவன்



யாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகமும் அப்படியான ஒரு நாட்குறிப்பு தான். அவரது அந்த தடதடவென்ற, இந்தா பிடி இந்தா பிடி என்கிற மொழி வேறு நூலை வேகப்படுத்துகிறது. மிகச்சின்ன நூல். கிண்டிலில் தரவிறக்கி ஒரு மணிநேரத்தில் படித்து விட்டேன்.
 உணவை அவர் எப்படி பாடாய் படுத்தி இருக்கிறார், உணவு அவரை எப்படி பாடாய் படுத்தி இருக்கிறது என அவர் பேசும் இடங்களை ரசித்தேன். அதுவும் தனது கடந்த கால (பேலியோவுக்கு முன்) வாழ்க்கையை பேசும் போது ராஜ்கிரண் போன்றும், பேலியோவுக்கு பின் வாழ்வை பேசும் போது விரைப்பாய் கடுமையாய் விஜய் சேதுபதி போன்றும் தொனிக்கிறார். மனிதன் எவ்வளவு ரசித்து ரசித்து சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான் திரும்பத் திரும்ப தோன்றியது. வடை, பஜ்ஜி, சட்னி, ஜாமுன், லட்டு அது இது என நீண்ட பட்டியலொன்றைத் தருகிறார். எனக்கென்னவோ அவர் பேலியோ மூலம் 27 கிலோவை குறைத்ததை விட மூச்சு விடாமல் இவ்வளவு பதார்த்தங்களை அத்தனை வருடங்கள் பதம் பார்த்தது தான் ஒரு சாதனை எனத் தோன்றுகிறது. அந்த பாகுபலி பராக்கிரமங்களைப் படிக்கவே இந்த நூலை வாங்கிப் புரட்டலாம்.

நூலின் இறுதியில் அவர் தந்துள்ள கேள்வி பதில் பகுதி ரொம்ப பயனுள்ளது. ஏன் பீன்ஸ், அவரைக்காய் சாப்பிடக் கூடாது? வேர்க்கடலை நட்ஸ் இல்லையா? ஏன் பாலை தவிர்க்க சொல்கிறார்கள்? ஏன் சில பழங்களை இந்திய பேலியோ ஆர்வலர்கள் தடை செய்கிறார்கள் என பல கேள்விகளுக்கு பதில் உள்ளது. பேலியோவில் நீங்கள் தானியங்கள், கிழங்கு வகைகள் தவிர இயற்கையாய் கிடைக்கும் பழங்கள் போன்று எதையும் தின்னலாம். ஆனால் இப்படியான சில இயற்கை உணவுகளில் கலோரிகள் அதிகம். பேலியோ பயன்பாட்டாளர்கள் எடை குறைப்பில் கவனம் செலுத்துவதால் கொழுப்பு, புரதம் மற்றும் காய்கறிகள் தவிர வேறு உணவுகளை தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள். பெண்களுக்கு ஏன் பேலியோவில் விரைவில் எடை இழப்பு சாத்தியப்படுவதில்லை, ஏன் முதல் சில மாதங்களில் உடனடியாய் ஏற்படும் எடை இழப்பு பின்னர் மட்டுப்படுகிறது என்கிற கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களும் தெளிவானவை.
இந்நூல் சைவ பேலியோ உணவு பற்றியது. பா.ரா தான் உண்ணும் சைவ டயட்டை சுருக்கமாய் முடிவில் தந்துள்ளார். அது ஒரு நல்ல உணவுத் திட்டம் என எனக்குப் பட்டம். ஆனால் நாளோன்றுக்கு ஒரு முறையே உண்ணும் உணவு உண்மையில் ஆரோக்கியமானதா என எனக்குத் தெரியவில்லை. மேலும் ஒவ்வொருவரும் தமதான உணவுத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.
இன்னொரு பக்கம், பா.ரா கூறுவது போல் பேலியோ குழுமத்தினர் பரிந்துரைக்கும் அட்டவணையை கராறாய் பின்பற்றுவது அவசியமா எனத் தெரியவில்லை. ஒவ்வொருவரது உடலும் ஒவ்வொரு வகை. என் விசயத்தில், சிக்கன் அதிக கலோரி கொண்டது எனப் படுகிறது. அதாவது, சிக்கன் எனது ரத்த சர்க்கரையை சற்று கூடுதலாய் ஏற்றுகிறது, ஆனால் பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவை என் ரத்த சர்க்கரையை வெகுவாய் குறைக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? மீன் கூட ரத்த சர்க்கரையை சட்டென தூக்கி விடும் என்பது என் அனுபவம். இதை நான் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். ஆக நான் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது இதையெல்லாம் கணக்கில் கொள்வேன். யாரோ தயாரிக்கிற அட்டவணையை அப்படியே பின்பற்றினால் என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும்.
 பா.ரா பனீரை பிரதான உணவாய் கொள்கிறார். ஆனால் நான் வாசித்துள்ளவரை பேலியோவில் பனீரை குறைவாகவே உண்ணச் சொல்கிறார்கள். ஆனால் பா.ரா போன்று சைவப் பழக்கம் கொண்டவர்கள் வேறு எந்த புரத உணவை மாற்றாய் எடுக்க முடியும்? எதுவும் இல்லை. ஆக, அவருக்கு பனீர் தேவை தான். என் அனுபவத்தில் பனீர் ரத்த சர்க்கரையை ஏற்றி விடும். அதனால், நான் எப்போதாவது தான் பனீர் உண்கிறேன். இப்படி ஒவ்வொருவருக்கும் உடல் தேவை, கலாச்சார பின்னணி பொறுத்து பேலியோவில் சில சமரசங்கள் தேவைப்படுகின்றன. தப்பில்லை.
விருந்தின் போது எப்படி பேலியோ கற்பை காப்பது, பயணங்களின் போது ஓட்டலில் எதை வாங்கி சாப்பிடுவது போன்ற குறிப்புகளை ரசித்தேன். பயணங்களின் போது பா.ரா காய்கறி, பனீர் பதார்த்தங்களை கொண்டு சமாளிக்கிறார். அதோடு வறுத்த பாதாமும் கொண்டு போகிறார். நான் அதிகம் பழங்கள் உண்பதால் அந்த சிக்கல் இல்லை. எனக்கு ஆப்பிளும் வாழைப்பழங்களும் போதும் இரண்டு வேளை உணவை சமாளிக்க. இப்போதெல்லாம் தினமும் இவை தான் என் பிரதான உணவு. இரவு மட்டும் முட்டை அல்லது சிக்கன். அது கிடைக்காவிட்டாலும் சமாளிக்க முடியும். இதனால் பக்கத்தில் ஓட்டல் உண்டா, அங்கு கிடைக்கும் உணவின் தரம், சுவை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
பேலியோவுக்குள் வந்த பின் எப்படி உணவுக்கான ஏக்கம் சட்டென மறைகிறது என பா.ரா பேசியிருக்கிறார். அது முழுக்க உண்மை. தானிய உணவுக்கு பசியை கூடுதலாய் தூண்டும், மூளைக்குள் ஒருவித போதையை ஏற்படுத்தும் தன்மை உண்டு என நினைக்கிறேன். இன்னொன்று பசி வயிற்றில் மட்டும் இல்லை, மனதிலும் தான் சமபங்கு இருக்கிறது.

பா.ராவின் நூலைப் படித்த பின் எனது பேலியோ அனுபவங்களையும் ஒரு நூலாக தொகுக்க வேண்டும் என ஆசை வருகிறது. பார்க்கலாம்! 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...