Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்

Image result for பா. ராகவன்



யாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகமும் அப்படியான ஒரு நாட்குறிப்பு தான். அவரது அந்த தடதடவென்ற, இந்தா பிடி இந்தா பிடி என்கிற மொழி வேறு நூலை வேகப்படுத்துகிறது. மிகச்சின்ன நூல். கிண்டிலில் தரவிறக்கி ஒரு மணிநேரத்தில் படித்து விட்டேன்.
 உணவை அவர் எப்படி பாடாய் படுத்தி இருக்கிறார், உணவு அவரை எப்படி பாடாய் படுத்தி இருக்கிறது என அவர் பேசும் இடங்களை ரசித்தேன். அதுவும் தனது கடந்த கால (பேலியோவுக்கு முன்) வாழ்க்கையை பேசும் போது ராஜ்கிரண் போன்றும், பேலியோவுக்கு பின் வாழ்வை பேசும் போது விரைப்பாய் கடுமையாய் விஜய் சேதுபதி போன்றும் தொனிக்கிறார். மனிதன் எவ்வளவு ரசித்து ரசித்து சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான் திரும்பத் திரும்ப தோன்றியது. வடை, பஜ்ஜி, சட்னி, ஜாமுன், லட்டு அது இது என நீண்ட பட்டியலொன்றைத் தருகிறார். எனக்கென்னவோ அவர் பேலியோ மூலம் 27 கிலோவை குறைத்ததை விட மூச்சு விடாமல் இவ்வளவு பதார்த்தங்களை அத்தனை வருடங்கள் பதம் பார்த்தது தான் ஒரு சாதனை எனத் தோன்றுகிறது. அந்த பாகுபலி பராக்கிரமங்களைப் படிக்கவே இந்த நூலை வாங்கிப் புரட்டலாம்.

நூலின் இறுதியில் அவர் தந்துள்ள கேள்வி பதில் பகுதி ரொம்ப பயனுள்ளது. ஏன் பீன்ஸ், அவரைக்காய் சாப்பிடக் கூடாது? வேர்க்கடலை நட்ஸ் இல்லையா? ஏன் பாலை தவிர்க்க சொல்கிறார்கள்? ஏன் சில பழங்களை இந்திய பேலியோ ஆர்வலர்கள் தடை செய்கிறார்கள் என பல கேள்விகளுக்கு பதில் உள்ளது. பேலியோவில் நீங்கள் தானியங்கள், கிழங்கு வகைகள் தவிர இயற்கையாய் கிடைக்கும் பழங்கள் போன்று எதையும் தின்னலாம். ஆனால் இப்படியான சில இயற்கை உணவுகளில் கலோரிகள் அதிகம். பேலியோ பயன்பாட்டாளர்கள் எடை குறைப்பில் கவனம் செலுத்துவதால் கொழுப்பு, புரதம் மற்றும் காய்கறிகள் தவிர வேறு உணவுகளை தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள். பெண்களுக்கு ஏன் பேலியோவில் விரைவில் எடை இழப்பு சாத்தியப்படுவதில்லை, ஏன் முதல் சில மாதங்களில் உடனடியாய் ஏற்படும் எடை இழப்பு பின்னர் மட்டுப்படுகிறது என்கிற கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களும் தெளிவானவை.
இந்நூல் சைவ பேலியோ உணவு பற்றியது. பா.ரா தான் உண்ணும் சைவ டயட்டை சுருக்கமாய் முடிவில் தந்துள்ளார். அது ஒரு நல்ல உணவுத் திட்டம் என எனக்குப் பட்டம். ஆனால் நாளோன்றுக்கு ஒரு முறையே உண்ணும் உணவு உண்மையில் ஆரோக்கியமானதா என எனக்குத் தெரியவில்லை. மேலும் ஒவ்வொருவரும் தமதான உணவுத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.
இன்னொரு பக்கம், பா.ரா கூறுவது போல் பேலியோ குழுமத்தினர் பரிந்துரைக்கும் அட்டவணையை கராறாய் பின்பற்றுவது அவசியமா எனத் தெரியவில்லை. ஒவ்வொருவரது உடலும் ஒவ்வொரு வகை. என் விசயத்தில், சிக்கன் அதிக கலோரி கொண்டது எனப் படுகிறது. அதாவது, சிக்கன் எனது ரத்த சர்க்கரையை சற்று கூடுதலாய் ஏற்றுகிறது, ஆனால் பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவை என் ரத்த சர்க்கரையை வெகுவாய் குறைக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? மீன் கூட ரத்த சர்க்கரையை சட்டென தூக்கி விடும் என்பது என் அனுபவம். இதை நான் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். ஆக நான் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது இதையெல்லாம் கணக்கில் கொள்வேன். யாரோ தயாரிக்கிற அட்டவணையை அப்படியே பின்பற்றினால் என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும்.
 பா.ரா பனீரை பிரதான உணவாய் கொள்கிறார். ஆனால் நான் வாசித்துள்ளவரை பேலியோவில் பனீரை குறைவாகவே உண்ணச் சொல்கிறார்கள். ஆனால் பா.ரா போன்று சைவப் பழக்கம் கொண்டவர்கள் வேறு எந்த புரத உணவை மாற்றாய் எடுக்க முடியும்? எதுவும் இல்லை. ஆக, அவருக்கு பனீர் தேவை தான். என் அனுபவத்தில் பனீர் ரத்த சர்க்கரையை ஏற்றி விடும். அதனால், நான் எப்போதாவது தான் பனீர் உண்கிறேன். இப்படி ஒவ்வொருவருக்கும் உடல் தேவை, கலாச்சார பின்னணி பொறுத்து பேலியோவில் சில சமரசங்கள் தேவைப்படுகின்றன. தப்பில்லை.
விருந்தின் போது எப்படி பேலியோ கற்பை காப்பது, பயணங்களின் போது ஓட்டலில் எதை வாங்கி சாப்பிடுவது போன்ற குறிப்புகளை ரசித்தேன். பயணங்களின் போது பா.ரா காய்கறி, பனீர் பதார்த்தங்களை கொண்டு சமாளிக்கிறார். அதோடு வறுத்த பாதாமும் கொண்டு போகிறார். நான் அதிகம் பழங்கள் உண்பதால் அந்த சிக்கல் இல்லை. எனக்கு ஆப்பிளும் வாழைப்பழங்களும் போதும் இரண்டு வேளை உணவை சமாளிக்க. இப்போதெல்லாம் தினமும் இவை தான் என் பிரதான உணவு. இரவு மட்டும் முட்டை அல்லது சிக்கன். அது கிடைக்காவிட்டாலும் சமாளிக்க முடியும். இதனால் பக்கத்தில் ஓட்டல் உண்டா, அங்கு கிடைக்கும் உணவின் தரம், சுவை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
பேலியோவுக்குள் வந்த பின் எப்படி உணவுக்கான ஏக்கம் சட்டென மறைகிறது என பா.ரா பேசியிருக்கிறார். அது முழுக்க உண்மை. தானிய உணவுக்கு பசியை கூடுதலாய் தூண்டும், மூளைக்குள் ஒருவித போதையை ஏற்படுத்தும் தன்மை உண்டு என நினைக்கிறேன். இன்னொன்று பசி வயிற்றில் மட்டும் இல்லை, மனதிலும் தான் சமபங்கு இருக்கிறது.

பா.ராவின் நூலைப் படித்த பின் எனது பேலியோ அனுபவங்களையும் ஒரு நூலாக தொகுக்க வேண்டும் என ஆசை வருகிறது. பார்க்கலாம்! 

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...