முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்

Image result for பா. ராகவன்



யாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகமும் அப்படியான ஒரு நாட்குறிப்பு தான். அவரது அந்த தடதடவென்ற, இந்தா பிடி இந்தா பிடி என்கிற மொழி வேறு நூலை வேகப்படுத்துகிறது. மிகச்சின்ன நூல். கிண்டிலில் தரவிறக்கி ஒரு மணிநேரத்தில் படித்து விட்டேன்.
 உணவை அவர் எப்படி பாடாய் படுத்தி இருக்கிறார், உணவு அவரை எப்படி பாடாய் படுத்தி இருக்கிறது என அவர் பேசும் இடங்களை ரசித்தேன். அதுவும் தனது கடந்த கால (பேலியோவுக்கு முன்) வாழ்க்கையை பேசும் போது ராஜ்கிரண் போன்றும், பேலியோவுக்கு பின் வாழ்வை பேசும் போது விரைப்பாய் கடுமையாய் விஜய் சேதுபதி போன்றும் தொனிக்கிறார். மனிதன் எவ்வளவு ரசித்து ரசித்து சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான் திரும்பத் திரும்ப தோன்றியது. வடை, பஜ்ஜி, சட்னி, ஜாமுன், லட்டு அது இது என நீண்ட பட்டியலொன்றைத் தருகிறார். எனக்கென்னவோ அவர் பேலியோ மூலம் 27 கிலோவை குறைத்ததை விட மூச்சு விடாமல் இவ்வளவு பதார்த்தங்களை அத்தனை வருடங்கள் பதம் பார்த்தது தான் ஒரு சாதனை எனத் தோன்றுகிறது. அந்த பாகுபலி பராக்கிரமங்களைப் படிக்கவே இந்த நூலை வாங்கிப் புரட்டலாம்.

நூலின் இறுதியில் அவர் தந்துள்ள கேள்வி பதில் பகுதி ரொம்ப பயனுள்ளது. ஏன் பீன்ஸ், அவரைக்காய் சாப்பிடக் கூடாது? வேர்க்கடலை நட்ஸ் இல்லையா? ஏன் பாலை தவிர்க்க சொல்கிறார்கள்? ஏன் சில பழங்களை இந்திய பேலியோ ஆர்வலர்கள் தடை செய்கிறார்கள் என பல கேள்விகளுக்கு பதில் உள்ளது. பேலியோவில் நீங்கள் தானியங்கள், கிழங்கு வகைகள் தவிர இயற்கையாய் கிடைக்கும் பழங்கள் போன்று எதையும் தின்னலாம். ஆனால் இப்படியான சில இயற்கை உணவுகளில் கலோரிகள் அதிகம். பேலியோ பயன்பாட்டாளர்கள் எடை குறைப்பில் கவனம் செலுத்துவதால் கொழுப்பு, புரதம் மற்றும் காய்கறிகள் தவிர வேறு உணவுகளை தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள். பெண்களுக்கு ஏன் பேலியோவில் விரைவில் எடை இழப்பு சாத்தியப்படுவதில்லை, ஏன் முதல் சில மாதங்களில் உடனடியாய் ஏற்படும் எடை இழப்பு பின்னர் மட்டுப்படுகிறது என்கிற கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களும் தெளிவானவை.
இந்நூல் சைவ பேலியோ உணவு பற்றியது. பா.ரா தான் உண்ணும் சைவ டயட்டை சுருக்கமாய் முடிவில் தந்துள்ளார். அது ஒரு நல்ல உணவுத் திட்டம் என எனக்குப் பட்டம். ஆனால் நாளோன்றுக்கு ஒரு முறையே உண்ணும் உணவு உண்மையில் ஆரோக்கியமானதா என எனக்குத் தெரியவில்லை. மேலும் ஒவ்வொருவரும் தமதான உணவுத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.
இன்னொரு பக்கம், பா.ரா கூறுவது போல் பேலியோ குழுமத்தினர் பரிந்துரைக்கும் அட்டவணையை கராறாய் பின்பற்றுவது அவசியமா எனத் தெரியவில்லை. ஒவ்வொருவரது உடலும் ஒவ்வொரு வகை. என் விசயத்தில், சிக்கன் அதிக கலோரி கொண்டது எனப் படுகிறது. அதாவது, சிக்கன் எனது ரத்த சர்க்கரையை சற்று கூடுதலாய் ஏற்றுகிறது, ஆனால் பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவை என் ரத்த சர்க்கரையை வெகுவாய் குறைக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? மீன் கூட ரத்த சர்க்கரையை சட்டென தூக்கி விடும் என்பது என் அனுபவம். இதை நான் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். ஆக நான் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது இதையெல்லாம் கணக்கில் கொள்வேன். யாரோ தயாரிக்கிற அட்டவணையை அப்படியே பின்பற்றினால் என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும்.
 பா.ரா பனீரை பிரதான உணவாய் கொள்கிறார். ஆனால் நான் வாசித்துள்ளவரை பேலியோவில் பனீரை குறைவாகவே உண்ணச் சொல்கிறார்கள். ஆனால் பா.ரா போன்று சைவப் பழக்கம் கொண்டவர்கள் வேறு எந்த புரத உணவை மாற்றாய் எடுக்க முடியும்? எதுவும் இல்லை. ஆக, அவருக்கு பனீர் தேவை தான். என் அனுபவத்தில் பனீர் ரத்த சர்க்கரையை ஏற்றி விடும். அதனால், நான் எப்போதாவது தான் பனீர் உண்கிறேன். இப்படி ஒவ்வொருவருக்கும் உடல் தேவை, கலாச்சார பின்னணி பொறுத்து பேலியோவில் சில சமரசங்கள் தேவைப்படுகின்றன. தப்பில்லை.
விருந்தின் போது எப்படி பேலியோ கற்பை காப்பது, பயணங்களின் போது ஓட்டலில் எதை வாங்கி சாப்பிடுவது போன்ற குறிப்புகளை ரசித்தேன். பயணங்களின் போது பா.ரா காய்கறி, பனீர் பதார்த்தங்களை கொண்டு சமாளிக்கிறார். அதோடு வறுத்த பாதாமும் கொண்டு போகிறார். நான் அதிகம் பழங்கள் உண்பதால் அந்த சிக்கல் இல்லை. எனக்கு ஆப்பிளும் வாழைப்பழங்களும் போதும் இரண்டு வேளை உணவை சமாளிக்க. இப்போதெல்லாம் தினமும் இவை தான் என் பிரதான உணவு. இரவு மட்டும் முட்டை அல்லது சிக்கன். அது கிடைக்காவிட்டாலும் சமாளிக்க முடியும். இதனால் பக்கத்தில் ஓட்டல் உண்டா, அங்கு கிடைக்கும் உணவின் தரம், சுவை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
பேலியோவுக்குள் வந்த பின் எப்படி உணவுக்கான ஏக்கம் சட்டென மறைகிறது என பா.ரா பேசியிருக்கிறார். அது முழுக்க உண்மை. தானிய உணவுக்கு பசியை கூடுதலாய் தூண்டும், மூளைக்குள் ஒருவித போதையை ஏற்படுத்தும் தன்மை உண்டு என நினைக்கிறேன். இன்னொன்று பசி வயிற்றில் மட்டும் இல்லை, மனதிலும் தான் சமபங்கு இருக்கிறது.

பா.ராவின் நூலைப் படித்த பின் எனது பேலியோ அனுபவங்களையும் ஒரு நூலாக தொகுக்க வேண்டும் என ஆசை வருகிறது. பார்க்கலாம்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...