Skip to main content

எங்க கடை பொருளை வாங்காதீங்க ப்ளீஸ்! (1)


Image result for chaplin modern times

சாப்ளினின் “மாடர்ன் டைம்ஸ்” தொழிற் புரட்சி உச்சம் பெற்ற காலத்தைப் பற்றின ஒரு பகடி.
வேலையில்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்; தொழிற்சாலை முகப்பில் கூட்டமாய் சூழ்ந்து நின்று வேலைக்காய் இறைஞ்சும் மக்கள்; எந்த வேலை செய்யவும் தயாராக உள்ள மக்கள். இம்மக்களை தொழிற்சாலைகள் கச்சாப்பொருளைப் போன்று நடத்துகின்றன. யாருக்கும் எந்த தனித்திறனும் தேவையில்லை. யாரும் எந்த வேலையும் செய்யலாம்.

 சாப்ளின் ஒரு ஓட்டலில் சிப்பந்தியாக வேலைக்கு போகிறார். முதலாளி “உனக்கு வேலை வேண்டுமென்றால் நீ பாட வேண்டும்” என்கிறார். சாப்ளினுக்கு பாட வராது. ஆனால் அங்கு வேலை செய்யும் அவரது காதலி அவரை பொய் சொல்லி வேலையை அடையும் படி தூண்டுகிறாள். அப்படி வேலையை பெறும் அவர் தனக்குத் தெரியாத, வராத விசயங்களை எல்லாம் பண்ணி வேலையை தக்க வைக்கும் காட்சிகள் அபாரமானவை.
எனக்கு இக்காட்சிகளை கண்ட போது அவை இன்றைய சூழலுக்கு எவ்வளவு நெருக்கமாய் அவை உள்ளன என தோன்றியது. இன்று உங்கள் படிப்புக்கும், திறனுக்கும், இயல்புக்கும், விருப்பத்துக்கும் நீங்கள் செய்யும் வேலைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. நான் கல்லூரியில் சந்திக்கும் நிறைய மாணவர்களுக்கும் தாம் அடுத்து என்ன வேலை செய்யப் போகிறோம் என்பது குறித்து குழப்பங்கள் உள்ளன.
ஆட்டோமேஷன் எல்லா தொழில்களிலும் தன் கால்களைப் பரப்பும் இக்காலத்தில் வேலையிழப்பை விட வேலையில் பிடிப்பின்மையும் தனிமனிதனுக்கான மதிப்பின்மையும் தான் பிரதான பிரச்சனைகளாக இருக்கப் போகின்றன. ஒரு மென்பொருள் உங்கள் வேலையை எடுப்பதை விட ஒரு மென்பொருளுக்கு நீங்கள் அடிமையாக ஆகப் போகிறீர்கள் என்பதே நெருக்கடியாகப் போகிறது. வேலைக்கும் உங்களுக்கும் இடைவெளி இனி பெருமளவில் அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருந்து நீங்கள் மேலும் மேலும் அந்நியமாகப் போகிறீர்கள். இது குறித்து கார்ல் மார்க்ஸ் அன்றே எச்சரித்தார். இன்று இந்த அந்நியமாதல் மேலும் மேலும் உக்கிரமாகிக் கொண்டே போகிறது.
நான் இதை அனுபவரீதியாக எதிர்கொண்டேன்.
நான் முனைவர் பட்ட ஆய்வை முடித்து விட்டு கல்லூரி வேலைக்கு திரும்பும் முன்பான இடைவேளியில் ஒரு மின்பதிப்பு (ஈபப்ளிஷிங்) நிறுவனத்தில் பணி செய்தேன். புத்தகங்களை படித்து இலக்கண, வாக்கியப் பிழைகளை திருத்தும் வேலை. பல அற்புதமான ஆய்வு நூல்களை அக்காலத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் அவ்வேலையை மிகவும் ரசித்தேன். ஒருநாள் நிர்வாகம் ஒரு புது மென்பொருளை அறிமுகப்படுத்தியது. அதுவரையில் எங்கள் மேலாளர் எங்களது தனித்திறன், ஆர்வம், பின்னணி ஆகியவற்றை கருதி புத்தகங்களை தேர்ந்து தருவார். நூலின் தரம், சவால்கள் பொறுத்து அன்றன்றைக்கான எடிட் செய்ய வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையை (production) தீர்மானிப்பார்.
 ஆனால் ஒரு நாள் மாற்றம் வந்தது. அட்டொமேஷன் காலடி எடுத்து வைத்தது. இனிமேல் மென்பொருளே எங்களுக்கான புத்தகத்தை, எங்களுக்கான புரொடக்‌ஷனை முடிவெடுக்கும் என்றார்கள். அது மட்டுமல்ல, இனிமேல் எடிட்டிங்குக்கு என்று தனியாக ஒரு துறை இருக்காது. புத்தக தயாரிப்புடன் சம்மந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வேலையை செய்வார்கள் என்றார்கள். அதாவது ஒரு கோப்பை க்ளீன் செய்து, வடிவமைத்து, படங்களை சரி பார்த்து, வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொண்டு ஐயங்களை தீர்த்து, எடிட் செய்து, இறுதியான சரிபார்ப்புகளை (final proofing) செய்து புத்தகத்தை ஈபுத்தகமாக பதிவேற்றுவது வரை ஒரு ஆளே செய்ய வேண்டும். இதுவரை ஐந்து ஆட்கள் ஒரு நூலில் வேலை செய்தார்கள் என்றால் இனி அதை ஒரே ஆள் செய்ய வேண்டும்.
மிச்ச நான்கு ஆட்களை வேலையில் இருந்து தூக்குவார்களா? அது நிறுவனத்துக்கு கிடைக்கும் பிராஜெக்டுகளை பொறுத்தது. அவர்களை இருக்கிற வேறு வேலைகளில் குடிபெயர்த்துவார்கள். வேலைகள் இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
தெரியாத வேலையை எப்படி நாங்கள் செய்வது என கேட்டோம். நிர்வாகம் சொன்னது, “நீங்கள் செய்ய வேண்டாம், அதை மென்பொருளே பார்த்துக் கொள்ளும்.” ஆனால் மென்பொருள் அவ்வேலைகளை ஒழுங்காய் செய்துள்ளதா என சோதிக்க எங்களுக்கு பயிற்சி தேவை. ஒரு வாரப் பயிற்சி கொடுத்தார்கள். அப்போது தான் மென்பொருள் ஏற்படுத்தும் குழப்படிகள் தெரிய வந்தது. அக்குழப்படிகளை நாங்கள் சரி செய்ய பல மடங்கு நேரம் அதிக வேலை செய்ய வேண்டி வந்தது.
நாங்கள் அப்போது ஜோக் அடிப்போம்: “நாளை செக்யூரிட்டியை வீட்டுக்கு அனுப்பி விட்டு நம்மை அழைத்து ஆளுக்கு ஒரு மணிநேரம் செக்யூரிட்டி வேலையும், பாத்ரூம் கழுவுகிற வேலையும் நமக்கு கொடுப்பார்கள்.”
எனக்கு அதிக வேலை செய்வதை விட ஆர்வமற்ற, பரிச்சயமற்ற, அந்நியமான வேலைகளை செய்வது தான் பிரச்சனையாக இருந்தது. நான் அதுவரையில் மிகவும் ரசித்து ஈடுபட்டு எடிட் செய்து வந்தேன். ஆனால் இந்த மென்பொருள் எனது ஈடுபாட்டுக்கு, மனமொன்றிய ரசனைக்கு உலை வைத்தது. “நீ யார் என்பது எங்களுக்கு பொருட்டில்லை; உனக்கு விருப்பமுள்ள வேலையை நீ செய்ய வேண்டியதில்லை. எல்லாவற்றையும் மூளையால் செய்யப் பழகு. உன் மனதுக்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லை.” என்றது.

நான் அந்த வேலையில் இருந்து நீங்கினேன். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...