Skip to main content

இந்துத்துவாவுக்கு இந்து மதம் முக்கியமல்ல: சாவார்க்கரில் இருந்து மோடி வரை (2)

 Image result for savarkar
 எந்த தேசியவாதிக்கும் மற்றமையாக காணத்தக்க எதிரிகள் அவசியம் என ஆஷிஸ் நந்தி அவதானிக்கிறார். ஒருவனை சுட்டிக் காட்டி இவன் நம்மில் இருந்து வேறுபட்டவன் என அறைகூவாமல் நீங்கள் உங்களை யாரென அடையாளப்படுத்த முடியாது. நான் சிவப்பென பெருமை கொள்ள என் பக்கத்தில் ஒருவன் கறுப்பாய் இருக்க வேண்டுமே! (ஹெகல் இதை dialectics [இணைமுரணியல்] என்றார்.) பிராமணர்கள் இராவிட்டால் திராவிடம் எனும் கோட்பாட்டை பெரியாரால் கட்டி எழுப்பி இருக்க முடிந்திருக்காது.

 ஐரோப்பாவிலும் தேசங்கள் உருவான காலங்களில் இது போல் பொது எதிரிகள், இன எதிரிகள், மத எதிரிகள் மற்றமையாக அடையாளம் காணப்பட்டு கடுமையாய் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மற்றமையரின் மரணத்தின் மீது தான் ஐரோப்பிய தேசங்கள் கட்டி எழுப்பப்பட்டன என்கிறார் ஆஷிஸ் நந்தி. சிலுவைப் போர்களில் இருந்து காலனியம் வரை கிறித்துவர் அல்லாத பழங்குடிகளை, “பண்பாடற்ற பிற்போக்காளர்களை” கைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து தேசியத்தை பரப்ப வேண்டும் எனும் நோக்கம் ஆங்கிலேயருக்கு இருந்தத்து. Pagan என ஒரு மற்றமையை உருவாக்காமல் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை அவர்களால் கற்பனையே செய்திருக்க முடியாது. நவீன ஜெர்மனியின் உருவாக்கத்தில் யூத வெறுப்பும் அவ்வாறே பயன்பட்டது.
சாவார்க்கர் பேகன்களின், யூதர்களின் இடத்தில் இஸ்லாமியரை பொருத்தினார். இந்துத்துவாவை கட்டமைத்தார். ஆனால் இந்துமத பெருமிதம் இல்லாத சாவார்க்கர் ஏன் இஸ்லாமியரை வெறுத்தார்?
இதற்கு ஆஷிஸ் நந்தி கூறும் காரணம் சுவாரஸ்யமானது. ஒரு இளைஞராய் பிரிட்டீஷ் அரசாங்கத்தை ஆயுதத் தாக்குதல் மூலம் விரட்டி இந்தியாவை விடுவிக்க எண்ணின சாவார்க்கர் பின்னர் (1910ஆம் ஆண்டு) கைது செய்யப்பட்டு (1911இல்) அந்தமான சிறைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனுப்பப்பட்டார். அவரது குடும்ப சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது இளங்கலை பட்டம் ரத்து செய்யப்பட்டது. 27 வயதில் சாவார்க்கரின் வாழ்க்கை ஒரு கொடூரமான முடிவுக்கு வந்தது எனலாம். ஏனென்றால், பின்னர் அவரே ஒரு குறிப்பில் சொன்னது போல், “அந்தமான சிறைக்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் பத்து பேர் கூட இந்தியாவுக்கு மீண்டதில்லை”.
Image result for savarkar prison
 Cellular Jail எனப்பட்ட அந்த சிறையில் தினம் தினம் சித்திரவதை. ஆறுமாதங்கள் தனிச்சிறை. ஏழு நாட்கள் கைவிலங்குடன் நின்று கொண்டே இருக்கும் தண்டனை. இன்னும் பத்து நாட்கள் கால் முட்டியை மடிக்க முடியாதபடி குறுக்குச் சட்ட சங்கிலியால் அவர் பிணைக்கப்பட்டிருப்பார். அவரையும் இந்து பூஷன் ராய் மற்றும் உல்லஸ்கார் தத் எனும் விடுதலைப் போராளிகளையும் எண்ணெய் செக்கில் மாட்டி நடக்க விடுகிறார்கள். இந்த வதையும் அவமதிப்பும் தாள முடியாமல் ராய் தற்கொலை செய்கிறார்; தத்துக்கு பைத்தியம் பிடிக்கிறது. அது மட்டுமல்ல, இரவில் சிறைக்கைதிகள் கக்கூஸுக்கு போக முடியாது. அதனால் அவர்கள் படுக்கும் இடத்திலேயே ஒன்றுக்கும் ரெண்டுக்கும் போய் விட்டு மூக்கைப் பொத்திக் கொண்டு தூங்க வேண்டும். இரவில் மலவாடையுடன் தூங்கும் கொடுமை தான் சாவார்க்கருக்கு தாள முடியாததாக இருக்கிறது. இது போக ஜெயிலர்கள் அவரை ஆசனவாய் புணர்ச்சியில் ஈடுபட வற்புறுத்துகிறார்கள். இந்த காலத்தில் எப்போது வேண்டுமெனிலும் தன் சித்தம் கலங்கி விடக் கூடும் எனும் நிலையில் தான் இருந்ததாய் சாவார்க்கர் எழுதுகிறார். ஆக, சுயபாதுகாப்புக்காக அவர் ஆங்கிலேயருக்கு இணக்கமாய் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார்.
சாவார்க்கர் அக்காலத்தில் தன் சிறைக்காலத்தை குறைக்கும்படி தொடர்ந்து ஆங்கிலேய மேலதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பினபடி இருந்தார். தந்திரமும் தேவைக்கு ஏற்ப அதிகார வர்க்கத்தின் முன் பணிந்து போகும் பண்பும் சாவார்க்கருக்கரிடம் இயல்பாக இருந்தன. பதுங்க வேண்டிய போது பதுங்கினாலே பிழைக்க முடியும் என அவர் நம்பினார். இந்த மேக்கியாவல்லி பாணி அணுகுமுறையை ஒரு முக்கிய அரசியல் யுக்தியாக அவர் கருதினார். ஒரு நம்பிக்கையின் மீது உணர்வுரீதியாய் பிடிப்பு கொள்ளக் கூடாது. மாறாக, லட்சியத்தை நிறைவேற்ற பிறரது நம்பிக்கைகளை நம் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என அவர் நம்பினார்.
(சாவார்க்கரின் இந்த உளவியல் பின்னர் பா.ஜ.கவின் பொது உளவியலாக மாறியது. பா.ஜ.கவினருக்கு கடவுள் நம்பிக்கையை விட அந்நம்பிக்கையின் பெயரில் இந்துக்களை ஒன்று திரட்டுவது முக்கியம். பசுவின் புனிதத்தை விட அந்த செண்டிமெண்டின் அடிப்படையில் மக்களை உணர்வுரீதியாய் தூண்டி, இஸ்லாமியரோடு மோத வைத்து அரசியல் செய்வது முக்கியம்.)
ஆக, சாவார்க்கர் பிரிட்டீஷார் பக்கம் சேர்ந்து கொண்டார். இனி ஆங்கிலேய அரசை எதிர்க்கக் கூடாது என முடிவெடுத்தார். பதிலுக்கு, ஆங்கிலேய அரசை பயன்படுத்தி இஸ்லாமியரை இந்தியாவில் இருந்து அழித்து ஒழிக்க வேண்டும் என நினைத்தார். ஜெயில் அவருக்கு ஒரு கொடுங்கனவாக மாறியது. தான் உளப்பூர்வமாய் வெறுத்த ஆங்கிலேயரை கடவுளாய் வழிபட தூண்டியது. ஆனால் வெறுப்புக்கு முகம் கொடுக்க அவருக்கு இன்னொரு தரப்பு தேவைப்பட்டது (தேசியவாதத்துக்கு எப்போதுமே மற்றமை தேவை என்பதை நினைவில் கூரவும்). அதுவே இஸ்லாமியர். சட்டென காலியான வெற்றிடத்தில் – ஒரு மற்றமையாக – ஆங்கிலேயரின் இடத்தில் - அவர் இஸ்லாமியரை பொருத்தினார். அதன் மூலம் ஒரு புது தேசியவாதத்தை கட்டமைத்தார். இஸ்லாமிய எதிர்ப்பின் மூலம் உருவாகும் இந்து தேசியவாதம். தனது வாழ்வின் பாக்கி காலத்தை ஆங்கிலேயரை எதிர்க்காமல் இஸ்லாமியரை எதிர்ப்பதில் செலவழிப்பது என அவர் தந்திரமாக ஒரு முடிவெடுத்தார்.
இதை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவருக்கு சிறையில் பதவி உயர்வு அளித்தனர் - மேல்முறையாள் பொறுப்பை அளித்தனர். அவரது தண்டனையை 50 வருடங்களில் இருந்து 10 வருடங்களாய் குறைத்தனர். ஆனாலும் அவரை கண்காணிப்பதற்காய் இந்தியாவில் ரத்னகிரி சிறையில் மூன்று வருடங்கள் வைத்தனர். அங்கு தனக்கு தற்கொலை எண்ணம் தீவிரமாய் உருவாகியதாய் சாவார்க்கர் கூறுகிறார். இந்திய விடுதலைக்காய் உயிரை துச்சமாய் கருதி செயல்பட்ட சாவார்க்கர் இப்போது சிறை என்றாலே அஞ்சி நடுங்கும், உளவியல் ரீதியாய் சிதைந்து போன மனிதராய் மாறி இருந்தார். அதனாலே இனிமேல் சிறைக்கு செல்லும்படி எந்த ஆபத்திலும் ஈடுபடக் கூடாது என உறுதி பூண்டார்.
கோட்சே பின்னர் காந்தியை படுகொலை செய்த வழக்கிலும் சாவார்க்கர் தான் மாட்டிக் கொள்ளாதபடி எந்த தடயங்களையும் விட்டு வைக்காமல் பார்த்துக் கொண்டார். வழக்கின் போது எந்த கட்டத்திலும் கோட்சேவை ஆதரிக்கவோ அவரிடம் ஒரு ஆறுதல் சொல் சொல்லவோ கூட அவர் முன்வரவில்லை. இது கோட்சேவை கடுமையாய் காயப்படுத்தியதாய் அவரது வழக்கறிஞர் இமாம்தர் கூறுகிறார். கோட்சேவும் சக்காக்களும் என்னாவாவார்கள் என சாவார்க்கர் கவலைப்படவே இல்லை என்றும், தான் விடுதலையாவோமா என்பதை மட்டுமே மீளமீள கேட்டதாகவும் இமாம்தர் குறிப்பிடுகிறார். ஏனென்றால் சிறை ஒரு மனிதனை எப்படியெல்லாம் உருக்குலைய செய்யும் என அவர் ஏற்கனவே அனுபவம் மூலம் கண்டிருந்தார். அவர் கோட்சேவை போன்று களங்கப்படாத பிள்ளைப்பூச்சி லட்சியவாதி அல்ல. அவர் கடும் அனுபவங்களால் மனம் கரடுதட்டிப் போன ஒரு பச்சோந்தி லட்சியவாதி.

(தொடரும்)

Comments

PV said…
//...ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் வாசகர்கள் ஏனிப்படி இல்லை என்று கேட்க வேண்டும். பின்னவர்கள் வெறும் வாசகர்களாக மட்டுமே – அறிவார்ந்த, கலாச்சார தளத்தில் – ஜெ.மோ அல்லது எஸ்.ராவை அணுகுகிறாரக்ள்...//

இராமகிருஸ்ணனைப்பற்றித் தெரியாது. ஜயமோஹனைப்பொறுத்தவரை, அவர் வாசகர்களை நீங்கள் சொல்வது மாதிரி எடுக்க முடியாது. முதல் வாசிப்பில் அப்படி இருக்கலாம். தொடர் வாசிப்பில் அவர்களும் அடிமையாகிறார்கள். பின்னர் அவர் எதை எழுதினாலும் ஒரு வெறியோடு வாசிப்பவர்களாகிறார்கள். ஒரு சினிமா நாயகனை அவன் இரசிகர்கள் அவர் குப்பை படத்தில் குப்பையாக நடித்தாலும் பாலாபிஷேகம் செய்வதைப்போல.
கிட்டத்தட்ட அறிவழகனின் வாசகர் குழுவைப்போலத்தான். ஒரேயொரு வேறுபாடு; கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். ஜயமோஹனின் பிராமண கரிசனம்; இந்துத்வா கொள்கை ஈடுபாடு; திராவிட இயக்கத்து வெறுப்பு - இவை போன்றவை அவர் வாசகர் குழுவுக்கு போதை வஸ்து போல: மெல்லமெல்ல அடிமையாகிறார்கள்.

அறிவார்ந்த தளம் என்று தமிழகத்தில் இன்றில்லை. முதலில் அப்படியொரு தோற்றம்; பின்னர் குழுவெறியே. அறிவழகனும் ஜயமோஹனும் வெறும் எழுத்தாளர்களாக - அதாவது கற்பனை இலக்கியம் மட்டுமே - இல்லாமல் அரசியல், சமூகம் மேல் வைக்கும் கருத்துக்களால் - ஒரு குறிப்பிட்ட வாசகர் கூட்டம் வசப்படுகிறது. முற்காலத்தில் எழுத்தாளர்கள் இப்படி ஆகாமலிருப்பதற்கு அப்போது இணையதளங்கள் இல்லை. இன்றிருப்பதால் இவர்கள் விரைவில் வீழும் வாசகர் கூட்டத்தைப் பெருக்க, தக்க வைக்க, வசப்படுத்த முடிகிறது.

சுருக்கமாக, ஜயமோஹனும் அறிவழகனும் ஒன்றே.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...