
ரஜினி தான் சொன்னது போல்
அதிகார பூர்வ அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். ஏற்கனவே நான் இது குறித்து எழுதிய
போது ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் சரியாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர்
மட்டுமே கட்சிப் பணியை துவக்குவார்கள் என சொல்லி இருந்தேன். ரஜினி இப்போது வெளிப்படையாக
அதை ஒத்துக் கொண்டிருக்கிறார். என் சிற்றறிவுப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறவர்கள்
கட்சியை கட்டமைத்து, பல அடுக்கு நிர்வாகிகள், தலைவர்களை நிறுவி, கட்சியின் கொள்கையை
விளக்கி, ஆளுங்கட்சிக்கு எதிராய் அறிக்கைகள் விடுத்து போராட்டங்கள் செய்து தம்மை நிறுவிக்
கொண்டு ஆற அமர தேர்தலுக்கு தயாராகவே ஒரு வருடமாவது ஆகும். விஜயகாந்த் தன் கட்சியை வளர்க்க
ஒரு வருடத்துக்கு மேலாகவே எடுத்துக் கொண்டார். ஆனால் ரஜினி இப்போதைக்கு தன் ரசிகர்
மன்றங்களை ஒருங்கிணைக்கிற பணியை மட்டுமே எடுத்துக் கொள்ளப் போகிறார். எந்திரன்
0.2, காலா ஆகிய சினிமாப் பணிகளை முடித்து விட்டு பொறுமையாய் அரசியலில் அவர் இறங்குகிற
விதத்தை பார்த்தாலே அவருக்கு வெற்றி பெற்று ஒரு சின்ன எதிர்க்கட்சித் தலைவராகும் இலக்கு
கூட இல்லை எனத் தெரிகிறது.
234 தொகுதிகளிலும் ரஜினியின்
வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றால் அதற்கான செலவை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?
இதற்கான ஆயிரமாயிரம் கோடிகளை ரஜினிக்காக வாரி இறைப்பது யார்? இக்கேள்வியை மீடியா நிச்சயம்
கேட்க வேண்டும்.
ரஜினி அரசியலில் இறங்குவதால்
அவருக்கு விளையப் போகும் ஆபத்துகளைப் பற்றி குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அவர் தோற்றால்
கடுமையான விமர்சனங்களையும் கேலியையும் பழிகளையும், அரசியல் விரோதத்தையும் சம்பாதிக்க
நேரிடும். முன்பு போல் அவரால் சுதந்திரமாய் வணிக படங்களில் நடித்து வெளியிட முடியாமல்
கூட போகலாம். ரஜினி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என குஷ்பு குறிப்புணர்த்துவதாய் புரிந்து
கொள்கிறேன். ஆனாலும் அவர் ஏன் இவ்வளவு ரிஸ்கை எடுக்கிறார்?
பணம் தான் பிரதான காரணம்
என்பது என் கணிப்பு. ரஜினி மூன்று நான்கு வெற்றிப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட
பல மடங்கு பணத்தை இத்தேர்தல் மூலம் அடைந்து விட முடியும் என நம்புகிறார். வென்றாலும்
தோற்றாலும் அவருக்கு லாபமே. பாஜக கொடுக்கும் ஆயிரமாயிரம் கோடிகளை சிக்கனமாய் செலவழித்தால்
மீதும் பணமெல்லாம் அவரது ஸ்விஸ் வங்கி கணக்குக்குத் தானே பாயும்?
அரசியலில் குதிப்பதற்கான
அவரது காரணங்களைப் பாருங்கள். அரசியல் நிலைமை சீர்கெட்டுப் போயுள்ளது. இந்தியாவின்
பிற மாநிலங்களில் தமிழக ஆரசின் நிர்வாகக் கேட்டை கேலி செய்கிறார்கள் – சரி தான். ரஜினி
குறிப்பிடும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல், மக்களின் துன்பம் ஆகியவை இப்போது தான் புதிதாய்
நிகழ்கின்றனவா? ஏன் இப்போது அவர் அரசியல் நெற்றிக்கண்ணைத் திறக்கிறார்?
இதற்கு அவர் தெளிவான காரணத்தை
ஒன்றும் சொல்லவில்லை. ”இனியும் அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் குற்றவுணர்வு அரித்து
கொன்று விடும்” என்கிறார். அப்படி எனில் இத்தனைக் காலம் எப்படி குற்றவுணர்வில் இருந்து
தப்பித்தார்? ஏன் எந்த அரசியல் சமூகக் கருத்துக்களும் தெரிவிக்காமல் லாலா கடை வியாபாரி
போல் தேமேவென இருந்தார்? இப்போது அவரை சட்டென தூண்டிய நிகழ்வு எது?
ஒரு பக்கம் அவர் அதிமுக
அரசின் நிர்வாக சீர்கேட்டைப் பற்றி விமர்சிக்கிறார். அடுத்து உடனே தன் நிர்வாகிகளிடமும்
ரசிகர்களிடமும் “நீங்கள் ஆளும் அரசியல் கட்சி, பிற கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை
விமர்சித்து பேசக் கூடாது” என்கிறார். இப்படி அறிவுறுத்தும் அவர் மட்டும் ஏன் அதிமுக
அரசை சாடுகிறார்? என்ன குழப்படி பாருங்கள். இவர் கட்சி ஆரம்பித்த பின் இன்னும் என்னவெல்லாம்
பிதற்றப் போகிறாரோ?
ரஜினி இப்படி தன் நிர்வாகிகள்
மற்றும் ரசிகர்களை கட்டுப்படுத்துவதன் நோக்கம் வேறு. ஆளும் அரசை அவர் விமர்சித்தால்
இரண்டு விசயங்கள் நடக்கும். அதிமுக அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். அதிமுக அரசை
ஆட்டுவிக்கும் மோடி இதை விரும்ப மாட்டார். அடுத்து, ரஜினியின் கட்சி உண்மையில் வளரும்
வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு ரஜினி அலை உருவாவதை இப்போதைக்கு பாஜக விரும்பவில்லை.
ஏனெனில் அப்படி ரஜினி தம் கையை மீறி வளர்வதை பாஜக ரசிக்காது. ரஜினியின் அறிவுறுத்தல்
ஒருவிதத்தில் பாஜகவின் அஜெண்டாவை காட்டிக் கொடுக்கிறது.
இப்போதைக்கு அவர்களின்
திட்டம் சீண்டாமல் தீண்டாமல் ஒரு புது மணப்பெண்ணைப் போல் ரஜினியின் கட்சியை அடுத்த
தேர்தலுக்கு சற்று முன் அறிமுகப்படுத்துவது. கூடவே கமல், விஜய், விஷால் கட்சிகளையும்
பக்கமேளக்காரர்களைப் போல் இறக்குவது. ஒரு குழப்பத்தை, பரபரப்பை ஏற்படுத்தி திமுகவின்
ஓட்டைப் பிரிப்பது.
அப்படியே ஒருவேளை இக்கட்சிகளும்
ஒன்றிரண்டு இடங்களைப் பெற்று இன்னொரு பக்கம் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் பாஜக இவர்களையும்
வேறு சின்ன கட்சிகளையும் அதிமுகவின் ஒ.பி.எஸ் எடப்பாடிகளையும் வைத்து எதிர்க்கட்சிகளின்
கூட்டணி ஒன்றை உருவாக்க முயலும்.
ஆக இந்த சூதாட்டத்தில்
இந்த நடிகர்களுக்கோ பாஜகவுக்கோ எந்த பெரிய நட்டமும் ஏற்படாது. மீடியாவுக்கும் சமூக
வலைதள போராளிகளுக்கும் தீனி கிடைக்கும். இந்நடிகர்கள் மக்களுக்கு தலைக்கு 5000 கொடுத்தால்
அதன் வழி பாஜகவின் கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி தமிழக எளிய மக்களை அடையும். மற்றபடி
தமிழக அரசியலில் எந்த மாற்றமும் நிகழாது.