Skip to main content

மகிழ்ச்சியாக இருப்பது


Image result for suicide paintings

உலகில் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியாத சேதி. அதாவது மகிழ்ச்சி அசாத்தியம் என்றல்ல நான் சொல்ல வருவது.
குறிப்பாக எதையாவது செய்து உடனே மகிழ்ச்சியை அடைகிறவர்கள் இருக்கிறார்களா? மகிழ்ச்சியான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் என தனியாய் உண்டா? உ.தா, மாலையில் நடை பழகுவது, குடும்பத்துடன் இருந்து சிரித்து பேசி டிவி பார்த்து உணவருந்தி சுற்றுலா சென்று, நண்பர்களோடு பப்புக்கு சென்று, காதலியோடு தன்னை மறந்து பேசியும் தொட்டு சீண்டியும் .. இவையெல்லாம் மகிழ்ச்சி தருகிறவை தான். ஆனால் உறுதியாக இல்லை. இவை அலுப்பையும் கசப்பையும் கூட தரலாம்.

 நான் இதுவரையிலான என் வாழ்வில் மகிழ்ச்சிக்காக இவை எதையும் செய்ததில்லை. எழுதுவது மட்டுமே எனக்கு தித்திப்பான ஒரே காரியம். அதையே திகட்டத் திகட்ட செய்து வந்திருக்கிறேன்.
ஆனால் அவநம்பிக்கை, கசப்பு, ஏமாற்றம், வெறுமை என்னை சூழும் போது எழுத்தும் என்னை கைவிட்டு விட்டு விடுகிறது. இதை உண்மையில் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
 கடந்த ஆறு மாதங்களில் நான் மெல்ல மெல்ல எழுத்து மீதான என் பிடிப்பை இழந்து வருகிறேன். என்னை உற்று கவனிப்பவர்கள் அதை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உறக்கத்தில் நடப்பதை போலத் தான் நான் இப்போதெல்லாம் எழுதுகிறேன்.
 எழுதினால் மகிழ்ச்சியாய் இருக்க இயலாது; மகிழ்ச்சியாய் இருந்தால் தான் தொடர்ந்து எழுதி அதிக மகிழ்ச்சியாய் இருக்க இயலும். இதை நான் சமீபத்தில் தான் உணர்ந்தேன்.
 எழுத்து வாழ்வின் போதாமைக்கான தீர்வு அல்ல. இத்தெளிவு எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாய் அமைந்தது.
 கடந்த சில மாதங்களில் அதனாலே நான் சகமனிதர்களிடம் திரும்ப சென்றேன். எப்போதும் செய்யாத அளவு அதிகமான உரையாடல்களில் ஈடுபட்டேன். உறவுகளில் மனம் கசிய கரைந்தேன். எப்போதும் நொறுங்கிப் போகும் அளவு பலவீனமானவனாய் என்னை வைத்துக் கொண்டேன். கடந்த சில மாதங்களில் நான் கற்றுக் கொண்ட சில விசயங்களை எந்த புத்தகமும் ஞானியும் அறிஞனும் எனக்கு சொல்லித் தந்ததில்லை.
ஆனாலும் வாழ்தல் சமவெளி பயணம் அல்ல. அது ஒரு மலையேற்றம் அல்லது நில்லாத வீழ்ச்சி. ஒன்று போராடி தம் கட்டி மேலே ஏற வேண்டும். ஆனால் எப்போது ஏறி முடித்து உச்சியை எட்டினோம் என நாம் அறிய மாட்டோம். என்றோ ஒருநாள் சட்டென கீழே உருளத் துவங்குவோம். அப்போதும் நம்மால் அதைத் தடுக்க இயலாது. உருளும் வேகத்தை மட்டுப்படுத்தலாம். அதிக அடி இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். என்ன தான் ஆழ்ந்த பற்றுடன் படித்தாலும் எழுதினாலும் வாழ்தலின் வீழ்ச்சியை தாங்க முடியாது.
நான் இத்தனை நாட்களும் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவனாய் இருந்திருக்கிறேன் என புரிந்து கொண்டேன். நல்ல நண்பர்கள், நல்ல குடும்பம், பரிவான வாசகர்கள், நல்ல வாய்ப்புகள் என எல்லாம் அமைந்து விட்டது. மகிழ்ச்சி எனக்குள் இயல்பாக ஊற்றெடுக்கும் ஒன்றாய் இருந்தது. நான் அதை நாடிச் சென்றதே இல்லை. இதுவே மகிழ்ச்சி மனித வாழ்வின் இயல்பான அடிப்படையான குணாதசியம் என என்னை தவறாக நம்பச் செய்தது.
அடுக்கடுக்காய் பல்வேறு மனிதர்களின் தோள்களில் நின்றபடி, சிக்கலான பல வாய்ப்புகள் தந்த உற்சாகத்தில் நான் இத்தனை நாட்கள் சந்தோசமாய் வாழ்ந்திருக்கிறேன். இம்மனிதர்கள் விலகினதும், பல்வேறு சமூக கட்டமைப்புகள் தளர்ந்ததும், வாய்ப்புகள் குறைந்ததும் நான் தனியானதும் மகிழ்ச்சியும் எட்டாக்கனியாகி விட்டது. எழுத்தை கடவுளாக வணங்கிய எனக்கு கடவுளும் கைவிடும் சூழல் ஏற்படும் என்பது விசித்திரமாக, நம்ப முடியாததாக இருந்தது.
அப்படித் தான் நான் மகிழ்ச்சியை நாடத் துவங்கினேன். துக்கத்தை கடந்து போக எத்தனித்தேன். அப்படித் தான் முதல் வரியில் உள்ள கேள்வி எனக்குத் தோன்றியது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் எல்லாம் தற்காலிகமாகி விடுகின்றன. நீண்ட கால நண்பர்களை சம்பாதிப்பது ஒரு காலத்தில் மிக சுலபமாக இருந்ததுண்டு. ஆனால் பால்யம் முடிந்து, இளமை ஆவியாக நமக்கு வாய்ப்புகள் உறவுகள் அப்பளம் போல் நொறுங்கக் கூடியவையாக, கனவு போல் கலையக் கூடியவையாக மாறுகின்றன. இதே பட்டியலில் உடல்நிலை, வேலை வாய்ப்புகள், நினைவுத் திறன், சமூக ஒத்திசைவு ஆகியவையும் சேரும்.
 மெல்ல மெல்ல உருகி வரும் ஒரு பனிப்பாளத்தில் நடந்து போகும் உணர்வு இது. எப்போதும் சட்டென நொறுங்கி நீங்கள் பள்ளத்தில் விழுவீர்கள் எனத் தெரியாது. இது தற்காலிகத் தன்மையை, நிலையின்மையை அதே பாணியில் கையாளலாமே என எனக்குத் தோன்றியது, மிக மிக சந்தர்ப்பவசமாய் தான் இந்த முடிவை எட்டினேன்.
ஒவ்வொரு முறை துயரம் என்னை மூடும் போதும் நான் இன்னும் இரு நாட்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுப்பேன். திட்டமிடுவேன். தயாராவேன். உடனே மனம் துக்கத்தை உதறி விட்டு இயல்பாகி விடும். அதிக உத்வேகத்துடன் வேலை செய்வேன். இரு நாட்களை மெல்ல ஒரு வாரமாக தள்ளிப் போடுவேன். ஒரு வாரம் பின்பு பத்து நாட்களாகும். ஆனால் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் எனும் முடிவு தரும் சுதந்திரம் அபாரமானது. அது நம்மை எல்லா பாரங்களில் இருந்து விடுவிக்கிறது.
கடவுள் நம்மிடம் இன்னமும் கருணையுடன் இருக்கிறாரா என இந்த இடைப்பட்ட காலவெளியில் அறிந்து கொள்ளலாம். என் அனுபவம் என்னவெனில் இந்த சந்தர்பத்தில் தான் மிக அதிகமாய் கனிவான மனிதர்களை நான் சந்திப்பேன். நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் அதிகமாகும். யாராவது எனக்கு பாதுகாவலர்கள் போல் கூடவே வருவார்கள். மனம் தற்கொலையில் இருந்து மீண்ட பின் இந்த தேவதைகளும் தம் வீட்டுக்குப் போய் விடுவார்கள்.
இம்முறை நான் சற்று நீண்ட அவகாசம் எடுத்துக் கொண்டேன். 2019 ஜனவரியில் செய்யலாம் என முடிவெடுத்தேன். அதுவரை எந்த பொறுப்பும் இன்றி, எதிர்பார்ப்புகளும் இன்றி, கவலைகளே இன்றி, எல்லாவற்றையும் உதறி விட்டு வாழ வேண்டும் என நினைத்தேன். ஆனால் அப்படி நினைக்கும் நொடி மட்டுமே தித்திக்கிறது. நீண்ட கால இடைவெளியில் அப்படி இருப்பது மிக மிக சிரமம்.
வேலை செய்தே ஆக வேண்டும். வேலையில் இயல்பாகவே பொறுப்புகள் வந்து விடுகின்றன.
புதுப்புது உறவுகள் ஏற்படுகின்றன. இந்த உறவுகளை என்ன தான் முயன்றாலும் சீரியசாக எடுக்காமல் இருக்க முடியாது.
சாக்ரடீஸ் தான் விடம் அருந்தி மரிப்பதற்கு முன்பு தன் நண்பரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். ஒரு நண்பரிடம் கடனாக பெற்ற சேவலை திரும்ப எனக்காக கொடுத்து விடு!
 செத்த பின் கடனாளியாக இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன? அதுவும் சாக்ரடீஸ் போன்ற ஒரு மேதையை வரலாறு அந்த சின்ன கடனுக்காக பழிக்கப் போவதில்லை. ஆனால் மரணத்துக்கு சற்று முன் வரை நாம் அன்றாடத்தின் அத்தனை அற்ப கவலைகளையும் சீரியசாக எடுத்தே ஆக வேண்டும்.
எழுத்து?
எழுத்து ஒரு கடுமையான பணி. ஒரு நாளிதழில் மூன்று வருடங்களாய் ஒரு பத்தி எழுதி வருகிறேன். அதை சட்டென நிறுத்த முடியாது. என்ன சொல்லி நிறுத்துவது? அப்படியே நிறுத்தினாலும் தினமும் எழுதி பழகி விட்டது. நிறுத்துவது மிக மிக சிரமம்.
அதனால் தான் பொறுப்பின்றி ஜாலியாக இருப்போம் என நினைக்கிற போது அதை எப்படி செய்வது எனும் திகைப்பு தோன்றுகிறது. உண்மையில் அப்படி இருக்கிறவர்களுக்கும் அது எப்படி எனத் தெரியாது.

Comments

Kumaran said…
அன்புமிக்க அபிலேஷ் அவர்களுக்கு,
உண்மைதான். தற்கொலை மனநிலை நம் பாரத்தை இறக்குகிறது. ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பினை முடிக்க இயலாத சூழ்நிலை. அரியர் இல்லாதவன் அரை மனிதன் என்ற கூற்றில் நான் முழு மனிதனாக இருந்தேன். அப்போதிருந்த மனநிலையில் தற்கொலை மட்டுமே தீர்வு என எண்ணி , சில நாட்கள் பொறுத்து அம் முயற்சியில் ஈடுபட்டு பிழைக்க வைக்கப்பட்டேன். அந்த சில நாட்களில் பாரம் குறைவது போன்ற ஒரு தோற்றம் உருவாவது உண்மைதான். ஆனால் அது ஒரு தோற்றமே. மீண்டவுடன் மீண்டும் நிதர்சனத்தை எதிர் கொண்டாக வேண்டும்.
செயல்பாடுகள் மட்டுமே வாழ்வின் மீது ஒரு பிடிப்பினை ஊட்டுவதாக உள்ளது. நிலையற்ற நிலை நம் இதயத்தின் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது. அது நம் விழிப்புணர்விற்குள் வரும் போது வாழ்வின் மீதான பிடிப்பு விலகுகிறது.
செயல்தன்மையே மீள்வதற்கு ஒரே வழியாகும்.
அன்புடன்
தே. குமரன்
தருமபுரி .

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...