முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (1)

Image result for bigg boss tamil

பிக்பாஸ் நிகழ்ச்சி நமது நவீன கார்ப்பரேட் வேலை உலகை பெரிதும் ஒத்திருப்பதாய், அதனாலே அந்நிகழ்ச்சியை கவனிப்பது ஆர்வமூட்டுவது மற்றும் அவசியமானது என எனது பிளாக் பதிவொன்றில் எழுதி இருந்தேன். நண்பர் ஒருவர் இது சம்மந்தமாய் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்: “பிக்பாஸில் யாரும் வேலை எதுவும் செய்வதில்லை; விளையாட்டுகள், அதுவும் அபத்தமான, தரை லோக்கலாய் இறங்கி பரஸ்பரம் அடித்துக் கொள்ளுகிற விளையாட்டுகள். திருடி அதிக பாயிண்ட்ஸ் சேர்த்து எதிரணியை நோகடிக்கும் விளையாட்டு, எதிரணி உறுப்பினர்களுக்கு முழுநாளும் உணவளிக்க மறுத்து காய விடும் விளையாட்டுகள், வாந்தியெடுக்காமல் ஜாங்கிரியும் மீனும் குழைத்து தின்னும் விளையாட்டுகள். இதுவும் நாம் செய்யும் சீரியஸான சிக்கலான வேலைகளும் ஒன்றா?”

இனி என் பதில்:
நேரடியாய் பார்த்தால் ரெண்டுமே ஒன்றல்ல தாம். ஒரே விசயத்தில் இரண்டுமே ஆனால் ஒன்றாகின்றன. கார்ப்பரேட் சூழலில் நாம் இன்று வேலையையும் ஒரு விளையாட்டாகத் தான் செய்கிறோம். கார்ப்பரேட்டில் நமக்கு அளிக்கப்படும் வேலைகளும் நமது தனிப்பட்ட திறன்களை மெருகேற்றும்படியாய் இருப்பதில்லை. விருப்பமில்லையெனிலும், நம் புரொஜெக்டின் தேவையை உணர்ந்து தகவமைப்பதே இன்றைய ஊழியர்களுக்கு அவசியமுள்ள பிரதான திறன்.
 பல சமயங்களில் நமக்குள்ள உணர்வு நாம் செய்வது அற்பமான ஆனால் முக்கியமான வேலை என்பது. அற்பம் ஏனெனில் அதனோடு நம் மனம் ஒன்றுவதில்லை; அது நமது அனுபவத்தை, பயிற்சியை, திறன்களை சீண்டுவதில்லை. முக்கியம் ஏனெனில் அது நமது பதவி உயர்வை, ஊதியத்தை, நமது புரோஜெக்டின் வெற்றியை, அதன் மூலம் நிறுவனத்தின் நிலைப்பை தீர்மானிக்கிறது. கார்ல் மார்க்ஸ் பல வருடங்களுக்கு முன்பு சொன்ன விசயம் இது: எந்திரமயமாக்கத்தின் விளைவாய் ஊழியர்கள் தம் வேலையில் இருந்து அந்நியமாய் உணர்வார்கள். அதுவே இப்போது கார்ப்பரேட்மயமாக்கலில் நிகழ்கிறது.
மனம் ஊன்றி, முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டியதல்ல இன்றைய வேலை. சாமர்த்தியமாய், அதிகம் பட்டுக் கொள்ளாமல் செய்ய வேண்டியதே இன்றைய வேலை. எனது சிறுபத்திரிகை நண்பர்கள் பலர் மென்பொருள் வேலையில் இருந்து பத்திரிகை வேலைக்கு நகர்ந்தார்கள். அங்கு நாம் மொழியுடன் தொடர்பு கொண்டிருப்போமே என்று. ஆனால் அங்கும் அவர்கள் தமது நம்பிக்கைகளுக்கு, நுண்ணுணர்வுக்கு தொடர்பற்ற பல விசயங்களையே எழுதுகிறார்கள். அப்படியே சம்பாதித்து தாக்குப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வேலை முன்பொருள் வேலையை விட மேல் எனத் தோன்றுகிறது. அங்கு அவர்கள் முன்பிருந்தது போல அந்நியமாய் இல்லை என்பதே ஆறுதல்.
 என் நண்பர் ஒருவர் மிக சீரியஸான சிறுகதையாளர், அவர் முழுக்க முழுக்க சினிமா கிசுகிசுக்களை வெளியிடும் இணைய இதழ் ஒன்றில் வேலை செய்தார். இரண்டிலும் அவருக்கு இருவேறான முகங்கள். நான் அவரை அவரது அலுவலகத்தில் அவரது வேலை செய்யும் இடத்தில் சென்று சந்தித்தேன். அவர் சினிமா கிசுகிசு பக்கம் ஒன்றின் இறுதி கட்ட வடிவமைப்பு பணியில் இருந்தார். வடிவமைத்தபடியே அவர் என்னிடம் வறட்சி மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். பிறகு அப்படியே நாங்கள் அயோத்திதாசர் திருக்குறளுக்கு கொடுத்துள்ள மாறுபட்ட விளக்கங்களுக்கு வந்தோம். அவர் அயோத்திதாசரை வெகுவாக மெச்சி பேசினபடி போனார். எனக்கு குழப்பம் ஏற்பட்டது. ரெண்டிலும் அவர் மிக தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். எது உண்மையான அவர்? விளையாட்டுத்தனமான ஒரு காரியத்தில் அவர் விளையாட்டுத்தனமாய் சீரியஸாய் இருந்தார். சீரியஸான ஒரு விசயத்தில் அவர் சீரியஸாய் விளையாட்டுத்தனமாய் இருந்தார். எது அவர்?
இந்த குணாதசியத்தை நான் இன்றைய தலைமுறையினரிடம் குறிப்பாய் காண்கிறேன். அவர்கள் முன்பைப் போல வேலையை சீரியஸான சீரியஸாய் எடுத்துக் கொள்வதில்லை. வேலை நேரத்தில் மட்டுமே வேலையில் இருக்கிறார்கள். இதை அவர்கள் smart work என்கிறார்கள். பிரவுஸரில் பல டேப்களை திறந்து வைத்திருப்பது போல அவர்கள் பல முகங்களை திறந்து வைத்திருக்கிறார்கள். சுலபத்தில் நேரத்துக்கு ஏற்றபடி ஒன்றை எடுத்து மாட்டிக் கொள்கிறார்கள். வேலையின் போது வேலை; கேளிக்கையின் போது கேளிக்கை. “இனி என் கிட்ட பேசாதே. Let us break up!” என்று கொதிப்பாய் காதலனிடம் சொல்லி விட்டு அடுத்த நிமிடம் ஒரு புன்னகையை சூடிக் கொண்டு அநாயசமாய் டீம் மீட்டிங்கில் கலந்து கொண்டு துடிப்பாய் பேச முடிகிறது; அது முடிந்ததும் அலுவலகத்தில் நிகழும் ஒரு சக ஊழியரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாய் ஹேப்பி பெர்த் டே பாடி விட்டு, மதிய உணவுக்கு தோழிகளுடன் ரெஸ்டெரெண்ட் போய் விட்டு இடையில் பாத்ரூம் போய் அழுது விட்டு கண்ணைத் துடைத்து மேக் அப் இட்டுக் கொண்டு வெளியே வந்து சகஜமாய் அனைவருடனும் பேச முடிகிறது. இவர்கள் போலியாகவோ பாசாங்கவோ இல்லை. இரண்டு எதிரெதிர் விசயங்களில் அவர்களால் ஒரே சமயம் உண்மையாய் இருக்க முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...